Skip to main content

மாட் ரெம்பிட்

கோ.புண்ணியவான், மலேசியா





மலேசியாவில் மலாய் சமூக இளைஞர்களிடையே ஒரு கலாச்சார பேரழிவு சமீப காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்திய, சீன இளைஞரிடையே அதிகம் காணமுடியாத இந்த நவின கலாச்சாரம் மலாய் சமூகத்தின் தலைவர்களின் சிண்டு முடியை அடிவேர் ஆட்டங்காணும் வரை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. காவல் இலாகாவினர் இவர்களைக்கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி தவிக்கின்றனர். அரசியல் வாதிகளின் வியூகங்களைத் தவிடுபொடியாக்கியவண்ணம் உள்ளது இந்த இளைஞர்களின் போக்கு. பெற்றோர்கள் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இந்த இளைஞர்கள் நடத்தும் களியாட்டங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையே தலை குனிய வைத்துக்கொண்டிருக்கிறது.

என்ன சமாச்சாரம் என்று தலையைச்சொறிவதை நிறுத்துங்கள். பீடிகையைக் கோட்டு ரப்பர்பால் மாதிரி இழுக்காமல் சொல்லிவிடுகிறேன்.

மாட் ரெம்பிட் என்பவர்கள் சாலை விதிகளை உடைத்தெறியும் மோட்டார் சைக்கில் கும்பல். உங்கள் மொழியில் டூ வீலர் அடாவடிக்கும்பல் என்று சொல்லலாம். இவர்கள் ஐம்பது அறுபது பேர் கூட்டமாய்க்கூடி மோட்டார் சைக்கில் ரேஸ் ஓடுவார்கள். பொது வாகனங்கள் ஓடும் சாலைதான் ஓடுதளம். கொஞ்சம் சமூகக்கரிசனம் உள்ள மாட் ரெம்பிட்கள் அதிகம் வாகனம் ஓடாத சாலையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு போட்டியில் ஈடுபடுவார்கள். அல்லது அந்தி வேளையில் தங்கள் சாகசங்களைக் காட்டுவார்கள். நடு இரவிலும் வாகனமே புழங்காத நேரத்தில் தங்கள் பாய்ச்சலைக் காட்டுவார்கள். மற்ற சாலை பயன்படுத்துவோர் மீது எந்த அக்கறையும் காட்டாத ஜன்மங்கள் இவர்கள். வீடமைப்புப்பகுதிகளிலும் நள்ளிரவு நேரத்தில் அதிக பட்ச இரைச்சலுடன் பந்தயத்தில் ஈடுபடுவதுமுண்டு. யாராவது தன்னை ஹீரோவாக நினைத்துக்கொண்டு அவர்களின் பந்தயத்தில் குறுக்கிட நினைத்தால் அவ்வளவுதான். சில சமயம் தனி ஒருவனாய் தன்னைச்ச்சுப்பர் மேன் என்று நினைத்துக்கொண்டு பல விதமான சாகசங்களைச் சாலையில் செய்து சீக்கிரமாகவே டிக்கட் வாங்கிக்கொள்வார்கள். அல்லது கால் கை ஊனப்பட்டும் குறைந்தபட்சம் ரேஎசைப்பார்க்கவாவது கொடுத்து வைத்திருக்கிறோமே என புளகாங்கிதமடைந்து பந்தயத்தளத்துக்குத் தவறாமல் வந்து விடுவார்கள். ரேஸ் மீதான பக்தி அவர்கள் இப்படி ‘முக்தி” அடைந்த நிலையிலும் விடுவாதாயில்லை.

மாட் ரெம்பிட்கள் தேர்த்தெடுத்துக்கொள்ளும் இடம் சாலை வளைவான ஒரு வட்டமாக அமையதல் வேண்டும். ராட்சச ஓட்டம் ஓடவும், வளைந்து ஓடும்போது முட்டிகள் தரையை உரசும்படியான இருந்தால் அவர்களுக்கு ரொம்ப சௌகர்யம்.

தங்கள் டூ வீலர்களை அதிக கூச்சல் எழுப்பக்கூடியதாக இருக்க வேண்டுமென்பதற்காக அதனை சீரமைத்துக்கொள்வார்கள். அதனுடைய அட்ஜஸ் பைப், கார்பரேட்டேர் , ஸ்டேரிங் சீட் போன்றவற்றையும் தங்கள் இஷ்டப்படி வடிவமைத்துக்கொள்வார்கள். லைஸன்ஸாவது? சாலை வரியாவது? ஒரு மண்ணாங்கட்டைப் பற்றியும் கவலையில்லை. காவல் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்றுதானே கேட்கிறீர்கள். இதுதான் தங்கள் வேலைக்கே வைக்கும் ஆப்பு என்று பல போலிஸ் அதிகாரிகள் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். பெருங்கூட்டமாய் இருக்கும் இவர்களை டூட்டியில் இருக்கும் இரண்டே இரண்டு போலிஸ்காரர்கள் நெருங்கவே அஞ்சுவார்கள். போட்டி நேரத்தில் தகவல் கிடைக்க ஓடிப்போய் பார்த்தால் ஒன்றுமே செய்ய முடியாது. ரேஸ் படு பயங்கரமாய் நடந்து கொண்டிருக்கும். அவர்களைப் பலாத்காரமாய் நிறுத்தினால் பக்கத்துப் பக்கத்துப் படுக்கையில் போலிஸ்காரரும் , வண்டி ஓட்டியுமான மாட் ரெம்பிட்டும் ஒரே மருத்துவ மனையில்தான் பார்க்க முடியும். இவன் தடுத்தவன். இவன் இடித்தவன் என முரணான இருவர் பக்கம் பக்கம் படுத்திருப்பார்கள். அல்லது தமிழ்ப்படத்தில் சம்பவம் முடிந்தபோது காட்சிதரும் போலிஸ்காரர்கள் போலவே இவர்களும் தாமதமாகவே பிரசன்னம் ஆவார்கள். எல்லாம் ஒரு வசதிக்காகத்தான்! எதற்கு வீணான வம்பு? எலிகப்டரில் போகும் சனியனை ஏன் ஏணி வைத்து இறக்கவேண்டும் ? பின்னாடி குத்துதே குடையுதே என்று புலம்புவானேன்?

அவர்கள் ரேஸ் ஓடும் பாதையில் கார் நிறுத்தப்பட்டிருந்தால் அதன் கண்ணாடி தெறித்திருக்கும்.

இரவில் வீடமைப்புத்தெருவில் கார் நிறுத்தப்பட்டிருந்தால் அதன் கண்ணாடியை உடைத்து உள்ளே உள்ள பொருட்கள் களவாடப்பட்டிருக்கும். இந்தச் சாகசங்களெல்லாம் கூட்டம் கூடிவிட்டதால் உண்டாகும் தைரியம்தான்.



இதற்கெல்லாம் மிக ஆதரவான பேர்விழிகள் மாட் ரெம்பிட்களின் காதலிகள்தான். ஒவ்வொரு மாட் ரெம்பிட்டின் வெற்றிக்குப் பின்னாலேயும் (அதாவது மோட்டார் சைக்கில் பின் இருக்கையில்) ஒரு பெண் இருக்கத்தான் செய்கிறாள். தோல்விக்கு பின்னாலேயும் ஒரு காதலி இருக்கத்தான் செய்கிறாள். அவர்களின் இடுப்பைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டு வலைந்து நெளிந்து ஓட்டும் மாட் ரெம்ப்பிட்டின் சாகசத்தில் தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்தவர்களாக குதூகலித்துப்போய் இருப்பார்கள்.

போட்டியில் வென்றவர் தோற்றவர் வைத்துக்கொள்ளும் பந்தய ஒப்பந்தம்தான் இதில் மிகக் கிலு கிலுப்பானது.

கூட்டமாக ரேஸ் ஓடும் சமயங்களில் ஆளுக்கு பத்தோ இருபதோ பந்தயம் கட்டி முதலில் வருபவர் எல்லாவற்றையும் வாறிக்கொள்வார்.

‘ ஒண்டிக்கு ஒண்டி’ போட்டியில் தோற்றவர் அவருடைய மோட்டார் சைக்கிளை வென்றவரிடம் கொடுத்துவிடவேண்டும் என்றும் பந்தயம் கட்டிக்கொள்வர்.

‘ஒண்டிக்கு ஒண்டி’ போட்டியில் சில சுவாரஸ்யமான ஒப்பந்தமெல்லாம் ‘கையெழுத்தாகும்’. அதாவது வென்றவரிடம் தோல்வியுறுபவர் தன் காதலியை விட்டுக்கொடுத்துவிடவேண்டும். அதற்குத்தான்! வேறெதற்கு? ஒரு நாளோ இரு நாட்களோ ஒரு வாரமோ இந்த ஒப்பந்தம் நீடிக்கும். தோற்றவரின் காதலிக்கு அடித்தது யோகம். இவன் தோற்கமாட்டானா என்றெல்லாம் எத்தனை நாள் கனவு கண்டிருப்பாள். காதலனை மாற்றிக்கொள்ள இவ்வளவு எளிதான வழி இருக்கும்போது ஏன் சண்டையிட்டு பிரியவேண்டும். சமரசம் உலாவும் இடம்!

இவர்களின் அடாவடித்தனங்களை ஒரு முடிவுக்குக்கொண்டு வரமுடியாத போலிஸ் கடைசியில் ஒரு வியூகத்தை முன்வைத்தனர். அவர்கள் பந்தயத்துக்கென்று தனி இடம் ஒதுக்கித்தருவது. அதைச் சட்ட ரீதியாக்குவது என்ற வியூகம்தான் அது. அங்கேதான் பிரச்சினை! சட்ட விரோதமாக ஓட்டுவதில்தான் சுவாரஸ்யம் இருக்கிறது என்று கூறி இன்றைக்கு இவர்களின் போக்கை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டது. இங்கே இஸ்லாம் சமய போதனை பள்ளிவாசல், பள்ளிக்கூடம் தொடங்கி அனைத்து ஊடகங்களிலும் மிக மிகத்தீவிரமாக போதிக்கப்பட்டு வருகிறது . ஆனால் சமுகக் கட்டுப்பாட்டை உடைத்தெறியும் இவர்களிடம் சமயமாவது கிமயமாவது?( சமீபத்தில், கற்பமுறும் பள்ளி மாணவிகளுக்குச் சிறப்புப் பள்ளியும் நடத்தத் தொடங்கியிருக்கிறது மலேசிய அரசு) எத்துனைக் கருணையான அரசு!

சமீபத்தில் ஒரு மாட் ரெம்பிட் பற்றி ஒரு செய்தியைப்படிக்க நேர்ந்தது.

காவல் அதிகாரிகளிடம் பிடிபட்ட மாட் ரெம்பிட்டின் காதலியை அவளின் அக்காள் அங்கேயே கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள். “எத்தன தடவ சொல்றது. இவன்களோட சேராதேன்னு. புத்தி வராத ஒனக்கு?” என்று வாயில் வந்தபடியெல்லாம் திட்டி இருக்கிறாள். இத்தனைக்கும் அக்காதலிக்கு பதின்மூன்றே வயது.

மலாய் இளைஞர்களை உற்று கவனிப்பவர்க்கு சில உண்மைகள் தெரியும். அவர்களுகளின் வாழ்க்கைக்கு மிக அவசியமாக ஒரு லிவாய் ஜீன்ஸ், டி சர்ட், ஒரு மோட்டார் சைக்கில், பின்னால் உட்கார ஒரு காதலி தேவைப்படுகிறது. இந்த நான்கும் இருந்தால் அவர்கள் இப்பிறப்பின் விமோசனத்தை அடைந்துவிட்டார்கள் என்று /அர்த்தம்.

http://kopunniavan.blogspot.com/

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த