Skip to main content

பயணக் கட்டுரை 13 : இருபதும் எழுபதும்

13. ஜெயகாந்தனின் கர்ஜனை.

சொல்லாமல் இருப்பது போலவே
தோன்றுகிறது
சொல்லிய  பின்பும்

உரையாடல் அரங்கில் பேசிய கவிஞர் ரவி சுப்ரமணியனின் கவிதை இது

விஷ்ணுபுரம் விழாவின் உரையாடல் அரங்கத்தில் பேசப்பட்ட சிலவற்றை விட்டுவிட்டேன்.  குறிப்பெடுக்காமல் விட்டதால் வந்த தவறு.
கவிஞர் ரவி சுப்பிரமணியத்துடனான கேள்வி பதில் அங்கத்தில் பல சுவையான செய்திகளைப் பதிவு செய்யவேண்டும்.
ரவி சுப்பிரமணியம் நவீனக் கவிஞர் மட்டுமல்ல ,சங்கீதம் முறையாகக் கற்றவர் . எனவே இனிமையாகப் பாடக்கூடியவர். இசையமைப்பாளரும் கூட. அவர் ஓர் ஆவணப்பபட இயக்குனர் என்பது அவரின் கூடுதல் திறன்.

யாப்பிலக்கண கவிதைகள் மட்டுமே இசையமைப்பதற்கு ஏதுவானது என்ற வழக்கத்துக்கு முரணாக அவர் நவீனக் கவிதைகளை இசையமைத்துப் பாடியிருக்கிறார்.நவீனக் கவிதைகள் எதுகை மோனை சந்தம் சீர் போன்ற அடிப்படை யாப்பைக்கூட பின்பற்றாது. எனவே இசைக்குள் நிற்காது என்பது பலகாலமாகச் சொல்லப்பட்ட தகவல். ஆனால் நவீனக் கவிதைகளை அவர் பாடிக்காட்டும் போது அவை இசைக்குள் கச்சிதமாக இயங்குவதை ரசிக்கமுடிந்தது. ராக ஆலாபனைக்குள் வலைந்து நெளிந்து  இணைகிறது யாப்பற்ற கவிதைகள்.இளைய ராஜாகூட கவிதையற்ற சாதாரண வரிகளைக்கூட இனிய பாடலாக இசையமைத்து வெற்றியடையச் செய்திருக்கிறார்.'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே' இவ்வரியில் அடிப்படை யாப்பு கூட இல்லை. ஆனால் இனிய பாடலாகிவிட்டது. இசை அதனை உச்சத்துக்குக் கொண்டுசென்றுவிட்டது.

இளையராஜாவுடனான தன் இசையமைப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ஒரு காதல் கவிதைக்கு இளையராஜா சோக இராகத்தில் இசையமைக்க அதனை நிராகரித்திருக்கிறார் ரவிசுப்பிரமணியம். ராஜாவுக்கு கோபம் வர நீ இசையமையேன் பார்ப்போம் என்று சவால் விட்டிருக்கிறார். கவிஞர் காதலுக்கேற்ற ராகத்தில் இசையமைக்க இளையராஜா அதனை ஏற்றுக்கொண்டதாக கவிஞர் சொன்னார். இப்படி இசைஞானியுடனான பல இசை மோதல்களை அவர் சபையில் எடுத்துச் சொன்னார். அப்பாடலைப் பாடியும் காட்டினார்.
அன்றைக்கு கவிஞர் அபிக்கு விருது வழங்கும் விழாவில் அவரின் இரண்டு பாடல்களை ரவி இசையமைக்க  பதிவுசெய்யப்பட்டு ஒலிபரப்பானது.


ஜெயகாந்தனை ஆவணப்படம் எடுக்கும்போது அவர் அவ்விடத்தில் இருந்த தனக்குப் பழக்கமானவர்களையெல்லாம் பேச வைக்கும்படி கோரியிருக்கிறார். அனைவருக்கும் வாய்ப்பளித்தல் சாத்தியமன்று. வேண்டுமானால், ஓரிருவரை உங்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லலாம். இந்த ஆவணப்படத்தில் நீங்கள் உங்களது இயல்பான அன்றாட வாழக்கையில் இருப்பது போலவே இருங்கள். நான் கேள்விகளைக் கேட்கிறேன். அக்கேள்விகளை நான் முன்னமே கூட சொல்லப்போவதில்லை. பதில்கள் யாவும் அத்தருண உளபதிலாய் இருக்கட்டும் என்றிருக்கிறார் ரவி. அவருடைய கடைசி நாட்களில் அவரை ஆவணப்படுத்தி இருக்கிறார்.  அந்தம வயதிலும் அவரின் கர்ஜனை அப்படியே இருந்ததாம். உங்கள் இடத்தை யார் நிரப்புவார் எனக் கேட்டதற்கு, ஜெயமோகன் என்று கம்பீரத்தோடு சொன்னாராம் . காணொலியில் கடைசி கட்டத்தில் ஜெயகாந்தனின் கடைசி  நாட்கள் இவை என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆவணம் ஒலியேற்றத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கும் நாட்களில் அவர் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்திருக்கிறார். ஆவணப்படத்தில் இறுதியாக ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. உங்களுக்கு மரண பயம் உண்டா? என்பதே அந்த வினா. கொஞ்சம் அச்சுறுத்தும் கேள்விதான் ஆனால் ஒரு மாபெரும் ஆளுமையின் பதில் எப்படியிருக்கும் என்பதற்காகவே கேட்கப்பட்ட கேள்வி இது. அவர் மிகுந்த தைரியத்தோடும் கம்பீரத்தோடும் உரத்த குரலில் 'கலைஞனுக்கேதடா மரணம்?"  என்று பதில் சொன்னாராம். ஜெயகாந்தன் பேசிய மரணம் பற்றிய செய்தியைப் போட வேண்டாம். ஆவணப்படம் திரையிடுவதற்கும் முன்னர் ,அவர் இறந்துவிட்டால் இந்த ஆவணப்படம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு வரும், எனவே அந்தப்பகுதியை நீக்கிவிடலாம் என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதன் பின்னர்  அந்த எதிர்மறை வார்த்தைகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அந்தப்பேட்டிதான் அவருக்குக் கடைசியாக அமைந்தது என்று சொன்னார்.

இலக்கிய நிகழ்ச்சி என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக கட்டமைக்கப்பட்டிருந்தது விஷ்ணுபுரம் விழா. அரசியல் தலைகள் இல்லை. விதந்தோதுதல் இல்லை.படைப்பாளனிடம் தொடுக்கும் கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதில்களிலிருந்தே அககுறிப்பிட்ட நபரின் ஆளுமை வெளிப்படுகிறது.சில கேள்விகள் படைப்பின் போதாமையைச் சீண்டுவதாக அமையினும் அவற்றை படைப்பாளன் எதிர்கொள்ளும் விதம் உள முதிர்ச்சியை வெளிக்கொணர உதவுகிறது. விமர்சனத்தை யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம். அதனைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளவேண்டுமென்ற பாடத்தை இங்கே கற்றுக்கொண்டேன்.நீ யார் இதனைச் சொல்வதற்கு என்று எந்த எழுத்தாளரும் தொடை தட்டவில்லை.அடுத்த ஆண்டு கண்டிப்பாய் கலந்துகொண்டு என்னைக் கூர் தீட்டிக்கொள்ளவேண்டும்.
..........

கோவை விமான நிலையம் பயணிகளைச் சிரமத்துக்குள்ளாக்காத வகையில் சிக்கலில்லாமல் இருந்தது. ஒரு பயணப் பணியை முடித்து இன்னொன்று என வரிசைக்கிரமமாக அமைத்து வைத்திருக்கிறார்கள். அலைமோத வேண்டியதில்லை. நீங்கள் விமான நுழைவாயில் போகும் வரை எங்கும் எந்தச் சிக்கலும் இருக்காது. ஒன்றை அடுத்து இன்னொன்று என நிரலாக அமைத்திருப்பதை பார்த்தேன்.வழி அடையாள அட்டையைக்கூடப் பார்க்க வேண்டியதில்லை.
ஒலியில்லா அறிவிப்பு விமான நிலையமாக இந்த விமான நிலையத்தைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். அதனாலேயே இந்த ஒழுங்கு அங்கே கடைபிடிக்கப்படுகிறது.

ஒரு மணி நேர பறத்தலில் விமானம் சென்னையைத் தொட்டது. சென்னை பல்லாயிரம் மின் மினிப்பூச்சுகளால் கண் சிமிட்டி வரவேற்றது. இந்த மின்சார மின்மினிகளாலும் தொலைபேசி டவர்களாலும் இல்லத்தருகில் பறக்கும் இயற்கை மின்மினிப்பூச்சிகள் இல்லாமல் போனதை கவனித்திருக்கிறீர்களா? நான் பார்த்து ஆண்டுக்கணக்காயிற்று. செயற்கை செடிகள் இயற்கைச் செடிகளின் இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கும் சூழியல் ஆபத்தை நாம் கண்டும் காணாமல் இருக்கிறோம். வீட்டு இருட்டு மூளைகளில் தவளைகள் பம்மியதைப் பார்த்து வெகுநாளாயிற்று. நாம் பயன்படுத்தும் துணி வெளுக்கும் ரசாயனப் பொருட்கள் அவற்றைக் கொன்றொழித்துவிட்டன.

சென்னை விமான நிலையம் மிக நூதனமாக இருக்கிறது. ஜெயலலிதா காலத்துச் சாதனை.முன்பு போல சென்னை விமான நிலையத்திலிருந்து ஆட்டோவுக்கோ டேக்ஸிக்கோ அலைந்து சல்லைக்குள்ளாகாமல்  மெட்ரோ ரயிலிலேயே சில இடங்களுக்குப் பயணம் செய்யும் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள்.

நாங்கள் இறங்கிய நிலையத்தில் பத்ரி காத்திருந்தார். பத்ரி பாடகி எஸ்.ஜானகிக்கு நெருங்கிய உறவினர். ஜானகி சென்னைக்குப் பாடலை ஒலிப்பதிவு செய்ய வரும்போது பத்ரி வீடுதான் தங்குமிடம். பத்ரியும் ஹரியும் நல்ல நண்பர்கள்.
ஹரி பரிசளித்த புடைவையில்
ஹரியோடு பாடகி எஸ்.ஜானகி
ஹரி சிறு வயது முதலே எஸ்.ஜானகியின் தீவிர இரசிகர். தனது முந்தைய இந்தியாப் பயணத்தின்போது ஜானகி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். ஜானகி ஹரிக்கு சாப்பாடெல்லாம்  ஊட்டியிருக்கிறார். ஜானகியைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எனக்குமிருந்தது, ஆனால் அவர் சிரிடிக்கு சென்றுவிட்டதால் வாய்ப்பு கிட்டவில்லை. இருப்பினும் ஜானகி தங்கிய வீட்டில் நானும் தங்கிவந்தேன் என்பதை நினைக்கும்போது மெல்லிய அதிர்வாக இருக்கிறது.

பத்ரி வீட்டை அடையுமுன்னால் தலப்பாக்கட்டி உணவகத்தில் இரவு உணவு எடுத்துக்கொண்டு வீடடைந்தோம். நான் சோள சூப் மட்டும் அருந்தினேன்.என்ன செய்வது வாங்கியாயிற்று சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். நாங்கள் போய்ச் சேர்ந்தபோது நள்ளிரவை தாண்டியிருந்தது.
பத்ரியின் அம்மா தூக்கத்திலிருந்து எழுந்து வந்து எங்களை வரவேற்றார். அளப்பரிய அன்புள்ளம் கொண்ட மனுஷி அவர். இரண்டு நாள் அவர் வீட்டுத் தங்கலில் கிடைத்த உளம் நெகிழ்ந்த அனுபவம் அது.

என் இடுப்பளவுக்கு வளர்ந்த கரிய நாய் ஒன்றை வளர்க்கிறார்  பத்ரி. அச்சுறுத்தும் இருள் கருப்பும் உயரமும் கொண்ட நாய். பயந்து பயந்தே உள்ளே நுழைந்தோம்.  பைரவா என்றழைத்த குரலுக்குக் கட்டளையைச் செய்கிறது. நாங்கள் இருந்த மூன்று நாள்களில் நாய் குரைக்கவே இல்லை. குரைக்கிற நாய் கடிக்காது  என்பார்கள். நல்லவேளை இந்தப் பழமொழியை நாய் தெரிந்திருக்கவில்லை! சில நிமிடங்களில் விருந்தினரின் மோப்பம் அறிந்து நண்பராகி விடுகிறது.
பைரவா என்று மறுநாள் காலை நான் அழைத்தபோது என் அருகே வந்தமர்ந்து படம் எடுத்துக் கொண்டது. அதற்கு நான்கு மொழி தெரியும் .கட்டளை வார்த்தைகளில் நான்கு மொழிகள். தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், மலையாளம். சைவச் சாப்பாடுதான் ஆகாரம் அதற்கு. அதிலும் தயிர்சாதம் மட்டுமே சாப்பிடும். அதிக புளிப்பாக இருந்தால் வாயால் அப்புறத் தள்ளிவிடுகிறது.பேசத்தெரிந்திருந்தால் கிட்டதட்ட மனிதன்தான் அதுவும்.வேண்டாம் நன்றியுள்ள பைரவாவாகவே இருக்கட்டும்.

மறுநாள் முழுவதும் சென்னையில் கழித்தோம். சென்னை தோற்றமே மாறியிருக்கிறது.ஆனால் அது வசதியுள்ளோருக்கு மட்டுமான புறத்தோற்றம். பெரும்பாலான நாடுகள் பணம் இருக்கும் சமூகத்துக்கு உவப்பான வசதியான புற மாற்றங்களில் தீவிரமாக ஈடுபடுகிறது. இங்கே மலேசியாவில்  கோல்ப் திடல்கள் பெரும்பான்மையான இடங்களில் கட்டப்பட்டன.ரப்பர் தோட்டங்களை அழித்து 'வச்சி செஞ்சிட்டார்' மாஹாதிர்.அதற்கு அவர் சொல்லும் காரணம் வேலை வாய்ப்பு கூடுமென்பதே. என்ன வேலை வாய்ப்புகள்? கோல்ப் பந்து பொறுக்குவது கேடியாக இருப்பது,கோல்ப் விளயாட்டாளர்களுக்குப் பணியாளர்களாக இருப்பது போன்றவை.கேடியாக இருந்ததன் நீட்சியாகத்தான் அவன் கேடியாக மாறிவிட்டானோ என்னவோ?

                                                                                                                                           நிகழும்.......

Comments

Unknown said…
Well done... Worth reading post

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின