Skip to main content

Posts

ஓடாதே -கதை விமர்சனம்

22.7.12ல் ஞாயிறு தினக்கதிரில் பிரசுரமான ஓடாதே கதையைப் பற்றி என் பார்வை  ஓடாதே கதையை ஒரு கட்டாயத்தின் பேரில், ஒரு ஆர்வமற்ற மனநிலையோடுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் கதையைத் தொடங்குவதற்கு முன்னாலேயே பொதுவாகவே புதியவர்களின் படைப்பை வாசிக்கும்போது  தோன்றும் முன்சலிப்பு, கதையைத் தொடங்கியதும் பட்டென விலகிக்கொண்டது. தொடங்கியபோது உண்டான ஆர்வநிலை முடியும் வரை அகலவே இல்லை என்பதிலிருந்தே இக்கதை மிக அருகில் வந்தமர்ந்து என்னோடு கைகோர்த்துக்கொண்டு கடைசிவரை பயணித்தது.  நேர்க்கோட்டு உத்தியையச் சார்ந்து கதையைப் பின்னியிருக்கிறார் ஐஸ்வரி. Linear என்று சொல்லக்கூடிய நேர்க்கோட்டு உத்தி மிகப் பழைய கதைசொல்லும் பாணி. ஆனாலும் இக்கதைக்கு (கருவுக்கு) இவ்வுத்தியின் செய்நேர்த்தி  மிகப் பொருத்தமாவே அமைந்துருந்தது. மொழி நடையின் அழகியல் இதற்குக் கூடுதல் சான்று.    ருக்குமணி டீச்சரில் தொடங்கி அவரிடமே ஒரு அதிரடி முடிவோடு வந்து நிற்கிறது கதை.    பொதுவாகப் பள்ளிகளில் ருக்குமணிச் டீச்சர்களின் சாகசங்களால் சமூகத்தில்  சாதனையாளர்களாக வரவேண்டியவர்களை எண்ணற்றவர்களை மிகச் சாதூர்யமா...

பேயச்சம்

கழுத்தைக்கடித்து குருதியுறுஞ்சும் பேயாகவே மாரியம்மன் கோயிலேறும் சடக்கில் தலைகோதி நின்ற புளிய மரம் அச்சுறுத்திய காலம் ஒன்றுண்டு அம்மாதான் சொல்வாள் ரத்தக் காட்டேறி மரமென்று  பழம் பறிக்க பள்ளி முடிந்து கழியெறியும் போதெல்லாம் அதன் குச்சியொடித்து விலாசும்போதே தோலுறித்த ரத்தத் தடையங்கள் உறுதிப் படுத்தியது உண்மைதானென்று வெயில் விரட்டும் அதன் குளிர் நிழலில் வியர்வை நனைய விளையாடும் போதில் பேய் நினைவு மெல்ல ஒதுங்கத் தொடங்கியது நோய் நொடி விரட்டும் அதன் இலை மருத்தவம் பார்த்துப் பழகி நன்பகல் நிழலாய் கறையத்தொடங்கியது கொஞ்சம் மாநுட நலம் காக்கும் கரிசனை நோக்கம் மரத்தை நேசிக்க நேர்ந்தது கருவாட்டுக் குழம்புக்கும் ஆத்துமீன் கறிக்கும் புளிப்பு  சுவை கூட்டியபோதும் பயம் பறந்தோடி பாசம் மருவியது காய்ந்து சுல்லிகள் நின்றெரியும் தீயில் தோளில் ஒட்டா புளியம் பழமாய் அச்சம் ஒட்டாது ஓடியது கிளையேறி ஒளிந்து விளையாடும் விறுவிறுப்பில் கிலி அருதியாய்  அழிந்தொழிந்தது கல்லெறிந்து கல்லெறிந்தே காட்டேரியை விரட்டி அடித்தோமோ என்னவோ கித்தா மரங்கள் இலைய...
             (எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு இக்கவிதையைக் சமர்ப்பிக்கிறேன். )   -63 எனக்கின்று -63 நீங்கள் வாழ்த்துக்கூறி என்னை மீட்டுருவாக்கியதால் என்னைச்சுற்றி ஆனந்த ஒளிவட்டம் என்னாளும் மிதந்திருப்பதால் என் வெற்றி இன்னதென்று என் பிரிய எதிரிகள் இனங்காட்டுவதால் என்னைச் சூழ்ந்த காற்று தீபத்தை வேண்டுமானால் தீர்த்துக் கட்டலாம் தீயை அல்லவே... என்பதால் என் நரை என் வரையறை இதுவென்று வழி சொல்வதால் அது என்னை மென்மேலும் வெள்ளையாக்குவதால் என் முதுமை என் இளமையிலிருந்தே பிறந்ததால் என் அனுபவம் கடவுளாகி என்னைக் கைப்பிடித்து இட்டுச்செல்வதால் தட்டுகின்ற கதவுகள் இன்றில்லையென்றாலும் என்றாவது திறந்தே தீரும் என்பதால் கர்ணன் தொடையைத் துளைத்த கவலை வண்டு என் கவனத்துக்கு அப்பால் இருப்பதால் இந்தக் கவிதைக்கான கரு இன்று என்னிலிருந்து வித்தானதால் மரணம் மறுபிறப்புக்கான வாசலைத் திறந்துவிட்டதால் இன்று எனக்கு மைனஸ் 63 தானே?.
                              அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்                                 உள்ளொளி நிறைந்த உலகம்               நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்த நாட்கள்  எங்களுக்கென ஒரு சொந்த வீடு வாங்கிவிடவேண்டுமென்ற உந்துதலை உண்டாக்கிக்கொண்டிருந்தது. வாடகை வீடுகள் நம்மை ஏற்றுக்கொள்வதில்லை. இது யாருக்கோ கட்டிய வீடு இதில் உனக்கு இடமில்லை என்று குடியிருப்பனை எச்சரித்தபடி இருக்கும். என்னதான் மாதாமாதம் வாடகைப்பணத்தைக் கட்டிமுடித்தாலும், வீட்டு உரிமையாளன் நமக்குத் எந்த விதத் தொந்தரவும் தராவிட்டாலும், நம்முடைய இருப்பை அது தற்காலிகமாகவேதான் கருதுகிறது. ‘வீடு உன்னுடையதல்ல’ என்ற உரிமைப்போராட்டத்தை வீடு மௌனமாகவே அரங்கேற்...

தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளியில் சிறுகதைப் பயிலரங்கு

 துணை முதல்வர் திரு கோவிந்தசாமி  ஆசிரியர் முனிச்செல்வியுடன் நான் என் எழுத்துச் சகோதரி முனிச்செல்வி  ஏற்கனவே தான் போதித்த பள்ளிகளில் சிறுகதைப் பயிலரங்கு நடத்த என்னை அழைத்திருக்கிறார். அது ஒரு அலாதியான அனுபவம். தானும் ஒரு எழுத்தாளர் என்பதால் அவரிடம் படைப்பிலக்கியம் பற்றிய வற்றாத பற்று  ஊறிக்கொண்டே இருக்கிறது . இம்முறையும் மாணவர் பயனுற என்னை தற்போது அவர் பணியாற்றும் தாமான் பெர்வீரா இடைநிலைப் பள்ளியில் ஒரு பயிலரங்கை நடத்தச் சொல்லி கேட்டுக்கொண்டதிலிருந்து இலக்கியம் சார்ந்த அவரின் ஈர்ப்பு நன்கு புலனாகிறது.( ஏன் அவரையே அழைக்கிறீர்கள் ,எனக்கு ஒரு  வாய்ப்பு தரலாமல்லவா என்று யாராவது உங்களைக் கேட்டும் வரலாம் செல்வி) ஒரு மூன்றாண்டு காலம் தன்னுடைய முதுகலைப் படிப்பை வெற்றிகரமாய் முடித்துவிட்டு இந்தப் புதிய பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கிறார் அவர்.எங்கே போனாலும் மாணவர்களோடு அன்பான தொடர்பு வைத்திருப்பவர் இவர். அவர்களுக்கும் படைப்பிலக்கிய ஆற்றல் வளரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். கடந்த வெள்ளிக்கிழமை 17.2.2012 ல் சரியாக 12.50 க்குப் பள்ளியை அடைந்ததும் என்ன...

இரண்டாவது ஆன்மா

நான் முன்பிருந்த வீட்டுக்குப் போனபோதுதான் எனக்கு இரண்டு ஆன்மாக்கள் இருப்பதாக உணர்ந்தேன் வீட்டின் தூண் ஒன்றைக் கெட்டியாகப் பிடித்தவாறு இருந்தது அது வீட்டைக் காலி செய்துவிட்டு விலகியபோது அது அங்கேயே தங்கிவிட்டிருக்கக்கூடும் கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்க்கவைத்ததும் அதுவாக ஏன் இருக்கமுடியாது வீட்டை விட்டுப் பிரியும் தருணத்தில் ஒரே பிஸ்கட்டை நாயொன்று கவ்வ்¢ச்சென்ற பசித்த குழந்தையின் சோகம் கனத்திருந்தது என் குரல்களின் அசரீரியை சேகரித்து வைத்து ஒலித்துக்காட்டியது என் பாதத்தடங்கள் படியாத இடமொன்றுண்டா என்று கேலி செய்தது என் படுக்கையறையிலிருந்து வரும் குரட்டையொலி சன்னமாகக் கசிந்தது கொய்யா மரத்தை அன்னாந்தவாறு வீட்டை மீண்டும் வாங்கிவிடலாமே என்று என் மகன் கேட்டான்  இரண்டாவது ஆன்மாவிடம் எப்படி விலை பேசுவது?

ஆயாக்கொட்டா(சிறுகதை)

                                      (மலேசியத் தோட்டப்புற சூழல் சிறுகதை)        ஆயக்கொட்டாயில நஞ்சானும் குஞ்சானுமா கெடக்கிற புள்ளங்கில கருக்கல்லியே வுட்டுட்டு போற தோட்டத்துச் சனங்க வேல வுட்டு வந்த , கடசி ஆளு  புள்ளய தூக்கும்போது லயத்துக் காட்ல ‘மினுக்கிட்டான் பூச்சி கணக்கா, மினுக் மினுக்குன்னு மண்ணெண்ண வெளக்கு அமிஞ்சிரட்டுமா அமிஞ்சிரட்டுமான்னு கேக்குற மாறி எரியும். கித்தா மரம் வெட்டப் போறதுங்க மணி ஒன்னரைக்கெல்லாம் வந்திடுங்க -ஒத்த வெட்டுன்னா. வெயில் காயுறு நாள்ளயும் வெல்லென வந்துடுங்க. பாதி நேரத்துல மல பிடிச்சிருசின்னா சுருக்கா வந்திடுங்க. கித்தா மரம் வெட்றதிலியும் சிலது இருக்குங்க , சந்தடி இல்லாம் வேல முடிஞ்சி வூட்டுக்குப் போயி , சமச்சி, தொவச்சி , ஏறக்கட்டி வச்சிட்டு , குளிச்சி முழுவி மூஞ்சில திப்பி திப்பியா பகுடர பூசிக்கிட்டுத்தான் புள்ளய தூக்க வருங்க. அன்னிக்கி டபுல் வ...