Skip to main content

16. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

காசி விஸ்வநாதர்.


                    கால பைரவனை அடுத்து காசி விஸ்வநாதனைப் பார்க்கவேண்டும். அங்கே எவ்வளவு நேரம் பிடிக்கும்? என்ற கேள்வி மனதை துளையிட்டுக்கொண்டிருந்தது. வயிற்றில் எடுக்கும் பசி, பசித்துப் பசித்தே அடங்கிவிட்ருந்தது. அவ்வப்போது குளிர்பானத்தை ஊற்றி உந்திந் தீயை அழித்துக் கொண்டிருந்தபடியால் பசிக்கு பசியே எதிரியாகிவிட்டது போலும்.

                    நான் சரத்திடம் ஒரு வேண்டுகோலை வைத்தேன். இனிமேல் இப்படி அழுக்கான இடத்துக்குக் கொண்டு போகவேண்டாமென்று. அதனை அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சுற்றுப்பயண நிறுவனம் சொன்ன  இடங்களைக் காட்டியே ஆகவேண்டும் என்ற அட்டவணையைக் கறாராகக் கடைபிடிப்பவராக இருந்தார்.

                    எங்களோடு வந்தவர்கள் கூட அட்டவணையை மீறி நடக்கக்கூடாது என்றும் கறாராக இருந்தார்கள். அதற்கும் சரத் இணங்கியாக வேண்டும். கால பைரவன் கோயிலிலிருந்து காசி விஸ்வநாதன் கோயிலுக்கு நடந்தே சென்றோம். ஆறடி அகலமே உள்ள அதேபொன்ற சந்தின் வழியேதான் நடக்கவேண்டும். சரத் எங்கள் பயண வழிகாட்டியாக இருந்தார் என்று சொன்னேனல்லவா, காசியில் ஒரு 13/14 வயது பையன் உபரி வழிகாட்டியாக தன்னை நியமித்துக் கொண்டான். நாங்கள் பேருந்தை விட்டு இறங்கியதும் எங்களுக்காகக் காத்திருந்தவன் போல "வாங்க வாங்க தமிழ்நாடா ?" என்றான். அங்கெல்லாம் தமிழ் பேசுபரெல்லாம்  தமிழ் நாடுதான். நாங்கள் பையனின் உருவத்தை, வயதுக்கு மீறிய அத்து மீறலையும் கண்டு கொஞ்சம் திகைத்துதான் போனோம். சரத் பின்னால் வந்துகொண்டிருந்தார். அவன் எல்லாரையும்," இங்கியே நில்லுங்க, நான்தான் இனிமேல் உங்களுக்கு வழி காட்டுவேன்." என்று மேலும் முந்திரிக் கொட்டையானான்.

                  சரத் வந்து சேர்ந்தும் அவன் இடத்தைக் காலிசெய்வதாய் இல்லை. சரத் இருக்கும்போதே அவன் எங்களுக்கு வழி காட்டிக் கொண்டே முன்னால் நகர்ந்தான். சரத்தும் ஒன்றும் சொல்லவில்லை. பையன் போட்டிருந்த சட்டையின் அளவு சைஸ் மீறியதைப் போலவே ஆளின் போக்கும் சைஸ் மீறி இருந்தது எதனால் என்றால்... ஒரு சாண் வயிற்றுக்காகத்தான். இதனைப் புரிந்து கொண்டு அவன் வழிகாட்டலைப் பேசாமல் விட்டு விட்டோம்.இடையில் சந்திக்கும் சிலரிடம், " இவுங்க என் ஆளுங்க, நீ வேற எடத்தப் பாத்துக்கோ," என்றும் எச்சரித்தான். சரிதான் பையன் தெளிவாய்த்தான் இருக்கிறான் என்று பட்டது. ஆனால் யாரும் அவனிடம் எதையும் கேட்கவில்லை. அவனே பேசிக்கொண்டே வந்தான். ஒரு இடத்தில் அவனை விட  வயது மூத்தவன் எங்களிடம் எதற்கோ நெருங்கியபோது, அவனை மிரட்டி விரட்டினான். அவனும் மிரட்டலுக்குப் பயந்து போய்விட்டான். எல்லாம் ரூபாய்க்காகத்தான். பையனுக்கு என்ன பிரச்சினையோ? அவன் வருவாயை நம்பி எத்தனை வாயோ?

                  காசி விஸ்வ நாதர் கோயிலை நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது. நாங்கள் நடந்து சென்ற சந்து முன்னர் பார்த்த சந்தைவிடமேலும் மோசமாக இருந்தது. மாடுகள் அதிகமா சந்தில் கட்டப் பட்டு இருந்தன. நாய்கள் நடமாட்டமும் குறையவில்லை. பைரவன் கோயிலல்லவா அடுத்து விஸ்வநாதர் கோயிலும் இருக்கிறதல்லவா அதனால் அவர்களுடைய வாகனங்கள்  அவர்கள் இருக்கும் இடத்தில்தானே நடமாடும்! சுத்தமாய் இருந்தால்தால் பரவாயில்லையே. எல்லாமே அங்கு கடவுள்தான். நமக்கு எதுதான் கடவுள் இல்லை? ஒன்றில்லையென்றால் இன்னொன்று இல்லை என்ற அறிவியல் கோட்பாட்டுடன்தானே கடவுள் கோட்பாடும் ஒன்றிணைகிறது.

            கோயிலுக்கு ஒரு ஐநூறு மீட்டருக்கு முன்னாலேயே ஜனக்கூட்டம் அதிகமாகிவிட்டது. கோயிலுக்குள் நுழைவோரும், வழிபட்டோர் திரும்பி வரும் பாதையும் அதே சந்தில்தான். கோயில் இன்னும் முன்னூறு மீட்டர் இருக்கும்போதே கூட்டம் அலைமோதியது. வரிசையிதான் நடக்கவேண்டுமென்றாலும்.. தள்ளு முள்ளும், வரிசை ஒழுங்கை மீறுவதும், இடிப்பதும், மிரட்டுவதும்,முட்டுவதும் நடந்துகொண்டே இருந்தது. போலிஸ் பாதுகாப்புக்குக் குறைச்சலே இல்லை. வலது இடதும் நூற்றுக் கணக்கான காவலர்கள். எல்லார் கையிலுல் ரைபில்கள், ஏகே 47ன்கள். கடவுளுக்கே பலத்த காவல். மிகவும் எளிமையாக களவு போகக்கூடிய கடவுள் இந்துக் கடவுளாகத்தான் இருக்கும். சிலையாக வடிவமைக்கப் பட்ட அதன் கலை வடிவத்துக்கு பக்தியால் மௌசு கூடுவதை விட அது போகும் விலைக்காக மௌசு கூடுவதென்பது கொஞ்சம் முரண் நகைதான். ஆமாம் கடவுள் தன்னையே பாதுகாத்துக் கொள்ள முடியாதவர் எப்படி தன் பக்தர்களைப் பாதுகாப்பார் என்று ஒரு நவீனச் சிந்தனைக் கவிஞன் ஒரு கேள்வியைக் கேட்டே விட்டான். பதில் வந்ததா தெரியவில்லை. இந்து ஞான மரபில் பதிலுக்கா பஞ்சம்!
              பூ பழங்கள் வாங்கிக் கொண்டு நடந்து கொண்டே இருந்தோம். தள்ளுமுள்ளு அதிகமாகிவிட்டதால்," வா நாம் திரும்பிவிடாலாம், போகப் போக இன்னும் மோசமாகலாம்," என்று என் மனைவியைக் கூப்பிட்டேன். அவளைக் காணவில்லை. அவளையும் தள்ளிக்கொண்டே போய்விட்டனர். அவள் முன்னால் போயிருக்கலாம். நான் அவளுக்காக கோயிலுக்குள் நுழைய வேண்டியதாயிற்று. எத்தனை இடியும் தள்ளலும் வாங்கியிருப்பேனோ தெரியாது. எண்ணிக்கையை வைத்து என்னதான் செய்வது? ஒன்றும் செய்யமுடியாது. திருப்பி இடிக்கலாம் என்றால் உடல் எடை போதாது. சரி விடு  . கோயில் வாசலில் ஒரே கூச்சல். போலிசாரோடு ஒருவன் பொருதிக் கொண்டிருந்தான். அவன் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காமல் போலிஸ் கெடுபிடி செய்தனர். இவன் போயே ஆவேன் என்று அடம் பிடிக்க போலிசாரும் அவனும்  பத்து நிமிடத்துக்கு மேல் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டிருந்தனர். எதற்காக அவனை அனுமதிக்கவில்லை என்று புரியவே இல்லை. எல்லாம் ஹிந்தியிலேயே நடக்கிறது. வாசல் வரைக்கும் வந்த எங்களாலும் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. ஒருபக்கம் சண்டை நடக்க, ஒரு ஓரமாக வழி செய்து எங்களை உள்ளே விட்டனர்.

போதுமடா சாமி என்று உள்ளே போனால், நெருக்கடிக்கு மேல் நெருக்கடி. ஆம் 'கடி' ஒன்றுதான் பாக்கி. ஏகப்பட்ட சாமியார்கள் உள்ளே. ஆளாலுக்கு முடிக்கயிறு கட்டச்சொல்லி நம் வழியை மறிக்கிறார்கள். அந்த சாமியார்களுக்கு தரகர்கள் வேறு. நம் வழியை மறித்து முடிக்கயிறு கட்டச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். எதற்கு கட்டவேண்டும்? ஏனிந்த மறியல் என்றெல்லாம் கேள்வி கேட்கும் நேரமல்ல. நின்றால் இடி, அல்லது முட்டு அல்லது மிரட்டல். தயார் செய்துவைத்திருந்த கயிறை கையில் கட்டி திருநீறு அடித்து பத்தோ நூறோ வாங்கிவிட்டுத்தான் விடுவார்கள். கால பைரவனிலும் இதேதான் நடக்கிறது. அந்த இடம் கிடைக்க பல சாமியார்கள் தவமோ தவமிருந்திருப்பார்கள். எதற்கு ?வருமானம் வருமல்லவா?

கோயிலிலிருந்து வெளியே வருவதற்குள் உடல் நனைந்து, சட்டை கசங்கி, மனம் கசந்துதான் போதும் போதும் என்றாகி விடும். இதில் எங்கள் கூட்டத்தினர் எல்லாம் சிதறு தேங்காய்போல சிதறிக்கிடந்தோம். எல்லாரையும் ஒன்று சேர்ப்பதற்கு நானும் சரத்து பட்ட பாடு இருக்கிறதே, அந்த விஸ்வநாதருக்குத்தா வெளிச்சம்......

தொடரும்.
  

Comments

Samy said…
Writing so good. PUNNIAVAN the name also looks nice. Go ahead. Sathi
ko.punniavan said…
அன்புள்ள சகோ!,

காசிக்குப்போவது பாவம் தீர்க்கவா? தொடர் அருமையாக இருக்கிறது. தலைப்பில் ஒன்று இரண்டு என்று சேர்த்துப் போட்டால் புதியவாசகர்களுக்கு(ம்) எளிதாக இருக்கும்.




என்றும் அன்புடன்,
துளசி
தனக்கே பாடிகாட் வைத்துக் கொள்ளும் இந்த கடவுளிடம் என்ன வேண்டிக் கொள்வார்கள். வந்தார்கள் வென்றார்கள் நூலில் இந்து கோவில்களில் நடந்த திருட்டுகளை நிறையவே சொல்லி இருப்பார் மதன்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த