Skip to main content

அக்கினிக் குஞ்சு- சிறுகதை

                                                          அக்கினிக் குஞ்சு
                                                               (சிறுகதை)
         


           இரும்புக் கம்பிக் கதவுக்குள்ளே தள்ளப்பட்டதும் கதிர் வெடவெடத்துப் போனான்.
பீதி மெல்ல மேல்ல ஊடுறுத்து மனம் முழுவதும் விஷச் செடிபோல பரவித் தைத்தது. அவர்கள் அடுத்து தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போதே உடலுக்குள் பீதி இழை இழையாய்ச் சரிந்து இறங்கியது.  உடலின் நடுக்கம் குரல்வலையை அடைத்து வார்த்தைகளை பிசிறச் செய்தன. பல சமயங்களில் அவன் சொல்ல நினைப்பவை சிதறி  உதிர்ந்தன.
சிலுவாரையும் சட்டையையும் கழட்டச் சொல்லிக் கட்டளை பிறப்பித்தான் ஒரு போலிஸ். முதலில் சிலுவாரைக் கழட்ட பின்வாங்கினான். ஒரு புஜம் திரண்ட போலிஸ்  ‘”புக்கா” என்று அதிகாரத்தில் மிரட்டியதும் அவன் நடுங்கி சிலுவார் பட்டனை அவிழ்த்து  ஜிப்பை கூச்சத்தோடு  இறக்கினான். சிலுவார் அகன்று கொடுத்ததும் தொளதொளத்து கீழிறங்கியது. அவன் வெளிறிய தொடைகளை அவனுக்கே பார்க்கக் கூசியது.  முன்பின் முகமறியா ஆடவர் முன்னால் சிலுவாரைக் கழட்டுவது பெண்கள் பார்க்க உடை அவிழ்ப்பது போன்று இருந்தது. அவன் உடல் முழுவதும் நாணமேறி நெளிந்தது. கண்களைத் துளையிட்ட கண்ணீர் விழித் திரையை மூடி மின்னின.
“நான் எந்தத் தப்பும் செய்யவில்லை,” என்று மீண்டும் மீண்டும் சொன்னான் பாதி இறங்கிய ஜீன்ஸைப் பிடித்தவன்ணம். ஒவ்வொரு முறை சொல்லும் போது குரல் அடைபட்டுச் சொற்கள் உள்ளொடுங்கின. அவர்கள் அவனை கடுகளவுக்கும் பொருட் படுத்தவில்லை. சட்டையை அவிழ்த்ததும் திறந்த மேனி சில்லிட்டோடியது. எல்லாம் துறந்து ஒட்டிக்கொண்டிருந்த ஒற்றை உள்ளாடையில் அவன் முற்றிலும் தன்மானத்தை இழந்தவனான். அவன் கைகள் தாமாகவே பிதுங்களை மூடின.
அங்கிருந்த காவல் போலிஸ். லோக் அப் இரும்புக் கிராதியின் பெரிய பூட்டைத் திறந்து விட்டான். கதவு பெரும் பாரத்தைச் சுமப்பது போன்று திணறித் திறந்து கிறீச்சிட்டது . “நான் எந்தத் தவறு செய்யவில்லை. என்னை ஏன் அடைக்கிறீர்கள்?” அச்சம் நிறைந்து அடங்கி ஒலித்த அவன் வார்த்தைகள் கேட்பாரற்று அர்த்தமிழந்து காற்றில் மிதந்து மறைந்தன. குமுறிக் குமுறி அழுதான் . வாழ்நாளில் அவன் இப்படி அழது நினைவில்லை. காவலன் கதவை மீண்டும் இழுத்துச் சாத்தினான். அது ஒன்றிணையும் போது இடித்த கனத்த ஒலி டாமாரெனக் கிளம்பி எதிரொலித்தது. இரும்புக் கதவைத் திறந்த போது எழுப்பியதைவிட அடைக்கும்போது பன்மடங்காகக் கேட்டது சத்தம். கதவை  இழுத்து பூட்டியபோது, பூட்டும்  ஓசையோடு சேர்ந்து மனம் அதிர்ந்தது. கிராதியின் முரட்டுக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு மிரண்டு மிரண்டு அழுதான். தலை சாய்ந்து முகம் கம்பிகளோடு ஒட்டியிருந்தது. கம்பி ஒன்றில் கண்ணீர் சொட்டு உருண்டு நனைத்து நின்றது. வெளியே நின்றிருந்த காவல் போலிஸ் கண்டுகொள்ளவில்லை.
தன் வாழ்க்கை சட்டென்று  எதிர்த் திசையில்  பயணிப்பதை  அவன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. கருமை  மேகங்கள் கவிந்துகொண்டிருக்கும் திசை. கண்களுக்குள் திடுமென காரிருள் சூழ்ந்து விரிந்து கொண்டிருந்தது! வெளி உலகத்தை மறைக்கும் மாபெரும் திரை விழுந்து முற்றிலும் மூடிவிட்டிருந்தது.
லோக் அப்பின் விட்டத்தோடு ஒட்டிய ஒற்றை குழல் பல்ப் சன்னமான ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது.  எட்டுக்கு எட்டு சதுர அகலத்தை வியாபித்திருந்த இருளை அவ்வொளி போதுமானதாக இல்லை. அறையில் நடுவில் மட்டும் சிறிய வெளிச்சம் விழுந்திருந்தது. மூலைகளில் தேய்ந்து மங்கிய ஒளி.  இருளை விழுங்க முடியாமல் தோல்வியில் ஒளி.
உள்ளே ஏற்கனவே இரு கருத்த கைதிகள் இவனைப் போலவே ஒற்றை உள்ளாடையோடு அமர்ந்தும் முட்டிக்கால் மடித்தும் படுத்தும் கிடந்தனர். உட்கார்ந்திருந்தவனின் உள்ளாடை  இடுப்பெலும்புக்குக் கீழ் இறங்கித் தொங்கியது. அழுது ஓய்ந்ததன் எச்சமாக கதிரிடமிருந்து இடையிடையே மூச்சு திணறி , கேவல் சிறையின் சுவர்களில் மோதியது.
“மச்சி” என்ற குரல் கேட்டுத் திரும்பினான்.
“என்னா பண்ண மச்சி,? ஏன் இங்க? மொத மொறயா?”
கேவல் மீண்டும் அழுகையாக நீட்சி கண்டது. அவ்விசாரிப்பு அவனுக்கு சற்று ஆறுதலாக இருப்பது போல உணர்ந்தான். யாருமற்ற போது அந்தக் கரிசனக் குரல் ஆதரவாய்ப் பட்டது. ஆதரவற்ற நிலையில் கரிசனை  மேலும் திரண்ட கண்ணீரை வரவழைத்தது. இந்த ஆதரவு, கம்பிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட அவனை வெளிக் கொணராது என்று அவன் உணர முற்பட்டான்.
“சொல்லு மச்சிஸ அழாத திங்கக் கெலம கோர்ட்டுக்கு கொண்டு போவானுங்க, அங்க சொல்லு, இப்போ அலுது என்னா பண்ணப் போற? குத்தம் செய்யும் போது தோணல ல?” என்றான்.
“நான் ஒரு குத்தமும் செய்ல” என்றான் மன்றாடும் தொனியில்.
“கொலக் குத்தவாலி கூட இதத்தான் சொல்லுவான்” படுத்திருந்தவன் எழுந்து  உட்காந்து சிரித்தான். துணைக்கு மேலும் ஒருவன் வந்து விட்டதில் உதிர்த்த சிரிப்பு. முதுதெல்லாம் வெட்டுத் தழும்புகள் கருத்து விம்மிக் கிடந்தன- மாட்ட்ட்டைகள் அட்டைகள் மேய்வது போல. நெஞ்சிலும் கை முட்டிக்கு மேலும் தேள் வடிவத்தில் பச்சை குத்தியிருந்தான். அது நெஞ்சில் அகன்று பதிந்திருந்த்து. காய்ப்பேறிய முரட்டும் பாதங்கள்.
‘என்னாத்துக்கு பிடிச்சானுங்கனே தெரில” அப்போது தட தட வென்று மாட்டுத் தொழுவத்தில் கேட்பது போன்ற ஒலி. சிரித்தவன் சிறு நீர் கழிந்துகொண்டிருந்தான்.  அந்த சிறிய மூடப்பட்ட அறைக்குள்ளேயே ஒரு மூலையில் கழிப்பிடம் இருந்தது. தேக்கி வைத்திருந்ததால் விரைந்து ஒழுகியது நீண்ட நேரம். அறையில் மலவாடை உக்கிரமாக வீசத் தொடங்கியது. சிறைபட்டுவிட்ட துக்கத்தில் இருந்ததால் அந்த வாடை அவன் நாசியை எட்டியிருக்கவில்லை போலும்!
“மச்சி நான் ஒன்னுதான் சொல்லுவேன், கொண்டுபோய் விசாரிப்பானுங்க ,ஒத்துக்கோ , இல்லாட்டி பின்னி பெடலெடுத்திடுவானுங்க, ங்க பாத்தியா?” என்று கழுத்தைக் காட்டினான். “ மூஞ்சில ஓங்கி குத்தனப்ப உலுந்திட்டேன், அப்ப பூட்ஸ் காலால ஒதச்சது.”  திப்பித் திப்பியாய் சிவந்து விம்மிக் கன்னியிருந்தது. சில இடங்களில் சிராய்ப்பும் ரத்தக் கோடுகளாக ‘பூரான்’ ஊர்ந்து கொண்டிருந்தது .
“உம்மைய ஒத்துக்கலன்னு வச்சிக்கோ இன்ஸ்பெட்ட்ர் சுலைமான அனுப்பிடுவானுங்க. புரொமோசன் கெடைக்காத ஆத்திரத்த எல்லாத்தையும் நம்மகிட்ட காட்டுவான். நகக் கண்ல ஊசி குத்தி எறக்குவான்.”
விதிர்த்து அவன் முகத்தைப் பார்த்தான் கதிர். சுலைமான் என்று சொல் அவனுள் புதிய பீதியைக் கிளர்த்தியிருந்தது. உடலுக்குள் விநோத இழை ஓடிச் சில்லிட்டது- சுலைமான் என்று  மனம் ஒருமுறை சொல்லிக்கொண்டது. உடல் பயத்தில் குலுங்கி அதிர்ந்தது.
“ரெண்டு ராத்திரி..போறதே தெரியாது.. திங்கக் கெலம கோட்ல பேசாம ஒத்துக்கஸ”
“என்னா ஒத்துக்கிறது?” என்றான் சற்றே சினமேறி. அவன் நேர்மையை நிரூபிக்க வாய்ப்பற்றதால் உண்டான சினம்!
“கோவமெல்லாம் வருதுடோய்..மச்சி எக்கேடா கெட்டுப் போ!” போய்ப் படுத்துக் கொண்டார்கள். சிமிந்துத் தரை சில இடங்களில் காரை பெயர்ந்ருந்திருந்தது. நாட் கணக்காய் அழுக்குப் போகத் தேய்க்காத தரை கருத்து, அடை அடையாய் பூசனமாய்ப் பிடித்திருந்தது. வெற்றுப் பாதங்களால் உணரும்போதே அதன் சரசரப்பு தெரிந்தது. சிறிது நேரத்தில் இருவரின் குரட்டை ஒலியும் இருண்டு கிடந்த அறைச்சுவரை மோதிக் கொண்டிருந்தது.
அவனுக்குள் துளிர்த்த பெரும் புதிரால் சமநிலை குலைந்திருந்தான். தன்னை ஏன் கைது செய்தார்கள்? இருளும் புதிரும் அவன் பிடறியை விடாமல் கவ்விக்கொண்டிருந்தது. இரவுகளால்  துயரங்களைக் கடந்துவிடமுடிவதில்லை.
இரவு மணி பத்துவாக்கில் வீட்டுமுன் போலிஸ் வேன் வந்து நிற்பதிலிருந்தே தொடங்கியது  கதிரவனின் துர்சம்பவங்களின் முதல் அத்தியாயம்.
 வாசலுக்கு வந்த இரண்டு உளவு பேதாக்களில் ஒருவன், “சியாப்பா கதிர்?” என்று கதிரையே கேட்டான். சற்று நேரம் அதிர்ச்சியில் இருந்தவன் நிதானித்து. ”சாயா” என்றான். “உன்னை விசாரணைக்குக் கொண்டு போகிறோம். வேனில் ஏறு.” வேன் போலிஸ் நிலையத்துக்குப் பறந்தது. உள்மனதில் குப்பென்று இருள் கவிந்து அச்சுறுத்தியது. என்ன ஏதென்று புரியவில்லை. நிலைகொள்ளாமை, சமன் குலைதல், அதிர்ச்சி, அச்சம் என பின்னிக் கோர்த்து  இம்சித்தது. விசாரித்துவிட்டு விட்டுவிடுவார்கள் என்ற எண்ணம் நப்பாசையிலேயே முடிந்தது.
“ சாமியைத் தெரியுமா? கிருஷ்ணசாமி?”
“தெரியும்?”
“நெருக்கமா?”
“இல்லை”
“24 ம் தேதி ..சிவன் கோயில் வாசலில், நீ அவனோடு ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தே, நெருக்கம் இல்லேங்கிற ?” பேசியதற்கா கடவுளே?
“நீ பேசிக்கிட்டிருந்த அன்றைக்கு  இரவு டத்தோ மாயன் வீட்டில் 25000 ரிங்கிட்  பணமும் 50 பவுன் நகையும் கொள்ளை போயிருக்கு. சாமி தலைமறைவாயிட்டான்.” அடையாள அட்டையை வாங்கிக் குறிபெடுத்துக் கொண்டான். பேசி முடித்ததும் இன்னொரு போலிஸை நோக்கிக் கண் அசைத்தான். பிற்பாடுதான் இந்தக் கூண்டுக்குள் தள்ளி ரெக்கை முறிக்கப் பட்டான்.
சமம் இழந்தபோன  சமதரை. முட்கள்போல் இரவு  முழுக்க தைக்கும் சிறு சிறு மணற் கற்கள். “கிர் கிர்” என்று சதா வட்டார குற்றச்செயல்களை அறிவித்தபடி வையர்லெஸ் ரேடியோ அலறிக்கொண்டிருந்தது இடைவிடாது. அவ்வப்போது யார் யாரையோ விசாரிக்கும் பேச்சுக்குரல். தப் தப்பென்ற பூட்ஸ் நடை ஓசை. வெற்றுடம்பை குளிர் பல்லாயிரம் விஷ ஊசிகள் கொண்டு தாக்கியவண்ணம் இருந்தது. தனிமைப் பேயை முதன்முறையாக எதிர்கொண்டு சமாளிக்க முடியாத  நிலை  கூடுதலாக. அதள பாதாளத்தின் தனிமை. நச நச வென்று கொசுக்களின் படையெடுப்பு. தட்டிப் தட்டியே நீள்கொண்டது விழிப்பு. சற்றே கிரங்கிக் கவிழும் இமைகள் அதிர மீண்டும் உடல் உதறி விழிப்பு நிகழும். சற்று நேரம் சலனமின்மை. பின்னர் இடைவிட்டு மீண்டும் கிர் கிர் ஓசை. பூட்ஸ் நடமாட்டம்.
திடாரென நாசியைத் தாக்கும் பயங்கர வாடை மோதியது. நேற்று இரவு சிரித்தவன் கழிவுக் குழியில் அம்மணமாய் குதிக்காலிட்டுச் சிரித்தான். நாற்றம் குடலைப் பிடுங்கியது.  கதிர் முகத்தை தரையில் புதைத்து குமுறினான். விட்டத்தில் ஒளி மங்கிய குழல்விளக்கு. உடல் சோர்ந்து கண்கள் சிவப்பேறி இருந்தன.
இரும்புக் கிராதியின்  முன் வேறொருவன் டியூட்டியில் இருந்தான். விட்டத்தில் குழல்விளக்கு ஒளி மங்கி விடிந்துவிட்டதைக் காட்டியது.
காலை எட்டு  வாக்கில், இரும்புக் கதவு திறக்கப்பட்டது. வாயில் காவலன் விரைத்து நின்று சல்யூட் அடித்தான். அவன் கால் பாதம் தரையை மோதி பலத்த ஒசையை எழுப்பியது. நீண்ட நிழல் அவன் தாண்டி விழுந்திருந்த்து. நேற்று விசாரித்த அதே போலிஸ்  அதிகாரியின் நிழல். கதிரை  அழைத்துக்கொண்டு தனியறைக்குள்  நுழைந்தான். பீதி அவனைக் கவ்விக் குதறியபடி  இருந்தது.
“கிருஷ்ணசாமி பதுங்கிய இடம் உனக்குத் தெரியும். சொல்லு.” கதிர் ஒரு  வெள்ளந்தியான கெஞ்சிய பார்வையோடு தெரியாதென்று தலையை ஆட்டினான். அதிகாரி அவன் மென்னியைப் பிடித்து சுவரின் மூலையில் தலை  இடிக்கத் தள்ளி, ஓங்கி முட்டியில் உதைத்தான். வலி  தாங்காமல்  சரிந்தான். தொடை துடிதுடித்தது. “போஹோங், சொல்லிடு. பொய் சொன்னா கொறைஞ்சது ஆறு  மாசம் உள்ள போயிடவே.”
“எனக்குத் தெரியாது”. சரிந்து குதிக்காலிட்டு அமர்ந்திருந்தவனை, கைச் சதைகள் தெறிக்க ,உச்சி முடியைத் பிடித்து, அவன் நிதானிக்கும் முன்பே கொத்தாகத் துக்கி நிறுத்தினான். தாக்கியவன் கையில் ஐந்தாறு முடி கோணலாய்க் கோடிட்டிருந்தன. எதிர்ப்பாரா நேரத்தில் கண்ணத்தில் அறைந்தான். தலையைச் சுற்றி நட்சத்திரங்கள் பறந்தன. கடவாய்ப் பல் குத்தி வாயில் ரத்தக் கசிவு. நாக்கால் துழாவினான். கரித்தது.. உதட்டு வழியே ரத்தம் சிறு சிவப்பு நூலாய் வடிந்திறங்கியது. கண்கள் பஞ்சடைந்து பழுப்பாகத் தெரிய ஆரம்பித்த்து. “ரெண்டு  வாரத்துக்கு நீ  லோக்அப் உள்ளதான் இருக்கணும். உண்மையைச் சொல்லிடு”.
 “எனக்குத் தெரியாது”  அவன் பொருட்படுத்தவில்லை. பிடறியைப் பிடித்து தள்ளிக்கொண்டே  மீண்டும் ‘ மாசோக்‘ என்று அடைத்துவிட்டுப் போய்விட்டான். கதவு திறந்து அவனை விழுங்கி இறுகி மூடிக்கொண்டது. பூட்டப்பட்ட ஒலி அதிர்ந்து அடங்கியது. கால் முட்டி விம்மி மடக்கவும் முடியாமல் நீட்டவும் முடியாது தொங்கியது. புட்டிக்குள் அடைபட்ட வண்டானான்- சுவரை மோதி மோதி திசைதேடி அலையும் வண்டாய்.
அவன் சொன்ன உண்மையை நிராகரித்த்தில் அவன் மனம் உடைந்து நொறுங்கியது. அவன் நசுக்கப்பட்டுச்  சத்தமற்றுச் செத்துபோகும் சிறு பூச்சானான். பதற்றம் அடிவயிறில் குலுங்கியபடியே இருந்தது. உணமையை ஏன் புறந்தள்ள வேண்டும்? காவல் நிலையம் நிஜத்தை நிராகரிக்கும் இடமா?
“என்ன அடிச்சானா? ஒத்துக்கன்னு  சொன்ன இல்ல”. கதரின் உதடு வீங்கி பல் வரிசையை இடித்து நின்றன. “ஒத்துக்க ஆறேழு மாசம்தான்.  அப்புறம் வாழ்க்கையே மாறிடும். . அண்ணன் கட்ட கேஸ். மோபின். ஐஸ்" உள்ளங்கை இணைத்துக் கசக்கி "ஒன்ன மாறிய இருக்காரு? கட்டன்னா தெரிமா?”
கதிர் கண்கள் விரிந்ததைக் கவனித்தவர்கள். “மச்சி பய அப்புராணியா இருக்கானேடா.. கட்டன்னாக்கூட தெரிலா. சும்மா புடிச்சிட்டு  வந்து ஏதோ ஒரு கேஸ மேலெடத்துக்கு ஒப்பேத்தப் பாக்குறானுங்க” என்றான் கலா அண்ணா..
“நான் சொல்றத் நல்லா கேளு , சுலைமான் கையில கெடச்ச, விலா எலுமப ஒடையிறவரைக்கும் குமுறிட்டுத்தான் மறு  வேல பாப்பான். ஒத்துக்க. ஏழு எட்டோ  மாசந்தான். வெளிய வந்துடலாம். சுலைமான் என்பது வெறும் பெயரல்ல. மனித ரத்தம் கோரும் மிருகமோ என்ற அச்சம் அவனுள் ஊடுறுத்துக் கிளம்பியது. இப்போது பயம் அவன் முழுக்க  நிறைந்துவிட்டிருந்தது. தூக்கமற்ற முழு இரவு உடலை மேலும் வெப்பமாக்கியிருந்தது. பின் மண்டையில் நங் நங் என்று வலித்து. உடல் களைத்துச் சோர்ந்து போயிருந்தது. நரம்புகள் இறுகித் தெறித்தன!
"அண்ணன்  வெளியாயிடுவாறு. பெரிய பெரிய தவுக்கே தோள்மேல கைபோட்டுத்தான் பேசுவாருன்னா பாத்துக்கோ! மிஞ்சிப்போனா ரெண்டு வார்ந்தான் உள்ள. வெளிய போனா ராஜா மாரி, எல்லாத்தியும் அனுபவிசிடுவாரு..”
கதிருக்கு  சன்னஞ்  சன்னமாய்த் துலக்காமாகிக் கொண்டிருந்தது. அடி வாங்க முடியாமல் கோர்ட்ல திருட்டில் தனக்குப் பங்குண்டு என்று மனசாட்சிக்கு விரோதமாய் ஒத்துக்கொண்டான்.
நீதிபதி அவனே ஒத்துக் கொண்டதால் மேலே  விசாரிக்க இடமில்லை. முதல் குற்றம் என்பதால் ஆறு  மாதச் சிறை அறைந்தது.
வெளியே வந்தான். சிறையைவிட வெளியே வெளிச்ச இருள் கருநாகம் போல சுருண்டு கிடந்தது. பழைய வேலை கரிசனமற்று  கைவிரித்தது. நண்பர்கள் முகங் கோணினர். பழைய உலகம் முற்றாய் மாறிப்போய் இருந்தது. ஏமாற்றம் நாலா திசையிலும் சுழன்றடித்தது.. அவன் அடையாளம் புரையோடிய புண்ணுக்கு நிகரானது என உணர்வைத்தார்கள் அவன் எதிர்கொண்ட மனிதர்கள். அவன் சுயமிழந்து திறியலானான். அவன் மனசாட்சி அவனுக்கு  எதிராகவே இயங்க  ஆரம்பித்தது. இனி இங்கே பழைய கதிருக்கு வாழ்வில்லை. அவன் ஒரு முடிவுக்கு  வந்துவிட்டிருந்தான்.
  கலாண்ணா  நினைவுக்கு வந்தார். அவர் கொடுத்த தொலைபேசி எண்களைக் குறித்து  வைத்தது  நினைவுக்கு வந்தது.
 கலாண்ணாவோடு பேச  ஆரம்பித்தான்.

 2016- மக்கள் ஓசை,(கடிகாரக் கதை)




Comments

VIINAI SAADUVOM said…
காவல் துறையின் அடக்குமுறை, நிரபராதியையும் குற்றவாளியாக்கிப் பார்க்கும் காவல்துறையின் அடாவடியை நாசுக்காக - வாழைப்பழத்தில் ஊசியைச் செருகுவதைப்போல சொல்லியிருக்கிறீர்கள். லோக்காப் மட்டுமே கதைக்களமாக அமைத்து, சொல் சிக்கனத்துடன் கதைய நகர்த்திச் சென்றவிதம் அருமை. நல்லவனாக வாழ்ந்த ஒருவனைச் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று காவல் துறையின் கையாலாகாத் தனத்தால் குற்றவாளியாக மாற்றும் கோணல் அணுகுமுறையை இதைவிட வேறெப்படி சொல்ல முடியும்? என்னைக் கவர்ந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்று.
Unknown said…
மலேசிய இந்திய இளைஞர் வாழ்வின் ஒரு பகுதியை இன்னொரு கோணத்தில் இருந்து படம் பிடித்துக் காட்டி இருக்கின்ற நேர்த்தி க்தையின் அழகு.

கையாலாகாத்தனமும் அவலமும் கண்டு நம் நாட்டின் சமுதாய அரசியல் அமைப்பின் மேல் கோபம் தான் வருகின்றது.

என்று அழியுமோ இந்த அவலம்...
என்று தணியுமோ இந்த தாகம்...
அன்றுதான் நமக்கு உண்மையான MERDEKA¡
PREMA said…
தமிழ் நாட்டில் தங்கள்
நூல்கள் எங்கு கிடைக்கும்

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த