Skip to main content

வெள்ளி முளைத்தும் விடியாத சமூகத்தேக்கம்

கடந்த வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் லங்காவித்தீவுக்குச் சுற்றுலா போயிருந்தோம். மலேசியாவின் மேற்குக்கடற்கரை பகுதியில் ஒரு மீனவத்தீவாகவே 70களின் இறுதிவரை தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட தீவு லங்காவி.( இலங்கையை நினைவுக்கு வருகிறதா? இராமனின் பாதச்சுவடு லங்காவியில் இருபதாகச்சொல்கிறார்கள்) விவசாய நிலமும் ஏழை மனிதர்களும் அவர்களைச்சூழ்ந்துள்ள ஏழ்மையைப்போல், கடல் அலைகள் மட்டுமே இருந்த இந்தத்தீவு இன்றைக்கு உரு மாறி, நிறம் மாறி, ஏழ்மை என்ற முள்வேலியை அகற்றிக்கொண்டு தன்னை வைரங்களாலான ஆபரங்ணங்களால்

அழகுபடுத்திக்கொண்டு கம்பீரமாகக்காட்சி தருகிறது. ஒரு மந்திரவாதியின் மந்திரக்கோல் சொடுக்கில் திடீரென வேறொன்றாய்க்காட்சி தரும் லங்காவித்தீவு கரையை வந்தடையும் அலகலைப்போல சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கிறது.

அந்தத்தீவீன் தலையெழுத்தை மாற்றிய மந்திரவாதி வேறு யாருமல்ல. மலேசியாவின் நான்காவது பிரதமராக 20 ஆண்டுக்கும் மேலாக இருந்த துன் மகாதிர் தான். ( துன் என்பது பேரரசர் வழங்கிய மிகப்பெரிய கௌரவ விருது) மகாதிர் மேல் மிகக்காத்திரமான அரசியல் சார்ந்த விமர்சனங்கள் இன்றளவும் வீசப்பட்டுக்கொண்டு இருந்தாலும், லங்காவித்தீவுக்கு ஒருமுறை சென்று வருபவர்கள் அவர் மீதான விமர்சனங்க¨ளைக்கடலின் அலைகளுக்குத்தீனியாகச் சமர்ப்பணம் செய்துவிடுவார்கள்.

1980 களின் தொடக்கத்தில் இந்த்தீவைச் சுற்றுலாத்தளமாக மாறி அமைக்க திட்டமிட்டு அதனைச் செவ்வனே செய்து முடித்தவர். தான் ஓய்வு பெற்று விட்டாலும் அதன் எஞ்சிய வேலைகள் சுணக்கம் காணாமல் நடந்த வண்ணமிருக்க முன்னேற்பாடுகள் செய்துவிட்டு வெளியேறியவர்.

நான் லங்காவியில் இருக்கும் ஒரே தோட்டத்மிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராக நான்கு ஆண்டு காலம் பணியில் இருந்தேன்.1992 முதல் 1995 வரையிலான தருணத்தில் இன்றைக்குப்பார்த்ததை விட முக்கால் பங்கு அதிக முன்னேற்றத்தைப்பார்க்கிறேன். லங்காவியை வெற்றிபெற்ற சுற்றுலா தளமாக மாற்ற அவர் கையாண்ட மிகச்சாதூர்யமான உத்தி அதனைத் தீர்வையற்ற(TAX FREE) சந்தையாக மாற்றியமைத்ததுதான் முகாமையானது. உலகில் எண்ணற்ற தீவுகள் சுற்றுலா மையமாகத் திகழ்கின்றன. தாய்லாந்தில் புக்கெட் தீவு மிகப்பெரிய சுற்றுலா மையமாகத்திகழ்கிறது. இந்தப்பக்கம் சிங்கப்பூர், இந்தோனேசியாவின் பாலித்தீவு என போட்டிகள் லங்காவியைக் குழுமி இருந்தாலும் அதனைத்தீர்வையற்ற தீவாக மாற்றியதும் தென்கிழக்காசியாவின் இன்னொரு உல்லாசப் பயணிகள் மையமாக மாறி வருகிறது லங்காவி.

மதுபான வகைகள் மிக மலிவாக விற்கப்படுகிறது. இங்கே நான் இருந்த ஆண்டுகளின் அரை லிட்டர் கேன் பியரின் விலை ஒரு மலேசிய ரிங்கிட்தான். அதே வே¨ளையில் ஒரு கேன் குளிர்பானத்தின் விலை மலேசிய ரிங்கிட் 1.20 காசுகள் விற்கப்பட்டது. குளிர் பானத்திலிருந்து மது பானத்திற்குத் தன் தரத்தை உயர்த்திக்கொண்ட பல இந்திய இளைஞர்களை அங்கே காணமுடிந்தது. பியர் குடித்தபடி மோட்டார் சைக்கில் ஓட்டிக்கொண்டு போன பல தமிழ் இளைஞர்களை நான் சந்தித்ததுண்டு. இன்றைக்கு ஒரு கேன் பீயரின் விலை 1.50 காசுதான். அவ்வளவு மலிவு. தமிழர்கள் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் லங்காவியில் இருக்கிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். லங்காவி தமிழர்கள் வசிக்கும் தோட்டத்தில், ஒரு மலிகைக்கடையில் வீட்டுக்கான பொருட்கள் வாங்கப்போகும்போதெல்லாம், கடையின் பக்கவாட்டில் காலி பியர் டின்கள் மலைப்போல குவிந்திருப்பதைப் பார்த்து மலைத்திருக்கிறேன். (அவ்வப்போது அகற்றப்பட்டும்).

ஒரு லிட்டர் விஸ்கியின் விலை தீபகற்ப மலேசியாவை விட 60 மடங்கு மலிவு. உ.ம்: சிவாஸ் ரிகால் வெறும் 65 மலேசிய ரிங்கிட்தான். பிலேக் லேபல் மலேசிய ரிங்கிட் 85 தான். தீவின் ஆங்காங்கே பார்கள் என்னைப் ‘பார்’ என நியோன் மின் விளக்கொளியில் கண்சிமிட்டி அழைத்தவண்ணம் இருக்கின்றன. கடற்கரையின் பல இடங்களில் உல்லாச விடுதிகள் நிரம்பி வழிகின்றன. கடல் நீர் வெள்ளை நிறத்தில் வெள்ளி நீர்த்திவலைகளை அள்ளி வீசியபடி ஈர்க்கிறது. சில இடங்களில் அலைகள் எட்டடி உயரத்திற்கு வீசி பன்னீர் தெளித்து பயணிகளை அணைக்கிறது.

மேல் நாட்டுப்பணக்காரர்கள் சொந்தமாக உல்லாசக்கப்பல்களை வாங்கி கடலில் உல்லாசமாகப் பொழுதைப்போக்குகிறார்கள். அதற்கான இரண்டு துறைமுகங்களை அரசு கட்டிக்கொடுத்திருக்கிறது.

மலைத்தொடர்களுக்கு இடையே கேபல் கார்களை ஓடவிட்டு பிரமிப்பை உண்டாக்கியிருக்கிறார்கள். கடல் திட்டிலிருந்து ஏறக்குறைய 1000 மீட்டர் உயரத்தில், ஒரு மலை உச்சிக்கும் இன்னொரு மலை உச்சிக்கும் இடையே பாலம் கட்டி கடலையும் அதன் அழகையும் ரசிக்க வசதி செய்திருக்கிறார்கள். 1000 மீட்டர் மேலிருந்து பார்த்தால் கால்கள் சில்லிட்டுக்கொள்கிறன. பால்த்தை ஒட்டினார்போல கல் மலை சரிந்து கடலை நோக்கி ஓடுகிறது. குளிர்த் தென்றல் காதலி கட்டிப்பிடித்ததுபோல இதமாக வருடுகிறது.

பெண்களை அதிகம் கவரும் வீட்டு அழகு பொருட்களும், அடுக்களை தட்டுமுட்டு சாமான்களும், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை ( கோர்னிங் வேர். பைரெக்ஸ்) போன்ற உயர்தரத்திலானவை மலிவான விலையில் விற்கப்படுவதால் பெண்களைக்கடைக்குள் இழுத்து கட்டியணைத்து வைத்துகொள்கின்றது.

லங்காவியில் மிகப்பெரிய அதிசயம் ஒன்று நடந்தது. கடற்கரைப்பகுதிகளில் அரை வயிறு கஞ்சிக்கே கடலை நம்பி வாழ்ந்து வந்த மாலாய்ச்சமூகத்தின் மேல் வீசிய ‘சுனாமி அலைகள்’ அவர்களை விடிவதற்கு முன் கோடிஸ்வரர்களாக மாற்றிய விந்தைதான் அது. தீவின் கடற்கரை பகுதிகளில் விடுதிகளைக்கட்டிச் சுற்றுலா மையமாக மாற்ற அரசு எடுத்த நடவடிக்கையால் கடற்கரை நிலப்பகுதிகள் அகோர விலைக்கு வாங்கப்பட்டதும், மீன் தூண்டில்கள் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் கோல்ப் ஸ்டிக்கோடும், உயர்தர கருப்புக்கண்ணாடியோடும் வாழ்க்கையை வேறொரு பரிமாணத்துக்கு மாற்றிகொண்டார்களாம். அவர்கள் மீன் வலையில் அடிமை பூதம் சிக்கி எது வேண்டும் கேள் மனமே என பாரதியார் வரிகளை உச்சாடனம் செய்கின்றன. அவர்கள் அதற்குப்பிறகு ஓட்டும் வாகனம் மெர்ஸடிஸ், பி.எம்.டபல்யூதான் வகையராக்கள்தான். சிலர் ஹாட்டல் கட்டிச்சம்பாதிக்கிறார்கள். என்னோடு வேலை செய்த ஒரு தலைமை ஆசிரியர் நன் நிலத்தின் ஒரு பகுதியை விற்று கோடீஸ்வரனாகி வேலையை உதறித்விட்டுபோய்விட்டார்.

கார்களின் விலையும் அங்கே 55 விகிதம் மலிவுதான். நான் லங்காவியில் இருக்கும்போது டொயோட்டா வகை கார் ஒன்று வாங்கிப்பாவித்தேன். அதன் விலை ம.ரி.30,000தான். அதே வகை கார் தீபகற்ப மலேசியாவில் ம.ரி.75000.

லங்காவித்தீவு சுற்றுலாத் தீவாக மாற்றங்கண்டதிலிருந்து வியாபார வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் பல வகையில் பிழைப்பதற்கான வழிகளும் அங்கே திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழர்கள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்பவர்களாகத் தெரியவில்லை. அங்கே கட்டப்பட்ட நூற்றுக்கனக்கான விடுதிகளில் தமிழர்கள் ரூம் கிளீனர்களாகவும், தோட்ட வேலை செய்பவர்களாகவும் குறைந்த வருமானத்தில் திருப்தி அடைந்தவர்களாகவே இருக்கிறார்கள். டெக்ஸ் பிரி (தீர்வையற்ற) கடைகளில், பேரங்காடிகளில் விற்பனையாளர்களாகவே காலத்தை ஓட்டுகிறார்கள்.) போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்பதனைக் கடைபிடிப்பவர்கள். இவர்களில் முக்கால் வாசிப்பேர் லங்காவியில் உள்ள ஒரே ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து வந்தவர்கள். இவர்கள் வாழ்ந்த சுங்கை ராயா ரப்பர் தோட்டம் மலேசியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான லோ பூன் சியூவுக்குச் சொந்தமானது. அத்தோட்டமும் சுற்றுலாதாலத்துக்கு இடம் விட்டபோது ரப்பர் மரங்களும் வீழ்த்தப்பட்டன. ரப்பர் மரம் சீவும் தொழில் இல்லாமல் போகவே வாழ்வாதாரம் தேடி ஹோட்டல்களுக்கும் கடைகளுக்குமாக வேலை மாறினார்கள். அவர்கள் பிழைக்கும் இடம் மாற்றம் கண்டதே தவிர பிழைக்கும் வழி மாறவே இல்லை. முன்பு சீன முதலாளிக்கு வேலை செய்தார்கள், இப்போது வெள்ளையர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் சொந்தமான விடுதிகளிலும் கடைகளிலும் கூலி வேலை செய்கிறார்கள். என்ன கொடுமை சார் இது?

முதலாளிகளுக்குக் கைகட்டி வேலை செய்து பழக்கபட்டவர்களின் எண்ணப்போக்கை மாற்றி அமைக்க வழி காட்டி அங்கே இல்லைபோலும். காலங்காலமாக முதலாளிகளையே கடவுள்களாக தரிசிக்கும் நம்மவர்களுக்கு முதலாளிக் கடவுள்கள் வரம் தருவதில்லை என்று தெரியாமலேயே இருப்பதுதான் சாபக்கேடாக இருக்கிறது. எனக்குத்தெரிந்து அத்தீவில் ஆளுங்கட்சி தேசிய முன்னணியைச் சேர்ந்த மலேசிய இந்தியன் காங்கிரஸின் ஐந்து கிளைகள் இயங்கி வருகின்றன. இளைஞர் மணிமன்றம் இருகிறது, பல்வேறு இயக்கங்களும் பேருக்காகச் செயலாற்றி வருகின்றன. இவர்களுக்குத் தொழில்துறை மேம்பாடு. வணிகத்துறை மேம்பாடு பற்றிய விளக்கக்கூட்டமும், கைதூக்கிவிட கடன் உதவியும் பெற்றுத்தர தவறி விட்டனவோ என சந்தேகம் எழுகிறது. உறங்கிக்கிடந்த மலாய்க்கார இனம் துயில் எழுந்து துள்ளி விளையாடி களம் இறங்கி வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்க, நாம் குனிந்து கும்பிட முதலாளிகளை மட்டுமே மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

லங்காவித்தீவைசார்ந்த ஒரு தொன்மக்கதை உண்டு. மசூரி ஒரு இளம் மனைவி. அவர் கணவன் வெளியூர் சென்றுவிட அவள் ஒரு பயணியோடு தகாத உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகிறாள். அவள் தான் தூமையானவள் என எவ்வளவு மன்றாடியும் யாரும் கேட்பதாயில்லை. அக்கிராமத்து சட்டப்படி அக்கிரமமாக , ஊர்க்காரர்கள் மத்தியில் மசூரி தண்டிக்கப்படுகிறாள். அவளை ஒரு மரத்தில் கட்டிப்போட்டு ஈட்டியால் குத்தி சாகடிப்படவேண்டுமென்பதே தீர்ப்பாக வைக்கிறது பஞ்சாயத்து. அந்தத்தருணத்திலும் அவள் மன்றாடுகிறாள் தான் கற்புநெறி மீறவில்லையென்று. (திருமணமான பெண் கற்புநெறி மாறாதவள் என்று எப்படி நிரூபிப்பது கற்பை உடல் சார்ந்த ஒன்றாக மதிப்பிடுவதால், சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் மறையாது போலும்) அதனைப்பொருட்படுத்தாது அவள் குத்தி கொலை செய்யப்படுகிறாள்.( அவள் உடலிலிருந்து வெள்ளை ரத்தம் வடிந்ததாம்-தூய்மையானவள் என் நிறுவ) சாகும் தருவாயில் அவள் ஒரு சாபமிடுகிறாள். லங்காவிக்கு இனி வரும் ஏழு தலைமுறைக்கு விமோசனம் கிடைக்காது என்ற சாபம்தான் ஆது. அந்தச் சாபம் பலித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் 1970கள் முடிய ஏழு தலைமுறை முடிந்துவிட்டது. 80களில் லங்காவி துரித முன்னெற்றம் காணத்துவங்கி இப்போது பாலும் தேனும்( அதாவது பீயரும் விஸ்கியும்) பெருகி ஓடுகிறது. மசூரி சாபமிடும்போது தமிழர்களைத் தவிர்த்து என இரு வார்த்தைளைச் சேர்த்துக்கொண்டாளோ என்னவோ அம்னோ செய்ததைப்போல.

Comments

MUNIANDY RAJ said…
அருமையான சிந்தனை. இவையெல்லாம் நடப்பதற்கு யாரைக் குற்றம் சொல்வது ? இன்றைய சினிமாக்களைச் சொல்ல்லாமா... இளம் கதாநாயகர்களின் வழிமாறச் செய்யும் 'சாகசமா'
ko.punniavan said…
நண்பர் கவின்,
உங்கள் பதிவுக்கு நன்றி. சினிமாக்காரனுக்கு ஏன் இந்தச்சின்னப்புத்தி என்ற என் பதிவுக்குத் தங்களின் கருத்து ஆதரவாக இருக்கிறது. சினிமா முதலாளித்துவத்தின் அடையாளம். பல்வகைச்சுரண்டகளை வண்ணத்திரையின் மூலம் செய்து விடுகிறது.இதில் கடுமையாக பாதிப்படைபவர்கள் ரசிகர்கள்.நடிகர்களின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் அளவுக்கு மீறிய மூடபக்தி அவர்களையே தின்றுவருகிறது.திரையில் மட்டும் இல்லாமல் தரையில் இறங்கி ஒரு சாதாரண மனிதனாய் மக்களுக்கு தொண்டு செய்பவனையே ரசிகன் ஏற்க வேண்டும். இந்த தெளிவு வரவேண்டும்.
Sebastian said…
arumaiyaane katturai

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த