Skip to main content

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மேலும் சில பக்கங்கள் கதை 2

கோ.புண்ணியவான்



கவிதை யாப்பதில் மட்டுமல்ல இன்னொரு வேலையிலும் திறமை மிக்கவர் புலவர் வேந்தர்கோன். கவிதை யாத்தலிலும் அதனைச் சந்தைப்படுத்தலிலும் உண்டாகும் பின்னடைகளைச் சமாளிக்க அவர் மீண்டும் தனது பிறப்பூருக்கே குடி பெயர்ந்து விடுவார். அவரைப் பிறப்பூரிலே பார்க்கும் நண்பர்கள் “ இது 1001வதா” என்பர்.

அங்கே எப்போதும் அவருக்கான வேலை காத்திருக்கும். அவருக்கு மட்டுமல்ல தொழில் நுட்பம் தெரிந்த மற்றெல்லாருக்கும் அங்கே வேலை உண்டு. நெல் மூட்டைகளை ஆலையிலிருந்து வெயிலில் காய வைக்கும் களத்துக்கும், களத்திலிருந்து மீண்டும் ஆலைக்கும், ஆலையிலிருந்து ஏற்றுமதி லாரிக்கும் சுமந்து கொண்டு போவதுதான் அந்த வேலை. நெல் மூட்டைகளை சுமப்பது எளிதானதுதான் ஆனால் நெல் மூடைகளைவிட அரிசி மூடைகளைச்சுமப்பதுதான் சிரமம். இரட்டிப்பு பாரம். 60 கிலோ வரை மிரட்டும். அறுபது கிலோவுக்கும் குறைவான எடையுள்ள மனிதர்கள், அதனை லாவகமாக தோளில் ஏற்றி சுமை அழுத்தாத வண்ணம் தூக்கி நடப்பதன் தொழில் நுட்பம் தெரிந்தால்மட்டுமே அது எளிதானதாகத்தெரியும். என்னாலும் இந்தச் சுமையை தோளில் ஏற்றி சுமந்து நடக்க முடியும் என்று ஆழமறியாமல் காலை விட்டவர்கள், முதுகெலும்பு முறிவையோ, இடுப்பு பிடிப்பையோ சுமந்து திரியவேண்டியதுதான். அரிசி மூடைகளை தோளில் இன்னொருவர் லாவகமாக ஏற்றுவதற்கு அதில் தேர்ந்தவராக இருக்க வேண்டும். பிறகு கணக்காக அதனை தோளில் ஏற்றியபின், அப்படியும் சமமாக போய் உட்கார வில்லையெனில், சுமந்தபடியே ஒரு குலுக்கு குலுக்கி சரியாக உட்காரும் அளவுக்கு நேர்த்தி செய்த பிறகே நடக்க ஆரம்பிக்க வேண்டும்.தோளில் முக்காலும் முதுகில் கால் பங்கு சுமையுமாக அது சமனமாக இருக்க வெண்டும். நடப்பதிலும் ஒட்டமும் நடையுமான ஜதி தெரியவேண்டும். நாட்டியத்துக்கு மட்டும்தான் ஜதி தெரியவேண்டுமென்பதல்ல, மூடை சுமப்பதற்கும் தெரிந்திருக்கவேண்டிய தொழில்நுட்பமாக்கும். ஒரு மெல்லிய நாட்டிய பாவனையிலான் நடை அது. கூலித்தொழிலாளிக்கே தெரிந்த கூடியபட்ச தொழில் நுட்பம். அதனைக் கசடற கற்றவர் புலவர்கோன்.

மூட்டைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தார்போல்தால் அற்றைக்கூலியும்.

வெயிலில் காயும் நெல்மணிகள்போல் வயிறு காய ஆரம்பித்து, இளைராஜாவின் கிராமத்து சோக ராகத்தை பெருங்குடலும் சிறுகுடலும் இசைக்கும்போது மட்டுமே நம் வேந்தர்கோன் அரிசி ஆலைப்பக்கம் தலை காட்டுவார். பையில் பணம் புரள ஆரம்பித்தால் மனுஷனுக்குச் சுமக்கும் நினைவே வராது.

“என்னைத்தடுத்தாட்கொண்ட தமிழ் எனக்குச்சோறுபோடும்.

இதென்ன மனுஷன் செய்யும் வேலையா? நானென்ன பொதி சுமக்கும் கழுதையா? கவிஞனையா! அதிலும் யாப்பு கற்றருந்து நாக பந்தம், ராஜ பந்தம், மயில் பந்தமென தோகை விரித்தாடும் புலவனுக்கு ஏற்ற தொழிலா? அவனை இழிவு செய்யும் வேலையைய்யா,” இது என்பார்.

ஒரு புலவன் மார்க்சியக் கொள்கையை அறியவில்லை என்றால் அவனென்ன புலவன். உழைப்போர் வாடி நிற்க உழைப்பை வாங்கி மூட்டைபோல் ஊதிபெருத்தவன் வலுத்துக்கொண்டே இருக்கும் முதலாளித்துவத்தின் முதல் எதிரி புலவனாகத்தானே இருக்கமுடியும்?

அன்றிரவே சாபமிடுவதுபோல முதலாளித்துவத்தின் சுரண்டலைப்பற்றி கவிதை எழுதி பத்திரிகைக்கு அனுப்பிவிடுவார். சுமையின் வலி தோளிலும் முதுக்கிலும் ஊர்ந்திருக்கும் இரவு வேளையில் உணர்ச்சிப்பெருக்கை வாரிக்கொட்டி சொல்லாடலிலும் சந்தத்திலும் சதிராடியிருக்கும் கவிதை. பத்திரிகையில் வரும்போது கவிதை சித்திரக்கட்டம்போட்டு அழகிய எழுத்துருவில் அச்சேறியிருக்கும். பத்திரிகைகள் படைப்பாளனுக்குச் செய்யும் அந்தக் கூடியபட்ச பிரதிபுகாரத்தினாலும் - அதனால் மெய்சிலிர்த்துபோகும் படைப்பாளனாலும் இலக்கியம் இமாலயத்தைத்தொட முயற்சித்துக்கொண்டிருப்பதை விமர்சன உலகம் இனியாவது நன்றிக்கடிதம் எழுதியனுப்பிடவேண்டும்.

வேந்தர்கோனின் அந்தக் கைவண்ணம் அறம் பாடும் எழுத்து. சுரண்டும் முதலாளிகளுக்கு எதிரான போர்க்குரல் மட்டுமல்ல. அறம் பாடுவதென்பது அவர்களைச் சீரழித்துவிடும் அறச்சீற்றம் கொண்டது என்பார். சீரழிந்து சின்னாபின்னமான சிலரையும் அவரால் அப்போது அடையாளம் காட்ட முடியும். காகம் உட்கார பணம்பழம் விழும் கதையென்று நீங்கள் புலவரை இழிவு படுத்தினால் அடுத்த அறம் உங்கள் மீதும் பாயும். கைதொங்கி , வாய்கோணி வார்த்தை ழகரமாகி, ஒற்றைக்காலில் இழுத்து ஊர்வலம் வரும் பிறவியாகிவிடுவீர்கள். கொக்கென்று நினைத்தாயா கொங்கனவா?

இப்படிப்பட்ட புலவர் அந்நாளிலே இருந்திருந்தால் முதலாளித்துவம் எப்போது கடைகட்டியிருக்கும்! முக்காடிட்டு பூப்பெய்திய பெண்போல பச்சை ஓலை முடிந்த குறுகிய பந்தலின் மூலையில் கூனிக்கொண்டு அமர்ந்திருக்கும். இதுநாள் வரை தன் கோர நகங்களை மேலும் சில அங்குலங்களை வளர்த்துக் கூர்தீட்டிக் கெக்கலித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

கூலிக்குச் சுமக்கும் வேலைக்குப்போகவே கூடாது என் முடிவெடுத்த தருணங்களில் புலவர் தன் தமிழ் சுமக்கும் பணியில் இறங்கிவிடுவார்.

அவர் எழுதிய நூல்களோ அல்லது யாரோ விற்கக்கொடுத்த நூல்களையோ தூசுதட்டி பத்து பதினைந்தை எடுத்துக்கொண்டு பாத யாத்திரை ஆரம்பித்துவிடுவார். பேருந்துக்குப் பைசா இல்லையோ என நினைக்கவேண்டாம். சத்தியாகிரகம் மாதிரி இது தமிழுக்கான பாத யாத்திரை.

ஒருமுறை அப்படித்தான் ஆகிவிட்டது. புத்தகங்க¨ள் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். அது பட்டணத்தை ஒட்டிய புற நகர்ப்பகுதி என்பதால் மனுஷன் கடைத்தெருவுக்கோ சந்தைக்கோ போகிறார் என்றுதான் பார்ப்பவர்கள் நினைத்துகொள்வதாக புலவரின் அனுமானம். அவர் வீட்டிலிருந்து பட்டணத்துக்கு ஆறு மைல் நடக்கிறார் என்பது அவருக்கு மட்டுமேயான உணர்வு. புறநகர்ப்பகுதி என்பதால் வழி நெடுக்க கடைகளும் வீடுகளும் அலுவலகங்களும் இருப்பதால் வெகு தூரம் நடப்பது கால்கள் அறியா- தனைத்தடுத்தாட்கொண்ட தமிழுக்கு தன்னாலான பிரதுயுபகாரம். தமிழ்த்தாத்தா உ.வெ சாமிநாதய்யர் நடக்கவில்லையா?

அவர் காலில் முக்தி நிலை அடையப்போகும் ஜப்பான் சிலிப்பர். பின்பாத அழுத்தம் பெற்றும் தரையில் தேய்ந்தும் கிட்டதட்ட வட்டம் விழுந்துவிட்ட பாதுகை. எந்த செருப்புக்கும், அதனை அறிமுகப்படுத்திய நாட்டின் பெயர் இருந்ததில்லை. இதற்கு மட்டும் எப்படி ஜப்பான் பெயர் வந்தது. அதன் எளிமையான தொழில் நுட்பம். சடக்கென்று விரலுக்கிடையில் நுழைந்து கொண்டு நடைகுத்தாயாராகிவிடும். விரைவிலேயே பிரியாவிடையும் வாங்கிக்கொள்ளும். பொருளுற்பத்தி பெருகவேண்டுமல்லவா? விரைவில் அதன் வாழ் நாட்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளூம், தன்மையோடு தயாரிக்கவும் வேண்டும். எளிமையாகவும் இருக்கவேண்டும். மலிவாகவும் விற்கப்படவேண்டும். இரண்டாம் உலக யுத்தத்துத்தில் சீரழிந்து, பின்னர் ஜப்பான் கொடிகட்டிப்பறப்பது எப்படியாம்? இப்போது சீனா!

“புலவரே எங்கே இவ்வளவு தூரம் ?”என்று வழியோரத்து முடிதிருத்தும் கடையிலிருந்து கூப்பிட்டார் ஒரு கவிஞர். ஆம் முடிதிருத்தும் கடைக்கும் மரபுக்கவிஞர்களுக்கும் நீண்ட நெடிய உறவு உண்டு. முடிதிருத்தகத்தில் வேலை பார்க்கும் பலருக்கு கவிதை இயற்றும் திறம் கைகூடி இருக்கும். இந்த combination எப்படி சாத்தியமாகிறது என்று ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாம்.முன்னாளில் அவர்கள் மருத்துவர்கள். முடிதிருத்தகத்தில் காத்திருக்கும் வாடிக்கயாளருக்கு நேரம் போக பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் வாங்கிப்போட்டிருப்பர் முதலாளிகள். வாடிக்கையாளர் இல்லாத நேரத்தில் அதில் ஒரு எழுத்து விடாமல் படிப்பவர்கள், கவிதையால் ஈர்க்கப்பட்டு முதலில் ஓசை நயத்தைவைத்தும், சந்தத்தை வைத்தும், பின்னர் எதுகை மோனைவைத்தும் படிப்படியாக யாப்பைச் சுயமாகக் கற்றிருந்தும் புலமை பெற்றுவிடுவார்கள். சிலர் டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். கவிதைக்குத் தாராளமாகத் தரலாமே. பல்வேறு நடிகைகளின் இடுப்பிலிருந்து தொடைவரை மோந்து மோந்து நடனமாடும் விஜய்க்கே கொடுக்கும்போது புலவர்களுக்குக்கொடுத்தல் மேல் எனக் கருதலாம்தானே.

டாக்டர் பட்டங்களைப் படித்தும் பெறலாம், பிடித்தும் வாங்கலாம். பெறுவதற்கும் வாங்குவதற்குமான வேறுபாட்டை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? படித்து வாங்குவதற்கு ஆண்டுகள் பல ஆய்விலேயே போய்விடும். ஆண்டுகள் என்ன ஆயுளே போய்விடும். பிடித்து வாங்குவதற்கு கையில் கொஞ்சம் காசு புரளவேண்டும். அநாதை இல்லத்துக்கோ டாக்டர் பட்டம் வாங்கப்போகும் பல்கலைக்கழக்த்துக்கோ நன்கொடை கொடுத்தால் போதும். முனியாண்டியும் மாயாண்டியும் கூட டாக்டராகிவிடலாம். நீங்கள் ஏன் கூச்சப்படவேண்டும், அதனைச்சுமப்பவனுக்கு அந்த உரிமையைக் கொடுத்துவிடலாமே. எத்தனை மேடைகளில் எத்தனை முறை டாக்டர் மாயாண்டி என்று உச்சரிக்கப்படும். அப்போது அதுதரும் சுகானுபவம் எல்லைகளற்றது. ஜன்ம விமோசனம் பெற அது போதாதா? அப்புறம் எதுக்கையா வாழனும்? வாழ்க்கையினா அனுபவிக்கனும்!



வெயிலில் ஒரு கிலோமீட்டருக்கு மேல் நடந்துவந்தவர் உடம்பில் மூடைத் தூக்குவதற்குச் சமமான வியர்வை ஊற்றியிருந்தயிருந்தது. நெற்களத்தில் வேலை செய்பவரின் உடற்தோள் காய்ந்து தோளின்மேற்பகுதியில் தேமல் போன்ற சரும் நிற மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கும். அது சூரியக்கடவுளின் ஏழகளின் மேல் சொரியும் கருணையின் அடையாளம். அதைவிட மிகுந்த கரிசனம் கல்யாணத்திற்கு நிற்கும் கன்னிப்பெண்கள் களத்தில் வேலை செய்வதாலும் - நெல் குவியலை அடிக்கொருதரம் புரட்டிப்புரட்டிக்காய வைப்பதாலும் அவர்கள் மேனியிலும் தகிப்பின் கோலம் பதிவாகியிருக்கும் என்பதே. வெயிலில் வெந்து சாகும் ‘பொழப்பு’ மரபு ரீதியிலான வழமையாக்கும் . வயிறு காயாமல் இருக்க உடல் காய்ந்தால் பாவமில்லைதானே. காய்ந்தால் பாவம் - தின்றால் தீரும்!

பையிலிருத்த கைக்குட்டையை எடுத்து முகத்தை ஒற்றியவாறு கடைக்குள் நுழைந்தார் வேந்தர்கோன். கைகுட்டையை நனைத்து மேலும் பூத்தது கூலித்தொழிலாளி ரத்தத்தின் பிறிதொரு அவதாரம்.

நலம் விசாரித்த சடங்கு முடிந்து பக்கத்து கடையிலிருந்து தேனீர் வரவழைத்தார் கவிஞர்.

“புலவரே, என் அண்ண மகளுக்கு அடுத்த வாரம் கலயாணம். ஒரு வாழ்த்து மடல் எழுதியிருக்கேன். கல்யாணத்துல வாசிக்கணும். நீங்க படித்துப் பாருங்க. திருத்தம் இருந்தா செய்யுங்க அப்படி இல்லேன்னா நீங்களே ஒன்னு எழுதிக்கொடுங்க,” என்றார். கோட்டை கொத்தளங்களில் எண்ணற்ற கூத்தியாளோடு வாழும் மன்னர் வம்சத்துக்கும், மாட மாளிகைகளில் வாழும் வள்ளல் பெருமான்களுக்கும் வாழ்த்துப்பாக்கள் பாடிப்பரிசில் பெற்ற, வழி வழியாய் வந்த கைகளல்லவா, மரபு மீறுவது தகுமோ? அதன் நீட்சிதானோ என்னவோ மன்னராட்சி அருகிப்போனதால் வாழ்த்துமடல் வேறு வடிவம் பூண்டிருந்தது.

தன்னை மதிக்கும் கவிஞர்மேல் புலவருக்கு மரியாதை கூடியது.

“கவிதைய கொண்டாங்க,” என்றார்.

அகர வரிசையில் வாக்கியங்கள் தென்பட்டன.



அண்ணன் மகளே

அருமை மகளே

ஆருயிர் செல்வமே

ஆனந்தக்கண்ணீரே

இறைவனின் கொடையே

இல்லாள் ஆனவளே

ஈதலே குடும்பம்

ஈனுதலே கொள்கை

உறவைக்காப்பதே கடமை

உண்மை பேசுதலே மேன்மை

ஊர் உன்னை போற்றும்

ஊறு வராது காப்பதே பெண்மை

எழுக காலையில்

ஏருபோல் உழைக்க

ஐயம் வேண்டாம்

ஒட்டுதல் நேர்மை

ஓட்டுதல் மாமியாரை என்னாளும் வேண்டாம்

ஔ......

முடிக்கத் திணறியிருந்தது கவிதை. ஔ சரி - •கில் எதை எழுதுவது? அகராதியின் முதல் பக்கத்தைப் படிக்கும் நினைவைத் தவிர்க்க முடியவில்ல புலவரால். உள்ளுக்குள் சிரித்தார்.



கவிதையை எந்த பாவினத்தில் சேர்ப்பது என்று வேந்தர்கோனுக்குப்புரிபடவில்லை. ஆசியப்பா அகவலில் சேர்க்கலாமென்றால் சிகப்பு பேனாவின் மைபட்டு மாதவிடாயாகிவிடும் கவிதை. சிந்தில் திருத்திக்கொடுக்கலாமென்றாலும் சிரமம், கடந்து வந்த வெயிலைவிட மிகுதியாகிவிடும். ஏதாவது புது சீர் விருத்தத்தை உண்டாக்கைப் பார்க்கலாமென்றால் சீர்கெட்டுப்போய்விடும். புலவர் கண்கொட்டாமல் கவிதையைப்பார்த்தபடி இருந்தார். கவனம் தாளிலிருந்து விடுபட்டு காத தூரம் பயணித்திருந்தது. அதனைத்திருத்தாமல் இருப்பதே உத்தமம் என்று பட்டது.

“நீங்கள் எழுதியது உரைவீச்சு போன்றிருக்கிறது. யாப்புக்குள் கூடாது போலிருக்கிறது.” புலவருக்குப் புதுக்கவிதையென்றாலே விளக்கெண்ணெய் குடித்துவிட்டது போன்று குடல் புரட்டல் உண்டாகும். வெளியேறினால் தேவலாம் போலிருக்கும். வெளியேயும் வராத உள்ளேயும் சரியாகாத வேதனை. அதனால்தான் உரைவீச்சு என்றார்.

புரிந்து கொண்ட கவிஞர்,” பரவாயில்லை புலவரே நீங்களே ஒன்னு எழுதிடுங்க,” என்றார்.

கவிஞருக்குச் சிகெரட் ஊதாமல் கற்பனை ஊறாது. அதை எப்படிக் கவிஞரிடம் கேட்பது என்று புரியவில்லை. கையில் வைத்திருந்த தனது கவிதை நூல் நினைவுக்கு வந்த அதே சமயம் கவிஞரும் “கையில என்ன நூல்?” என்றார்.

“என்னுடைய சமீபக்கவிதையின் தொகுப்பு,” என்றார்.

“ கையில வச்சிக்கிட்டு என்னா பண்ரீங்கா எங்கிட்ட ஒன்னு கொடுங்க வாங்கிக்கிறேன்”. தமிழ் தன்னை எப்போதும் கைவிடாதது அவருக்குப் பெருமையாக இருந்தது. சிகப்பு நோட்டு ஒன்று புலவரின் பைக்குள் சங்கமமானது. புத்தகம் கை மாறியது.

கவிஞரே எனக்கு ஒரு பேக்கட் சிகரெட் வேணும் என்று அதே பத்து ரிங்கிட்டை வெளியில் எடுத்து நீட்டினார். கவிஞர் புலவரின் நிலயைத்தெரிந்து கொள்ள “அத வையுங்க புலவரே” என்று பையனைக்கூப்பிட்டு சிகெரெட் வாங்கி வரும்படி உத்தரவிட்டார்.

ஒரு நொடியில் புகை உள்ளிழுத்து ஊதி மிதக்க விட்டதும் புலவருக்குத் தெம்பு கூடியது. வயிற்றுக்குள் போன தேநீர் பசியைக்கட்டுக்குள் கொண்டுவந்திருந்தது.

பத்தே நிமிடத்தில் வாழ்த்து மடல் தயார். எண்சீர் விருத்தத்தில் எதுகை மோனையும் சொற்சுவையும்

கவிஞரை மெய்சிலிர்க்க வைத்தது.

கவிதையை வாங்கிப்படித்தவருக்கு மேடை ஏறும் தைரியம் கூடிக்கொண்டிருந்தது.

“ரொம்ப நன்றிங்க புலவரே. பிரம்மாதமா இருக்கு. சும்மாவ வச்சாங்க வேந்தர்கோனுன்னு”

வேந்தர்கோனுக்கு பெருமை பிடிபடவில்லை.

சீப்பு சேவிங்க் மிஷின் கத்தரிக்கோல் இருக்கும் மேசைமேல் இருந்த மீதமுள்ள நூல்களையும் எடுத்துக்கொண்டு பயணப்பட்டார்.

பேருந்து நிறுத்தகம் கண்ணில் பட்டது.

பட்டணத்தில் இறங்கியதும் டாக்டர் தமிழமுதன் MBBS மெங்கலூர் என்று பளிச்சிட்ட பெயர்ப்பலகையைப்பார்த்தார்.

தமிழமுதன். தமிழே அமுது தானே. அமுது இனியதுதானே. போய்ப்பார்க்கலாமே.

கவுண்டரில் டாக்டரைப்பார்க்க வேண்டுமென்றார்.

“என்ன விஷயமா?”

“புத்தகம் விற்கனும் நான் எழுதியது”

Wait for a while.

டாக்டர் சி சி டிவியில் புலவரைப்பார்த்தார்.கடுப்பாக இருந்தது. ஏற்கனவே அவருக்கு உட்கார்ந்தே வரவுக்கணக்கை பார்த்ததால், நன்றிக்கடனாக மூலம் வளர்ந்திருந்தது. இந்த முறை கடுப்பே மூலத்திலிருந்துதான் தொடங்கியிருக்கவேண்டும். இதில் வரம் தரும் நோயாளிகளுக்கு முரணான பணம் பிடுங்கும் மனிதர்கள் வேறு!

“Let him wait.”

புலவர் அரை மணி நேரமாகியும் அழைக்கப்பட்டார் இல்லை. வெயிலில் வந்த களைப்பில் உடல் சோர்ந்திருந்தது. கிளினிக்கின் உள்ளே குளிர்சாதனம் குளிரை ஊற்றிக்கொண்டிருந்தது. நாற்காலியில் சாய்ந்ததும் சோர்வு மெல்ல விடைபெறத்துவங்கியது. தலையை சுவர் பக்கம் சாய்த்து அழைப்புக்குக் காத்திருந்தபோது தூக்கம் இறுக்கமாக கவ்வத்துவங்கியது. கையில் இருந்த நூல்கள் கையிலிருந்து மெல்ல நழுவுவதை உணர்ந்து நூல்களை சுரத்தின்றி பக்கத்து இருக்கையில் வைத்தார். தூக்கம் மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டது.

நோயாளிகளையும் பார்த்து முடிந்தாயிற்று.

சில மணி நேரக் காத்திருப்பின் அவஸ்தையில் புலவர் தானாகவே புறப்பட்டு விடுவார் என்று எதிர்பார்த்த டாக்டருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. தன் கிளினிக் உள்ளேயே தூக்க சுகம் காணும் புலவரின் மேல் சினம் புரண்டது.

“Cal the shit fellow in”

“Yes, what do you want?”

“வணக்கம், டாக்டர் நான் ஒரு தமிழ்ப்புலவன். இது நானே எழுதன புத்தகம்?”

“என்னா புலவன்னா? That means?”

“Poet டாக்டர்.”

“So what?”

“நீங்க என் புக்க வாங்கிக்கணும்?”

“எனிக்கி tamil தெரியாது மேன்.”

தமிழமுதனுக்கு தமிழ் தெரியாது என்பதே புலவருக்கு பேரிடியாக இருந்தது. எனக்குத்தமிழ் தெரியாது என்று வெட்க உணர்வு சிறிதும் இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் தரும் டாக்டரைவிட தனது உற்பத்திப்பொருளை தமிழ் தெரியாதவரிடம் சந்தைப்படுத்துவது அதைவிட கூடுதலான கூச்சம் வியாபித்திருக்க வேண்டுமே. அவர் ஒரு சுவாதீனமற்ற பிரதேசத்துக்குள் நுழைந்துவிட்ட குற்றமனமும் உறுத்தவில்லை.

“தமிழுக்கு ஆதரவு தரலாமே? உங்க மாதிரி வசதி உள்ளவங்க ஆதரவு தமிழுக்கு இப்ப ரொம்ப அவசியம்”

“என் கிளினிக்கு நீ எப்பயுமே வந்ததில்ல. இப்ப இதுக்கு மட்டும் வரியே” தன்னை ஒரு நோயாளியாகவே பார்க்க விரும்பும் டாக்டரின் மேல் அறம் பாடவேண்டும்போலிருந்தது.

“உங்கள நம்பி வந்துட்டேன் ஒரு தமிழ்ப்புலவனை வெறுங்கையோட அனுப்பிய பாவம் உங்களுக்கு வேண்டாம்”

“ என்ன மேன் உங்க மாதிரி ஆளுங்களுக்கு கொட்டிக்கொடுக்கவா நான் காலயிலேர்ந்து ராவ் வரைக்கும் ஒக்காந்திருக்கேன். இதுக்கு பதில் ஏதாவது வேல செஞ்சி பொலைக்கலாமே” என்று சொல்லிக்கொண்டே பர்ஸிலிருந்து ஐம்பது வெள்ளி நோட்டை உருவி மேசைமீது கிடத்தினார்.

நல்ல வேளையாக புலவரின் அறம் பாடும் சீற்றத்திலிருந்து- மீசையிலிருந்த கொஞ்ச நஞ்ச முகமும் துடித்தது (மற்றவரைப்போலல்லாமல் அவருக்கு மீசையில்தான் முகம் இருந்தது). கிட்டதட்ட வீசியெறியப்பட்ட நீல நோட்டினால்-அது வசீகரிக்கும் தன்மையினால் தெய்வாதீனமாகத் தப்பிப்பிழைத்துவிட்டார். அறம் பாடப்பட்டு பீடிக்கப்படும் நோயிலிருந்து விடுபடும் மருத்துவம் எந்த கொம்பு முளைத்த டாக்டராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்ல. நெற்றிக்கண் ஜுவாலைகொண்டு நக்கீரனை எரித்த சிவனாரே மனம் இரங்கி மாற்று வைத்தியம் செய்த மாதிரி புலவரே மாற்றுக்கவிதை பாடினாலொழிய டாக்டர் நிலை மாறாது.

எஞ்சிய நூல்களையும் விற்றுவிடும் நிலை அவரிடமிருந்து சரியத்துவங்கியது. ஐம்பது ரிங்கிட்டின் கண்சிமிட்டில் அந்தத்தேக்கம் காலாவதியாகியிருந்ததோ அல்லது டாக்டர் போட்ட ஹைடோஸ் எனாமியினாலோ( குதத்தில் ஏற்றப்படும் மருந்து) அவர் பாதி வழியிலேயே யாத்திரை முடித்துவிட்டிருந்தார்.

வீட்டிக்குப் போய் அக்கடா என் அமர்ந்தால் தேவலாம் போலிருந்தது.

என்னதான் சமரசமான உறவு இல்லையென்றாலும், கணவனின் முகத்திரை எழுத்துக்களை வாசிக்கும் திறன் பெற்றிருந்தாள்.

“ என்ன ஒரே வாட்டம் இன்னிக்கி பிஸ்னஸ் நால்லால்லியா?..... “

“ஆமாம் ஒரு டாக்டர் என்ன கேக்கக்கூடாத கேள்வியெல்லாம் கேட்டுட்டான்.”

“அதுக்குத்தான் இந்த எளவெல்லாம் வேணான்னு சொல்றேன். பேசாம மூட்ட தூக்குனாலே கௌரமா சாப்பில்லாம்.”


அடுத்த மாற்றம் ஒரு ஏழை புத்தக வியாபாரிக்கு கடன் தராமல் ஏமாற்றி அலைக்கழிக்க வைத்த எழுத்தாளரின் கதையை எதிர்பாருங்கள்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த