Skip to main content

மாடுகள் மலைகள் ஏரிகள் ~2

மாடுகள் மலைகள் ஏரிகள் ~2

















கோல்ட் கோஸ்டில் என்ன மணி என்று தெரியவில்லை.  நேரம் தெரியாமல் இருப்பதுதான் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்குகிறது. ஆம் நாங்கள் உல்லாசமாக இருக்கத்தானே புதிய ஊரைத் தேர்ந்தெடுத்தோம்.  நியூசிலாந்து நேரத்துக்கு மணியை மாற்றியும் வைக்கவில்லை . அவர்களுக்கும் நமக்கும் ஐந்து மணி நேர வித்தியாசம்.  நமக்கு இங்கே காலை ஆறு என்றால் அங்கே பதினொன்று. அது ஒன்றரை மணி நேர நிறுத்தம். கோல்ட் கோஸ்ட்டில் இறங்குபவர்களுக்காக மட்டுமல்ல . பெட்றோல் நிரப்பவும்தான். அங்கே எல்லாப் பயணிகளும் சுங்கப் பரிசோதனைக்கு ஆளாக்கப் படுகிறார்கள. போதைப்பொருள் , ஆயுதக் கடத்தல் நடக்காமல் இருக்க இந்தப் பரிசோதனை. போதைப்பொருள் கடத்தலுக்கு கடுமையான தண்டனை என்று  எச்சரிக்கிறார்கள். கோல்ட் கோஸ்ட்டில் சுங்கச் சாவடியில்  பொருள் வாங்கலாம், காப்பி அருந்தலாம் ஆனால் அமெரிக்கன் டாலர் கேட்கிறார்கள். நியூசிலாந்து பணத்தை வாங்க மறுக்கிறார்கள். ஆங்கிலமும் டாலரும் உலகத்தை அடிமையாக்கி விட்டிருக்கிறது.

மீண்டும் விமானத்துக்குள் நுழைந்தால் புதிய பணிப்பெண்கள் மலர்ந்த பூக்களாய் நின்று வரவேற்கிறார்கள்.  முன்பு இருந்தவர்கள் டியூட்டி முடிந்து கோல்ட் கோஸ்ட்டில்  இறங்கிவிட்டார்கள். நாங்களோ விடிந்தும் கசங்கிய மனிதர்களாய் களைத்துக் கிடக்கிறோம்.
அங்கிருந்து மூன்று மணி நேரப் பயணம் நியூ சிலாந்துக்கு. ஆக்லாந்தில் தரை இறங்கியபோது மாலை மணி நான்கு. புதிய நிலம், புதிய வானம், புதிய காற்று கைவிரித்து எங்களை அணைத்துக் கொள்கிறது.
என் மருமகன்தான் எல்லா ஏற்பாடுகளையும் இணையம் வழி செய்து முடித்திருந்தார். வாகன வாடகை, விடுதி (அப்பார்ட்மெண்ட்) வாடகை  இதில் அடங்கும். விமான நிலையத்திலேயே வேன் காத்திருந்தது. விமான நிலையத்தில் உள்ள லூசி கம்பனி கிளை அலுவலகத்தில் வேன் சாவியைப் பெற்றுக்கொண்டு கார் நிறுத்தகம் சென்று வேனைக் கண்டுபிடித்து விடுதியை நோக்கிப் பயணமானோம்.

வேனை எடுக்குமுன் அதன் எல்லாப் பகுதிகளையும் தன் கைப்பேசி வழி படம் எடுத்துக் கொண்டார். ஏனெனில் நாங்கள்  அதனை உபயோகிக்கும் இந்த பதினோரு நாட்களில் ஏதும் புதிய பழுதுகள் இருக்கக் கூடாது. இருந்தால்  அதற்கான நஷ்ட ஈடைக் கொடுத்தாக வேண்டும். எனவே நாங்கள் வேனை எடுக்கும் போது எப்படி இருந்தது என்பதை உறுதி செய்யவே இந்த முன்னேற்பாடு. எங்களுக்கு முன்னர் இதனை உபயோகப் படுத்தியவர்கள் பழுதாக்கி அது, உரிமையாலர் கண்ணுக்குப் படாமல் இருந்தால் ஆப்பு எங்களுக்குத்தான்.
விடுதியைக் கண்டுபிடிக்க பெரிய சிரமம் ஏதுமில்லை. இருக்கவே இருக்கிறது இடம் தேடித் தரும் மேஜிக் கருவி ஜி.பி.எஸ். அந்தக் கருவிக்கும் தனி வாடகைப் பணம் செலுத்தியாக வேண்டும். Wifi வசதி கொண்ட ஜிபிஸ் கருவி அது.. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவை மீறினால்  கூடுதல்   கட்டணம் உண்டு..
 விடுதியில் மூன்று இரண்டிரண்டு படுக்கை கொண்ட அறைகள். நாங்கள் மொத்தம் ஏழு பேர். என் மகள் மருமகன், அவர்களின்கடைசி பையன் சூர்யா, என் மருமகனின் நண்பர் சேது அவர் மனைவி செல்வி, என் மனைவி, நான்.  குளித்து முடித்துவிட்டு ஆக்லாந்து பட்டணத்தில் உணவுக் கடையை தேட ஆரம்பித்தோம். எங்கள் கெட்ட நேரம் ஒரு இந்தியர் உணவுக் கடை தென்பட்டது. சோறு கண்டால்தான் நமக்கு சொர்க்கம் ஆயிற்றே. சரி ஒரு தட்டு கோழிச்சோறு கேட்டு பசியோடு உட்கார்ந்தால் சாப்பிட முடியவில்லை. என் மகள் அதனைப் பார்த்துவிட்டு வேறு உணவுக் கடையைத் தேடிப் போய்விட்டாள். பயணக் களைப்பு இரவில் நெடு நேரம் சுற்றும் ஆவல் இல்லை. உணவுக் கடை தேடி அலைந்தார்கள். என் மருமகன் ஒரு பக்கம் தேட நானும் என் மனைவியும் பரிமாறப்பட்ட உணவில் வசமாய் மாட்டிக் கொண்டோம். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டோம். நான் வலிந்து வாயில் போட்டுக் கொண்டிருந்தேன். அவளை எப்படியாவது சப்பிட வைத்துவிட வேண்டுமென்று.
 இரண்டு வாய் சாப்பிட்டதும் என் மனைவி எனக்கு வேண்டாம் பிடிக்கவில்லை என்றாள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் கொடும் பசியாக இருந்தாலும் அமுதம் கூட அருந்த மாட்டாள்! எனக்குக் கோபம் வர ஆரம்பித்தது.

இந்த ஒரு தட்டு உணவின் விலை நம்மூர் பணத்துக்கு அறுபது ரிங்கிட். இப்படியா அனாமத்தாய் கொட்டுவது? என்றேன் .
நீங்களே சாப்பிடுங்கள் என்றாள்.
அவ்வளவையும் சாப்பிட்டு முடிப்பதற்கு நான் என்ன பீமனா? நீதானே வேண்டுமென்றாய் உட்கார்ந்து சாப்பிடு என்றேன்.
எனக்கு வேண்டாமென்று பிடிவாதம் செய்தால்.
சரி எனக்கும் வேண்டாம். நான் சாப்பிடும்    மனநிலையைக் கெடுத்துவிட்டாய், வேண்டாம் வா கிளம்பலாம் என்றேன்.
 இப்படி அவிச்சி கொட்டுனா எப்படி திங்கிறது? என்றாள்.
நீதானே வேண்டும் என்று கேட்டாய்? என்றேன்.
இந்த ஊர் மாடுதான் இதைத் தின்னும் என்றாள்.
மாட்டைப் பழிக்காதே. மாட்டுக்கு பிரத்தியேக புல் வைக்கோல் தருவார்கள் என்றேன்.
அப்ப்டின்னா நீங்க சாப்பிடுங்க என்றாள்.
ஒருநாள் முடியப் போகிறது இன்னும் சண்டைவரவில்லையே. சண்டை போடவில்லையென்றால் அந்த நாள் எங்களுக்கு முழுமையடைவதில்லையே! இது புதிய மண்ணில் முதல் அத்தியாயம்!
சரி இன்னொரு அறுபது ரிங்கிட்டுக்கு செலவு வரப் போகிறது, என்று நினைத்துக் கொண்டே உணவை பார்சல் செய்துகொண்டு வெளியே வந்தோம்.. கடைக்கு வெளியே வந்து என் குழுவைத் தேடினோம். என் மகள் மெக்டானல்டு கடைக்குள் இருந்தார். என் மருமகனும் சேதுவும் சீன உணவுக் கடையைத் தேடிப்போய் சீன உணவை வாங்கி வந்தனர். எல்லாரும் மெக்டானல்டு உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட்டோம்.
 இனிமே இந்த இந்தியக் கடைப் பக்கமே வரக்கூடாது என்று சொன்னாள் மனைவி. எதற்கும் கடைப் பெயரை நினைவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று பெயர்ப் பலகையப் பார்த்தோம். ‘அவிச்சி’ என்று எழுதியிருந்தது. தப்பு நம் மீதுதான். அவன் அவிச்சிப் போடப் போவதை   குறியீட்டு மொழியில் நம்மை எச்சரிக்கை  செய்தும் நாம் உஷாராய் இருக்கவில்லையே என்றேன்.
உணவின் பொருட்டு சிக்கல் உண்டானதும், அதனை  எங்கள் பயண நாட்களுக்கான   ஒரு மோசமான சமிக்ஞையாகக் கருதினோம்.  எப்படியாவது சமாளித்தாக வேண்டும்.
தொடரும்.....

Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...