Skip to main content

பயணக் கட்டுரை 16 : இருபதும் எழுபதும்

15. கொய்த்தியாவ்


காரை நிறுத்த கடற்கரையருகே இடமில்லை. ஓட்டுனர் எங்களை கடற்கரையில் இறக்கிவிட்டு எல்லாம் முடிந்தவுடன் அழையுங்கள் வருகிறேன் என்று சொன்னார்.தமிழகத்தில் கார் வைத்திருப்பவர் அனைவரும் காரோட்டுவதில்லை. குறிப்பாக தாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து வேற்றிடத்துக்குப் போவதாய் இருந்தால் ஓர் ஓட்டுனரை நியமித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நாள் சம்பளம் வழங்குகிறார்கள். நாங்கள் தங்கிய இரு குடும்பத்தாருக்கும் கார் ஓட்டுனர் வந்தார். ஏன் நீங்கள் ஓட்டுவதில்லையா என்று பத்ரியைக் கேட்டேன்.

நோட் சேவ் என்றார்.

இந்தியா முழுவதும் இதே நிலைதான்.சாலை அவ்வளவு பாதுகாப்பானதல்ல. சில காலங்களுக்கு முன்னால் சென்னையில் சமிக்ஞை விளக்கின் விதிகளைக்கூடப் பின்பற்றாத ஓட்டுனர்களைப் பார்த்திருக்கிறேன்.
"டேய் சாவ் கிராக்கி, வூட்ல சொல்ட்டு வந்ட்டியா?" போன்ற வசவுகளை நானே காதுபடக் கேட்டிருக்கிறேன்.பட்டணங்களில் மக்கள் திரள் அதிகம். சாலையில் ஓயாத கால்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. நமக்கும் அவசர உலகில் சிக்கிக்கொண்டது போன்ற உணர்வு. எனவே, அனுபவமுள்ள கார் ஓட்டுனர்கள் மட்டுமே இந்திய சாலைகளின் நாடித்துடிப்பை அறிந்தவர்கள். இப்போது நிலைமை தேவலாம் என்றாலும் சாலை விதிகளை மீறுபவர்கள் மத்தியில் சராசரி ஓட்டுனர்களால் இப்போதுள்ள நிலைமையைக் கூடச் சமாளிக்க முடியாது என்பதால் கார் உரிமையாளர்களே வேண்டாம் வில்லங்கம் என்று இந்திய சாலைக்குப் பழக்கமானவரை உதவிக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.

மெரினா பீச் கடல் போல அகன்று கிடந்தது.கடற்கரை கடலைப் போன்று எல்லையற்றிருந்தது. இள மஞ்சள் மணல்வெளி பார்க்குமிடமெங்கும் பரந்து விரிந்தது.கடலலை ஆர்ப்பரிப்பு 100 மீட்டர் தூரத்திலிருக்கும்போதே கேட்டுக்கொண்டிருந்தது.  கடல் பக்கமிருந்து  அலைகளைப்போலவே ஓயாமல் வீசியது காற்று. மணல் துகள்களால் என் பற்கள் நரநரத்தன, கால் விரல் இடுக்குகளில் மணல் நெருடிக்கொண்டிருந்தது. காலணிகள் புதை மணலுக்குள் சிக்கிக்கொள்கின்றன.

யார் சுந்தரி அக்கா ஹரி என்றேன்.
யு டியூப்ல பாத்துருக்கேன்.
யூ ட்யூப்ல ஏன் உங்க அக்காவப் பாக்கணும்? வீட்ல பாக்கறத வுட்டுட்டு.
யூ ட்யூபலதான் தெரியும்.
அது சரி யூடியூப்ல ஆயிரக் கணக்கான பேர தெரியும். ஆனா அக்காங்குறீங்களே?
சார் அவங்க எனக்கு மட்டும் அக்கால்ல! பீச்சுக்கு வர்ரவங்களுக்கும் அக்காதான்.
என்னா ஹரி கனியன் பூங்குன்றன் மாரி பேசுறீங்க. அவருதான் யாதும் ஊரே யாவரும் கேளீர்ன்னாரு.
அவர்  சரியாத்தான சார் சொல்லிருக்காரு.  இவங்களும்  அவருக்கு அக்காதான்.
அப்போ அவுங்க உங்க சொந்த அக்கா இல்லியா?
அப்படி எப்படி சார் சொல்ல முடியும்? மீன் சாப்புடுற எல்லாருக்கும் அக்கா சார் அவுங்க.
என்னா ஹரி கொழப்புற? மீனுக்கும் அக்காவுக்கும் என்ன சம்பந்தம்?
சார் நீங்க மீன் சாப்புடுவீங்களா?
சாப்பிடுவேன்.
பொரிச்ச மீன் பிடிக்குமா?
பிடிக்கும்?
அப்போ உங்களுக்கு அவுங்க அக்காதான்.
எனக்கு இந்த வயசுல அக்கா இருக்க முடியாது ஹரி.
இருக்கு சார் வாங்க.

ஒரு ஒட்டுக் கடையை நெருங்கியதும், சுந்தரி அக்கா கடை என்று போர்டு தொங்கியது.
இந்தக் கடைதான் சார் என்றார் ஹரி.
என்னா மீன் பொரியல் கடையா?
ஆமா சுந்தரி அக்கா மீன் பொரியல்னா ஓலகம் பூரா பிரபலம். அங்க பாருங்க எத்தன பேரு சாப்புடுறாங்கன்னு.
கடையின் கல்லாவில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்மணியிடம் 'சுந்தரி அக்காவப் பாக்கணும்' என்று கேட்டார் ஹரி.
தோ தட்டல்லாம் எடுத்துகின்னு கீதே அதான் சுந்தரி அக்கா. ஒத்தரியும் நம்பாது.
 அதுவே சுத்தம் பண்ணும். அதுவே ஆர்டர் எடுக்கும். அதுவே பரிமாறும் என்றது அந்த மனுஷி.
சுந்தரி அப்போது கடையின் குப்பைகளை நீக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
சார் அதோ சுந்தரி அக்கா என்று அருகே போய், அக்கா வாங்க ஒரு படம் எடுத்துக்கலாம் என்று அழைத்தார் ஹரி. தோ செத்த வந்துர்ரேன் இரு என்றது.  இடுப்பில் செருகியிருந்த சேலையின் முந்தானையை நீக்கிவிட்டு, கூட்டுமாரை வைத்துவிட்டு,  படம் எடுக்க வந்து நின்றது சுந்தரி அக்கா கூச்சம் புன்னகையுடன். நாங்கள் உங்களைப் பற்றி ஊடகத்தில் எழுதப் போகிறோம் என்றார்.அக்கா பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்தது.
படம் எடுத்து முடிந்ததும்,சார் இவங்க மீன் பொரியல்னா அப்படித்தான் இருக்கும்னு யூடியூப்ல பேட்டி கொடுத்திருக்காங்க பல நூறு பேரு.அதான் இவ்ளோ தூரம் தேடி வந்திருக்கேன். மீன் சாப்பிடாம போறதில்லன்னு வரும்போதே கங்கணம் கட்டிட்டேன் என்றார்.
அது ஒரு படுதா கூரைக் கடை. மணல் தரைதான். மேசைகள் சம்மின்மை இழந்து ஆடிக் கொண்டிருந்தன. உட்கார்ந்தும் மணலுக்குள் இறங்கியது.  மேசைகளில் இருபதுக்கும் மேற்பட்டோர் வசதியாய் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சோறோடு பொரித்த மீன் துண்டையும் சுவைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் பலர்.பலர் காத்திருந்தனர். மீன் பொரிக்கும் ஓசையும் , மணமும் பரவி நாசிக்கு விருந்தளித்தது.
ஹரியும் எங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். ஒவ்வொரு தட்டிலும் மூன்று ஆள் சாப்பிடும் அளவுக்குத் தட்டின் கொள்ளளவை மீறியும் சோறு மலைபோல குவிந்து கிடந்தது. எனக்கு மீன் மட்டும் போதும் என்றேன்.அப்போதுதான் கடலில் பிடித்த புது மீன்போல மசாலாவில் பொரித்த மீன் துண்டுகள் சுடசுட மேசைக்கு வந்தன. புது சுவை. தமிழகத்தில் மீன் மசலாதான் சுவையின் சாரமே. அதனைத் தெரிந்துகொண்டால் யாரும் சுவையாகப் பொரிக்கலாம்.சுந்தரி அக்கா (ஆமாம் ஹரி சொல்வதுபோல எனக்கும் அக்காதான்) கடையின் மீனில் மிதமான மசாலா சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் சிவகங்கையில் சாப்பிட்ட மீன் பொரியலில் மிகையான மசாலா. மீன் வேறு மசாலா வேறு என்றில்லாமல் இரண்டரக் கலந்திருந்தது. எனக்கென்னவோ மிகைதான் பிடித்திருந்தது.

கடலலையில் கால்களை நனைத்தவாறே நடந்து கொண்டிருந்தோம். பல இடங்களில் மீன்களை மட்டும் பொரித்து விற்கிறார்கள்.
ஆனால் சுந்தரி கடைபோல மக்கள் திரள் இல்லை. யூடியூப் ஊடகம் சாதாரணரை பரபலமாக்கிவிடுகிறது. ஆனால் அதற்கு உள்ளபடியே திறமை வேண்டும். போலிகள் பிரபலமாகலாம் ஆனால் அவரே மெனக்கட்டு விளம்பரம் செய்துகொள்ள வேண்டும்.  ஒரு கூட்டத்தைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு சிறு சிறு விருதுகள் கொடுத்தால் போதும், விருதுகள் கொடுத்தவரை அவர்களே தூக்கித் தலையில் வைத்து ஆடிக்கொண்டிருப்பார்கள். தமிழ் இலக்கியம் தவம் இருந்து பெற்ற பிள்ளை என்று. அடிக்கடி தமிழகம் போய்வந்தால் எல்லாவற்றையும் சாத்தியமாக்கிவிடலாம்.

அன்று இரவு பத்ரி வீட்டில்,  வாங்கிய  துணிமணிகளை  பைகளில் அடுக்க வேண்டியிருந்தது, ஏனெனில் சென்னை விமான நிலையம் அருகே ஹரிக்கு  , ரயில் பயணம் ஒன்றில் சிநேகமான மாமி ஒருவரைச் சந்திக்க வேண்டும். அவர் என்னை வலிந்து அழைத்துக்கொண்டிருக்கிறார். பார்க்காமல் போவது குற்ற மனப்பான்மையை உண்டாக்கும் எனவே இங்கேயே பேக் செய்து கொள்ளலாம் என்றார்.

மறுநாள் காலை சென்னையில் புத்தகக் கடை ஒன்றில் தேடிய புத்தகங்கள் கிடைக்கும் என்பதால் அக்கடையைத் தேடிப்போய்  வாங்கியாயிற்று. வீட்டுக்குத் தேவையான உபரி பொருட்களை சென்னை தீநகரில் வாங்கிக்கொண்டு, பத்ரி வீட்டுக்குத் திரும்பினோம். சுவையான மதிய உணவு தயாராக இருந்தது. இன்று சைவ விருந்து. எனக்கு விருப்பம் என்பதற்காக, வத்தக்குழம்பு உட்பட பல ஐட்டம்கள் இருந்தன.
அவற்றை உண்டப்பின்,  பத்ரியிடம் பிரியாவிடை கொண்டு அவரது வீட்டருகே உள்ள மெட்ரோ ரயிலில் ஏறி மாமி வீட்டை அடைந்தோம். மாமி வாசலில் காத்திருந்து ஹரியைக் கட்டிப்பிடித்து வரவேற்றார். தனது முந்தையப் பயணத்தில் ஜானகி அம்மாவைச் சந்திக்க சென்னையிலிருந்து வட ஆந்திராவிற்குப் 14 மணி நேரம் இரயிலில் பயணித்தபோது ஹரிக்கு உருவான சிநேகிதம். இரயில் சிநேகிதம் என்ற சொற்றொடரின் பொருளை மாற்றிய இரயிலில் கொண்ட சிநேகிதம். மாமி ஹரியிடம் பேசுவதற்கு நிறைய இருந்தது. எனவே, எனக்கு ஒரு தனி அறை கொடுத்து ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார். குறைந்தது ஒரு மணிநேரம் நல்ல தூக்கம்.
கீழே இறங்கி வந்ததும் இரவு உணவு தயாராக இருந்தது, சப்பாத்தி, பூரி,துவையல், சாம்பார் என இன்னும் நான்கு மணிநேரம் தாக்குப் பிடிக்கும் உணவு வகைகளைப் பரிமாறினார்.
போதும் போதும் என்று தடுத்தாலும்  கேட்கவில்லை. தட்டு நிறைய உணவுக்கு ஈடாக மனம் நிறைய அன்பு இருந்தது அவர்களுக்கு.மாமியின் பிள்ளைகள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் குடும்பத்தோடு வாழ்கிறார்கள். பெற்றோர் அவ்வப்போது போய்வந்து கொண்டிருக்கிறார்கள். நம்மிடமும் சொந்தப் பிள்ளைப்போல உறவாடுகிறார்கள்.

மூன்று மணி நேரத்துக்கு முன்னால் விமானத் தளத்தில் இருந்தாக வேண்டும்.  நேரம் ஓடிக்கொண்டிருந்தது. எங்களைச் சாலை வரை வந்து ஆட்டொ பிடித்து ஏற்றிவிட்டார்கள். அன்றைக்கு ஆட்டோ கிடைக்கவே நேரமாகிவிட்டது. அடித்துப் பிடித்து விமானத் தளம் வந்து ஏர் ஏசியா பிடித்தாயிற்று.
விமானம் மலேசிய நோக்கிப் பறந்தது.
சார் போன ஒடனே கொய்த்தியாவ் சாப்பிடணும் என்றார் ஹரி.

பிற,

இக்கட்டுரை எழுத எனக்கு ஏதும் முன் எண்ணம் இருக்கவில்லை. எழுதுங்க சார் என்று எனக்கு ஊக்கியாக இருந்தவர் தம்பி ஹரி. இக்கட்டுரைகளின் பிழைகளைத் திருத்தி படங்கள் போட்டுத் தருவார் தினசரி. கடுமையான மருத்துவப் படிப்பு வேலைகளுக்கிடையே பேருதவியாக இருந்தார்.

என வலைப்பூவில்  தவறாமல் வாசித்துவிட்டு உற்சாகப்படுத்த கருத்திட்டவர்களில் எழுத்தாளர் பாவை,கவிஞர் கோவி. மணிமாறன், டாக்டர் சபாபதி,பினாங்கு முனைவர் சரஸ்வதி, ரவாங் முனைவர் சரஸ்வதி, தம்பி பிரவின் குமார், ஆசிரியர் கோவிந்தசாமி, விரிவுரைஞர் தமிழ்மாறன், பேராசிரியர் கண்ணன் நாராயணன். ஜெயந்தி டீச்சர், மழைச் சாரல் மகேஸ்வரி ,விரிவுரைஞர்  சச்சி,தலைமை ஆசிரியர் நாகேந்திரன், நண்பர் மூர்த்தி, டெக்னிக் கணெசன்,நண்பர் மணிஜெகதீஸ் , முனைவர் ரஞ்சினி,திரு அம்பிகா, இன்னும் ஸ்மைலிஸ் அனுப்பிய அனவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

                                                                                                                                              முடிந்தது.


Comments

Kalai said…
தேடிய புத்தகங்கள் கிடைக்கிற அந்த சென்னை புத்தகக் கடையின் பெயர் என்ன?

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின