![]() |
நம்
நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது.
சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு
அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய், வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம்
மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து, சரி
செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில்
நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த
வெறும் பாடமாகவே, இருந்து
வருகிறது. பிழைப்புக்கான பாடமாக
கருதப்படும் மொழிப்பாடங்கள்,
கணிதம் அறிவியல்,
வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற
பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய
அடித்தளத்தைக் கொண்டிருப்பதால், இந்தச்
சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.
சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே
அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப்
புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங்கிவிடுகிறது எனத்
திட்டவட்டமாக வரையறுத்து விடலாம். ஆகையால்தான் டாக்டர் சண்முகசிவா, ‘அன்பேற்றுதல்’ என்ற அறநூலை மெனக்கெட்டு எழுதிப் பள்ளிகளுக்கு
விநியோகிக்க ஆவன செய்து வருகிறார். இதனை நான் வாசித்த பின்னர் டாக்டர் சண்முகசிவாதான்
இந்த நூலை எழுதப் பொருத்தமானவர் என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கு வாய்த்த
மக்கள் தொடர்பு,
மைஸ்கில் அமைப்பு உருவாக்கத்தில் கிடைக்கப்பெற்ற அனுபவம், எழுத்து, வாசிப்பு, அவர் நிகழ்ச்சி
தொகுப்பாளராக இருந்து நடத்திய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது.
நிபந்தனையற்ற
அன்பைப் பரிமாறுவது தொடர்பாக எல்லா அத்தியாயங்களில் வலிந்து பேசுகிறார். நம்
வாழ்க்கை இயல்பாகவே ‘மொய்’ வாழ்க்கையாகிக் கிடக்கிறது. எத்தனை
ஆண்டுகள் கடந்தாலும் நான் போட்ட மொய்யை அவர் திரும்பச் செலுத்தவில்லை என்ற
குற்றச்சாட்டுக்கு நானும் ஆளாகியிருக்கிறேன். கோபம், பழிக்குக் பழி, போன்ற பல வல்லுணர்ச்சிகள். அன்பென்ற புனித
உணர்வை மாசுபடுத்துவதற்கு ஈடானாது . மொய் போல கோபதாபத்தை தேக்கிவைத்து
பழிவாங்குவது பற்றியும் விலாவாரியாகப் பேசுகிறார். பின்னர் அன்பு ‘விலை டேக்’ அற்றது என்று சொல்லி சரியாக முடித்திருக்கிறார்
ஓர் அத்தியாயத்தை.
அன்பின்
வளர்ச்சியே பரிணாம வளர்ச்சியுமாகிறது என்ற சொல்ல வந்த டாக்டர் கொடுமையான ஒநாய்
இனமே நன்றியுணர்ச்சிமிக்க நாயாக மாறியது என்ற வல்லுணர்ச்சியே உயிரிகளின் நிலையான
தன்மையல்ல என்ற உதாரணம் ஆழச் சிந்திக்கத் தூண்டுகிறது.
மன்னித்தல்
என்பதே அன்பின் விரிவாக்கம் என்ற தத்துவத்துக்கு நானும் உடன்படுகிறேன். இக்கட்டுரையில் நீங்கள் காட்டும் உதாரணங்கள்
புதியவை மட்டுமல்ல மனதை நெகிழச்செய்பவை. பாதிப்புக்குள்ளானவர்களின் ஆகக்கடைசி
உணர்வு கோபமாக இருக்கவே முடியாது. அது மன்னித்துவிடுவதாகத்தான் இருக்க முடியும்.
மனித மனம் மெல்லுணர்ச்சிகளால் ஆனதுதானே. பல்வேறு வல்லுணர்ச்சிகள் இறுதியில் வந்து
சேருமிடம் மெல்லுணர்ச்சிதானே. செயலும் செயல் தரும் சுகமுமே அவளுக்குப் போதுமானதாக
இருந்தது என்ற வாசகத்தை நான் மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்க்கிறேன். நான்
எதிர்பார்த்து ஒன்று கிடைக்காதபோது பெருத்த எமாற்றத்துக்கு உள்ளானேன். இயல்பாகவே
நாம் செய்யும் ஒரு செயலின் போதும் அச்செயல் நிறைவடையும் போதும் கிடைக்கும்
திருப்திதான் உண்மை வெற்றி. அதுதான் நீண்டு நிலைக்கிறது என்பதை உணர்த்தும் வாசகம்
இது. ஆம் செயலாற்றிய பின்னர் அதிலிருந்து விடுபட்டுவிடவேண்டும் என்பதை
மனப்பயிற்சியாகவே கொள்ளவேண்டும்.
ஆம்
அன்பு என்பது ஓர் உணர்வுமட்டுமல்ல அதனுள்ளே அது ஆற்றலையும் ஊக்குவித்தலையும்
புதைத்து வைத்துள்ளது. அன்பு ஆற்றலாக வெளிப்படும் தருணம் அலாதியானது. ஆப்கான்
பெண்களைச் எசிட் ஊற்றிச் சிதைத்தவர்களை மன்னிக்க எவ்வளவு பெரிய மனம் வேண்டும்.
அந்த தெய்வீக உணர்வை அன்பைத் தவிர வேறெதுவும் தந்துவிடமுடியாது என்பதை அழகுற சொன்ன
அத்தியாயம் அன்பின் உச்சநிலையைக் காட்டுகிறது.
மாநுட
உணர்வின் இயல்பான பாதை வல்லுணர்ச்சியிலிருந்து தொடங்கி மெல்லுணர்ச்சியில்
முடிவதாகத்தானே இருக்க முடியும். அதனைச் சிறப்பாகச் சொல்லிவருகிறீர்கள்.(உம் குமண
வள்ளல் கதை) ஆம், அன்பு
மன்னிப்பு போன்ற உணர்வுகளை வினைச்சொல்லாக்கினால் மனிதாபிமானம் இன்னும்
பொருளுள்ளதாகும்.
வாழ்வின்
அடிப்படைத் தேவைகளைக்கூட சிறிதும் பெரிது படுத்தாது எளிமையாக வாழும் முதிய மாது
பசிப்பவரை நோக்கிப்போய் உணவு ஈவதுபற்றி ஒரு அத்தியாயத்தில் சொல்கிறார். அவருக்கு
ஒரு திருக்குறள் நூலைப் பரிசளிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு போனவருக்கு குறளாகவே
வாழ்பவர்களுக்கு திருக்குறள் பயனளிக்காது என்று முடிவெடுப்பதை நாமும்
ஆமோதிக்கிறோம். தருவதிலும் பேரின்பம் துய்ப்பதை அம்முதிய மாதுவின் செயல்பாடுகளில்
நாம் காண்பது ஒரு நடைமுறை உண்மை.
புழுக்கமும், அழுக்கு மனிதர்களின் நெருக்கடியான
சூழலில் பேருந்தில் பயணம் செய்யும் மனிதர்கள் காரணமின்றியே ஒருவரை ஒருவர்
வெறுக்கும் கி.ராஜநாராயணனின் கதையொன்றைச்
சொல்கிறார் நூலாசிரியர். அந்த வெறுப்புச் சூழல் சட்டென விருப்பச் சூழலாக மடைமாற்றம்
காண்கிறது வெள்ளந்தியாக சிரிக்கும் ஒரு
கைக்குழந்தையின் நுழைவு. கைக்குழந்தை நுழைவுக்குப் பின்னும் பேருந்தின் தகிப்பு
குறைந்துவிடுவதில்லைதான். ஆனால் குழந்தையின் சிரிப்பால் மனப் புழுக்கம் சடுதியில்
இறங்கிவிடுகிறது. இங்கே நிகழ்ந்த மாயம் என்ன? குழந்தையின் சிரிப்பே அதற்குக் காரணம். அன்புக்காக
எல்லா உள்ளங்களும் ஏங்கும் தருணத்தில் அந்த அன்பை நல்கும் குழந்தையின் இருப்பு
அச்சூழலையே தலைகீழாக மாற்றிவிடுகிறது. நாமெல்லாம் அன்புக்கு அடிமை என்பதை எப்போது
உணர்கிறோமோ அப்போதே மகிழ்ச்சி நம்மை ஆட்கொண்டுவிடுகிறது.
பெற்றோர்களின்
வலியுறுத்தல்களால் மாணவர்கள் மனநோய்க்கு ஆளாவது பற்றியும் விலாவரியாகப்
பேசுகிறார். அவரவர்க்குத் தனித்தனியான அபிலாசைகள் இருக்கின்றன. அவற்றை வளர்த்தெடுக்க
பெற்றோர்தான் முதன்மையான ஊக்கியாகத் திகழவேண்டும். தாம் பெற்ற பிள்ளைகளின்
எதிர்காலப் பாதையைச் சிதைக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளின் பாதிப்பு பற்றிய
அத்தியாயம் நெஞ்சைத் தொடுகிறது.
இந்நூலில்
அத்தியாயங்கள் சிறியதாக உள்ளன. இது ஒரு கூடுதல் நேர்த்தி. ஏனெனில் நீளமாக எழுதப்படும்
அத்தியாயங்கள் வாசிக்கும் அளவுக்கு இன்றைய வாசகர்களுக்குப் பொறுமை கிடையாது.
இன்னொரு லாபம் குறுகிய அத்தியாயங்களாக எழுதியிருப்பதானது அடுத்த அத்தியாயத்துக்கு
வாசகனை கொண்டு செல்ல ஊக்குகிறது.
டாக்டர்
காட்டும் உதாரணங்கள் இதுவரை இதுபோன்ற வகைமயைத் தொட்டு எழுதுபவர்கள் சொல்லாத
உதாரணங்களாக இருக்கின்றன. தொடர்ந்து ஏராளமான தன்முனைப்பு நூல்கள் வந்துகொண்டே
இருக்கின்றன. ஆனால் அவை ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளையே சொல்கின்றன.அவற்றைத்
திரும்பத் திரும்ப வாசிக்க நேரும்போது சலிப்பு தட்டுகிறது. டாக்டர் புதிய பல
உதாரணங்களைச் சொல்கிறார். எனவே எங்கேயும் கிளிஷே குற்றம் எழவில்லை.
உளவியல்
ரீதியாக பல மனக் கிலேசங்களுக்கு பதிலுரைக்கிறார் டாக்டர். அவர் டாகடர் என்பதால்
இன்னும் சற்றுக் கூடுதலாக நகர்ந்து, நரம்பு மண்டல இயக்கம் எவ்வாறு செயல்படுகிறது அந்த
நகர்வு எவ்வாறு இதயத்தை இளகவைக்கிறது என்றும் சொல்கிறார். ஆளுமைகளின் ஆதாரங்களோடும் நடைமுறை உண்மைகளோடும்
முன்வைக்கிறார். இந்த எடுத்துக் காட்டுகள்
அவர் முன்வைக்கும் கருதுக்களுக்குப் பக்கபலமாக நிற்கிறது.
இந்நூல்
முழுமுற்றாக அன்பை மனித மனங்களில் பதிவேற்றம் செய்யும் மந்திரம் பற்றிப் பேசுகிறது. கோபம். பொறாமை பயம்
மகிழ்ச்சி சிரிப்பு போன்றவற்றை நாமே மனதுக்குள் ஏற்றிக்கொள்கிறோம். இவையெல்லாம்
தன்னிச்சையாக நிகழ்வதில்லை மாறாக நம் மனம்தான் முடிவெடுக்கிறது. அன்பென்ற மெல்லுணர்ச்சியையும் அவ்வாறு
ஏற்றிக்கொள்வதில் நமக்கென்ன பிரச்னை? அன்பு என்ற உணர்வு எப்படியெல்லாம் பரிணாமம் கண்டு மெல்லுணர்ச்சிகளை
உற்பத்தி செய்வது பற்றியும் பல அத்தியாயங்களில் பேசுகிறார். உபுண்டு என்ற
ஆப்பிரிக்க சொல்லை நமக்கு அறிமுகம் செய்து மனித நேயத்தின் உச்சபச்ச நிலையைக்
காட்டிச் செல்கிறார். பேருந்தில் தினமும் தன் இருக்கையை பிறருக்கு கொடுத்து உதவும்
மீச்சிறு செயல் எவ்வளவு பொருளுள்ளது என்பதை அவர் விளக்கும்போது நாமும் நெகிழ்ந்து
போகிறோம்.
நம்
உடல் இயக்கத்துக்குள் இயல்பாக உறையும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிப் பேசுகிறார்.
மகிழ்ச்சியை நன்றியை மன்னிப்பை சொல்வதன் வழியும், பிறரோடு மனம் தளர்ந்து பேசுவதன் வழியும் நோய்
நம்மை அண்டாமல் இருக்கும் என்பது உளவியல் ரீதியான உண்மை. மன்னிப்போ நன்றியோ
மகிழ்ச்சியோ வெறும் சொல் அல்ல அவை சொல்பவரையும் சொல்லப்படுபவரையும் அசைக்கும் சொற்கள்.
இலக்கியம்
மனிதாபிமானத்தை வலுப்படுத்துவதற்கான அருமருந்து. இலக்கியம் தோன்றிய காலம் தொட்டே
அது ஊடுறுத்தும் அறம் மனித குலத்தை மாண்புடையதாக்கியிருக்கிறது. டாக்டர் தன்
கருத்துக்களினூடே கதைகளை கவிதைகளை சேர்க்கிறார். அவை நல்லறத்தை முன்வைத்து மிக நாசுக்காக
அன்பைப் போதிக்கின்றன.
சுயமதிப்பீடு
சுயமரியாதை தொடர்பாக ஓர் அத்தியாயம் பேசுகிறது. இந்த இரு பண்புகளையும் இழப்பவர்கள்
தன்னை வீழ்த்திக்கொள்ள ஆயத்தமாகிறார்கள் என்கிறார். அந்த உண்மையை நான் சிலமுறை
அனுபவித்திருக்கிறேன்.
Ho oponopono என்ற
ஹாவாயி தியான முறை பற்றி ஓரிடத்தில் விரிவாகப் பேசுகிறது. ஆழ் மனதின்
பதிவாகியிருக்கும் கசடுகளை நீக்கும் வழிமுறைகள் பற்றிய அக்கட்டுரையில் தீராத மனநோய்க்கு ஆளாகி விலங்கிடப்பட்ட கைதிகளைக்
குணமாக்கிய வழிமுறை அது. அவ்வாறான புதைக்குழியில் விழுந்து மீளமுடியாமல் தவித்த கைதிகளை
மீட்டெடுத்த அந்த மனோவியல் டக்டர் பாராட்டப்படவேண்டியவர்.
அன்பு
என்ற உணர்வு மனதின் உறுப்பு. என்ற வாக்கியத்தை நான் வெகுவாக ரசித்தேன். பிற
உறுப்புகள் செயல்படுவதுபோல அன்பும் செயலாக்கம் பெறவேண்டும் என்ற உண்மையை
சிறப்பாகவே வலியுறுத்துகிறது.
டாக்டர்
சண்முகசிவா இயல்பாகவே மனிதநேயமிக்கவர் என்பதை பல சந்தர்ப்பங்களில் நான்
அவதானித்திருக்கிறேன். என் முப்பது வயதிலேயெ அவர் எனக்கு அணுக்கமானார். முதல்
சந்திப்பே நேசமிக்க மனிதரோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணரவைத்தது. அந்த நேசம்
இன்றுவரை ஈரம் காத்து நிற்பதற்குக் காரணம் அவரிடம் நான் உணர்ந்த அந்த ‘மென்மை.’ போக்கு. அவர் எழுதிவந்த புனைவிலக்கியங்களில்
அடிநாதமாக மாந்த நெருக்கமே முகிழ்ந்தெழும். உரையாடலிலும் தன்னிச்சையாகவே அப்பண்பு
எழுந்துவரும். அவருடனான உரையாடல் எங்கே துவங்கினாலும் அது போய்ச்சேரும் புள்ளி
இச்சசமூகத்தை எப்படி மேம்படுத்துவது என்பதாகத்தான் இருக்கும். அவர் ஆகக் கடைசியாக
கையளித்த இந்நூலும் நிபந்தனையற்ற அன்பை மானுட மனதுக்குள் ஏற்றும் யுக்திகளையே
மையமிட்டிருப்பதைப் பார்க்கும்போது அவருடைய நோக்கமும், அதன் நிஜத்தன்மையும் இன்னும் வலிமையடைகிறது.
எளிமையான
மொழியில் எழுதும்போது அதன் சுவாரஸ்யம் இரட்டிப்புச் சுவையில் அமைந்துவிடும்.
இந்நூல் அவ்வகையிலானது.
Comments