Skip to main content

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

5. மனிதரை நாணிக்குறுக வைக்கும் மரங்கள்
          

 என் ஒன்றரை வயதுப்பேரன் நடக்கப் பழகியதிலிருந்து என்னை வீட்டுக்கு வெளியே இழுக்கும் தந்திரம் தெரிந்திருந்தான். அந்தத் தந்திரம் எனக்குச் சுகமானது. முதலில் அவன் வாசலுக்கு வெளியே போய் நின்றுகொண்டு என்னை தாத்தா தாத்தா என்று உரக்கக்கூவி அழைப்பான். இரண்டு முறைக்கப்புறம் அவன் குரலில் காத்திரம் இருக்கும். அவன் அழைப்பில் வசீகரிக்கப்பட்டவனாய் மெல்ல வாசலுக்குச் செல்வேன். வீட்டில் அத்தனை பேர் இரூக்க என்னைத் தேர்வு செய்யும் காரணம் என்ன? குழந்தைகள் எந்தக் கல்லூரியில் கற்றுக்கொள்கின்றன உளவியலை? நான் அவனை அழைத்துச்செல்வதில் முன்னோடியாக இருந்திருக்கிறேன். பரந்த வெளி ஊட்டும் சுகந்தம் அவனையும் ஆட்கொண்டிருக்கிறது.
       நான் வெளியே சென்றதும், என் செருப்பைக்கொண்டுவந்து, அதனைச் சேர்த்து வைத்து , அதை காட்டிப் போடச் சொல்வான். அத்தனை பேரின் செருப்பும் கலந்திருக்க , ஒரு முறைகூட தவறுதலாக எடுக்காமல் என்னுடையதைத் தேர்வு செய்யும் அறிவு அவனுக்குக் கிட்டியதன் மர்மம் புரியவில்லை. குழந்தைகள் முதலில் அவர்கள் பார்த்ததையே கற்றுக்கொள்கிறார்கள் போலும்.
      பின்னர், மின்சார கேட்டைத்திறக்கும் சுவிட்சைக்காட்டித் திறக்கச்சொல்வான். நான் அவனின் மந்திரக்கோலின் அசைவுக்கு அடிபணிபவன்போல அவன் சைகையிடுவதையெல்லாம் ஒரு அடிமையைப்போல செய்துமுடிப்பேன்.
      கதவைத்திறந்ததும் என் கையைப்பிடித்து என்னை வெளியே அழைத்துச்செல்வான். அந்த காந்தக் கைகளுக்கு அப்போது என்னை விலங்கிட்டுக்கொள்வேன். ஆமாம் வெளியே என்ன இருக்கிறது? குறிப்பாக ஒன்றரை வயதே எட்டிய அவனுக்கு?
      அனைவரையும் ஈர்க்கும் பச்சை வண்ணம் விரிந்து அசையும் மரங்கள் இருக்கின்றன. காற்றின் பாடலுக்கு மரம் அபிநயிக்கும் அழகு மிளிர்ந்திருக்கிறது..  அதில் குருவிகள் இளைப்பாற கிளை தேடி அலைந்த வண்ணமிருக்கின்றன. இவற்றையெல்லாம் காட்டி அவன் பரவசமடைவதைப் பார்த்திருக்கிறேன். பூனை பதுங்கி ஓடுவதும், பூக்கள் மலர்ந்து சிரிப்பதும், குழந்தைகள் ஓடி விளையாடுவதும், கார்கள் கடந்து போவதும் அவனுக்கு வீட்டுக்குள் கிடைக்காத உளவியல் இன்பங்கள். இயற்கையோடு இயைந்து   மறப்பதில் அவனோடு நானும் இணைந்து கொள்கிறேன்.
      தர்மு சிவராமுவின் கவிதை, இயற்கை , மண்ணில வரைந்து விளையாடுவதை இன்னும் அழகாகச்சொல்கிறது.
       பூமித்தோலில்
       அழகுத்தேமல்
       பரிதி புணர்ந்து
       படரும் விந்து
       கதிர்கள் கமழ்ந்து
       விரியும் பூ
       இருளின் சிறகைத்
       தின்னும் கிருமி
       வெளிச்ச சிறகில்
       மிதக்கும் குருவி.
இந்தக் கவிதையில் அழகியல் நம்மை வியக்க வைக்கிறது. அழகியலில் நம் சிந்தனையை நகர்த்தும் படிமம் அலாதியானது. குறியீடுகள் மிகப்பொருத்தமாய் கையாளப்பட்டிருக்கிறது.
       மரங்களைப் பற்றி மரத்தைக் குறியீடாக வைத்தும் கவிஞர் தேவராஜனின் சிந்தனை மேற்காணும் கவிதைக்கு ஈடானது. மரங்கள் தனக்குத்தானே நிழலை தருவித்துக்கொண்டு நமக்கும் நிழல் தருபவை. தன் நிழலிலிரிந்து வேர்களில் சேகராமாகியிருக்கும் தண்ணீரை கிளை இலைகளுக்குப் பரப்பி குளிர் நிழலைத் தருபவை. கதிரவனுக்குத் தான் சேகரித்து வைத்திருக்கும் நீரை தவனை முறையில் ஈர்க்கச்செய்து மழை பெய்ய ஆதார சுருதியாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவை.
மரங்கள் மனிதர்கான நோய்க்கு மருந்தாகவும் அவதாரம் எடுத்துக்கொண்டவை. தன் கிளைகளை வெட்டினாலும் இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நன்னயம் செதுவிடும் குறளின் பொருளை மரத்தின் தியாகத்திலிருந்தே நாம் அவதானிக்கலாம். தன் கிளைகளை வெட்டி வீழ்த்தப்படும் போதெல்லாம் தன்னிலிருந்து இன்னொன்றை வளரச்செய்து நாம் நாண நன்னயம் செய்துவிடுகிறது. தனக்கு உரமாக தன்னையே நம்பியிருக்கிறது மரம்.
      தேவராஜனின் கவிதையை உன்னிப்பாகப்படியுங்கள்.
   
     மரம் தன்னை உணர்ந்த காலம்
 
     அதற்கு முன்பே
     தெளிவு படுத்திக்கொண்டிருக்கலாம்
     அந்தப் பழைய மரமொன்று
    
     தன்னிலிருந்து
     ஒவ்வொன்றாய் அது
     உதிர்த்துக்கொண்டிருக்கிறது
     ஒவ்வொரு காலமாய்
    
     இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்டு
     அம்போவென நின்றபோது
     பின் வெளியில் நீலவானம்
     சூரியக்கற்றைகளை
     வீட்டுக்குள் கொண்டு வந்து
     கதை கதையாய் சொல்லியது
     மரத்தின் வாழ்வை
  
     வீட்டினின்று பிரிந்தபோன.....
     வீட்டினின்று மறந்துபோன......
     வீட்டினின்று மறைந்து போனவற்றை
     ஒவ்வொன்றாய்ச்சொல்ல சொல்ல
     அவர் தன் அவயவங்களை
     ஒரு முறை
     பார்த்துக்கொள்கிறார்
 
     வீடு முழுக்க
     வெறிச்சோடிய சாயத்தின்
     நிசப்த அறைகளில்
     அவர் நடக்கிறார்
   
     ஆள் அரவமற்ற
     கும்மிருட்டின் ஒளியில்
     உறவுகளின் சோகப்படலங்கள்
     அசைவாடுகின்றன
   
     தவறிழைக்காத மரம்
     இப்போது
     நெட்டுக்குத்தலாய்
     நின்றுகொண்டிருக்கிறது
   
     நிழல் வேண்டியும் இளைப்பாறவும்
     தன் பாதத்தில்
     சகலரும் நின்ற காலம்
     ஒன்றுண்டு

     எந்த நிழலை
     இன்றவர் நாடி வருகிறார்
     என்றதற்குத் தெரியவில்லை

     உருகியவர் தொடுகிறார்
     உருக்கமுடன் பூக்கிறது
     அந்த மரம்
     தன் சரித்திரத்தில்
     முதல் முறையாய்.

     மரத்தைக்குறியீடாக வைத்து கவிஞர் தேவராஜன் குடும்மபத்தை வளர்த்து ஓய்ந்த வயதான மனிதரைச்சொல்கிறார்.  அவர் குறிப்பிடும் வயோதிகரைக் காட்டிலும், ஒரு மரத்தின் இயல்பான தன்மை,  மிகத்துல்லிதமாக  வியாபகம் பெறுகிறது. மரம் எச்சந்தர்ப்பத்திலும் தவறிழைப்பதில்லை. மரங்கள் முதலில் குடியிருந்த பகுதிகளை  மனிதன்தான் தன் கையகப்படுத்துகிறான். மனிதனின் எல்லை மீறல்! எதேச்சதிகாரம் அது ! நிழல் தந்த மரங்களை மனிதாபமின்றி வெட்டி வீழ்த்துகிறான். அதனையே வெட்டி அதனாலேயே வீடுகட்டிக் கொள்கிறான். அப்போதும் வெட்டப்பட்ட மரம் அவனுக்குக்கூரையாகத் தன் தியாகத்தை மேலும் விரிந்து கொடுக்கிறது. நாம் குடியிருக்கும் வீடமைப்புப் பகுதிகள் நமக்குச்சொந்தமாந்தல்ல! மரங்களுக்கும் மரத்தை நமி வாழும் உயிரினக்களுக்கும் சொந்ந்தம்! தவறிழைக்காத மரம் என்று தேவராஜன் சொல்வது  மரத்தைப்பற்றிய கரிசனையான, புதிய செய்தி. கவிதை உலகின் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய மிக முக்கியமான ஆளுமை ஏ.தேவராஜன்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின