Skip to main content

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

4. உயிரினங்களுடனான  உன்னதத் தருணங்கள்.  

     

         நான் லங்காவியில் இருந்த சமயம் என் மகன் நான்காம் ஆண்டில் என் பள்ளியிலேயே படித்து வந்தான். எல்லாச் சிறார்களுக்கும் இருக்கும் பிராணிகளின் மேலான ஈர்ப்பு இவனுக்கும் இருந்தது. ஒரு முறை ஒரு மணிப்புறாவைப்பிடித்து வந்து ஒரு கூட்டில் அடைத்துவைத்து பாதுகாக்க ஆரம்பித்தான். வானாளவிப்பறந்த பறவைகளை அடைத்துவைப்பது பாவச்செயல். அது அடிமைப் படுத்துவதற்கு ஈடானது என்று சொன்னேன். “இல்லாப்பா, கொஞ்ச நாள் வெளிய விட்ருவன், “ என்று எனக்குச் சமாதானம் சொல்லி வந்தான். கொஞ்ச நாள் கழித்து விடுவதற்குப் பதில் இப்போதே விட்ரலாம்ல’” என்றேன். அவனுக்கு அதில் திருப்தி இல்லை. அதனை மிக அருகில் இருந்து பார்க்கும் பரவசத்தில் அவன் இருந்தான். அகன்ற வெளியில் கைக்குக்கிடைக்காமல் பறந்து திறிந்ததை அருகில் வைத்துப் பார்க்கும் அவன் விருப்பத்துக்கு இணங்கினேன். கொஞ்ச நாள் அது வெளியில் பறந்து செல்லும் முயற்சியில் இறக்கை¨யைப் படபடத்துக்கொண்டிருந்தது. ஓரிரு வாரங்களுக்குப்பிறகு கொஞ்சம் அடங்கப் பழகிக்கொண்டது.
   அந்தக்கூட்டுக்குள் இருக்கும் மணிப்புறாவை எப்போதும் பார்த்தவண்ணமே இருப்பான். அதற்கான பருக்கைகளைக் கடையில் வாங்கி வந்து உண்ணக்கொடுப்பான். அது கொத்தித் தின்னும் அழகை பார்ர்த்தபடியே இருப்பான். காலையில் எழுந்தது கூண்டுக்கருகில் சென்று பார்ப்பான். அதன் தரிசனம் பெற்ற பின்பே படுக்கப் போவான். . சில சமயம் அதனோடு பேசுவான். ஏன் பறவைகள் பேசுவதில்லை என் விநோதமான வினாவை எழுப்புவான். அதற்கும் அவனே பதில் சொல்வான். யாரும் பறவையோடு பேசுவதில்லை. அது முட்டையிலிருந்து ஜனித்த தருணம் தொட்டு பேசிக்கொண்டே வந்திருந்தால் அது பேசியிருக்கக்கூடுமென்பான். மனிதர்கள் அப்படித்தானே பேசிப் பழகினார்கள் என்று தான் கண்டறிந்தவற்றை முன்வைப்பான். சில வகைக் கிளிகள் சொன்னதையே சொல்கின்றனவே என்ற ஆதாரத்தை முன்வைக்கும்போது அவன் கண்டுபிடிப்பில் பொருள் இருப்பதாகப்படுகிறது.
அதன் அழகில் நான் கூட மெய்மறந்து போயிருக்கிறேன். அருகில் சென்று ஓரிரு நிமிடம் பார்க்கத் தொடங்கிவிட்டாள் அது தன்னிச்சையாய் நம்மை தன்வசப்ப்டுத்திக்கொள்ளும் சௌந்தர்யத்தைக் கொண்டது. அதன் மேல் இயற்கை தெளித்திருக்கு வண்ணம் விநோதமானது. பச்சையும் நீலமும் மஞ்சளும் சில இடங்களில் இன்னதென்று சொல்லமுடியாத வண்ணக்கலவையும் நம்மை மறக்கச்செய்யும். அதன் வண்ணம் செயற்கை வண்ணங்களில் காண முடிவதில்லை. அதனிலிருந்து நம் பார்வை அகன்றவுடன் நாம் ஒருவகை தியானத்தில் இருந்தோமா என்று நமக்குத்தோணும். எனக்கு வேலையில் உண்டான மன அழுத்தமான நேரங்களில் அப்பறவையிடம் சரண் அடைந்து அழுத்தத்தை இறக்கியிருக்கிறேன். இறைவன் நமக்குக் கொடுத்த வாழ்வின் பரவச தருணத்தை நாம் கண்டுகொள்வதில்லை. நம்மை மறந்து லயித்து அகத்தினுள் அனுபவிக்கும் இதுபோன்ற தருணங்களை நாம் அனுபவிக்கவேண்டும். அவ்வாறான அனுபவம் அலாதியானது. ஈடில்லாதது. நம்மை நம்மிடமே மீட்டெடுத்துத் தரக்கூடியது. அந்த மீட்சி சொல்லொணா மகிழ்ச்சி தரக்கூடியது. நம் துன்பங்களை நம்மிடமிருந்து பறித்துக்கொள்ளும் உபாயம் உடையது.
        அது தரும் பரவசத்தில் நான் அதனை வெளியே விட்டு விடு என்ற அறிவுரை சொல்வதை விட்டுவிட்டேன்.
        ஒருமுறை வார விடுமுறையில்  நாங்கள் இரண்டு நாட்கள் லங்காவியிலிருந்து எங்கள் சொந்த ஊரான சுங்கைப் பட்டாணிக்குப் போகவேண்டியதாயிற்று. அவன் வளர்த்த மணிப்புறாவுக்கு இரண்டு நாட்களுக்கு போதுமான பருக்கை, பழங்கள்., தண்ணீர் வைத்துவிட்டு புறப்பட்டுவிட்டோம். அதனை தனியே விட்டுவர மனம் இல்லாதவனாகவே எங்களோடு பயணித்தான் மகன்.
      நாங்கள் வீடு திரும்பியபோது கூண்டிலிருந்த மணிப்புறாவைக்காணவில்லை. கூண்டுக்குக்கீழே அதன் சிறகுகளும் இறகுகளும் சிதலங்களாகக் காட்சியளித்தன. யாரோ அதன் சிறகுகளைப் பலாத்காரமாக பிடுங்கி எரிந்துவிட்டது போன்று சிதறிக்கிடந்தது. ஓரிரு சொட்டு காய்ந்த ரத்தமும் சிறகுகளில் ஒட்டிக்கொண்டிருந்தது. அதனைப்பார்த்த நேரத்தில் அது எங்கள் வீட்டில் அடைக்களமாகியிருந்த பூனையின் வேலை என்று புரிந்து கொண்டோம். நாங்கள் இருக்கும் வரை பவ்வியமாக் இருந்த பூனை நாங்கள் அதன் பார்வையை விட்டு மறைந்ததும் தன் இயல்பான புத்தியைக்காட்டி விட்டிருக்கிறது.
       கூண்டை விட்டத்திலிருந்து தொங்கும் கம்பியில் மாட்டிவிட மறந்து மேசைமேலாயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டதால் பூனைக்கு இலகுவாக இறையாகும்படியாயிற்று.
        அது சித்திரவதைக்கு உள்ளாகி மரணித்துவிட்டதை உணர்ந்த மகன் அழுத அழகையை இன்றளவும் என்னாள் மறக்கு முடியவில்லை. அது உயிருக்குப்போராடிய தருணங்கள் எங்கள் நினைவுக்குள் புகுந்து மிகுந்த சோகத்தில் தள்ளிவிட்டிருந்தது. அவனின் கவனக்குறைவுக்கு அதன் கொடுமையான் இறப்பே தணடனை.
     கீழே வரும் கவிதையை நாம் எப்படியும் புரிந்துகொள்ளலாம். என் அனுபவம் சார்ந்தே என் புரிதலை முன்வைக்கிறேன்.
     
தினசரி வழக்கமாகிவிட்டது
தபால் பெட்டியைத்
திறந்து பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது
இரண்டு நாட்களாகவே
எந்தக்கடிதமும் இல்லாத
ஏமாற்றம்
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப்பறவை எழுதியிருக்கும்
இந்தக்கடிதத்தை
      கல்யான்ஜி

கடிதத்துக்குப் பதில் தபால் பெட்டியிலிருந்து ஒரு சிறகை எடுக்கிறார் கவிஞர். அது அங்கு வந்த வரலாறை நான் யோசித்துப்பார்கிறேன். ஏதோ ஒரு வலிய பிராணியிடம் அது சிக்கியிருக்கக்கூடும். அதன் சிதலமே இந்தச்சிறகு என்று தோன்றுகிறது எனக்கு. அப்படியானால் சிறகுக்குச் சொந்தமான பறவையின் கதி ?  மனதைக்கலங்கடிக்கிறது.

தர்மு சிவராமு என்ற கவிஞர்கூட இப்படிச்சொல்கிறார்.


சிறகிலிருந்த பிறிந்த இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின்  வாழ்வை
எழுதிச்செல்கிறது.

பல நவீனக் கவிதைகளில் சொல்லப்பட்டவை நிலைகொள்வதில்லை, சொல்லாமல் விடப்பட்டவையை நம்பியே நிலைகொள்கின்றன. சொல்லாமல் விடப்பட்டவை வாசகனின் கவிதை வாசிப்புக்குப் பிறகான பரிமாணமாகும். இக்கவிதை அதற்கொரு சான்று. சொல்லாமல் விடப்பட்டவை எவை என்பது வாசகனின் வாழ்வனுபவத்திலிருந்துதான் ஊறுகிறது. ஒவ்வொரு வாசகனுக்கும் வெவ்வேறான அனுபவங்கள்தானே மிஞ்சுகிறது.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த