Skip to main content

எதிர்வினைகள் - பிறிதொருவர் பார்வையில்


கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளிப்பற்றிய ஒரு பார்வை.

புண்ணியவானுக்கு நன்றாகக் கதைச் சொல்ல வருகிறது. இவரது கதைகளுடன் எனக்குள்ள இருபது வருடப் பரீட்சயத்தில் கண்டடைந்த முடிவு  இது. ஒரு கதைச் சொல்லிக்கு சரியான விஷயத்தை தேர்வு செய்வது மட்டும் போதாது; சரியாக அதைச் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும். அவன் எழுத்தாளனாகப் பரிணமளிப்பது அப்போதுதான் சாத்தியமாகிறது. கோ.புவுக்கு இந்தச் சமுதாயத்தைப் பற்றிய ஒரு தீர்க்கமான பார்வை உள்ளது. அதன் இறுக்கங்களையும், உள்ளடுக்குகளில்  மறைந்து கொண்டு மனதை ரணப்படுத்தும்  சமூகப் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் தெளிவான சிந்தனையும், அதற்கு ஈடான படைப்பூக்கமும், மொழி ஆளுமையும் ஒருங்கே அமைந்துள்ளது.
            எழுத்தாளன் சாதாரண விஷயங்களில்  பதுங்கிச் சொல்லும் அசாதாரணமான கணங்களை படைப்பினுள் கொண்டுவருகிறான். இத்தொகுப்பில் உள்ள பல கதைகள்  சாதாரணமான விஷயங்கள்தான். வாழ்வின் சகல அவலங்களும், சிறுமைகளும், ஊதிப் பெருக்கிய புனித பிம்பங்களும் இப்போதெல்லாம் சாதாரணமானவைத்தானே! அவசியம் கருதியோ, நமது பலவீனங்களை நியாயப்படுத்தவோ, பல அசிங்கங்களை சகித்துக் கொள்கிறோம். பிறகு, அதுவே வாழ்க்கை நியதியாகவும் ஆகிவிடுகிறது. இத்தகையப் போக்குகளை  தொகுப்பின் பல கதைகள் பதிவு  செய்கின்றன.
            பல பெண்களின் வாழ்க்கை கணவன் போன பிறகுதான் ஆரம்பிக்கிறது. கேட்பதற்கு கொஞ்சம் அபத்தமாகத்தான் இருக்கிறது; நிலமை அப்படித்தானே! ஆண் மைய வாழ்க்கையில் பெண்களின் இருப்பு என்பது இழப்புகளால் மட்டுமே பூரணத்துவம் அடைய முடியும். `எதிர்வினைகள்` கதையின் சாரம் இதுதான். சாரதா தனது இருப்புக்கு `இழப்பின்` தேவையை நன்றாகவே உணர்ந்திருக்கிறாள். `நூலாம்படை`, `ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை', `நீருக்குள்ளிருந்தே நழுவும் மீன்கள்`, `துறவு`  போன்ற கதைகளும் பெண்களை மையப்படுத்திய கதைகள்தான். பெண்கள் வாழ்வியல் சிக்கல்களைச் சொல்வதில் காட்டும் அதே அளவு தீவிரத்தை, அவர்களைச் சுற்றி எழுப்பப் பட்டுள்ள புனிதக் கட்டமைப்பை உடைப்பதிலும் காண முடிகிறது. அப்படிச் செய்வதுதான் சரியான போக்கு என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும். கோபாலின் அம்மாவை எப்படித்தான் புரிந்து கொள்வது? பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக கட்டமைக்கப்பட்ட சமூக பிம்பங்கள் எவ்வளவு சாதுர்யமான விலங்குகள்! `துறவு` சரசுவுக்கு மட்டுமேயான வதையானாது அவள் குற்றமா? கவித்துவமான வரிகள் நிறைந்த கதை இது.  `..சரசு சலனமற்ற பொறுமையோடு மெதுவாகக் கைநீட்டி ஸ்பரிசிக்கப் பார்க்கிறாள்.அப்போது மைனா சுதாரித்துக்கொண்டு பின்நகர்ந்து சட்டத்துக்குத் தாவி ஜாக்கிரதையாகி விடுகிறது.` ஆண்களும் இந்த மைனாவைப் போலத்தானோ..
            `நிகரற்றவன்`, `இறந்தவனைப் பற்றிய வாக்குமூலம்`, `சாமி கண்ண குத்திடுச்சு', `ஆயாக்கொட்டா` போன்ற கதைகளில்   பலதரப்பட்ட மனிதர்கள் , அவர்களின் நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், ஏமாற்றங்கள் கதைப் பொருளாகின்றன. எள்ளல் `நிகரற்றவனிலும்`, `புலவர் வேந்தர்கோனிலும்` நன்றாக பயன்பட்டிருக்கிறது. `நிகரற்றவனில்' சுய எள்ளலாக மட்டும் வெளிபடுவது, `புலவர் வேந்தர்கோனில்` ஒரு பகடியாக நீட்சி பெறுகிறது.
            எப்போதும் போலவே, கோ.புவின் உவமைகளும், கவித்துவமான வரிகளும், தெளிவான நடையும், வாசகன் சிரமமில்லாமல் கதையுடன் ஒன்றிக்க துணயாக இருக்கின்றன. கதைகளுக்கான எதிர்வினைகளையும்  இணைத்திருப்பது நல்ல முயற்சி. ஆனால், வாசகன் அதைத் தவிர்த்துவிட்டு நேராகாக் கதைக்குள் நுழைவதே சரியெனப்படுகிறது. அதுதான் சுயமான வாசிப்பனுபவத்தையும், புதிய திறப்புகளையும் வழங்கும்.
      இந்நூலின் பதினேழு கதைகளும் பதினேழு வகையான மனித சுபாவங்களை அவர்களின் வாழ்வுப் போராட்டங்களை அங்கதத்தொனியோடு முன்வைக்கிறது. இலக்கயத்தில் அங்கதத்தின் பங்கு மிக முக்கியமானது. அந்த வகை உத்தி மனிதனின் நாடகத்தனமாக வாழ்க்கையின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் போக்கை வன்மையுடன் கண்டிக்கும். இதில் வரும் கதாப் பாத்திரங்கள் யாராய் இருக்கமுடியும் என்று தேட வேண்டிய அவசியமில்லாமல், நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும், சற்று சௌகரியமான தூரத்தில் இருந்து அவதானிக்கும் மனிதர்களாகவே இருக்கிறார்கள். நேரடி வாழ்வில சந்தித்தை விட பாத்திரங்களாக வார்க்கப் படும்போது அழகியல் தொனி அவற்றை ரசனைக்குள்ளாக்குகிறது.
            தொடர் வாசிப்பும், திருப்தியின்மையும், தளராதத் தேடலும் கோ.புவின் படைப்புகளை கூர்மையாக்கிக் கொண்டே வருகிறது. `எதிர்வினைகள்` சிறுகதைத் தொகுப்பு நல்ல வாசிப்பனுபவமாக மட்டும் நின்றுவிடாமல், பல எதிர்வினைகளையும், ஆரோக்கியமான விமர்சனங்களையும் எதிர்கொண்டால், அதுவே ஒரு எழுத்தாளனக்கான பெரிய அங்கீகாரமாக இருக்கும். நீங்கள் முழுமையாக வாசிக்க வேண்டுமென்பதற்காகவே பலவற்றை  நான் சொல்லாமல் விட்டு விட்டேன்.

.மணிஜெகதீசன்
கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதைத்தொகுப்பான எதிர்வினைகள் நூல் வெளியீடு ,எதிர்வரும் 15.10 2011 சனிக்கிழமை சுங்கைப்படாணி சிந்தா சாயாங் விடுதியின் சல்சா மண்டபத்தில் மாலை மணி 4.30 நடைபெறும்.
நூல் கிடைக்குமிடம் 3203, லோரோங் 9, சுங்கைப் பட்டாணி, கெடா.நூலின் விலை 10 ரிங்கிட்/





Comments

Karthigesu said…
புண்ணியவான்,

ம.த.எ.சங்கத்தின் வலைத்தளம் http://www.tamilwriters.net/
அதில் ஏதாவது கருத்து எழுதுங்கள்.
பாழ்வெளியாகக் கிடக்கிறது.

ரெ.கா.

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...