Skip to main content

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான்.

பகுதி 4



கருத்தரங்குகள் வழி புதுக்கவிதை படைபிலக்கியத்தை மீட்டெடுத்தல்



முதல் புதுக்கவிதை கருத்தரங்குக்குப்பிறகு புதுக்கவிதை படைப்பிலக்கியம் ஒரு தேக்க நிலையை அடைந்தது.

இதற்குச்சில காரணங்களை முன்வைக்கலாம்:

1. மலேசியாவில் தமிழ்க்கல்வி முதல் ஆறு ஆண்டுகள் வரைதான்

போதிக்கப்படுகிறது.ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள் சிலவற்றிலும்,

மலாயாப்பல்கலைக்கழகத்துலும் தமிழ் போதிக்காப்பட்டாலும்,அங்கிருந்து

இலக்கியப்படைப்பாளிகள் உருவாவது மிக அரிது.

2.புதுக்கவிதை எழுத வந்தவர்கள் அதன் நுணுக்கங்களைப்புரிந்து

கொள்ளாமை.

3.புதுக்கவிதைகளை வளர்ப்பதாக எண்ணி தரம் பாராமல் வார மாத ஏடுகள்

அவற்றைப்பிரசுரித்தது.

4.புதிதாக எழுத வருபவர்களின் ஆர்வக்கோளாறு.

5. விரிவான வாசிப்பு அனுபவம் இல்லாமை. ( நல்ல நூல்களை வாங்கிப்படிக்காமையும், தேடிப்பிடித்து படிக்காமையும்) எனப் பல காரணங்களை

முன்வைக்கலாம்.





புதுக்கவிதை எதிர்நோக்கிய இந்தச்சரிவை நேர் செய்ய முதல் கருத்தரங்கையைக்கூட்டியவர்கள் மீண்டும் புத்தெழுச்சிபெற்று எழுந்தனர்.

கோ.முனியாண்டி,எம்.ஏ.இளஞ்செல்வன், கோ. புண்ணியவான், துரை.முனியாண்டி, அருள்தாஸ், ஆகியோர் 1988ல் நவீன இலக்கியச் சிந்தனையை அமைத்து, கூலிமில் மீண்டும் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தனர். அன்றைய கண்ணீர்ப்பூக்களால் இளைஞர்களின் கனவுக்கவிஞராக வலம் வந்த மு.மேத்தா அந்தக்கருத்தரங்கில் கலந்துகொண்டதானது புதுக்கவிதைக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்தது.

ஏழாண்டுகள் கழித்து,அதாவது 1995ல் கோ.முனியாண்டியின் ஏற்பாட்டில் சித்தியவான் நகரில் மீண்டும் ஒரு கருத்தரங்கைக்கண்டது நவீன இலக்கியச்சிந்தனை அமைப்பு.

அன்றைக்கு மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் செயலாலராக இருந்த பெ.ராஜேந்திரன், விட்டு விட்டுத்தொடரும் கருத்தரங்கு தொடர்ந்து நடப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, எழுத்தாளர் சங்கத்தி வழி, அதற்கு புது ரத்தம் பாய்ச்சும் வண்ணம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்கைக்கூட்டினார். அந்தந்த பகுதியில் வாழும் இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ளும் பொருட்டு இந்தக்கருத்தரங்குகள் ஏதுவாக இருந்தன. மூன்று மாதத்தில் எல்லாப்பத்திரிகைகளிலும் வெளியான புதுக்கவிதைகளின் ஆய்வு, அவற்றில் சிறந்தவற்றுக்குப்பரிசு, புதிய கவிஞர்களை அடையாளம் காணுதல், திடீர்க்கவிதை போட்டி எனப் புதுக்கவிதையின் வளர்ச்சியை நோக்கிய இலக்காக அதற்குக் களம் அமைத்துக்கொடுத்தது. புதுக்கவிதை வளர்ச்சியில் மிகுந்த அக்கறையும், ஆற்றலும் கொண்ட பேராசிரியர் வெ.சபாபதி எல்லாக்கருத்தரங்குகளின் போதும் புதுக்கவிதை படைப்பிலக்கிய நுணுக்கங்களைப்போதித்தது அதனை மீட்டெடுப்பதற்கான பெரு முயற்சியாகவும் அமைந்தது. தொடர்ந்து பதினைந்து கருத்தரங்கைக் கண்டவர் அதற்கான ஆதரவு மட்டுப்பட்டதால் அது மீண்டும் தொய்வு நிலைக்குத்திரும்பியது.

ஆனால் மீண்டும் 2009ல் ஏப்ரல் திங்களில் பினாங்குத் துங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஒரு கருத்தரங்கு கூட்டப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்ப்பேராசிரியர் சி.மோகன் இதில் கலந்து கொண்டு பேருரையாற்றினார். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் கருத்தரங்குகள் மையமிடும் என இன்றைய தலைவர் பெ.ராஜேந்திரன் சூளுரைத்தார்.





புதுக்கவிதையின் பாடு பொருள்கள்



சாதியம்

கோட்பாடு சார்ந்த இலக்கியப்படைப்புகள் மலேசியாவில் இல்லை என்று சொல்லி விடலாம். ஆனாலும் மார்க்சியம்,சாதியம்,பெண்ணியம், போன்ற இசம் சார்ந்தவை கவிதைகளுக்குள், ஊடும் பாவுமாகக்காணமுடியும். இதில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய ஒன்று சாதி சார்ந்த சிந்தனைச் சொல்லோவியங்கள்.காதல் சதிய வழக்கத்தை வேரறுத்து வருகிறது என்று சொல்லலாம்.ஆங்காங்கே சாதிய அமைப்புகள் தங்கள் சாதியைக்கட்டிக்காத்து வருகின்றன.சாதியின் பெயரை முன்வைத்து ஓட்டு வாங்கும் பழக்கம் மிக ரகசியமாக நடந்தேறுகிறது. குறிப்பாக அரசியல் களங்களில் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தைக்கண்டுபிடிக்க முடியவில்லை! அதன் வியாபகம் இன்றும் புற்றுப்பாம்பென அடங்கி இருப்பது போன்ற பாவனை தெரிகிறதே ஒழிய அது சமயங்களில் புற்றைவிட்டு வெளியேறி படமெடுத்து ஆடவும் செய்கிறது .இதனை ஒரு கவிஞர் இப்படி பதிவு செய்கிறார்.



ஜாதி

கிளைத்தேர்தல் நடந்தது

இறுக்கத்துடன் உறுப்பினர்

பரபரப்புடன் ஓட்டுப்போட்டனர்

வெற்றிபெற்றது சாதி

தோல்வியுற்றது நீதி

செ.குணாளன்







அப்புறபடுத்தப்பட்டுவரும் தோட்டப்புறம்



காலணியவாதிகளால் சஞ்சிக்கூலிகளாக மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்ட தென்னிந்தியர்களின் வரலாறு தோட்டப்புறத்தில்தால் அதிகம் தேங்கிக்கிடக்கிறது.காடுகளாக இருந்த மலயா மண்ணை சீர்படுத்தி ரப்பர்,தேயிலை,செம்பனை நடுவதற்கு உகந்த இடமாக மாற்ற அடிமைப்போக்கும் உடல் உழைப்புக்கு சற்றும்தயங்காத மனோபாவமும் கொண்ட தென்னிந்தியர்கள் மிகப்பொருத்தமான இனமாக வெள்ளையர்களால் அடையாளம் காணப்பட்டார்கள்.பின்னாளில் அவர்களாலேயே உருவாக்கப்பட்ட ரப்பர் தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.சுரண்டலுக்குப் பேர்போன காலனியவாதிகள் ஐரோப்பிய நாடுகளின் தொழிற்புரட்சிக்குத் தேவைப்பட்ட மிக முக்கிய மூலப்பொருளான ரப்பரைத் தேக்கமில்லாமல் உற்பத்தி செய்வதற்கு இவர்களின் அடைமைத்தனம் பெரிதும் உதவியது. இதனைச் சாதகமாகப்பயன்படுத்திய பிரிட்டிசார் மேலும் மேலும் தோட்டப்புறங்களை நிறுவி தென்னிந்திய குடும்ப சந்ததியினர் தொடர்ந்து தோட்டப்புறத்திலேயே வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை செய்து தந்தனர்.அவர்கள் வழிபடும் மாரியம்மன், முனீஸ்வரர் கோயில்கள் ,தமிழ் தெலுங்கு மலையாளப்பள்ளிகள், ஆயாக்கொட்டகைகள் என்று சொல்லப்படும் குழந்தைக்காப்பகங்கள்,சில இடங்களில் சினிமா கொட்டகைகள்,கள்ளுக்கடைகள் போன்றவை நிறுவப்பட்டன.தோட்டப்புற மக்களுக்கு வெளி உலகத்தைக்காட்டினால் ரப்பர், தேயிலை, செம்பனை உற்பத்தியில் பாதிப்பு வந்துவிடும் என்று கருதிய பிரிட்டிசார் இவர்கள் தோட்டப்புறத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கான தந்திரமாகவே இவ்வாறான வாழ்வை அவர்களுக்காகக் கட்டமைத்துக்கொடுத்தனர். வெள்ளையர்களால் ஓட்டிவரப்பட்ட தென்னிந்தியர்களின் மூன்று தலைமுயினரின் பெரும்பாலோர் தோட்டப்புறங்களிலேயே தங்கள் வாழ்நாளைக்கழித்தனர்.ஆனால் இன்றைக்கு அந்த நிலை மாறி வருகிறது.மலேசியா தொழில் துறையில் கவனம் செலுத்திய நாளிலிருந்து தோட்டப்புறங்கள் மலேசிய நிலப்படத்திலிருந்து காணாமற்போய்க்கொண்டிருக்கிறது.தோட்டப்புற மக்கள் தொழில் துறைக்கு மாற நேர்ந்தது.இதனால் தோட்டப்புறக் கலாச்சாரம் கை நழுவிப்போகும் அபாயத்தை எட்டியது.தோட்டப்புறச்சூழலின் வாழ்வனுபவத்தை கவிஞர்கள் பதிவு செய்தும் வைத்துள்ளனர்.



தோட்டத்திலுள்ள பழைய வீட்டுக்குத்

திரும்ப வேண்டும்

பார்வைக்குத்தென்படாதெனினும்

உள் நுழைந்தால் உணரமுடியும்

எரிக்கப்பட்ட கித்தா கொட்டைகளின் தணலை

வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது

உள்ளேயே அடைந்து வாழ்ந்து

மக்கிப்போன

தாய்தந்தை தமக்கையின்

ஆகக்கடைசி சொற்களைப் பொறுக்குவதற்கு

திரும்பியே ஆகவேண்டும்

அதற்குபின்னர்

என்ன வாழ்வு. (ப.அ.சிவம்)



எரிக்கப்பட்ட கித்தா(ரப்பர்)கொட்டைகளின் தணலை, உள்ளேயே அடைந்து வாழ்ந்த மக்கிப்போன வாழ்வு, என தோட்டப்புற வாழ்வுத்துயரத்தின் குறியீடாக கசியும் சொற்களின் சோகத்தை அங்கு வாழ்ந்தவர்கள் மட்டுமின்றி, இதனை வாசிப்பவகளும் உணரமுடிகிறது. இதனைக்கட்டியங்கூறுகிறது இன்னொரு கவிதை. .......தொடரும்

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த