Skip to main content

யாருமற்றவர்களின் மறைவு


 

உடன் யாருமற்றவர்கள்

யாருமற்றவர்களாகவே

இறந்துபோகிறார்கள்

 

உள் தாழ்ப்பாளின்

முழு பாதுகாப்புடன்

நடந்தேறுகிறது அவர்கள் இறப்பு

 

திரும்ப அழைக்கக்கூடுமென்றே

நம்பித் தொலைக்கிறது

பதிலற்ற தொலைபேசி அழைப்புகள்

 

சேர்ந்தும் சேராது

நிரம்பி மினுக்கிட்டபடியே

காத்திருக்கின்றன

குறுந்தகவல்கள்

 

வேலையிடத்தின் பதிலற்ற அழைப்புகள்

பொறுப்பற்றவன் என்ற

நிர்வாகக் கோபத்தில்

கனன்றுவிடுகிறது

 

பிள்ளைகள் தொடர்புகள்

எரிச்சலூட்டி அடங்கும்போது

அப்பா எப்போதும் போலவே

வெளிநாடு சென்றிருக்கலாமென

ஆசுவாசப்படுகின்றன

 

 

தொந்தரவாகுமென்ற மருகலே

கதவு தட்டல்கள்

இரண்டு முறைக்குபிறகு

நிராகரித்துவிடுகின்றன

 

பதிலற்றபோது

கடன் கொடுத்தவன் மனம்

இவன் இறந்திருக்ககூடாதென்றே

வேண்டிக்கொள்கிறது

 

இறந்த பின்னும் நீடிக்கிறது

உயிரோடிருந்தபோது

நிலை கொண்ட

வீட்டின் மௌனம்

 

இருட்டிலிருந்து மீண்ட

மின்விசிரி வெளிச்சத்தில்

மேலும் இரைந்து

சுழன்றுகொண்டிருந்தது

 

தான் செத்துப்போனால்

யாருக்கும் தெரியாமல் போய்விடுலாம்

என்ற கவலை

இனி ஒருபோதும்

அதற்கில்லை

 

 

                         

Comments

மனதை என்னவோ செய்கின்றன இக்கவிதைவரிகள். இப்படித்தான் நடக்குமென்றால், நான் கூவிக்கொண்டு கூடிவாழவே ஆசைப்படுகிறேன்.
ko.punniavan said…
நன்றி விஜி. என் நண்பர் ஒருவர் தனித்து வாழும்போது உண்டான அனுபவம்.
ஐயா வணக்கம்.நான் கல்லூரி பேராசிரியர். என் மாணவர்களின் முனைவர் பட்டத்திற்காக மலேசிய படைப்புகளைத் தரலாம் என நினைத்துள்ளேன.தங்களின் படைப்புகள் மற்றும் ரெ. கார்த்திகேசு ஐயாவின் படைப்புகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்?தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ஐயா வணக்கம்.நான் கல்லூரி பேராசிரியர். என் மாணவர்களின் முனைவர் பட்டத்திற்காக மலேசிய படைப்புகளைத் தரலாம் என நினைத்துள்ளேன.தங்களின் படைப்புகள் மற்றும் ரெ. கார்த்திகேசு ஐயாவின் படைப்புகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்?தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ko.punniavan said…
பேராசிரியர் பிரேமலதா, நன்றி. தமிழகத்தில் எங்கள் நூல் கிடைப்பது அரிது. தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில்,ஆதிகுமணன் நூலகத்தில என்னுடைய முதல் மூன்று சிறுகதை தொகுப்புகள் சேகரித்து வைத்துள்ளார்கள். மற்றபடி கடைகளில் மலேசிய நூல்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி.
மலேசியாவிலிருந்து ரெ.கா புலோக் போய்ப்பாருங்கள்.
MUNIANDY RAJ said…
அருமையான கவிதை. தனிமையின் மரணத்தில் காணாமல் போனவர்களின் அவலக்குரலாய் ஒலிக்கிறது..! தனிமையில் மரணிப்பது உண்மையில் கொடுமைதான்.... மிகச் சிறப்பான வரிகள்