Skip to main content

10.பனிப்பொழிவில் 10 நாட்கள்























கைகளால் செதுக்கப்பட்ட மார்பல் ஓவியம். தாஜ்மஹாலில் பதிக்கப்பட்ட எல்லா கற்களும் மனிதக் கைகளாலேயே செதுக்கபட்டது.
(விடியோ கிளிப்பை டிலீட் செய்ய முடியல)

  மிகப் பிரமாண்டமான செங்கோட்டையை விட்டு தாஜ் மஹாலுக்குப் புறப்பட்டோம்.
   நாங்கள் போன நேரம் யாரோ வெளிநாட்டு அமைச்சர் தாஜ் மஹாலைக் காண வந்திருப்பதாகச் செய்தி வந்தது. பயணிகள் வெளியே காத்திருந்தனர். மூன்று மணி நேரத்துக்குப் பிறகுதான் பார்க்க முடியும் என்ற தகவல் கிடைத்தது. அது தெரிந்தும் எங்களை தாஜ் மஹாலுக்கு அழைத்துச்சென்ற ஒரு டேக்சி ஓட்டுனர் பணத்தை வாங்கிக்கொண்டு தெரியாததுபோல இருந்துவிட்டார். தாஜ் மஹால் வளாகத்துக்குள் இந்த டேக்சிகள் பயன்படுத்தப் படுகின்றன.  2002ல் வந்த போது ஒட்டக வண்டியில்தான் போனோம். இந்த முறை ஒரு சில ஒட்டகங்களே இருந்தன. பாரம்பரிய முறையில் போக நினைப்பவர்கள் ஒட்டக வண்டியிலும் , குதிரை வண்டியிலும் ஏறிப் போகலாம்.
   முன்று மணி நேரம் காத்திருக்க முடியாததால் மீண்டும் பட்டணத்துக்குப் போய் மதிய உணவுக் கடையை தேடிக்கொண்டிருந்தோம். வெளி நாட்டுப் பிரமுகர் வருகையால் அக்ரா ஸ்தம்பித்துப் போயிருந்தது. சாலையில் வண்டிகள் நகராத கோபத்தில் வெப்பத்தையும் கார்பன் மொனொக்சைட்டையும் கொட்டிக்கொண்டிருந்தது. அதிகாரத்துவத்தின் நீட்சி மன்னர் காலத்தில் மட்டுமல்ல மக்களாட்சி காலத்திலேயும் நீடிக்கிறது.
    கடைக்குள் நுழையுமுன்னே ஒரு தந்தை ஒரு புராதன இசைக் கருவியை வாசிக்க அவரின் மகன் நாட்டியமாடத் துவங்குகினான். அவர்கள் அணிந்திருந்த உடையும் நாடக் மேடையில் அணியும் உடை. பேரங்காடிகளிலும் முக்கிய விடுதிகளிலும் இந்தத் தெரு கூத்தைச் சர்வ சாதரணமாய்ப் பார்க்க முடியும். ஒரு பத்து ரூபாய்க்காக இந்த ஆட்டம். சாப்பிட்டு விட்டு காசு கொடுக்கலாம் என்று உள்ளே போய் விட்டோம். வெளியே வரும் போது அப்பா மட்டும்தான் இருந்தார். பையனைக்காணோம். எங்களைப் பார்த்ததும் அப்பா இசைக்கத் துவங்கிவிட்டார். இசையைக்கேட்டதும் பெட்டியிலிருந்து கிளம்பும் பாம்பைப்போல கழிவரையிலிருந்து பையன் ஆடிக்கொண்டே வெளியே வந்தான்- வயிறுக்காக. எங்களுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தாலும் அவனின் வாழ்வாதாரம் அதுதான் என்று எண்ணும்போது சிரிப்பலை  கவலைக்குள் சுருண்டு சிறியதாகியது.
    மூன்று மணி நேரம் கழித்தே தாஜ் மஹால் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது. இந்தியப் பிரஜையென்று பொய் சொல்லி தாஜ் மஹாலுக்குள் நுழைந்தோம்.
    பெரிய நுழை வாயிலுக்குள் நுழைந்தவுடன் தாஜ் மஹால் ஒரு கேமராவுக்குள் அகப்பட்டது போல காட்சி கொடுத்தது. முதல் முதலில் எனக்கேற்பட்ட அதே அனுபவம் என் மருமகனுக்கும் உண்டானது. ஒரு முறை உடல் சிலிர்த்து அடங்கியது என்று சொன்னார். மெய் மறக்கச்செய்யும் தோற்றம். வெண்மையாய் எழுந்து நிற்கும் பளிங்கு. அறுபதாயிரம் மனித சக்தி ஐந்தாண்டுகளில் தீட்டிய ‘மந்திர’மாய் நிற்கும் ஓவியம். மன்னர் குடும்பக் காதலை மகிமையாய்ச் சொல்லும் காவியம்.
   அது சரி உடல் சிலிர்த்தது எதற்குத் தெரியாமா என்று கேட்டேன்.
   அதன்  பிருமாண்ட அழகு என்றார்.
   இல்லை என்றேன்.
   என்னைப் பார்த்தார்.
   இந்தக் காதல் ஓவியத்தைத் தீட்டுவதற்கு ஏழை மக்கள் செய்த தியாகம். அங்க வீனம், இறப்பு , அடிமைத்தனம் , அடி உதையெல்லாம் அனுபவித்ததுதான் காரணம் என்றேன். அன்றைய மக்கள் இந்தக் காதல் சின்னத்தைக் கட்ட பட்ட அவஸ்தையின் பிம்பம்தான் நீங்கள் பார்ப்பது என்றேன். எனக்கு ரத்தமும் சதையும்தான் தெரிகிறது என்றேன். இந்த வெள்ளை மாயை அதை மறைத்து நிற்கிறது. தாஜ்மஹால் செதுக்கிய முக்கிய சிற்பி ஒருவனின் (சிலராகக்கூட இருக்கலாம்) விரலை மன்னர் துண்டித்துவிட்டதாகக்கூட செய்து உண்டு.
அது எழுந்த சரித்திரத்தைச் சொல்லச் சொல்ல அவர் ஆமோதிக்க ஆரம்பித்தார்.
      தாஜ் மஹாலின் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. அதன் அதிர்வலைகள் மாசு பட்டுவிடும் என்று தவிர்க்கிறார்கள். காதல் கடவுளின் முகவரி என்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொல்கிறார். கடவுளின் இன்னுமொரு அடையாளமாகத்தான் தாஜ் மஹால் என்றால் கடவுள் உறையும் இடமும் தாஜ் மஹால் என்று நம்புகிறார்கள் இங்கே. எது எப்படியோ தாஜ் மஹாலின் வியக்கவைக்கும் தோற்றமே போதும் அதை வணங்குவதற்கு. நான் அதனை நிறுவிய மனிதர்களை வணங்கினேன்.
 தாஜ் மஹாலின் நிழல் அதன் முன்னால் கட்டப்பட்டிருக்கும் தடாகத்தில் விழுந்து கிடந்தது. அதன் பின்னால் யமுனை நதி அமைதியுடன் ஓடிக்கொண்டிருந்தது. தாஜ் மஹால் தன்னைச் சூழ்ந்துள்ள வானிலைக்கு ஏற்ப காட்சி தரும். வெண்மை நிறத்தை அது காலை , மதியம் ,மாலை, அந்தி காலத்துக்கேற்ப தன் வண்ணத்தையே பல்வேறு வெண்மையாக்க் காட்டும் இயல்புத்தன்மையுடையது. 
  தாஜ் மஹாலைச்சுற்றி நான்கு ஸ்தூபிகள் நிற்கின்றன. அவை தாஜ் மஹாலுக்கு எதிர்த்திசையை நோக்கிச் சாய்ந்திருப்பதை உன்னிப்பாய் கவனித்தால்தான் தெரியும் இயற்கை பேரிடர் நேரத்தில் அவை தவறியும் தாஜ் மஹால் மேல் சாய்ந்து அதனைச் சிதைத்துவிடக்கூடாது என்ற தொழில் நுட்பத்தோடு கட்டப்பட்டிருக்கிறது.
  முகலாய சாராஜ்யம் ஒரு முஸ்லீம் சாராஜ்யம். ஜைய்ப்பூர் சாம்ராஜ்யம் ஒரு இந்து சாம்ராஜ்யம். இந்து இரு மன்னர் குடும்பமும் உற்வுக்காரர்கள்.ஜஹாங்கிரின் தாய் ஜோடாபாய் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜா உதை சிங்கின் மகள். அதாவது ஜஹாங்கிரின் தாய் ஒரு இந்து. அகபர் ஜொடாபாயை நேரில் பார்த்து மயங்கி அவளை மணந்துகொள்கிறான். இந்து முஸ்லிம் உறவு அப்போது சாத்தியமாகிறது. ஆரம்பத்தில் ஒரு இந்துவை அக்பரின் குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவளின் சமய கலாச்சாரப் பின்னணி முற்றிலும் முஸ்லிம் பண்பாட்டுக்கு முரணானதுதான் காரணம். இருப்பினும் அக்பர் ஜோடாபாயின் மேல் கொண்ட காதல் அந்தக் கலாச்சார அதிர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கியது.  பின்னாளில் ஜோடாபாய் அந்தக்குடும்பத்தின் முழு அதிகாரத்தை தன் கைக்குக் கொண்டு வந்து ஆட்சி செய்தார் என்று சரித்திரம் பதிவு செய்கிறது. அக்பரை மணந்த பின் அவள் பேரரசியாகிவிட்டாளல்லவா? அந்த உறவின் காரணமாகத்தான் ஜெய்ப்பூரிலிருந்து மார்பல் கற்கள் கொண்டு வரப்பட்டு தாஜ் மஹாலை நிறுவ முடிந்தது.
   அக்பர் ஜோடாபாயின்மேல் கொண்ட காதல் கதையை மையமாகக்கொண்டு ஜோடா அக்பர் இந்திப்படம் ஒன்று வெளியாகியிருந்தது. ஐம்பது கிலோ தாஜ் மஹால் என்று கவிப்பேரரசு வைரமுத்துவால் வர்ணிக்கப்பட்ட ஐஸ்வர்யாராயும் கிரித்திக் ரோஷன் நடித்த இந்திப்படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது நினைவிருக்கலாம்.
  நான் ஜெய்ப்பூர் போய் இந்த காதல் கதையை விரிவாக எஔதுகிறேன்.
  நாங்கள் தாஜ்மஹாலை விட்டு வெளியானபோது மணி ஐந்தாகிவிட்டது.
  அக்ரா முழுவதையும் சுற்றிப்பார்த்துவிட்டு ஜெய்ப்பூர் பயணமாவதாகத்திட்டம்.
  அக்ராவில் மேலும் சில கோட்டைகளைப் பார்க்க முடியவில்லை.` முகலாய சாராஜ்ய சின்னமான , நோர் ஜஹான்  அதாவது ஜஹாங்கிரின் ஆசை மனைவி , தன் தந்தை மிர்za கியஸ் பெக்  நினைவாகக் கட்டிய இத்மாட் உட் டௌலா,  faத்தெ புர் சிக்ரி,  அக்பரின் நினைவகமான சிக்கண்றா போன்ற சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களை நேரமின்மை காரணமாகப் தவிர்க்க வேண்டியதாயிற்று. இவை அனைத்துமே கோட்டைக் கொத்தளங்கள்தான். அன்றைய தினம் வெளி நாட்டுப் பிரமுகர் வருகைதான் எங்கள் திட்டத்தை நிறைவேறவிடாமல் ஆக்கியது.
  நாங்கள் அக்ராவிலிருந்து ஜெய்ப்பூர் பயணமானோம்.
போகும் வழியில் அக்ரா கடைத்தெருவை கடந்து போகையில் சரி கொஞ்சம் இறங்கி பார்த்துவிட்டுப்போகலாமே என்று தோன்றியது.
    அக்ரா கடைத்தெரு டில்லி கடைத்தெருவைவிட மக்கள் நெருக்கடி நிறைந்த இடம். தங்கக்கோயில் இருக்கும் பஞ்சாப்பின் அம்ரிஸ்டார் இருப்பது போன்ற நெருக்கம். குறுக்கே வரும் மனிதர் மேல் இடிக்காமல் நகர முடிந்தால் சாதனைதான். ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடியே நடக்கவில்லையென்றால் காணாமற்போகக்கூடிய வாய்ப்பு உண்டு. பொருட்களிப் பேரம் பேசி வாங்கினால் சகாயமாக வாங்க முடியும்.
    ஒரு சில பொருட்களை வங்கிக்கொண்டு , ஜெய்ப்பூருக்குப் பயணமானோம். அப்போது மணி 6.30. நன்றாக இருட்டிவிட்டிருந்தது.
    ஏறத்தாழ அக்ராவிலிருந்து ஜெய்ப்பூருக்கு ஐந்து மணி நேர ஓட்டம். சாலை நெரிசலற்று இருந்தது. நாங்கள் பார்த்த சாலையிலேயே இங்கேதான் வாகன நெரிசல் குறைவு. சாலை நேர்த்தியாக இருந்தது. இந்தியாவின் உட்புறப் பகுதி போல இருந்தது.
   ஜெய்ப்பூரில் போய் இரவு உணவு சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று திட்டமிட்ட  
எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
                                                                                            தொடரும்....நீங்கள் உடனிருந்தால்

Comments

அழகான பதிவு.பாராட்டுக்கள்.
ko.punniavan said…
தொடர்ந்து வருகை தருவதற்கு நன்றி

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த