Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம் - முத்தம் 9

காலையில் கேட்ட கோயில் மணி ஓசை -முத்தம் 9

 காலையில் எங்களைத் துயில் எழுப்பியது மணிஓசை. அது பரந்து விரிந்த ஒலி.அந்த ஓசை ரோம் நகரெங்கும் ஒலித்திருக்கவேண்டும். என்ன ஓசையாக இருக்கும் என்று தேடியது மனம். ஏழெட்டுமுறை ஒலித்த அந்த மணி ஓசை ஏதோ கோயில் மணியாக இருக்கலாம்.

ரோமில் நாங்கள் தங்கியிருந்த விடுதியின் பெயர் மஸ்சாலா விடுதி. மஸ்சாலா என்ற பெயர் எங்கள் பசியைக் கிளப்பிவிட்டது.பார்சிலோனா  விமான நிலையத்திலிருந்து ரோமில் இறங்கி , பேருந்து பிடித்து விடுதி வந்து சேரும் வரை ஒன்றுமே உட்கொள்ள வில்லை. நாங்கள் விடுதியை அடையும் போது பின்னிரவு மணி 1.30. நான் மீண்டும் கீழே இறங்கி உணவு வாங்கப் போனேன்.  மெக்டனால்ட்ஸ் திறந்து இருந்தது. அங்கே பணியில் இருந்தவன் அதிக நேரம் வேலை செய்த கடுப்பில் என்ன வேண்டும் என்று குரலை உயர்த்தினான். நான் இந்த துரித உணவுக்கடைக்கெல்லாம் போனதில்லை. நமக்கு மசாலா உணவுதான் பிடிக்கும். எனவே எதனைத் தேர்வு செய்வதென்று புரியவில்லை. நான் மலங்க மலங்க விழிப்பதைப் பார்த்து அவர் வேறு நபரின் தேவைக்குச் சென்று விட்டான். ஏதோ வாங்கி வந்தேன்.

ரோம் நகரம் உலகின் முக்கிய புராதன நினைவிடங்களில் ஒன்று. உலகெங்கிருந்தும் மக்கள் கூடுமிடம். பட்டணம் சுற்றுப்பயணிகள் நெரிசலில் திணறிக்கொண்டிருந்தது.
ரோமில் கட்டடட அமைப்பு வித்தியாசமாக இருந்தது. உலகில் ரோம்தான்   ஓவியம் கட்டடக்கலை சார்ந்த நாகரிகத்துக்கு முன்னோடி. பட்டணத்தைக் கடந்து செல்லும்போதே அதன் வடிவமைப்பு நம்மை பழங்காலத்துக்கு இழுத்துச் செல்கிறது. புதிய கடைத்தெர்க்கள் கூட பழங்கால கட்டட அமைப்பிலேயே நிர்மானிக்கப் பட்டிருந்தது. ஏதோ ஒரு 500 ஆண்டுகள் பின்னால் டைம் மிஷினில் பயணமான அனுபவத்தைக் கொடுக்கிறது அதன் அமைப்பு முறை. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய கட்டடங்களைகூட இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். ரோம் என்று சொன்னவுடன் நமக்கு புராதன கட்டட அமைப்புதானே நினைவுக்கு வருகிறது

நகரைச் சுற்றிப்பார்க்க ஒரு நபருக்கு 39 யூரோவுக்கு டிக்கட் கிடைக்கும். கிட்டதட 156 மலேசிய செலவாணி.  வேறு வழியில்லை வாங்கத்தான் வேண்டும். மலிவாகச் சுற்றவேன்டுமென்றால் சைக்கிலை வாடகை எடுக்கலாம். சைக்கிலை வாடகை எடுத்தால்  இருக்கும் சுமை போதாதென்று சைக்கில்இன்னொரு சுமையாகி கனக்க ஆரம்பித்துவிடும். மனைவி சைக்கில் ஓட்டியது அவள் பள்ளி நாட்களில்தான். எனவே வேலியில் போற ஓணானை வேட்டியிலா ஏற்றிவிடுவது?

எல்லா இடத்துக்கும் கொண்டு செல்கிறது. ஆனால் ஓரிடத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு பேருந்து நிலையத்துக்கு வந்தால் எண்ணற்ற பயணிகள் காத்துக்கிடக்கிறார்கள். வரிசை நிரல் படிதான் பேருந்தில் இடம் கிடைக்கும். நேரமாகும். அடுத்த இடம் பார்ப்பதெப்படி? பல பயணிகள் எங்களை பேருந்தில் ஏற்றும் பணியாளிடம் சண்டையிட்டனர். ஏன் கணக்கில்லாமல் டிக்கட் விற்றீர்கள் என்பதே அவர்கள் கேள்வி. அவன் இது என்னைக் கேட்க வேண்டிய கேள்வியல்ல என்று கைவிரித்தான்.அவன் ஒரு வங்காளதேசி. சுற்றுப்பயணத் துறையில் எடுபிடி வேலயை அவர்கள்தான் செய்கிறார்கள். அங்கே பல மொழி பேசக் கற்றுக்கொள்கிறார்கள்.ஆங்கிலம் சரளமாக வருகிறது-வயிற்றுப் பிழைப்பு!

ஆனால் பலர் நடமாடி ,கூவிக் கூவி , நம்மைப் பின் தொடர்ந்து சுற்றுலாத் தள அடையாளங்களின் நினைவுப்பரிசை விற்கிறார்கள். அதுதான் அவர்கள் பசியைத் தீர்க்கும் போல. ஆயிரக் கணக்கான வங்காளதேசிகள், எல்லா சுற்றுலா முனைகளிலும் பொருட்கள் விற்கிறார்கள். இப்பொருட்களுக்கான முதலீடு இவர்களின் முதலாளிகள் போட்டது. இவர்கள் கதை பரிதாபமானது.
வேலை தருகிறேன் என்று அவர்கள் நாட்டிலிருந்து அழைத்துவந்து  உறுதியளித்தவர்களால் கைவிடப்பட்டவர்கள் இவர்கள். நாட்டில் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச சொத்தையும் விற்று மனைவி பிள்ளைகளை விட்டு இப்படி இங்கே நிர்வாதரவானார்கள்.

நாங்கள் போய்ப்பார்த்த முதல் இடம் வெட்டிக்கன் சிட்டி. அது ஒரு தனி நாடு என்ற பெயர் பெற்றது. பெரும் பட்டணத்துக்குள்ளே உள்ள நாடு. எவ்வளவு முரண்? எத்தனை பெருமை.? ரோமன் கெத்தலிக் கிருஸ்த்துவர்களின் பெரும் பேறு தரும் இடம் இது.போப்பாண்டவர் குடியிருக்கும் இந்த தேவாலயம்  அகன்று விரிந்து பரந்து கிடக்கிறது. இது முழுக்காட்சியாக  எந்த வகைக் கேமராவுக்குள்ளும் பிடிபட முடியாது பெரும் தேவாலயம். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அலை மோதுகிறார்கள். தேவாலயத்தில் உள்ளே புக அனுமதியில்லை. அதன் வாசலை எட்டி இருந்தே பார்த்தோம். அதன் வளாகத்தில் படமெடுக்கலாம். தேவாலயத்தை நோக்கிப் போகும் நேர் சாலையில் தூர இருந்த பார்க்கும்போதே அதன் பிரம்மாண்டம் மலைக்க வைக்கிறது.போப்பாண்டவரைப் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர் ஆசி வழங்கும் உப்பரிகை தெரிந்தது. அது போதும். அல்லா என்ற சொல்லை முஸ்லீம்கள் தவிர பிறர் உப்யோகிக்கலாகாது என்ற மலேசிய பாசிச அரசியல் கோளாறுக்குக் குரல் கொடுத்த போப்தான் இப்போது அரியணையில் இருக்கிறார். கடவுள் இருந்தால்தானே மதமும் , மதம் கொண்ட மனிதர்களும் அமைகிறார்கள். கடவுள் இருப்பு பொய்யானது என்ற நாத்திகக் கருத்து நிலவும் போது மதம் சார்ந்த சண்டைகள் இருக்காதுதானே. அதனால்தான் முற்போக்கு கோட்பாட்டாளர்கள் நாத்திகக் கருத்தாக்கத்தை முன்னெடுத்தார்கள். அந்தக் கருத்தாக்கத்தை மிகத் தீவிரமாய் முன்னெடுத்த கடைசி தமிழர் பெரியார். ஆனால் அது மிக சிறிய அறிவுலகம். நவீனச் சிந்தனைப் பக்கம் இழுக்க முடியாத பெருங்கூட்டமே இந்த மதம் சார்ந்த பூசலுக்குக் காரணம்.


நாங்கள் வெட்டிக்கன் சிட்டியை விட்டு வெளியேறும்போது மீண்டும் காலையில் கேட்ட மணியோசி ஒலித்தது. இப்போது மிக அருகில். அந்த ஓசை வெட்டிக்கன் சிட்டியின் தெய்வீக ஓசை.

அங்கிருந்து மீண்டும் பேருந்து நிலையத்துக்கு வந்து இத்தாலியின் புகழ்பெற்ற கொலிசியம்  போக வேண்டும். இங்கேதான் மனிதர்கள் நேருக்கு நேர் மோதவிடப்பட்டு , பின்னர் கொன்றவனே
வென்றவனென்று கொண்டாடப்பட்ட கொடுமை நடந்தது. முற்கால மன்னர்களின் பொழுதுபோக்கு இதுவாம். மெதுவாய்ச் சொல்கிறேன் இந்த ரத்தம் படிந்து இன்னும் காய்ந்து போகாத வரலாறை.

தொடரும்.....





Comments

சைக்கிள் சவாரி என்றவுடன் எனக்கும் உதறுகிறது. கிராமம் சுற்றிப்பார்க்க சைக்கிளில் சென்றால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று சொல்ல (வியட்நாமில்). பயணிகள் அனைவரும் ஆளுக்கொரு சைக்கிள் எடுக்க, என் வயது (<45), என் உடல்வாகு (<70kg) என எதையும் பொருட்படுத்தாமல் (ஒரு காலத்தில் சைக்கிள் சாம்பியன்.. உள்ளூரில். கம்பத்தில்)

நானும் ஒரு சைக்கிள் எடுத்து பிடலை மிதிக்க.. அது எங்கேயோ என்னை இழுக்க.. தொபுக்கடீர்ன்னு அங்கே ஒருவரின் வீட்டின் முன் இருந்த புத்த மாடத்தில் விழ, அந்த மாடத்தில் சில நில கிடுகிடுப்பு நிகழ... கால் முட்டி கைகள் என சிராய்ப்பு.. என்னாச்சு என்று பயணிகள் அனைவரும் ஒன்றுசேர கேட்க. சக்கிளில் கோளாறு, ஹெண்டல் ரொம்ப கெராஸா இருக்கு என்று சொல்ல.. அப்படியென்றல் சைக்கிள் மாற்றிக்கொள், என்று சொல்லி வேறொரு சக்கிளை என்னிடம் கொடுக்க.. நான் வைத்திருந்த சக்கிளை ஒரு ஐரோப்பியப்ப்பெண்மணி எடுத்துக்க, அவள், உல்லாச உலகம் உனக்கே சொந்தம் ஜல்சா ஜல்சா... என்று அதை மிக இலகுவாக மிதித்துச் செல்ல.. நான் பே’ன்னு வேடிக்கை பார்க்க.. !!

எதுக்கு வேலியில் ஓடுகிற ஓணானை வேட்டிக்குள் விடுவானே.!? என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு.. எனக்கு சைக்கிள் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டேன் :( இதைப் படித்தவுடன் சிரித்தும் விட்டேன்.. ஹாஹாஹா..

புகைப்படங்கள் தெளிவு. பயணங்களை முடித்த பிறகு, புகைப்பட கருவியில் பதிவாகியிருக்கின்ற புகைப்படங்கள் மிச்ச சொச்ச கதைகளைச் சொல்லும். ஆக புகைப்படங்களை எடுப்பவர்கள் பயணத்தின் போது மிக முக்கிய தரகராகக் கருதப்படுவார்கள். நாம் வியந்து காண்கின்ற காட்சிகளை, படமெடுப்பவர், அப்படியே கேமராவில் பதித்து பிடித்து வைத்துவிட்டால், பயணக் கட்டுரைகள் எழுதுகிறபோது, அக்காட்சி கூடுதல் சம்பவங்களை நினைவுக்குக் கொண்டுவரலாம்.. சிந்தனைகளை தட்டி எழுப்பும்.

அழகான தெளிவான புகைப்படங்களை எடுத்தவருக்கும் எனது வாழ்த்துகள்.

கட்டுரையும் எழுதி வரும் உங்களுக்கும் ஸ்பெஷல் வாழ்த்துகள் சார்.
ko.punniavan said…
படங்களை நான்தான் எடுத்தேன். 1000படங்களுக்கு மேல் உள்ளன. என் மகள் மருமகன் எடுத்த படங்களைச் சேர்த்தால் 2000 ஆகும். எல்லாவற்றையும் போட முடியவில்லை.போகிற போக்கில் (பேருந்தில்) எடுத்த படங்களும் உள்ளன.நீங்கள் சொல்வதுபோல படங்களே பின்னால் கட்டுரை எழுத உதவுகிறது.
பின்னூட்டத்துக்கு
நன்றி.
வணக்கம்
ஐயா.

நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த