Skip to main content

7.ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

 நிழலாய்ப் பின்தொடரும் சாதிமை என்ற பேய்



மூன்றாண்டுகளுக்கு முன்னர் என் நண்பனின் மகனுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. காதல் திருமணம். எல்லாருக்கும் அழைப்பிதழ் கொடுத்து முடித்திருந்தான். அப்போது அவன் முகம் அன்றலர்ந்த தாமரையாய் பூத்திருந்தது. தான் விரும்பிய பெண்ணே தன் மணவாழ்க்கையை அலங்கரிக்கப்போகிறாள் என்ற மகிழ்ச்சியில் அவன் உச்சாணிக்கொம்பில் இருந்தான். நான் மட்டும் சிங்கப்பூரில் நடக்கும் திருமணத்துப் போவதற்குப் பேருந்து டிக்கெட் எடுத்து வைத்துக்கொண்டேன். திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த ஒரு இரவுப்பொழுதில் எங்களுக்கு மாப்பிள்ளையின் தந்தையிடமிருந்து ஒரு அழைப்பு வந்திருந்தது. அன்று அவர் கூறிய தகவல் தந்த அதிர்ச்சியிலிருந்து வெகு நாட்கள் என்னால் மீள முடியவில்லை. திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்திதான் அது. என்ன காரணம் என்று வினவினேன். பெண் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவள் என்றார். “இதற்குப் பையன் என்ன சொன்னான், காதல் திருமணம்தானே?” என்று கேட்டேன். “பையன் மனச அப்படி இப்படின்னு மாத்திட்டோம்,” என்றார். “பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கிலியா?” என்றேன். “என்ன எதிர்ப்பு தெரிவிக்கிறது? நாங்க விசாரிக்கும்போது நாங்க உயர்ந்த சாதின்னு பெருசா பேசிட்டு , கடசீல பாத்தா அதுங்க அந்த ஆளுங்க!” என்றார் . அதனைச்சொல்லும்போது அவரின் குரல் தாழ்ந்து ஏளன வாடை வீசியது. இப்போதெல்லாம் காதல் கல்யாணங்களினால் மட்டுமே சாதிப்பேயை விரட்ட முடிந்திருந்தது. ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் காதல் என்ற அஸ்திரம்கூட, தோல்வி முகம் காட்டி பின்வாங்கிவிடுகிறது!

இந்த அசகாய கண்டுபிடிப்பால் பெண்ணுக்கு நேரப்போகும் அசம்பாவிதங்களை நான் சிந்தித்துப்பார்த்தேன். அவள் காதல் செய்தது, திருமணத்துக்கு நிச்சயமானது, அழைப்பிதழ் அடித்து ஊருக்கெல்லாம் கொடுத்து முடித்ததெல்லாம் மல்லாந்து துப்பியது போல திரும்ப பெண்ணின் முகத்துக்கே எச்சில் சிதறல் பாய்ந்திருக்கிறது.

ஒரூ வலிமை வாய்ந்த காட்டு மிருகம் இன்னொரு எளிய மிருக்கத்தை அடித்துத்தின்றுவிட்டது போல பெண் மனதில் அலைபாய்ந்த மகிழ்ச்சியை மென்று துப்பிவிட்டிருந்தது அந்த நிறுத்தம். அவளின் கனவுச் சித்திரத்தைச் சிதைத்து அதன் சிதலங்களில் குதூகளித்திருந்தனர் நிறுத்தியவர்கள். திருமண விருந்து இலையில் சாதி என்ற மலப்புழு ஏன் விழவேண்டும் ? யாரோ பெண் குடும்பத்தைப் பிடிக்காத சிலரின் அந்தரங்கச் செய்தியால் திருமணத்துக்கு உலை வைத்திருந்தார்கள். இத்தனைக் காலம் காதலித்த பெண்ணைக் கைவீடும் அளவுக்கு மூன்றாம் நபரின் மூக்கு நுழைவால் காதல் கசங்கிக் கிடந்தது. இருமனம் இணைந்துவிட்ட பின்னர் சாதிக்கு அங்கெகென்ன அழையா வேலை?

சாதிக்கொடுமை பெண் சமூகத்துக்கு மட்டுமா சீரழிவைச் செய்தது? இந்தசமுகத்தின் ஒற்றுமைக்கே உலை வைக்கிறது . பிற இனம் இதனை நாவலில் சுட்டும் அளவுக்கு நம் கண்களை நம் நகங்கள் கொண்டு நாமே குத்திக்கொண்டுவிட்டு இப்போது குத்துதே குடையுதே என்று கதறுகிறோம். பிற இனத்தார் நம் சாதிமைக் கோளாறைச் சுட்டும்போது நமக்குக் கோபம் வருவதுதைப் புரிந்து கொள்வதில் குழப்பம் உண்டாகிறது. நாம் கலங்காலமாய் ஏந்தி வந்த ‘சாதி அஞ்சல் ஓட்ட பேட்டனின்’ தகவல்தானே அவனிடமும் போய்ச் சேர்ந்திருக்கிறது!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது நம் மரபார்ந்த சிந்தனை. ‘காதல் கடவுளின் முகவரி’ என்ற ஒரு கவிஞனின் வரி இதனை மெய்ப்பிக்கிறது. அப்படியென்றால் காதல் தெய்வீகமானது.

நீயும் நானும் யாராகியரோ

நிந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

நீயும் நானும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே.

என்ற சங்கப்பாடல் இருமனக் கலப்பை அழகாக நிறுவுகிறது. உன்னை எனக்கோ, என்னை உனக்கோ, முன்பின் அறிமுகமில்லை. உன் பெற்றோரும் என் பெற்றோரும் இன்னாரென்று அறியோம். ஆனால் நாம் இப்போது எப்படி இணந்திருக்கிறோம் என்றால் மழைநீரில் கலந்த செம்மண் போல உன் மனதில் நானும் என் மனதில் நீயுமாய் இரண்டரக் கலந்து விட்டோம், என்பது இப்பாடல் தரும் பொருள். இரு மனங்களின் ஒன்றாய் இணைவதற்குச் சாதி என்ற சொல் இப்பாடலில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. சாதிமைக்கொடுமை சாராத வாழ்க்கையை அன்று அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

கவிஞர் மீராவாணியின் இக்கவிதை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணின் மணவாழ்க்கை சம்பவிக்காதுபோன அவல நிலையைச் சொல்ல வருகிறது.



வலித்த தருணங்கள்

மடிப்புக்கலையாத

புடவைக்கொசுவங்கள்

மிதக்கும் ஒளிவெள்ளத்தில்

மொழி பேசும்

மல்லிகைக் கனகாம்பரங்கள்



ஒருநாள் நட்சத்திர அந்தஸ்து

மணமக்கள்

அவரவர் மணநாளைக்

கண்ணொலியாக்கித்தரும்

மயக்கத்தை ஒருகனம்

துடைத்துப்போட்டது

திடீர் சந்திப்பில் பால்ய சிநேகிதி

சிந்திய இயல்பற்ற புன்னகை!

மங்கல நாண் ஏறாத கழுத்தில்

புரண்டு கிடந்த கூந்தலில்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

ஈயக் கம்பிகளாகச்

சிரித்தன நரைகள் !. (மீராவாணி.)



ஒரு திருமண நிகழ்வில் பால்ய சிநேகிதிகள் தங்கள் மண வாழ்க்கைப் பற்றி சிலாகித்து குதூகளித்துக்கொண்டிருந்தபோது, திருமண வயதைக்கடந்தும் தாலி ஏறாத தன் பால்ய சிநேகிதியை எதிர்கொள்கிறார்கள். அவள் அப்போது நரையேறி முதிர்கன்னியாகக் காட்சி தருகிறாள். நரை என்ற சொல் அனல் காற்றுபோல வாசகனின் முகத்தில் அறைகிறது. பறந்து திரியும் பறவைக்கூட்டத்தில் சிறகொடிந்த ஒரு பறவை அவள். மீராவாணி அனுபவித்த சோகம் கவிதையின் காட்சிபடுத்தலில் நம்மையும் சோகத்தில் தள்ளுகிறது. (மீராவாணி மலேசியப்பெண் எழுத்தாளினிகளில் முக்கியமானவர். இன்றைக்கு விடாமல் எழுதிக்கொண்டிருக்கும் ஒருவர்.)







Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த