Skip to main content

பயணக் கட்டுரை 14 : இருபதும் எழுபதும்

14. சைவமும் வைணவமும் சங்கமிக்கும் காஞ்சிபுரம்.


காஞ்சி காமாட்சியம்மன் ஆலயக் காட்சி

காஞ்சிபுரம் அண்ணா பிறந்த ஊர் என்பதால் கடந்த முறை அவர் வாழ்ந்த இல்லம் சென்று வந்த நினைவில் இந்த முறை திருத்தலங்களைப் பார்த்துவரலாம் என்று புறப்பட்டோம்.காஞ்சி  சைவ வைணவக் கடவுளர்களுக்கான திருத்தலங்களின்  பெருநகரம். காஞ்சிபுரப் பட்டுப்புடவைகள் நெய்யப்படும் சிறுதொழில் நிறைந்த நகரமும்கூட.

சாலை நெருக்கடியில் பல இடங்களைப் பார்க்கமுடியாமல் போகலாம் என்பதால் காலையிலேயே துயிலெழுந்து கிளம்பிவிட்டோம். பத்ரி எங்களுக்கு முன்னர் எழுந்து காலை உணவு தயார் செய்துவிட்டு பைரவாவை காலை நடைக்குக் கொண்டு சென்று தயாராகக் காத்திருந்தார்.

நாங்கள் திட்டமிட்டபடி இலக்கைப் போய் அடைந்தோம். முதலில் நாங்கள் தரிசித்த கோயில் காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயில்.காஞ்சி  காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்று முப்பெருந்தேவிகளைக் குறிப்பிடும் சொற்றொடரின் காஞ்சி காமாட்சியை இம்முறை பார்க்க வாய்ப்புக் கிட்டியது. மதுரை மீனாட்சியை பலமுறை தரிசித்தாயிற்று.காசிக்குப் போயும் விசாலாட்சியைப் பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பள்ளிகொண்டுள்ள சக்தியே வடிவானவளை தரிசிக்க முதலில் தெற்கு வாசலில் நுழைந்தோம், வாசல் சாத்தியிருந்தது. மேற்கு வாசலுக்குப் போயும் அதே நிலைதான்,வடக்கிலும் நுழைய முடியவில்லை. கடைசியில் கிழக்கு வாசல் மட்டுமே தரிசனைக்குத் திறந்திருந்தது. உள்ளே நுழைவதற்கு முன்பாகவே பிரதட்சணம் ஆயிற்று.

இக்கோயிலில் சக்தியாக காட்சிதரும் காமாட்சி இருகால்களையும் மடித்து  பத்மாசன யோக நிலையில் காட்சி தருகிறார். ஆதி சங்கரரால் எட்டாம் நூற்றாண்டில்  இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று விக்கி சொல்கிறது.
நுட்பமான கலைச்சிற்பம் கொண்ட மண்டபம்

தசரத மன்னர் இக்கோயிலில்தான் புத்திர யாகம் செய்தார் என்று ஒரு பௌராணிகக் கதையும் சொல்லப்படுகிறது. இக்கோயிலின் பள்ளிகொண்டுள்ள சக்திக்கு ஈடான அந்தஸ்தை மஹாமேருவும் கொண்டுள்ளது என்பது இன்னொரு சிறப்பு.
மூலஸ்தானத்திற்குச்
செல்லும்முன் கண்ட
வியக்கவைக்கும் பொறியியல்
அறிவுடைய முன்னோர்
கலைத்தூண்

கோயிலின் நுழைவாயிலில் சிறு வணிகர்களின் கூரையில்லாக் கடைகள் இருந்தன. நான் வீட்டுக்கு அல்வா வாங்கலாம் என்று சுத்தமான கடையைத் தேடினேன். வேறு இடங்களுக்குச் சென்று வாங்கும் நேரம் வாய்க்காமல் போகலாம் என்பதால். ஆனால் எல்லாக் கடைகளும் திறந்த வாக்கில் கிடந்ததால் வாங்க மனம் வரவில்லை. தமிழ் நாட்டில் எல்லாப் பட்டணங்களின் சூழலும் ஒரே மாதிரி மிக மெல்லிய தூசு மண்டலத்தால் போர்த்திக்கிடப்பதே காரணம்.  காஞ்சி காமாட்சியே பார்த்து தமிழ்நாட்டைத் தூய்மையாக்கினால்தான் ஆயிற்று என நினைக்கிறேன். 
நேரம் ஓடிக்கொண்டிருப்பதால் காஞ்சியின் முக்கிய திருக்கோயில்களைப் பார்த்துவிடவேண்டும் என்று ஹரி அவசரப்படுத்தினார். என்வே காஞ்சியின் மிகப் புகழ்பெற்ற அத்திவரதர் பெருமாள் கோயிலுக்குப் பயணமானோம்.ஒவ்வொரு கோயிலும் ஒரு முழுநாள் ஒதுக்கிப் பார்த்து ரசிக்க வேண்டிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டிருந்தது. சிற்பங்கள் சொல்லும் சித்திரங்கள். சிற்பக் குறியீடுகள் வழி சொல்லும் உப கதைகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஆனால் சுற்றுலா செல்லும் எங்களைப்போல அவசரக் காரர்களுக்குச் சிற்பங்களின் புராணம், புராணங்கள் வழி கிடைக்கும் தத்துவ தரிசனம் கிடைப்பது அரிது.

அடுத்து வரதராஜ பெருமாள் திருத்தலம் எங்களை வரவேற்றது. இந்தக்கோயில் அத்திவரதரால் கடந்தாண்டு அதீத புகழ்பெற்றது உலகறிந்த செய்தி.

அத்தி வரதர்

அத்திவரதர் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்திலிருந்து எடுக்கப்பட்டு
48 நாட்களுக்கு காட்சியளிக்கச் செய்து பின்னர் மீண்டும் அதே குளத்தில் இறக்கி வைக்கப்படுவார். 2019ல் அந்தத் தவணை வரவே குளத்திலிருந்து வெளியெடுக்கப்பட்டுக் காட்சியளிக்கும்படிச் செய்தார்கள்.
அனந்த சரஸ் குளம் & கட்டையான
தங்க கோபுரத்தின்கீழ்தான்
அத்தி வரதர்
வைக்கப்பட்டுள்ளார்
கடந்த ஆண்டுமட்டும் சுமார்
15 லட்சம் பேருக்கு அருள்பாலித்திருக்கிறார் அத்திவரதர். கூட்ட நெருக்கடி எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இந்த அருட்காட்சிக்கு காவல் துறையினரின் பங்கு அளப்பரியது. மக்கள் திரளை ஒருங்கிணைக்கும் அவர்கள் படும் சிரமம் செய்திகளில் வாசிக்கும்போது மனதுக்குச் சிரமமாக இருந்தது. மீண்டும் 2059ல் அருட்காட்சிக்கு குளத்திலிருந்து வெளியே எடுக்கப்படுவார். 
அத்திவரதர் பற்றிய வரலாற்றுக் கதை  ஒன்றுண்டு. 


முகலாய மன்னர் ஔரங்கச் சீப்பின் படையெடுப்பின் போது தமிழ்நாட்டின் முக்கிய ஆலயங்கள் சிதைக்கப்பட்டன. இக்கோயிலில் அத்திவரதர் சிலைதான் அக்காலத்தின் மூலவமூர்த்தியாக இருந்தது.அச்சிலையைப் பாதுகாக்கவேண்டி திருச்சிக்குப் பக்கத்திலுள்ள இடம் ஒன்றுக்கு ரகசியமாக அனுப்பப்பிவைத்தார்கள். இதுபோலவே இரண்டு முறை செய்தி, சிலை கோயிலுக்கும் திரும்பியது. ஆனால், மூன்றாவது முறை அனுப்பியச் சிலை திரும்பவில்லை.அதற்குப் பதில் மூலவராக கற்சிலை ஒன்று பிரதிட்சை செய்யப்பட்டது.
2019- தரிசனம் முடிந்து
குளத்திற்குத் திரும்பிய
அத்திவரதரின் படம்

மிக மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட அந்தச் சிலை பாதுக்காப்புத்திட்டம் குறித்தறிந்த ஆலாயத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் உட்பட ஒரு தலைமுறையே கடந்துவிட்ட நிலையில் 40 ஆண்டுகள் கழித்து அந்தக் கோயிலின் குளத்து நீர் குறைய, பெரிதான பெட்டி ஒன்று தென்பட்டது. திறந்து பார்க்கையில் அத்தி வரதர் சிலை இருந்தது.ஏற்கனவே கற்சிலை ஒன்று மூலவராக வைக்கப்பட்டிருந்த காரணத்தால்.

பெட்டியிலிருந்த இந்த அத்திவரதர் 48 நாட்களுக்கு தரிசனத்துக்கு  வெளியே வைக்கப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குள்ளேயே வைக்கப்பட்டு வருகிற மரபு பேணப்பட்டு வருகிறது.சிலை காணாமற் போன ஆண்டு 1669 என்று பார்க்கையில் வரலாறு நம்பும்படியாகத்தான் இருக்கிறது.
வியத்தகு மண்டபம். ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள அந்தச் சங்கிலித் தொடரைப் பாருங்களேன்... காற்றுக்கேற்ப ஆடியது.

இன்னொரு தரப்பு சிலை சிதைவுக்குள்ளாகி பூசைக்கு தகுதியற்றமையால் குளத்தில் வைக்கப்பட்டது எனவும் கூறிவருகிறார்கள்.
இக்கோயிலின் இன்னொரு சிறப்பு தங்கப் பல்லி இருப்பது. கோயில் வளாகம் எத்தனையோ ஹெக்டர்கள் கொண்டது.திருப்பதிக்கு ஈடான கோயிலாக இதனைக் கருதுகிறார்கள்.


உலகளந்த பெருமாள் கோயிலின் முகப்பில் ஹரி
அதனையடுத்து உலகளந்த பெருமாள் எங்களை அழைத்துக்கொண்டிருந்தார்.

உலகளந்த பெருமாளைப்பற்றி  ஒரு தொன்மக் கதையுண்டு. அந்தனச் சிறுவனாக அவதரித்த திருமால், மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்கிறார். மன்னனும் தர சம்மதிக்கிறார். உடனே விஸ்வரூபம் கொண்டெழுகிறான் திருமாலாக. மூன்று அடி வைக்க இடமில்லாததால் விண்ணையும் மண்ணையும் இரண்டே அடிகளால் அளந்துவிடுகிறார். மூன்றாவது அடி வைக்க இடமில்லாததால் தன் காலை மன்னனின் தலையில் வைக்கிறார். உலகளந்த வடிவத்தைக் காண இயலாத மன்னன் பாதாளத்தில் தள்ளப்படுகிறான். மன்னனின் வேண்டுதலுக்கிணங்க திருமால் வெவ்வேறு நிலைகளில் காட்சியளிப்பதே ஊரகம்,காரகம்,நீரகம். மற்றும் திருக்கார்வானம்  என அழைக்கப்படுகிறது.  இந்த நான்கு திவ்ய தேசங்களையும் திருமங்கையாழவார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். உலகளந்த என்ற சொல் இறைவனின் பூரண சக்தியைக் குறிப்பிடுகிறது.(விக்கிப்பீடியா)

அதற்கிடையில் ஒரு சைவ உணவுக்கடையில் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
வரதராஜர் கோயிலில்,
பத்ரி, ஹரியுடன்

நாளை மேலும் மூன்று இடங்களைப் பற்றி எழுதுகிறேன், நாளை மறுநாள் காலை மலேசியா திரும்புகிறோம் என்பதால் எங்கள் பயணத்தில் துரிதத்தைக் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது.


                                                                                                                          நிகழும்...

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த