Skip to main content

விழுதுவிட்டு வளர்ந்துவிட்ட வீடு

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்



சமீபத்தில் நான் குடியிருந்த பழைய வீட்டைக் கடந்து போகவேண்டியிருந்தது. என் நண்பரின் இறப்பு என்னை அங்கு செல்ல வைத்திருந்தது. அப்போது அந்த வீடும், வீட்டின் சுற்றுப்புறமும் என் வருகையால் உயிர் பெற்றுவிட்டது போன்ற உணர்வு எனக்கு உண்டானது. அண்டை வீட்டு நண்பரின் மரணத்தை விட இந்த வீட்டின் நினைவே என்னைச் சுற்றி சூழ்ந்துகொள்ள ஆரம்பித்திருந்தது. நான் குடியிருந்த என் பழைய வீட்டைக் கடந்துதான் நண்பரின் வீட்டுக்குச் செல்லவேண்டும். ஆனால் நான் குடியிருந்த வீட்டை எளிதில் கடந்து  சென்றுவிட முடியவில்லை என்னால். அந்த வீடு தன் ஆக்டோபஸ் கைகளால்  என்னை ஈர்த்தபடி இருந்தது. அதனைத் திரும்பிப் பார்த்த படியே நடந்தேன். அந்த வீடு எனக்கு இப்போது சொந்தமில்லை என்றாலும் எனக்கும் அதற்குமான உளப்பூர்வமான பந்தம் தொட்டுத் தொடர்ந்த வண்ணமாகவே இருந்திருக்கிறது. வந்த வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது ஒருமுறை வீட்டை எட்டிப்பார்த்துவிட்டாவது போய்விடவேண்டும் என்ற ஆசை உண்டானது. நண்பரின் மரணத்துக்கு வந்த என்னை நான் புழங்கிய வீடுதான் என்னை முழுமையாக ஆக்கிரமித்தபடி இருந்தது. இறப்பு வீட்டில் இருந்த படியே என் வீட்டை அவதானித்துக்கொண்டிருந்தேன்.
   வீட்டின் வெளித்தோற்றம் முற்றாக மாறியிருந்தது. வீட்டு வாசலின் பூத்துக்குலுங்கிய ஆரஞ்சு வண்ணத்திலான காகிதப்பூமரம் இருந்த இடத்தைச்சுற்றி காய்க்கறிதோட்டம் இருந்தது. நாங்கள் காற்பந்து , பூப்பந்து விளையாடிய இடம் புதர் மண்டிக்கிடந்தது. வான்கோழிகளின் கழிவுகள் சிதறிக்கிடந்தன. சாக்கடைகளில் கழிவு நீர் தேங்கிக்கிடந்தது. வீட்டின் புறத்தோற்றம் முற்றாகவே வனப்பிழந்து கிடந்தது.
   வீட்டின் வாசலில் துணிக்கொடியில் துணிகள் காய்ந்து கொண்டிருந்தன. வீட்டு வாசலை நெருங்கும்போது வீட்டின் கதவி திறந்தே கிடப்பது தெரிந்தது. வீட்டு வாசலை நெருங்குபோது எட்டிப்பார்க்கக்கூட வீட்டு சொந்தக்காரரின் அனுமதி பெறவேண்டுமே என்ற எண்ணம் என்னை ஒருவித நகைப்புக்குள்ளாக்கியது. வீட்டின் விருந்தினர் அறைய எட்டிப்பார்த்தேன். அப்போது எனக்குள் ஒரு அந்நியத்தன்மை குடிகொள்ளத் தொடங்கியிருந்தது. ஆனால் என் பாதச்சுவடுகள் வீட்டுதரை முழுதும் பதிந்திருப்பதான பிரம்மையைத் தவிர்க்கமுடியவில்லை. என் குழந்தைகள் ஓடி விளையாடிக் கூச்சலிட்டதை அசரீரியாய்க் கேட்க முடிந்தது. நானும் என் மனைவியும் சண்டையிட்ட உரத்த குரலும், சமரசமாகி சன்னமான குரலும் கேட்டுக்கொண்டிருந்தது. என் பார்வைக்குக் கிட்டாத அறைகளும் சமையலறையும் கண்டிப்பாய் முன் போல இருக்காது என்ற உணர்வு என்னை என்னவோ செய்தது. முதல் முதலாய் நான் வாங்கிப்போட்ட தொலைக்காட்சி இருந்த இடத்தை அலமாரி ஒன்று போடப்பட்டிருந்தது. சன்னல்கள் திரைத்துணியற்று அம்மணமாய் இருந்தது. சில சன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தன. நாங்கள் பூசிய பச்சை சிமிந்துத் தரை நிறமிழந்து கிடந்தது. நான் காலாப்பூர்வமாகத் திட்டமிட்டு  நேர்த்தியாக வைத்திருந்த வரவேற்பறை சீர்குலைந்து கிடப்பதைப்   பார்க்கப் பார்க்க எனக்கு வீட்டுக்காரரின் மேல் கோபம் வர ஆரம்பித்தது. என் அதிகாரத்துக்கு என் முன்னால் வீடு இலக்காக முடியாது என்று சுதாரித்துப் பழைய நிலைக்கு வர சற்று நாழியானது. வீடு இப்போது கைமாறிவிட்டாலும் ஆழ்மனத்தின் ஒரு ஓரத்தில்  வீட்டின் உரிமைகாரன் நான்தான் என்ற எண்ணத்திலிருந்து கழன்று கொள்ள சற்று நேரம் பிடித்தது.
   அந்த வீடு நானே திட்டமிட்டுக் கட்டியவீடு. வீட்டின் உட்புற வடிவமைப்பு, வெளிப்புறத் தோற்றமும் நானே வடிவமைத்தேன். எனக்காக ஒரு வீட்டை கட்டும்போது மனதுக்குள் நீண்ட நாளாக வடிவமாகிய திட்டம் அதில் நிறைவு கண்டிருந்தது எனக்கு பேரானந்தத்தை அளித்திருந்தது.
     அந்த வீட்டை விற்று விட்டு வெளியேறும் நாளில் நான் ஆழ்ந்த துயரத்தில் இருந்தேன். வீட்டுப் பொருட்களை லாரியில் ஏற்றிவிட்டு காலியான் வீட்டைப் பார்க்க மனம் ஒப்பவில்லை. வீட்டை விற்ற  பணம் கைக்கு வந்து சேர்ந்திருந்தாலும் , மனம் என்னவோ வீட்டை விட்டுக் கிளம்பத்தயாராயில்லை! கிட்டதட்ட கண்ணீர் விட்டுக் கதறி அழுதுத் தீர்த்திடவேண்டும் போல இருந்தது. விற்றுவிட்ட பிறகு வீடு எனக்குச் சொந்தமில்லை என்றாலும் , என் இருப்பு வீடெங்கும் எஞ்சியிருப்பதாகவே பட்டது. என் உடல்தான் வெளியாகிறதே தவிர என் ஆன்மா வீட்டின் எதையோ ஒன்றைப் உடும்பைப்போலப் பற்றிக்கொண்டு என்னோடு வர மறுத்தது.
    வீட்டை விட்டு நிரந்தரமாகக் கிளம்புவது தொடர்பாக கவிஞர் வைரமுத்து கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் ஒரு பாடலை எழுதியிருப்பார். ஒரு தீராத சோகம் அதில் இழையோடிக்கிடக்கும்.

மண்ணே போய்வரவா
மாமரமே போய்வரவே
அண்ணே போய்வரவா
அழுது போய்வரவா
     ஒருமுறை என் எழுத்து நண்பர் ஒரு பினாங்கு வீட்டை விற்று வ்¢ட்டு கோலாலம்பூருக்குக் குடிவந்து விட்டதாகச் சொன்னபோதும் நான் குடிபெயர்ந்த சோக நாள் நினைவுக்கு வந்தது. பினாங்கு மலேசியாவிலேயே மிக அழகான ஊர். கடற்கறை , தூய காற்று , சாலை நெடுக்க கிளை மண்டி வளர்ந்த மரங்கள். நேர்த்தியாக அடுக்கப் பட்ட கட்டடங்கள், நெரிசலற்ற கார் பயணம், பல வகையான சுவை உணவு - என அணைத்தையும் விட்டுவிட்டு, கோலாலம்பூர் போன்ற மனிதர்களும், கார்களும், வீடுகளும் அடர்ந்து கிடக்கும் நெரிசலான பட்டணத்துக்கு ஏன் செல்லவேண்டும் என்ற பரிதாபம் எண்ணம் அவர்மீது தோன்றியது.
     நாம் பல காலம் குடியிருந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவது அவ்வளவு எளிதானதல்ல. வீட்டை விற்றால் பணம் கிடைக்கும். பணம்கிடைத்தால் இன்னொரு வீட்டை வாங்கிக்கொள்ளலாம் என்ற மகிழ்ச்சி வீட்டைக் காலி செய்யும் தருணத்தில் முரண்படுகிறது. ஏன் இந்த வீட்டை விற்க வேண்டும்? வீடு என்ற புறப்பொருளைத் தவிர வீட்டுக்குள்ளும். வீட்டுக்கு வெளியேயும் நம் இருப்பு நிதர்சனமானது. நாம் புழங்கிய இடம்,  நாம் கால் தடங்கள்  என அனைத்தும் ஒரு நிழைலைப்போல நிரந்தரமாய் அங்கே சேகரமாகிக்கிடக்கிறது. நம் குரல் சதா சுவற்றில் மோதி எதிரொலித்த வண்ணமிருக்கிறது. அந்த நினைவுகளிலிருந்து எளிதில் தப்பிவிட முடிவதில்லை! இனம் புரியாத சோகம் இதயமெங்கும் கனக்கத் துவங்கிவிடுகிறது.
     சிங்கப்பூர் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஒர் அறையில் தங்கி ஒரு இரவு முழுதும் நண்பர்களோடு  பேசி மறுநாள் விடைபெற்றபோது எனக்குள் ஒரு கவிதை ஒலித்தது.
     விட்டுப்பிரியும்
     நண்பர்களைவிடவும்
     அறையில்
     மிதந்து கொண்டிருக்கும்
     அந்த உரையாடல்களை.....

நண்பர்களைப் பிரிவது சோகமானதுதான். ஆனால் அந்த அறை நாங்கள் பேசுவதை மௌனமாக உள்வாங்கிக்கொண்டு நான்கு சுவர்களுக்குள் மோதி ஒலிக்கத் துவங்கி விட்டது போன்ற உணர்வு உண்டானது. எங்களின் சிரிப்பு, கோபம், வெறுப்பு இவை எல்லாவற்றையும் தன்னுள் வைத்துக்கொண்டுதானே எங்களை வெளியேற்றுகிறது. அப்படியானால் எங்களின் ‘சொச்சம்’ அதனுள் மிதந்தபடிதானே இருக்கிறது!
   
     கவிஞர் மகுடேஸ்வரனும் தன் வீட்டை காலி செய்திருப்பார் போலும்.
  
     வாழ்ந்து கெட்டவனின்
     பரம்பரை வீட்டை
     விலைபேசி முடிக்கும் போது
     உற்றுக்கேள்
     கொல்லையில்
     சன்னமாக எழும்
     பெண்களின் விசும்பலை

முடிவுரை
நான் எழுதிய இந்த 20 தொடரில் நவீனக் கவிதைகளை அறிமுகப்படுத்த முயன்றிருக்கிறேன். கவிதைகளின் உள்ளீடும் புற வடிவமும் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு வடிவத்தில் சொல்ல வெண்டிய பாடுபொருளும் உத்தி முறைகளும் சொல்லி முடித்தவிட்ட பிறகு புதிய கவிதை வடிவம் தன்னிச்சையாகவே இடம் பிடித்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. 1964 தமிழகத்தில் புதிய வீச்சோடு புறப்பட்ட புதுக்கவிதை மலேசியாவில் 72வாக்கில் அறிமுகமானது. அந்த வடிவம் இன்றைக்கு நிறம் மங்கி வலுவற்று விட்டது. பழைய எழுத்து நடையிலேயே சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லிச் சலிப்பை ஏற்படுத்தி விட்டது. ஒரே சட்டையை எத்தனை நாளைக்குத்தான் அணிந்து கொண்டிருப்பது? புதிய சட்டை அணிந்துகொள்ளும் போது நாம் புதிய தோற்றத்தை அடைகிறோம், புதிய தெம்பைப்பெறுகிறோம்.
நவீன கவிதைகள் மலேசியப் படைப்புலகக் கதவைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. நாம் திறக்க மறுக்கிறோம். மிகச் சொற்பமான  கவிஞர்களே இதனை எழுதிப் பார்க்கிறார்கள். பலர் புதுக் கவிதைகளையே மறுபடி மறுபடி எழுதி வருகிறார்கள். நவீன கவிதை எழுத முற்படவேண்டும். புதுக்கவிதை புறத்தைப் பாடிக்கொண்டிருந்தது. நிலப் பிரபுத்துவம், சுரண்டல், பெண்ணியம், ஆணாதிக்கம் போன்ற பாடுபொருளை முன்னீடாகக் கொண்டது புதுக்கவிதை.  நவீனக் கவிதை அகத்தைப் பாடிக்கொண்டிருக்கிறது. அது ஒரு கவிஞனின் அகவய மனத்தின் உள்ளக்கிடக்கையை முன் வைக்கிறது.  உள் மனப் புறப் பாடாக இருப்பதால் நவீனக் கவிதைகளை மோலோட்டமான வாசிப்பில் உள்வாங்கிக்கொள்வதில் சிரமம் உண்டாகும். கவிஞன் என்ன சொல்ல விழைகிறான் என்பதில் புரிதல் ஏற்பட மறுமுறை வாசித்தாக வேண்டும். இரண்டாவது வாசிப்புக்கு உட்படும்போது பொருளில் சிறு உடைப்பு ஏற்பட்டு கவிதை புரிய ஆரம்பிக்கும். மேலும் வாசிக்க வாசிக்க அதன் படிம அழகில் நாமும் இன்புறுவோம். சங்க காலக் கவிதைகள் புரியாமல் போனது மறுவாசிப்புக்கு உட்படுத்தாத காரணத்தால்தான். எனவேதான் சங்க காலக் கவிதைகளுக்குப் பின்னாளில் விளக்கவுரை எழுதினார்கள். நவீன கவிதையும் அதே காரணத்தால் புறந்தள்ளப்படுகிறது. புதுக்கவிதைக்கு வழங்கிய அதே வரவேற்பு நவீனக் கவிதை பெறத்தவறிதானது இலக்கியத்துக்கு நேர்ந்த மிகப்பெரிய இழப்பாகும்.
     புதுக்கவிதைகள் பெரும்பாலும் குறியீட்டு உத்தியைப் பயன்படுத்தியது. நவீனக் கவிதைகள் படிமத்தைப் பிடித்துக்கொண்டன.(இரண்டு வகையிலும் குறியீடும் படிமமும் உண்டுதான்) அகவயமக சிந்தித்து எழுதும்போது படிமக் கூறுகள் மேலோங்கி நிற்கும். நான் மேற் சொன்ன மூன்று கவிதைகளும் படிமத்தில் இயங்குபவை.
   என் அனுபவத்தைச் சார்ந்த கவிதைகளையே என் கட்டுரையில் நான் முன்வைத்திருந்தேன். கவிதைகள் படைப்பாளனின் அனுபவம் சார்ந்தே ஒலிக்கும். வாசகனுக்கு அந்த அனுபவத்துக்கு ஈடான சம்பவம் நிகழ்ந்திருந்தால் , கவிதையைப் புரிந்து கொள்வதில் சிக்கல் உண்டாகாது. ஒரே மாதிரியான அனுபவம் நிகழவில்லையென்றாலும், கவிதைகளை வாசித்துப் பழகியிருந்தால் புரிதல் எளிதில் உண்டாகும். இந்த வகைக் கவிதைகள் எனக்குப் புரியாது என்ற உங்கள் முன்முடிவால், கவிதை உங்களை ஒதுக்கித் தள்ளி ஓரத்தில் விட்டு விட்டு, அது பாட்டுக்கு பயணப் பட்டுக்கொண்டே இருக்கும்.

                                                          




Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின