Skip to main content

நிராகரித்தலும், நிராகரிக்கப் படுதலும்-

பிச்சைப் பாத்திரம் கதை ஒரு பார்வை

                    

       பாவையின் ‘பிச்சைப் பாத்திரம் சிறுகதை மலேசியாவில் அரிதாக சொல்லப்படும் கதை வகைமையில் ஒன்று. ஏறத்தாழ துறவறமே இல்லறத்தைவிட மேலானது என்று சொல்ல வந்த கதை. கிட்டதட்ட 100 விகிதம் நடைமுறை  வாழ்க்கையையைத் திரும்பத் திருமப படம்பிடித்துக்காட்டும் வரட்சியான கதைக் களத்திலிருந்து சற்று விலகி துறவு பற்றிப்பேச வந்ததை சற்று ஆறுதல் தருகிறது. அதற்காகப் பாராட்டுகள்.

       ஏகபோக சொத்துக்கும் அதிபதியாகப் போகிறவனின் மகன்  துறவறத்தில்தான் தான் முழுமையடைவதாகச் சொல்வதை நிதானமாக , சொற்ப வார்த்தைகளுக்குள் சொல்வது வாசகமனத்தை கவர்கிறது. ஆனால் மகன் துறவறம் மேற்கொள்வதற்கான பின்புலக் கற்பிதம் எங்கேயும் காட்டப் படவில்லை. வாசகனே இட்டு நிரப்பிக்கொள்ளட்டும் என்று வெற்றுக்கோடுகளை விட்டிருக்கலாம் கதாசிரியர் .ஆனாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லியே இருக்கவேண்டும் .இட்டு நிரப்புவதற்கான வெற்றுக்கோடுகள் கதையில் காணவில்லை. மகன் மெய்ஞ்ஞானத் தேடலுக்குள் நுழைந்து விட்ட பின்புலம் இன்னொரு கதையாக நீண்டுவிடுமோ என்று நினைத்து கவனமாகத் தவிர்த்திருக்கலாமோ என்னவோ? தெளிவாகக் காட்டியிருந்தால் கதை மேலும் வலுவாகியிருக்கும்.

      பணமும் புகழும் புரளும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்தவன்  சந்தடி சத்தமில்லாமல் துறவறத்துக்குத் தாவுவது சாத்தியாமா என்ன? எங்கிருந்து கிடைத்தது அந்தத் திடீர் மெய்ஞ்ஞான ஒளி?

       நொடி நேரம் கூட விரையமாக்காமல் வணிகம் வணிகம் என்றே உழன்று, கோடிக்கனக்கான சொத்துக்கு அதிபதியானவர் தன் மகனின் ‘மெய்ஞ்ஞானத் தேடல் ’ குறித்து கவலையுறுகிறார். அதிலிருந்து அவனை மீட்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கும் நிலை கதையில் நிறைவுற காட்சிப்படுத்தப் படுகிறது. தன்னுடைய வாகன ஓட்டுனரின் சொற்கள் இடைச்செருகளாவதுதான் கொஞ்சம் உறுத்துகிறது. தன் எஜமானரின் மனச் கிலேசங்களை உன்னித்தவர், இப்போதுள்ள இளைஞர்கள் வன்மமான முறையில் தங்கள் வாழ்க்கையை விணாக்கிக்கொள்கிறார்கள், அதற்கு உங்கள் மகனின் மெய்ஞ்ஞானத் தேர்வு வாழ்வு, எவ்வளவோ மேல் என்று கூறியதும் எஜமானருக்கும் அவர் சொல்வது சரிதான் என்ற வெளிச்சம் கிடைக்கிறது .. இது மிகச்சாதாரண கருத்து. மகனை மீட்டெடுக்க வகையறியாமல் தவிக்கும் மனத்துக்கு இந்த வசனமே அவரின் சிந்தனையை வழி மறித்து புதிய தெளிவைக்காட்டுவதாகச் சொல்லி முடிக்கிறார். மகனைப் ‘பறிகொடுத்தவர் – அவனை மீட்கும் உபாயத்துக்காக்ச் சிந்தித்தவர் அர்ச்சுனரை மீட்க உபதேசம்  சொல்ல வந்த கண்ணனாக கார் டிரைவரைக் காட்டுகிறாரா என்ன? எல்லா சாரதிகளும் பார்த்தசாரதியாகிவிட முடியுமா என்ன?

      பரம் என்ற பாத்திரம் இக்கதைக்குள் நுழைகிறது . இது ஈரிழையில் இயங்கும் கதை யென்றாலும் ஒரு கதைப்பொருளையே சொல்ல வந்த சிறுகதை. இந்த உத்தியில் கதை சொல்ல முயன்றதற்கும் பாராட்டுகள்.. ஓவியத்தில் இதனை கோலாஜ் முறை என்று சொல்வார்கள். ஆனால் பரமு தெருவுக்குத் தள்ளப்பட்ட நிலையையும், கோடீஸ்வரனின் மகன் பிச்சைப் பாத்திரத்தை தானே முன்வந்து ஏற்றுக்கொண்ட நிலையையும் கொஞ்சம் ஒப்பீட்டு நோக்கில் பார்க்கத்தான் வேண்டும். பரம் நிராகரிக்கப் பட்டிருக்கிறார். விளிம்பு நிலை வாழ்க்கைக்குள் வலிந்து தள்ளப்பட்டவர். ஆனால் பணம் படைத்தவனின் மகன் மெய்ஞ்ஞானத்தேடலை தானே விரும்பி ஏற்றுக்குக்கொண்டிருக்கிறார். வாழ்வு சூரையாடப் பட்டு நீராகரிக்கப்பட்ட ஒருவரின் கதையும், லௌகீக வாழ்வை நிராகரித்துவிட்ட இன்னொருவரின் கதையும் இறுத்திப்புள்ளியில் –ஒட்டியதா என்று தெரியவில்லை. ஆனால் முயன்றிருக்கிறார்.

   கதையில் சமிக்ஞை விளக்கைக் குறியீடாகக்காட்டுவது கதை நிகழ்தலுக்குள் ஒன்றி விடுகிறது.

   கதை சொல்லும் கலை பாவைக்கு எப்போதுமே சீராகவே வருகிறது. இக்கதையும் அதற்கொரு சான்று.

    இது என் பார்வை மட்டுமே.

    கதை எழுத முன்வரும் புதியவர்களையும்  கை நீட்டித் தூக்கிவிடவேண்டும் என்ற தார்மீகச் நோக்கத்துக்காகவே இதனை எழுதுகிறேன். நீதிபதிகளின் நடுவு நிலைக்கும், என் கலா ரசனைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற தினக்குரலின் முடிபுக்கு நானும் ஒத்த கருத்துடையவன்-அவ்வளவே.











.


Comments

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...