Skip to main content

தமிழ் மொழியைத்தாரை வார்க்க மலேசியத்தமிழன் தயாராயில்லை

தமிழ் மொழியைத்தாரை வார்க்க மலேசியத்தமிழன் தயாராயில்லை



கடந்த 18.12.09 ல் அரக்கப்பரக்க ஆரம்பித்ததுதான் சுங்கைப்பட்டாணியில் spm தமிழ் மொழி, தமிழ் இலக்கியப்பாடம் சார்ந்த கவன ஈர்ப்புக்கூட்ட்டம். இரண்டே நாட்கள் அவகாசத்தில் எப்படி மக்களைத்திரட்டுவது என்ற மலைப்பே என்னை இயங்க வைத்தது. 2010 ல் நடப்புக்கு வரப்போகும் புதிய 10 பாட அமலாக்கத்துக்கு முன் விரைந்து செயல்படவேண்டிய கட்டாயம். நடப்புக்கு வந்துவிட்டால் மாற்றுவதற்கு மேலும் சிரமத்தை எதிர் நோக்கவேண்டி இருக்கும்.

நமக்கு இருக்கவே இருக்கிறது நூதன தொடர்புத் தொழில் நுட்பம். குறுந்தகவல், தகவல் தெரிவிக்க பத்திரிகை வழி சுற்றறிக்கையைத்திணித்து அனுப்புவது, விரைவாகப் பதாகைகளைத்தயார் செய்து சுங்கைப்பட்டாணியின் நாலு திசைகளிலும் ஒட்டி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க என அனைத்து வகையான பணியிலும் ஈடுபட்டேன். யாரையும் துணைக்கு அழைக்கலாம் என்றால் என்னைப்போல பணி ஓய்வு பெற்றிருந்தால் பரவாயில்லை. எல்லாருமே வேலை செய்பவர்கள். அதிலும் மொழி மீது பற்று இருத்தல் அவசியம். சும்மா இழுத்துக்கொண்டுபோனால் நிழல்போலத்தான் கூடவே இருப்பார்கள். நம்முடன் இருக்கும் தருணங்களில் அவரை அழைத்துவராமல் இருந்திருக்கலாமே என எண்ணத்தோன்றும். நம்மால் பிறருக்கு ஏன் அனாவசிய சிரமம் ஏற்படவேண்டும்? யாரையும் துணைக்கு அழைக்க கால அவகாசமும் போதாது. அரசு அறிவிப்பினை எதிர்த்து மொழிக்காகப் போராட கொஞ்சம் துணிச்சல் வேண்டும். அரசின் கொள்கைக்கு எதிர்மறையாகச் செயல்படும் பலர் ஐ.எஸ்.ஏ என்று சொல்லக்கூடிய உள்நாட்டுப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து, கேள்வி முறையின்றி இரண்டு ஆண்டுகள் கமுந்திங்கில் (ஒரு ஊர்) அடைத்துவைத்து விடுவார்கள். நான் ஒரு சிறு துரும்புதான் என் குரலுக்கு ஆயிரமாயிரம் மக்கள் வந்துவிடப்போவதில்லை. மக்கள் கொந்தளித்து நாட்டுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பப்போவதுமில்லை. என்னை யாரென்றே காவல் இலாகா அறியாது. எனவே நான் அஞ்சவேண்டிய அவசியமில்லை.( மொழிக்காகக் கவிதை ஒன்றை எழுதி ஏற்கனவே பதவி இறக்கம் செய்யப்பட்டேன்.) இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டதால் என்னை பதவி ஏற்றமும் செய்ய முடியாது இறக்கமும் செய்ய முடியாது. எனவே ஒற்றை ஆளாய் களத்தில் இறங்கினேன்.

கூட்டத்துக்கு ஆள் சேர்க்க என்னால் ஆன எல்லா வேலைகளும் செய்து கொண்டிருந்தேன். பத்திரிகை வழி செய்தி போடச்சொல்வோமே என் மின்னஞ்சல் வழி இரண்டு நாளிதழுக்கு செய்தி அனுப்பி தொடர்ந்து மூன்று முறை தொலைபேசியிலும் தொடர்புகொண்டு செய்தியைப்போடச்சொல்லி கேட்டுக்கொண்டேன். கோயில் மாடு ஆமாம் ஆமாம் என்பதுபோல் தலையாட்டினார்கள். பத்திரிகைகளுக்கு நிறைய சிறுகதை களையும் கவிதைகளையும் 30 ஆண்டுகளாக இலவசகாகவே கொடுத்து வந்திருக்கிறேன். மலேசியத்தமிழ் பத்திரிகைகள் எழுத்துக்கூலி என்றால் என்ன என்று கேட்பவர்கள். பிறகு பத்திரிகை முதலாளிகள் மெர்சிடிஸ் பாவிப்பது எப்படி? மாளிகையில் வசிப்பது எப்படி? பாவமில்லையா அவர்கள்? இவர்கள்தான் உண்மையான தமிழ்மொழி விற்பன்னர்கள். ( இலக்கிய அக்கறையுடன் நடத்தும் சில இதழ்களைத்தவிர்த்து)18.12.09 இரு பத்திரிகைகளயும் ஆவலோடு திருப்பிப்பார்க்கிறேன் (நம்புங்கள் - நாளிதழ்கள் திருப்பிப்பார்க்கும் நிலையில்தான் இருக்கும்) செய்தி வரவில்லை. எனக்கு அப்போதே மன அழுத்தம் கூட ஆரம்பித்துவிட்டது. நாளிதழில் செய்தி வரும் என்று நம்பியது எனது எவ்வளவு நன்றிகெட்டத்தனம்? நிகழ்ச்சிக்கு 50 பேரைக்கூட எதிர்ப்பார்ப்பது அறிவீனம் எனத்தோன்றியது. நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பலர் நாளிதழில் செய்தி பார்த்துவிட்டுத்தான் வருவதாக சொன்னது நினைவிலிருக்கும்போது செய்தி வரவில்லையென்றால் என்னாவது?

( தொடர்புத்தொழில் நுட்ப முன்னேற்றமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... ஆனால் அதற்கு ஈடான வேகத்துக்கு மனிதர்களையும் மாற்றும் அறிவியல் உபாயம் இருந்தால் தேவலாம்)

எனக்குள் இருந்த ஆர்வம் கைப்பணம்போல மெல்ல கறைய ஆரம்பித்தது. என் பின்னடைவின் முதல் கட்டமாக 50 பேருக்குமேல் தேனீர் தயார் செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பிறகு வேண்டா வெறுப்போடு ஒலி பெருக்கிச்சாதனத்தைப் பொருத்த ஆரம்பித்தேன். இரண்டு ஸ்பீக்கரையும் காரிலிருந்து மேடைக்குத் தூக்கிக்கொண்டு போவது என் வயதை மீறிய செயல்.

வீட்டுக்குத்திரும்பி குளித்துவிட்டு மண்டபத்துக்கு நுழையும்போது மணி 7.25. 7.30க்கு நிகழ்ச்சி துவக்கம். நான்தான் முதல் ஆளாக இருந்தேன். ஒரு கால் மணிநேரம் வரை வேறு யாரையும் காணவில்லை. இன்றைக்கு நிகழ்ச்சி நடந்தபடிதான் என்று ஆதங்கம் மேலோங்கத் துவங்கியது.

300க்கு மேற்பட்ட காலி நாற்காலிகளும் முனகிக்கொண்டிருந்தன. மண்டபம் நிர்வாணமாகிக் கொண்டிருப்பதுபோன்று இருந்தது. 7.45 வாக்கில் இரண்டொருவர் நுழைய கொஞ்சம் மூச்சு விட்டேன். பிறகு மெல்ல ஐம்பதுக்குமேல் வர ஆரம்பித்தனர். 8.00 மணிக்குள் மக்கள் கூட்டம் 100ஐத்தாண்ட ஆரம்பித்தது. 8.10க்குள் 200 எட்டியது. காலியாகக்கிடந்த நாற்காலிகள் உயிர் பெற்றுவிட்டன போன்ற ஜீவத்துடிப்பு கேட்டது. நிர்வாணமாக்க்கிடந்த மண்டபம் ஆடை உடுத்திக்கொண்ட கம்பீரத்தோடு மிதந்தது.

நிகழ்ச்சி சுங்கைப்படாணி சுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் நடைபெற அதன் மண்டபத்தை இலவசமாக தந்தனர். கோயில் தலவர் திரு.துரைசிங்கம் மொழி சார்ந்த நம் சிந்தனை தூர்ந்துபோய்விடக்கூடாது எனப்பேசினார்.மணி ஆட்டவும் சாமி கூட்டமாகக்கூடி கொண்டாட்டம் போட மட்டும் கோயில் இருக்கக்கூடாது என்று அவ்ர் பேசியது எல்லாத்தலைவர்களுக்கும் சொன்னதுபோல இருந்தது. தமிழ்ச்சமூகம் சார்ந்த எந்த நிகழ்வுக்கும் கோயில் மணடபத்தை இலவசமாகவே கொடுக்கும் என்றார். தமிழ்மொழிக்கு கோயில் செய்யும் மிகப்பெரிய செயல் அது.

பிறகு எழுத்தாளர் நான் பேசினேன். தமிழ்ப்பள்ளிகள் விடுதலைக்கு முன்னும் பின்னும் எத்தனை காணாமற்போய்விட்டன என்ற வரலாற்றைக்கூறினேன். எண்ணிக்கையில் 1500க்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வந்தன. விடுதலைக்குப்பின்னர் அதன் எண்ணிக்கை தோட்டத்துண்டாடல் காரணமாகவும், மேம்பாட்டுத்திட்டங்கள் காரணமாகவும், பாட மாற்றத்தாலும் (கணிதமும், அறிவியலும் இனபேதமில்லாமல் எல்லா மாணவர்களூம் ஆங்கிலத்தில் கற்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவாலும்) தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் குறைந்து விட்டதைக்கூறினேன். இன்றைக்கு நாட்டில் தமிழ் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 40 விகிதம்தான் எனவும், தமிழ் தமிழ் இலக்கியம் மதிப்பெண்கள் பட்டியலில்(சான்றிதழில்) சிறந்த 10 பாடத்துக்குள் சேராது என்ற காரணத்தால் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் குறைந்து நாளடைவில் அறவே இல்லாமலும் போய்விடும் ஆபத்தும் உண்டு என மேலும் கூறினேன் . இன்றைக்கு இருக்கும் 523 தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் சுமார் 20000 பேர் என்று வைத்துகொண்டால்.. தமிழ்ப்பள்ளி இல்லாமல் போனால் இந்த 20000 அரசு வேலை இல்லாமல் போய்விடும். அது மட்டுமா தமிழ் சார்ந்த பிற துறைகளிலும் ஆசிரியர் பயிற்சிகல்லூரி, பல்கலைக்கழகம், தமிழ் வானொலி, பல்கலைகழகத் தமிழ்ப்பிரிவு, மொழிபெயர்ப்புப்பிரிவு என் எல்லாத்துறையும் தமிழ் இல்லாமல் வரண்டு விடும். எனவே அரசு எஸ்.பி.எம் சோதனையில் 12 பாடங்களில் சிறந்த 10 பாடத்தின் மதிப்பெண்களாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தினேன். அவை உபகாரச்சம்பளம் பெறும் பாடங்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக்கூறினேன்.

பின்னர் வடமலேசிய தமிழ்மொழி மீட்புக்குழுவைச்சேர்ந்த ASP முத்துசாமி SPM பாடப்பிரச்சினையை முன்னிட்டு பினாங்கு தண்டாயுதபாணி ஆலயத்தில் சிறப்புப்பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் 20000 பேர் கூடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.( அவர் ஒரு போலிஸ் அதிகாரி தோரணையில் பேசுவதைக் நிறுத்திக்கொள்ளவேண்டும்) இது சாதாரணப் பிரச்சினைதான். இதற்குத்தீர்வு காண கடவுளின் சன்னிதானத்துக்குப் போக வேண்டியிருப்பதுதான் மிகப்பெரிய கொடுமை. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும். எல்லா முயற்சியும் எடுத்தாயிற்று பிரதமரைச் சந்திப்பது தவிர. பிரதமரிடம் சென்று முறையிட்டால் தமிழர் எண்ணம் உறுதியாய் நிறைவேறும். அவர் மட்டுமே 1 மலேசியக்கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் மும்முரமாக இருப்பதுபோலத் தெரிகிறது. மற்ற அமைச்சர்கள் இனவாத அரசியலிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை எனத்தோன்றுகிறது. எனவே பிரதமரைச் சந்திப்பது நடக்கவேண்டும். காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.......

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த