Skip to main content

எதிர்வினைகள் - பிறிதொருவர் பார்வையில்


கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளிப்பற்றிய ஒரு பார்வை.

புண்ணியவானுக்கு நன்றாகக் கதைச் சொல்ல வருகிறது. இவரது கதைகளுடன் எனக்குள்ள இருபது வருடப் பரீட்சயத்தில் கண்டடைந்த முடிவு  இது. ஒரு கதைச் சொல்லிக்கு சரியான விஷயத்தை தேர்வு செய்வது மட்டும் போதாது; சரியாக அதைச் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும். அவன் எழுத்தாளனாகப் பரிணமளிப்பது அப்போதுதான் சாத்தியமாகிறது. கோ.புவுக்கு இந்தச் சமுதாயத்தைப் பற்றிய ஒரு தீர்க்கமான பார்வை உள்ளது. அதன் இறுக்கங்களையும், உள்ளடுக்குகளில்  மறைந்து கொண்டு மனதை ரணப்படுத்தும்  சமூகப் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் தெளிவான சிந்தனையும், அதற்கு ஈடான படைப்பூக்கமும், மொழி ஆளுமையும் ஒருங்கே அமைந்துள்ளது.
            எழுத்தாளன் சாதாரண விஷயங்களில்  பதுங்கிச் சொல்லும் அசாதாரணமான கணங்களை படைப்பினுள் கொண்டுவருகிறான். இத்தொகுப்பில் உள்ள பல கதைகள்  சாதாரணமான விஷயங்கள்தான். வாழ்வின் சகல அவலங்களும், சிறுமைகளும், ஊதிப் பெருக்கிய புனித பிம்பங்களும் இப்போதெல்லாம் சாதாரணமானவைத்தானே! அவசியம் கருதியோ, நமது பலவீனங்களை நியாயப்படுத்தவோ, பல அசிங்கங்களை சகித்துக் கொள்கிறோம். பிறகு, அதுவே வாழ்க்கை நியதியாகவும் ஆகிவிடுகிறது. இத்தகையப் போக்குகளை  தொகுப்பின் பல கதைகள் பதிவு  செய்கின்றன.
            பல பெண்களின் வாழ்க்கை கணவன் போன பிறகுதான் ஆரம்பிக்கிறது. கேட்பதற்கு கொஞ்சம் அபத்தமாகத்தான் இருக்கிறது; நிலமை அப்படித்தானே! ஆண் மைய வாழ்க்கையில் பெண்களின் இருப்பு என்பது இழப்புகளால் மட்டுமே பூரணத்துவம் அடைய முடியும். `எதிர்வினைகள்` கதையின் சாரம் இதுதான். சாரதா தனது இருப்புக்கு `இழப்பின்` தேவையை நன்றாகவே உணர்ந்திருக்கிறாள். `நூலாம்படை`, `ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை', `நீருக்குள்ளிருந்தே நழுவும் மீன்கள்`, `துறவு`  போன்ற கதைகளும் பெண்களை மையப்படுத்திய கதைகள்தான். பெண்கள் வாழ்வியல் சிக்கல்களைச் சொல்வதில் காட்டும் அதே அளவு தீவிரத்தை, அவர்களைச் சுற்றி எழுப்பப் பட்டுள்ள புனிதக் கட்டமைப்பை உடைப்பதிலும் காண முடிகிறது. அப்படிச் செய்வதுதான் சரியான போக்கு என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும். கோபாலின் அம்மாவை எப்படித்தான் புரிந்து கொள்வது? பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக கட்டமைக்கப்பட்ட சமூக பிம்பங்கள் எவ்வளவு சாதுர்யமான விலங்குகள்! `துறவு` சரசுவுக்கு மட்டுமேயான வதையானாது அவள் குற்றமா? கவித்துவமான வரிகள் நிறைந்த கதை இது.  `..சரசு சலனமற்ற பொறுமையோடு மெதுவாகக் கைநீட்டி ஸ்பரிசிக்கப் பார்க்கிறாள்.அப்போது மைனா சுதாரித்துக்கொண்டு பின்நகர்ந்து சட்டத்துக்குத் தாவி ஜாக்கிரதையாகி விடுகிறது.` ஆண்களும் இந்த மைனாவைப் போலத்தானோ..
            `நிகரற்றவன்`, `இறந்தவனைப் பற்றிய வாக்குமூலம்`, `சாமி கண்ண குத்திடுச்சு', `ஆயாக்கொட்டா` போன்ற கதைகளில்   பலதரப்பட்ட மனிதர்கள் , அவர்களின் நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், ஏமாற்றங்கள் கதைப் பொருளாகின்றன. எள்ளல் `நிகரற்றவனிலும்`, `புலவர் வேந்தர்கோனிலும்` நன்றாக பயன்பட்டிருக்கிறது. `நிகரற்றவனில்' சுய எள்ளலாக மட்டும் வெளிபடுவது, `புலவர் வேந்தர்கோனில்` ஒரு பகடியாக நீட்சி பெறுகிறது.
            எப்போதும் போலவே, கோ.புவின் உவமைகளும், கவித்துவமான வரிகளும், தெளிவான நடையும், வாசகன் சிரமமில்லாமல் கதையுடன் ஒன்றிக்க துணயாக இருக்கின்றன. கதைகளுக்கான எதிர்வினைகளையும்  இணைத்திருப்பது நல்ல முயற்சி. ஆனால், வாசகன் அதைத் தவிர்த்துவிட்டு நேராகாக் கதைக்குள் நுழைவதே சரியெனப்படுகிறது. அதுதான் சுயமான வாசிப்பனுபவத்தையும், புதிய திறப்புகளையும் வழங்கும்.
      இந்நூலின் பதினேழு கதைகளும் பதினேழு வகையான மனித சுபாவங்களை அவர்களின் வாழ்வுப் போராட்டங்களை அங்கதத்தொனியோடு முன்வைக்கிறது. இலக்கயத்தில் அங்கதத்தின் பங்கு மிக முக்கியமானது. அந்த வகை உத்தி மனிதனின் நாடகத்தனமாக வாழ்க்கையின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் போக்கை வன்மையுடன் கண்டிக்கும். இதில் வரும் கதாப் பாத்திரங்கள் யாராய் இருக்கமுடியும் என்று தேட வேண்டிய அவசியமில்லாமல், நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும், சற்று சௌகரியமான தூரத்தில் இருந்து அவதானிக்கும் மனிதர்களாகவே இருக்கிறார்கள். நேரடி வாழ்வில சந்தித்தை விட பாத்திரங்களாக வார்க்கப் படும்போது அழகியல் தொனி அவற்றை ரசனைக்குள்ளாக்குகிறது.
            தொடர் வாசிப்பும், திருப்தியின்மையும், தளராதத் தேடலும் கோ.புவின் படைப்புகளை கூர்மையாக்கிக் கொண்டே வருகிறது. `எதிர்வினைகள்` சிறுகதைத் தொகுப்பு நல்ல வாசிப்பனுபவமாக மட்டும் நின்றுவிடாமல், பல எதிர்வினைகளையும், ஆரோக்கியமான விமர்சனங்களையும் எதிர்கொண்டால், அதுவே ஒரு எழுத்தாளனக்கான பெரிய அங்கீகாரமாக இருக்கும். நீங்கள் முழுமையாக வாசிக்க வேண்டுமென்பதற்காகவே பலவற்றை  நான் சொல்லாமல் விட்டு விட்டேன்.

.மணிஜெகதீசன்
கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதைத்தொகுப்பான எதிர்வினைகள் நூல் வெளியீடு ,எதிர்வரும் 15.10 2011 சனிக்கிழமை சுங்கைப்படாணி சிந்தா சாயாங் விடுதியின் சல்சா மண்டபத்தில் மாலை மணி 4.30 நடைபெறும்.
நூல் கிடைக்குமிடம் 3203, லோரோங் 9, சுங்கைப் பட்டாணி, கெடா.நூலின் விலை 10 ரிங்கிட்/





Comments

Karthigesu said…
புண்ணியவான்,

ம.த.எ.சங்கத்தின் வலைத்தளம் http://www.tamilwriters.net/
அதில் ஏதாவது கருத்து எழுதுங்கள்.
பாழ்வெளியாகக் கிடக்கிறது.

ரெ.கா.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின