Skip to main content

எல்லையற்ற பரிவு

  அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்
                     

 

     என் அம்மாவை ஐம்பத்தைந்து வயதில் வேலையை விட்டு நிறுத்தியிருந்தார்கள். அம்மா அப்படியொன்றும் அலுவலக வேலையில் நான்கு இலக்க சம்பளம் எடுத்தவரில்லை. தோட்டப் பாட்டாளியாக ‘மம்மட்டி’ வேலை செய்து வந்தார். அவர் வேலையிருந்து நீக்கப்பட்ட நாளில் அம்மாவின் முகத்தில் ஆழமான துயரம் படிந்திருந்தது. அந்த இக்கட்டான தருணத்தில் நாங்கள் நான்கு பேர் படித்துக்கொண்டிருந்தோம். பட்டணத்துக்குப் போக வர கட்டணச்செலவு ,  மாதந்தோறும் கட்டவேண்டிய பள்ளிக்கட்டணம், வீட்டுச்செலவு என ஒரு பசி தீரா அரக்கனைப்போல அம்மாவின் சம்பளத்தையே விழுங்கிக்கொண்டிருந்த வேளையில் வயது காரணமாக ‘நோட்டீஸ்’ கொடுக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகி இருந்தது. எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்றா புதிரான வினாவே அம்மாவின் முகத்தில் கூடுதல் சோகத்தை பதித்திருந்தது. அம்மா நின்ற பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே அப்பா வேலையில்லாமல்  போயிருந்தார். அம்மாக்குக் கொடுக்கப்பட்ட சொற்ப கிராஜுவிட்டியிலும், இன்னும் வந்து சேராத ‘பண்டு பணத்திலும்’ கொஞ்ச நளைக்கு வாழ்க்கையை ஓட்டலாம் என்ற கடுகளவு துளிர்ந்திருந்த நம்பிக்கை மட்டுமே அப்போதைக்கு. அதுவும் தீர்ந்து போனால் என்னாவது என்ற அழுத்தம் அம்மாவின் பேச்சிலிருந்து வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. யாரும் தோட்டத்தில் வேலை செய்யாத பட்சத்தில் வீட்டைக் காலி செய்திடவேண்டும் என்ற சட்ட அமலாக்கம் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி கடைபிடிக்கும் தோட்ட நிர்வாகதிடம் , பண்டு பணம் வந்தவுடன் வெளியாகி விடுகிறேன் என்ற உறுதிதான், கொஞ்ச நாள் அதே வீடு எங்களுக்கு தற்காலிக அடைக்கலமாக காரணமாயிருந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டை நிரப்ப யாரும் இல்லாது போனதாலே இந்தச் ‘சலுகை’. வாழ்க்கை முழுதும் முதலாளித்துவத்தால் சுரண்டப் பட்டதில் குடியிருக்க வீடு கூட மிஞ்சவில்லை என்பது அதிகாரத்துவத்தின் நிதர்சனம்.
        வேலையிழந்து ஓரிரு நாட்கள் வீட்டிலிருந்த அம்மா, ஒரு நாள் விடிகாலையில் மண்வெட்டியைத்தோளில்  சுமந்துகொண்டு வீட்டைவிட்டு கிளம்பிக்கொண்டிருந்தார்.
   பள்ளிக்குப்போகத் தயாராகிக்கொண்டிருந்த நான் “என்னாம்மா பழைய நெனப்பா என்றேன்”
   “இல்ல கொங் சி கமபத்துல வேல இருக்காம். என்ன கூப்பிட்டாங்க,” என்றார்.
   கொங் சி தோட்டம் எங்கள் தோட்டத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரமிருக்கும். செம்மண் சாலையிலிருந்து தார் சடக்குக்கு ஏறி குறைந்தது இரண்டரை கிலோ மீட்டர் நடந்தால் கொங் சி தோட்டத்தை அடையலாம். இரண்டு மணிக்கு வரும்போது தார் சடக்கில் வெயில் வானத்தைப்போல பரந்து விழுந்துகிடக்கும். தார் சடக்கிலிருந்து பாயும் வெயில் கருணையற்ற வெப்பத்தை முகத்தில் அள்ளித்தெளித்த வண்ணமிருக்கும். வெறும் காலில் நடப்பதென்பதெல்லாம் தீமிதிக்கு ஈடானது. குறைந்த பட்சம் சைக்கில் ஓட்டும் பழக்கம் கூட இல்லாது , தன் கால்களையே முழுதாய் நம்பிக்கொண்டிருந்தவர்தான் அம்மா. அவளின் மூப்பேறிய பருவத்திலும் உழைக்கவேண்டும் என்ற குடும்பச் சூழல் அவளை வெயிலுக்குள் விரட்டியவண்ணம் இருந்திருக்கிறது. இப்படி எல்லாவற்றையும் நினைத்துப்பார்க்கும்போதே என் உடலில் உச்சி வெயில் தீக்கனல் , ஒரு பசித்த ஆடு பச்சைப்புல் தரையைக் கண்டதும் ஓடிப்போய் மேய்வது போலிருந்தது. அம்மா வேலைக்குப் போகவில்லையென்றால் கொஞ்ச நாளில் பசித் தீ வயிற்றில் பற்றிக்கொள்ளும். இருப்பினும் ,
     ”ஏம்மா வேலைக்குப் போறீங்க, வீட்ல இருங்கம்மா” என்றேன்.
    “ வீட்ல இருந்தா, வீடு சோறு போடுமா?”
    “இந்த வயசுலயும் வேலக்கிப் போனுமா?,”
   “ ஒடம்புல சத்தி இருக்கிற வரைக்கும் ஜீவன்கள காப்பத்த ஒலைக்கத்தாண்டா வேண்டும்” என்றார். உழைக்கும் வர்க்கத்தின் பிரநிதியாகவே அம்மா தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டிருந்தார்.
    நான் மறு பேச்சு பேச முடியவில்லை. அம்மா மண்வெட்டியைத் தோளில் சுமந்து, முதல் நாள் மீந்த பழைய உணவை பொட்டலம் கட்டிக்கொண்டு செம்மண் சடக்கில் நடக்கத் தொடக்கினார்.  அதனைக் கையாளாகத்தனத்தோடு பார்க்க மட்டுமே முடிந்தது என்னால். கீழ்வானத்தில் இன்னும் இருள் விலகியிருக்கவில்லை. அன்று மனம் வெகுவாய் கனத்தது. சமத்தாய்ப் படித்து அம்மாவைக் காப்பாற்ற வேண்டுமென்ற கங்கணம் மட்டுமே மனதில் மெழுகு தீபத்தைப்போல சலனமற்று அசைந்து அசைந்து எரிந்து கொண்டிருந்தது.
   அம்மா கொங் சியிலிருந்து வேலையை விட்டு வருவதற்கு முன்பே நான் பள்ளி விட்டு வந்துவிட்டிருப்பேன் . மணி இரண்டைத்தாண்டியிருக்கும். வெயிலின் உக்கிரம் உச்சத்தைத்தொட்டிருக்கும். அம்மா நடந்து தானே வருவார் என்று கரிசனையோடு , சைக்கிளை எடுத்துக்கொண்டு கொங் சீயை நோக்கி மிதிக்கத்தொடங்குவேன். பாதி தூரம் போனவுடன் அம்மா மேடும் பள்ளமும் நிறைந்த தார் இளகும் சாலையில் நடந்து வந்து கொண்டிருப்பார். வெயிலின் தீராத சினத்திலிருந்து  பாதுகாக்க , தாவனியை தலைக்குமேல் இட்டு நடந்து வருவது மனதில் தீராத வலியை உண்டாக்கும் தினசரி நிகழ்வு அது. அதிலும் என்னைப்பார்த்தவுடன் , “ஏண்டா வேகாத வெயில்ல வர்ர,” என்ற  வார்த்தைகள் தாய்மார்களுக்கே உரித்த கரிசன உணர்வோடு ஒலிக்கும். அவர் பின்னால் உட்கார்ந்து வர நான் சைக்கிளை மிதிக்கத் தொடங்குவேன். மேடான பாதையில் நான் நின்று மிதித்து மூச்சுவாங்கும் போது ,”நான் எறங்கிறய்யா” என்பார்.
    நான் படித்து ,வேலை செய்து அம்மாவைப் பேணிகாக்க வேண்டுமென்ற என் கனவு கடைசி வரை பலிக்கவே இல்லை. என் கை நிறைந்த சம்பளத்தை அம்மா கண்களால் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் ஈடேறவே இல்லை. அவலக்கண்ணீரை ஆனந்தக்கண்ணீராய் மாற்றும் உபாயம் உண்டாவதற்கு முன்பே அம்மா மறைந்துவிட்டிருந்தார்.
    அம்மாவின் நினைவுகளைச் சதா ஏந்திச்செல்லும் சில கவிதைளைப் படைத்திருக்கிறார் நம்மூர் பா.அ.சிவம். சிவம் மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்திய புதுக்கவிதைக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். பள்ளிப்பருவ பால்மாறா முகத்தோடு கருத்தரங்குக்கு வருவார். உன்னிப்பாக கவனிப்பார். கவிதா தாகத்தோடே நிகழ்வுகளில் பங்கு கொள்வார். அப்போது ஏற்பட்ட பழக்கம்தான் பா.அ.சிவத்தோடு எனக்கு. பல்கலைக்கழகத்தில் படிக்கும் நாட்களில் அவர் வடிக்கும் கவிதைகள் மிகுந்த முதிர்ச்சி பெற்றதாக இருந்தது. தனித்துவ பார்வையில் அழகிய சொல்லாடலில் தொனிக்கும். அவருடைய கவிதை செய்யழகு  அவரை அடயாளம் காட்டத் தவறவில்லை.
   அம்மாவைப்பற்றிய நினைவுகளை குறியீட்டுத் தன்மையோடும் , படிம நேர்த்தியோடும் மௌனம் கவிதை இதழில் சிவம் எழுதிய ஒரு கவிதை இதோ.

  சிவப்புகோடு இடையிடையே
  மஞ்சள் புள்ளி போட்ட
  அம்மாவின் சேலை
  முதலில்.......
  எங்கள் வீட்டில்
  திரைச்சீலையானது......
 
  அதன் வண்ணம்
  கொஞ்சம் உதிர்ந்த பின்னர்
  மேசை விரிப்பானது.....

  திருமணமாகி நகரில்
  குடிபெயர்ந்த பின்னர்
  புதிய வாழ்க்கையோடு
  வந்துவிட்ட
  அம்மாவின் அந்தச் சேலை
  இறுதியில்
  கரித்துணியானது......

  கசங்கிக் கிழிந்து நைந்துபோன பின்னரும்
  அம்மாவின் வாசம் மட்டும்
  அகலாமல்
  வாழ்வோடு வாழ்வாய்
  வாழ்ந்து கொண்டிருக்கிறது
  அம்மாவின் சேலை......
அம்மா நம் வாழ்வின் மிகப்பெரிய ஆகிருதி.  ஆயிரமாயிரம் நிகழ்வுகளைக் கடந்து வாழ்வு நகர்ந்து கொண்டிருந்தாலும், அம்மாவின் நினைவு கர்ணனின் உடலோடு ஒட்டிப்போன கவச குண்டலம்போல அகலாமலேயே இருந்துவிடுகிறது. தன் தர்மத்துக்கு இழுக்கு நேராமல் இருக்க தன் கவசத்தைக் கர்ணன்  கிருஷ்ணனுக்கே  கழட்டிக்கொடுத்து தன் தியாகத்தை நிறுவியதுபோல , தன் கலங்கமில்லா அன்பைத் தன் பிள்ளைகளிடம் விட்டுச்சென்று விடுகிறாள் தாய். இக்கவிதையின் குறீயீடு தாயன்பை அழகாக நிறுவுகிறது.
 
 

 


  

Comments

Sebastian said…
இந்தக் கவிதையை மேலும் ஆழமாய் புரிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி சார்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த