Skip to main content

உன்னை நன்றாக இறைவன் படைத்தனன் என்னை நன்றாகக் கொள்ளையிடுவதற்கே


என் நினைவு இடுக்கில்
ஒரு கரப்பான் பூச்சியைப்போல
உள் நுழைந்துகொண்டாய்
முன் அறிவிப்பு ஏதுமின்றி
ஒரு
ஆதர்ஸ விருந்தாளியாய்

உன்னை மறக்க நினைத்து
மறக்காமல் இருக்கிறேன்
உன்னைத் துறக்க நினைத்து
பின்தொடர்கிறேன்
உன்னை மறுதலிக்க மறுதலிக்க
குருத்தாய்
மறுபடி மறுபடி
பிரசன்னமாகிறாய்

உன்னைத் திரும்பிப்பார்க்கவே
திரும்பிப் பார்க்காமல் கடக்கிறேன்
உன்னிடம் பேசவே
மௌனமாகிறேன்
உன்னை நெருங்கி வந்தே
தூரமாகிறேன்


துயிலின் விளிம்பில் இமையைத்
துளையிடுகிறாய்
கனவின் கதவுகளைத்
கறாரய்த் தள்ளித்திறக்கிறாய்
நரம்புகளில்
நிரம்பி வழிகிறாய்

உன் அழைப்பு அதுவென
புன்னகையில் சிலிர்க்கிறேன்
நரம்புகளில் சந்தேகக் குருதி
இரு அணுக்களையும்
புறமுதுகிடச் செய்கிறது

இச்சை
 இறுமாப்பு கொண்டு
அடங்க மறுக்கும்
அலெக்சாந்தர் குதிரையாகிறது

நான் உன்னோடு
எனக்குள் பேசிக்கொள்கிறேன்
பேசிப் பேசிப் என் பொழுது
கணப்பொழுதும்
சாய்ந்ததேயில்லை

மையிருட்டில்
தரிசிக்கும் தருணம்
அலாதியானது
அப்போது எனக்காகத்
ஒரு காட்டு மலரைப்போல்
 காத்திருக்கிறாய்



உன் வசீகர
பிம்பம் மனதுக்குள்
அடங்காது எரிகிறது
என் போர் வியூகங்கள்
சாம்பலாகியும்
நெருப்பு
அணைய மறுக்கிறது

இயாலாமையின்
எண்ணற்ற பதிவுகள்
காலாவதியாகி
மீண்டும் மீண்டும்
பிறக்கின்றன
மீண்டும் மிண்டும்
இறக்கின்றன





Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...