Skip to main content

பினாங்கில் அனைத்துலகக் கதை சொல்லிகள்

பிங்சின் பின்பற்றக்கூடிய எடுத்துக்காட்டு 
(PINKS (Penang International kids storytelling Festival)


மலேசியாவில் வாசிப்புப் பழக்கம் அருகியும் சுருங்கியும் வருவதை கவனிப்பார் இல்லை என்றே தோன்றுகிறது. சோதனை முடிவுகள் மட்டுமே வாழ்க்கையை வண்ணமையமாக்கும் என்ற முன்முடிவுகளும் நம்பிக்கையும் தமிழ்ச் சமூகத்தில் முத்திப்போய்க் கிடக்கிறது. இது பைத்தியம் முத்திப் போனதற்கு ஈடாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். ஒரு பன்னிரண்டு வயது பள்ளி மாணவச் சிறாரின் மேல் சிறந்த சோதனை முடிவுகளை திணிக்கப்பார்க்கும் சமூகச் செயல்பாடு,  இச்சமூகத்தின் உன்னத எதிர்காலத்துக்கும் உலை வைக்கும் காரியமாகும். வெறும் ஏட்டுக் கல்வியும், அதன் பிரதிபலன்களும் மட்டுமே சிறந்த வாழ்க்கையைக் கொடுத்துவிடாது. முடிவுகளை நிர்மாணிக்க நாம் கலை சார்ந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த மறுக்கிறோம், அல்லது முற்றாகப் புறக்கணிக்கிறோம் என்பதே உண்மை. இந்த முன்முடிவுகள் கண்மூடித்தனமானது. இன்றைக்கு நம் இளைஞர்களிடையே பிற்போக்குத்தனங்கள், வன்முறைகள் ஏன் நிகழ்கின்றன்?, முன்பு போல விளையாட்டுப் போட்டி உலகத்தில் ஈடுபடாமை, கலை சார்ந்து கல்வியை முன்னெடுக்காமை, என உள்ளபடியே மகிழ்ச்சியான வாழ்வை வாழாமல், பிழைப்பையே நாடிப்போய்க்கொண்டிருக்கிறோம். வாழ்வதற்கும் பிழைப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. வேறு சந்தர்ப்பத்தல் விவாதிக்கலாம் இதனை.

 ஆனால் அதே வேளையில் கல்விக்கு அடிப்படையாக, ஆதாரமாக விளங்கும் பல அலகுகளை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். இன்று நட்ட ரோஜாச் செடி நாளை காலையே பூ பூத்துக்குலுங்க வேண்டும் என்ற அவசரம் ஒட்டுமொத்த பெற்றோரின் மனநிலையாக ஆகிப்போனதால்  நல்ல சோதனை முடிவுகளை தங்கள் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.எதிர்ப்பார்த்து நின்றது  கிட்டாத பட்சத்தில் அவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனால் தங்கள் குழந்தைகளைக்கூட  தாங்க முடியாத மன அழுத்தத்துக்கு ஆளாக்குவது சமூகத்தில் நிகழும் மிகப்பெரிய அவலமாகிக் கிடக்கிறது. யு.பி.எஸ்.ஆர் முடிவுகள் பெற்றோர் எதிர்பார்த்தது போல இல்லை என்பதால் தற்கொலை செய்துகொண்ட உண்மை நிகழ்வு ஒன்று மலேசியாவிலும் நடந்தது.

கல்வி மகிழ்ச்சியான சூழலில் அமையவேண்டும். சோதனை முடிவுகளுக்கு அடிமையாகும் நிலைக்கு ஆளாகக்கூடாது என்ற கற்பிதம் அழுத்தமாக அவர்களிடம் இது நாள்வரை கல்வி நிலையங்களோ, பெற்றோரோ, தன்முனைப்பாளர்களோ, அழுத்தமாகப் பதிவு செய்யவே இல்லை.

இதனைக் களையவே பினாங்கு மாநிலத்தில் இருக்கும் பினாங்கு கல்விக்கழகம் பிங்க்ஸ் என்ற தலைப்பிட்டு அனைத்துலக அளவில் ஒரு கதை சொல்லும் விழாவை முன்னெடுத்தது.
இது நான்காவது ஆண்டு.
சிங்கப்பூர் கல்விக்கழகம் அல்லது அதன் தேசிய நூலகம் சிறார்க்கு கதை சொல்லும் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதில் ஆசியாவில் முதன்மை  எடுத்துக்காட்டகத் திகழ்கிறது. அதற்காக அவர்கள் ஒரு நிறுவனத்தையே அமைத்து தீவிர செயல்பாட்டில் ஈடுபட்டவண்ணம் இருக்கிறார்கள்.  அதற்குத் தலைவராக பிரிட்டனிலிருந்து சிங்கைக்குக் குடியேறிய ரோஜர் ஜென்கின் அமர்த்தப்பட்டிருக்கிறார். சீரிய முறையில் கதை சொல்வதைத் தீவிரமாக  செயலாக்கி வருகிறார்.


 மலேசியாவிலும் நம்முடைய தேசிய நூலகம் கதை சொல்லும் நிகழ்ச்சிகளை முன்னெடுத்தாலும் அதனைச் சிங்கப்பூர் அளவில் பெரிய எல்லயைத் தொட்டுவிடவில்லை என்று தெரிகிறது. அதிலும் தமிழ்ப்பள்ளிகளில் பங்களிப்பும் பங்கெடுப்பும் மிக சொற்பமாக இருப்பதையே அறியமுடிகிறது.  தேசிய நூலகத்திலிருந்து வந்த கதை சொல்லி சம்சுல் கமாரியா மூலம் இச்செய்தியைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

பினாங்கின் கல்விக்கழகம் இருநாள் கதை சொல்லும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. சீனம் ,ஆங்கிலம், தமிழ், மலாய் மொழிகளில் கதைகள் சொல்லப்படவேண்டும் என்பதில் அவர்கள்முனைப்பாக இருந்திருக்கிறார்கள். தமிழ் மொழியைக் கண்டும் காணாமல் விட்டுவிடவில்லை என்பதே பினாங்கின்  , மொழி, நிற பேதமின்மையை அமலாக்கம் காட்டுகிறது. தேசிய முன்னணி ஆட்சியில் பினாங்கு இருந்திருந்தால் தமிழ்ப்பள்ளி ஒன்று இயங்கவதே அவர்கள் அறியாமல் இருந்திருக்கலாம். நல்ல வேளையாக இரண்டு தவணையாக பினாங்கு எதிர்க்கட்சியின் ஆளுகைக்குள் இருக்கிறது.

முதல் நாள் எல்லாக் கதைசொல்லிகளும் முன்ஸ்டாய் 88 விடுதிக்கு வந்திருந்தார்கள். பிரிட்டன், அமெரிக்கா, ஹாங்காங், ஸ்பேய்ன், சிங்கப்பூர், இந்தோனேசியா, இந்தியா, சீனா, கொரியா,மலேசியாவிலிருந்தே கதை சொல்லிகள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்கள். விடுதி அறையிலிருந்து கீழ்த்தளத்தில் விருந்தினர் அறைக்கு வந்தபோது கொரியாவின் அலிசியா சோபாவில் அமர்ந்திருந்தார். இவர் முதல் நாள் நடந்த விருந்துபசரிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தான் கொரியாவிலிருந்து வந்தடைந்திருக்கிறார். என்னைக் கண்டதும் எழுந்து நின்று நன்றாகக் குனிந்து  கொரிய மரபுப்படி வணங்கினார். எல்லா கதை சொல்லிகளுக்கும் அதே போன்ற வரவேற்பும் வணக்கமும்தான். கொரிய மரபுப்படி தேசிய உடையை அணிந்திருந்தார். இடுப்புக்குக் கீழ் அகன்று குடைபோல விரிந்த தரையை அலசும் உடை. ஆடையின் நீளமும் அகலமு அலீசியா முகத்தை மிகசிறியதாகக் காட்டியது. முதல் பார்வையிலேயே அவர் ஒரு கதை சொல்லி என்பதை நிறுவியது அந்த ஆடை.
எங்களுக்காகக் காத்திருந்த இரு வேன்களில் கதை நிகழ்ச்சி நடைபெறும் ஹாஞ்சாங் உயர்நிலைப்பள்ளிக்குக் கொண்டு சென்றது.

அநிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக மாநில கவர்னரின் மனைவி வருவதாக இருந்தது. காலை உணவு ஒரு சிறைய பையில் வத்துக் கொடுத்தார்கள். எல்லாம் இனிப்பு வகையறாக்கள். விரும்பாதவர்கள் சிற்றுண்டியில் சொந்தப் பணம் கொடுத்து வாங்கி உண்டார்கள்.

அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர். கதை சொல்லிகளையெல்லாம் பள்ளியின் நூலகத்துக்குக் கொண்டு சென்றார் ரோஜர். கதை நிகழ்வின் இறுதி அங்கமாக எந்த நோக்கத்துக்க கதைகள் சொல்லப்பட்டன என்ற செய்தியை மாணவர்க்கும் பெற்றோருக்கும் எடுத்துச்சொல்ல இன்னொரு சிறார் தியேட்டர் நிகழ்வு வழி பயிற்சி கொடுத்தார். அதனைக் கடைசியில் சொல்கிறேன்.

அதிகாரப்பூர்வமாக திறப்புவிழா முடிந்ததும் கதை சொல்லும் அறைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். மாணவர்கள் ஒரு அறையில் கதை கேட்டபின்னர் வெவ்வேறு அறைகளுக்கு  அழைத்துச் செல்லப் படுகிறார்கள். ஒரே மாணவர் நான்கு மொழிகளில் கதை கேட்ட அனுபவத்தை அடையும் வாய்ப்பைப் பெற்றனர்.

 என் கதை சொல்லும் நிகழ்வு முடிந்ததும், பிரதான மண்டபத்துக்குச் சென்றேன். தமிழ்ப்பள்ளியிலிருந்து 40 மாணவ்ரகளை அழைத்திருக்கிறார்கள். வந்தவர்கள் எண்ணிக்கை 15 மட்டுமே.
கதை சொல்வதில் வெவ்வேறு கூறுமுறைகளைக் கையாண்டது சிறார்களைக் கதை தளத்திலேயே கட்டிப்போட்டது. அவர்கள் கதை சொல்லிகளோடு இயைந்து விட்டார்கள். கூடவே பாடினார்கள், ஆடினார்கள், கூச்சலிட்டுக் குதூகளித்தார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜென்னும் நோட்விட்மனும் சேர்ந்தே கதை சொன்னார்கள். ஒரூ நேரத்தில் பாடினார்கள், கதை கேட்போரை தன் வயப்படுத்தியே வைத்திருந்தனர்.

ஸ்பேய்னைச் சேர்ந்த பேட்ரிஸ் மோந்தெரோ ஒரு மிகசிறந்த கதை சொல்லி. அவர் துள்ளித்துள்ளி கதை சொன்னார். மிருகங்களாக மாறினார். சிரித்தார், அழுதார், குலுங்கிச் சிரிக்கச் செய்தார். ஒல்லியான உடலை வைத்துக்கொண்டு அரங்கத்தையே ஒரு கலக்கு கலக்கினார். மிக உயிரோட்டமான கதை சொல்லி அவர் என்பதை எல்லாக் கதைகளின் வழியே நிறுவியவண்ணம் இருந்தார். அவர் ஒரு சிறார் கதைகள் எழுதும் எழுத்தாளரும் கூட.




பேட்ரிஸ் கணவரோடு வந்திருந்தார். ஸ்பேய்னின் மிகச்சிறந்த எழுத்தாளர் அவர். 30 நூல்கள் எழுதியிருக்கிறார். சில நூல்கள் 37 முறைகளுக்குமேல் மறு பதிப்பாகி இருக்கிறது என்று சொன்னார். எழுதுவது மட்டுமே தன் வேலை என்றார்.அதில் கிடைக்கும் சம்பாத்யம் ஒன்றே அவரை வசதியான வாழ்வு வாழச் செய்திருக்கிறது. நீங்கள் எழுதும் நூல்களுக்கான ராய்ல்டி  மொத்தமும் சரியாகக் கிடைக்கிறதா என்று கேட்டேன். அதற்கு என்னால் சரியாக பதில் சொல்ல முடியாது. பதிப்பகத்தார் படைப்பாளனை ஏமாற்றும் சாத்தியம் உண்டு. எங்கே எவ்வளவு நூல்கள் விற்றார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான முறையான வழிமுறை இல்லையென்றே சொன்னார். ஆனால் பணம் வரவில்லையென்றால் அடுத்தடுத்த நூல்களை நான் அவர்களுக்குத் தருவதை தவிர்த்திவிடுவேன் என்றார். ஒரு சில நூல்கள் ஒரு மில்லியன் பிரதிகள் வரை விற்பனையாயிருக்கின்றன என்ற தகவலில் நான் தலைசுற்றிப்போனேன். தமிழுக்கு நேரும் சாபத்தை நினைத்தால் கூச்சமாக இருக்கிறது. 1000 நூல்கள் விற்பதே அதிகமாம் தமிழ்நாட்டிலும். பதிப்பகத்தார் அதற்கும் சரியாகப் பணம் தரமாட்டார்களாம். பிரபஞ்சனே இதனை என்னிடம் சொன்னார். பிற முக்கிய எழுத்தாளர்களையும் பதிபகத்தார் ஏமாற்றியே திரிகிறார்கள்.தமிழ் நாட்டுப் பதிப்பகம் ஒருமுறை என் நாவலையும் விற்று பணமாக்கிக்கொண்டது. என் கண்ணில் பணத்தைக்காட்டவே இல்லை கடைசிவரை.

மலேசியாவின் சுராயா கதை சொல்வதில் என்னைக் கவர்ந்தார். உடலின் உருப்புகள் அனைத்தும் கதையைப் பகன்றன. என்ன உடல் மொழி? என்ன வேகம். நல்லாசிரியராகத் திகழ்வதற்கான எல்லா தகுதியையும் கொண்டவர். அவர். நான் பழகிய எல்லா வேளையிலும் அவரின் மக்கள் தொடர்பும், பேசுமொழியும் உற்சாமூட்டுவதாகவே இருந்தது.

கொரியாவின் அலெசியாவும் சலைக்கவில்லை. ஆங்கிலத்தில்தான் கதை சொன்னார். உச்சரிப்புதான் போய்ச் சேரவில்லை. ஆனால் உடல்மொழியின் மூலம் அதனை சமன் செய்தார். நல்லாவே கதை சொன்னீர்கள் என்று பாராட்டினால் உடனே கட்டிப் பிடித்துக்கொள்வார். எனக்கு அப்படி இருமுறை வாய்த்தது.

இன்னும் அமெரிக்காவின் ரோபின் ஸ்டீவட், பிரிட்டனின் ஜேம்ஸ் பிரைடே தாய்வானின் அங்கில் பேட், ஆகியோர் கதை சொல்வதைப் பார்க்க முடியவில்லை.

நிகழ்ச்சி நடக்கும்போதுதான் பாண்டிசேரியிலிருந்து வந்த முனைவர் வேலு சரவணன், மிக அமர்க்களமாகவே கதையைச் சொன்னார். வெட்ட வெளியில், மரத்தின் கீழ்  கதை சொல்லி குழந்தைகளை மகிழ்வித்தார். அவர் சிறார் தியேட்டரில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆனால் ஒரு முகவரி கார்டு கூட கையில் இல்லை. கேட்பவர்களுக்குத் தாளில் எழுதிக்கொடுக்கிறார். எனக்கு அவரின் மின்னஞ்சலை எழுதிக்கொடுத்தார். எழுத்தைப் பிரித்து இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. படங்கள் கொண்ட மின்னஞ்சல் போய்ச்சேரவில்லை. மீண்டும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கேட்டு அனுப்பி வைத்தேன். தமிழுக்கு அங்கீகாரமில்லை என்று சொல்வதை விடுத்து அங்கீகாரத்தை தமிழன்தான் முதலில் முன் கை எடுக்கவேண்டும் என்பதே தமிழை முன்னெடுக்கும் அறிவுப்பூர்வ செயலாகும்.


நிகழ்ச்சியின் இறுதியில் எங்கள் தலைவரான ரோஜெர் ஜென்கின் தலைமையில்  நாங்கள் நடித்த கதையை அரங்கேற்றினோம். கல்லைக் கொண்டு சூப் சமைப்பது எப்படி என்ற கதை அது. கடைசியில் கல்லால் சூப் செய்ய முடியும் என்பது மையமல்ல, கேட்ட கதைகளைப் பிறருக்கும் போய்ச் சேர்க்கவேண்டும் என்பதே முக்கியம் என்ற நன்நெறியை முன்வைத்தார் ரோஜர். அவருக்கு என்பது வயதிருக்கும். அது ஒரு பொருட்டே அல்ல கதை சொல்வதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டபோது அவர் ஒரு குழந்தையாகவே தெரிந்தார்.

கதை சொல்லிகள் அனவருள்ளுமே குழந்தை மனநிலையிலேயே இருந்தார்கள். பிற வேளைகளிலும். இரவு உணவின்போதும் குழந்தைகள் பாடலை உடல் அசைவுகளோடு பாடி குழந்தையாகிப்போனார்கள்.

நம் பாட்டி காலத்தோடு கதை சொல்வது நின்றுவிட்டது. இப்போதுள்ள அம்மாக்களுக்கும் பாட்டிகளுக்கும் தொலைகாட்சிகள் ஓயாமல் கதைகள் சொல்கின்றன. தொலைக்காட்சி பிம்பத்தைப்பார்த்து அழுகிறார்கள். அறைகளினுள்ளே பேரன் பேத்திகள் அழுவதகையும் பிள்ளைகள் அழுகையும் மின் பிம்பகளின்  அழுகைகளால் கேளாமல் போய்விடுகிறது.அம்மா பாட்டி தாத்தாவிடம் கதைகள் கேட்க வாய்ப்பில்லாத குழந்தைகள் 'நாளைக்கு அழும் குரல்' இவர்கலுக்குக் கேட்கப்போவதில்லை.

































































எந்நேரமும் கொண்டாட்ட மனநிலையில்
நான் இதில் முதல் முறையாகப் பங்கு கொண்ட கதை சொல்லி.  அப்படியொன்றும் யுனெஸ்கோ எனக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துவிடவில்லை. என் எழுத்து நண்பர் பாலகோபாலன் நம்பியார்தான் என் பெயரை முன்மொழிந்திருக்கிறார். நன்றி நண்பா.

Comments

வணக்கம்
ஐயா

இப்படியான நிகழ்வுகள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ko.punniavan said…
நன்றி ரூபன். வலையில் அவ்வப்போதுதான் எழுதமுடிகிறது.
MUNIANDY RAJ said…
படிக்க மிக அருமையாக இருக்கிறது...இது தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும்.... யாராவது ஒருவர் முன்னெடுத்தால் எதிர்காலத்தில் இன்னும் மிளிரலாம்.... தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் கதை சொல்லி என்ற வார்த்தையே புதியதாகத்தான் இருக்கிறது...நான் உட்பட!
ko.punniavan said…
பின்னூட்டத்துக்கு நன்றி கவின்

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த