Skip to main content

ஷா அலாம் தி தி டி ஐ, ரவாங் சுஙை சோ ஆகிய இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு

திரு ரவிச்சந்திரன் ஆசிரியரோடு

திருமதா மருதா மீனாட்சியோடும் மாணவர்களோடும்




         பல சிறுகதைகள் வாசித்துவிட்ட அனுபவத்தில் எழுதுவதற்கும், புதிதாக சிறுகதை செய்முறை உள்ளீடு மட்டுமே தெரிந்துகொண்டு எழுதுவதற்கும் சில வேறுபாடுகள் உண்டு.

சிறுகதைகள் வாசித்துவிட்டு அதன் உள் கட்டுமானங்களைச் சன்னஞ்சன்னமாக உள்வாங்கிப் புரிந்துகொண்டு எழுதும் அனுபவ முறை சில சமயங்களில் தேர்ந்த சிறுகதை எழுத்தாளர்களை உருவாக்கிவிடும். அவர் அதன் நுணுக்கங்களை அதன் வாசனை அறிந்து எழுதிவிடுபவர்கள் நல்ல கதாசிரியராக ஆகிவிட வாய்ப்புண்டு.

வாசிப்பு மேலோட்டமாக செய்துவிட்டு எழுத வருபவர்கள் அதில் வெற்றி அடைவது கடினம். பலர் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தாலும் கதைக்குள் நுழைந்து அதன் சிற்ப வேலைப்பாடுகளை நுணுகி அவதானிக்க மாட்டார்கள். அவர்கள் அதனை ரசித்துப் படித்து உணர்ச்சிவசப் படுபவர்களாக இருப்பாரகள். எனவே அவர்கள் எழுதும் சிறுகதை அனுபவப் பகிர்வு நிலையிலேயே நின்றுவிடும்.






Add caption




மேலே ஷா அலாம்  TTDI இடைநிலைப் பள்ளி

கீழே சுங்ைைசோ இடைநிலைப் ப்ளள்ளி 










சிறுகதை செய்நுட்பத்தைப் புதிதாக எழுத வருபவர்களுக்குச் சொல்லித்தரும்போது அவர்கள் பெட்றோல் போலச் சட்டென பற்றிக்கொள்கிறார்கள். இளமூளை காரணமாக.அதன் கலை நேர்த்தி அவர்களைக் கவர்ந்து விடுகிறது. அப்படி எல்லாரையும் சொல்லிவிட முடியாது. இலக்கியம் சார்ந்த பிரக்ஞை உள்ளவர்கள். அல்லது இயல்பிலேயே கலை சார்ந்த மரபணு உள்ளவர்கள் அல்லது அதில் ஆர்வம் மிகுந்திருப்பபவர்கள் நல்ல சிறுகதைகளை எழுதிவிட முடியும். இளம் வயதிலேயே ஒரு கலையின் நுட்பம் கைவரும்போது அவர்கள் பெரிதாக வளர்ந்து உருவாக முடியும். அதன் நீட்சியாக கதைகளை வாசிப்பவர்கள் அவர்கள் கற்ற கதைக் கலை செய்நுட்பத்தைத் தேடிக் கண்டடைவார்கள்.  எது ஒரு  நல்ல சிறுகதை , எது நல்ல சிறுகதை இல்லை என்பதை அவர்களால் தரம் தட்டிப் பார்க்க இயலும்.

நான் பயிலரங்கு நடத்திய பல்வேறு பள்ளிக் கல்லூரி மாணவர் சிலரிடம் அதனைக் கண்ணுற்றேன். நான் TTDI ஷா அலாம் பள்ளியில்  பயிலரங்கை முடித்த அன்று மருதா டீச்சருக்கு ஒரு மாணவி, டீச்சர் எங்களுக்கு சிறுகதை எழுதும் பணியை கொடுங்கள் நாங்கள் நல்ல கதைகளை எழுதிக் காட்டி நிரூபிக்கிறோம் என்று கேட்டிருக்கிறார்.

தி தி டி ஐ ஷா அலாம் இடைநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர் திருமதி மருதா மீனாட்சி அழைப்பின் பேரில் கடந்த 21.4.2017ல் வெள்ளிக்கிழமை ரவாங்கிலுள்ள அப்பள்ளிக்குச் சென்றிருந்தேன். காலை 7.00 மணிக்கு கிளம்பி பிற்பகல் 12.00க்கு ரவாங் ரயில் நிலையத்தில் இறங்கினேன்.ஒரு டேக்சி அனுப்பி நான் பள்ளியை 12.30க்குச் சேரும் வசதி செய்திருந்தார் மருதா டீச்சர். எண்பது மாணவர்களுக்கு மேல் கூடியிருந்தார்கள். சிலாங்கூர் மாநிலத்தின் கல்வித் துணை இயக்குனர் திரு ராமன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். நான் இரண்டரை மணி நேரம் பயிலரங்கு நடத்தினேன்.
அன்றிரவு சாஹார விடுதியில் தங்கி மறுநாள் காலை ரவாங்கிலுள்ள  சுஙை சோ இடைநிலைப் பள்ளிக்குப் போவதாகத் திட்டம். சிலாங்கூர் மாநிலப் இடைநிலைப் பள்ளிகளுக்கான கதைப் பயிலரங்கில் நான் இலக்கியத்தின் பயன் மதிப்பு என்ற தலைப்பில் பயிலரங்கு நடத்தினேன். அங்கேதான் திருமதி மருதாவையும் திரு. ரவிச்சந்திரனையும் எனக்கு அறிமுகம். இருவருமே மாணவர்களின் கல்வி மீது மிகுந்த அக்கறை கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு ஆசிரியரின் பணியாற்றுபவர்கள். ரவிச்சந்திரன் ஆசிரியரின் முகநூல் பதிவின் மூலம் அவருடைய மாணவர்களை எதிர்காலத்தில் நோக்கி நகர்த்தும் போதனை அணுகல் முறை என்னைக் கவர்ந்திருந்தது அதனால் அவரிடம் நானே பயிலரங்கு நடத்த அனுமதி கேட்டேன். அன்று பள்ளியில் பரிசளிப்பு விழா இருந்தும் என் கோரிக்கையின் முக்கியத்துவம் கருதி எனக்கு வழிவிட்டிருந்தார்.பயிலரங்கு தொடர்பான வேலைகளை அவரே முன்னிருந்து எல்லாப் பணிகளையும் செய்து முடித்திருந்தார். நான் தங்கியிருந்த விடுதிவரை வந்து என்னை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டார். அந்த இருவரும் என்மீது பொழிந்த அன்பு நிகரற்றது.


அந்த இருபள்ளிகளிலுமே நான் நடத்திய பயிலரங்கில் ஒரு இயல்பான விடயங்களைப் பார்க்க முடிந்தது. மொழி எப்போது கலைவடிவம் காண்கிறது என்றால் அது கவிதையாக சிறுகதையாக நாவலாக பரிமாணம் காணும்போது. மொழி நமக்கு உருவாக்கித் தரும் அழகியலில் அது அலங்காரம் பெறுகிறது. இதனை மையமாக வைத்தே பயிலரங்கைத் தொடங்கினேன். சினிமா பாடல் போல அது பரவசம் தரக்கூடிய கலை என்ற அடிப்படை புரிதலிலிருந்து ஆரம்பித்தேன்.
 படிவம் ஐந்துக்கான சோதனையில் சிறுகதை எழுதவும் வினா எழுப்பப்படுவதால் கதையைச் சுவாரஸ்யமாக்க ஐந்து அமசங்களில் கவனம் செலுத்தினேன். கவனத்தை ஈர்க்கும் தொடக்கம். வாழ்க்கைச் சிக்கலை முன் வைக்கும் கரு, செறிவாக்க அழகியல் சார்ந்த நுணுக்கங்கள், நேர் எதிர் பாத்திர மோதல்கள் ,எதிர்பாரா முடிவு . அவர்களும் பங்கெடுக்கும் பொருட்டு சிறுகதையின் தொடக்க வாக்கியங்கள், உவமைகள், திருப்பமான முடிவுகளை எழுதச் சொல்லிப் பயிற்சி அளித்தேன். ஒரு சிலரின் தொடக்க வரிகளும் உவமைகளும் அவர்களின் அனுபவத்துக்கு மீறிய ஒன்றாக இருந்தது.

கண்களுக்கு அவர்கள் சொன்ன உவமைகள் என்னை உவகையில் ஆழ்த்தியது.

கருப்பு வெள்ளை நட்சத்திரம் என்றான் ஒரு மாணவன்,
பாலில் மிதக்கும் கருந்திராட்சை என்றான் இன்னொருவன்.
புருவத்தை கருப்பு வானவில் என்று சொன்னான் ஒருவன்.
கருங்கடலில் துள்ளி வரும் வெண்மீன்கள் போல அவள் சடையை மல்லிகை மொட்டுக்களால் பின்னியிருந்தாள் என்றான் ஒரு மாணவன். இதெல்லாம் சினிமாப் பாடல்களில் ஏதும் வந்திருக்கிறாதா என்ற சந்தேகம் கூட எழுந்தது.

சிறுகதை தொடங்கும் வரிகளில், அன்று ஞாயிற்றுக் கிழமை என்றோ காலை பொல பொல வென்று விடிந்தது என்றோ தேய்வழக்கு தொடக்கத்தை எழுதாமல் திடுக்கிட வைக்கும் தொடக்கங்களைச் சொன்னார்கள். பேய்க்கதைகளுக்கானத் தொடக்க வரிகளை நிறைய பேர் சொன்னார்கள்.

இரு பள்ளி மாணவர்களுமே நீண்ட நேரம் அமர்ந்து உள்வாங்கியதில் திருப்தி எனக்கு.

இங்கே மிக முக்கியமாக ஆசிரியர்கள் இலக்கியம் சார்ந்து என்ன மதிப்பீடு வைத்திருக்கிறார்கள் என்று ஆராயத்தோன்றுகிறது.
ஆசிரியர்கள் குழாத்தில் எழுத்தாளர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அழிந்துகொண்டிருக்கும் ஏதோ அரிய உயிரினம் போல அவர்கள் எழுத்துக் கலையில் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்த ஆசிரியர்கள் முதுமை காரணமாகவோ மறைவு
காரணமாகவோ ஆசிரியர் குழுமத்தில் எழுத்துச் சந்ததி கனிசமாகக் குறைந்து காணாமற் போய்க்கொண்டிருக்கிறது. முன்னர் பெரும்பாலான எழுத்தாளர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலிருந்து  உருவாகி  வந்திருக்கிறார்கள். இதன் நீட்சியை சமீப காணமுடியவில்லை என்பது வருத்தமான விடயம்தான். ஆசிரியர்களாக இருப்பவர்கள் எழுத்தாளர்களாக பரிமாணம் பெறாமல்   இருப்பது பெரிய குற்றமல்ல. ஆனால் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் தனக்கு அறிமுகமான அல்லது சக  ஆசிரிய எழுதாளர்களை வாசிக்காமல் இருப்பதுதான் வருத்தம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. பொதுவாகவே வாசிக்கும் பழக்கம் அற்றுப்போன பெரும்பாலான ஆசிரியர்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். வாசிக்கும் பழக்கமற்றவர்கள் எழுத்தாளர்களைச் சந்திக்கும் போது முகமனுக்காச் சில கேள்விகள் கேட்பார்கள்?
1. இன்னும் எழுதுகிறீர்களா சார்?
2. எழுதிக்கொண்டிருக்கும் ஒருவனை நோக்கி வரும் இந்தக் கேள்வியிலிருந்தே அவர் வாசிக்கும் பழக்கமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். எதிர்கொள்ளும் ஒரு எழுத்தாளரிடம் உரையாடலைத் துவக்க  ஒரு மாமுலான கேள்வி மட்டுமே இது. அதைத் தாண்டி ஒன்றுமில்லை.

3. அடுத்து ஒரு வினாவை முன்வைப்பார்கள் கடைசியா என்ன புத்தகம் எழுதினீர்கள் சார்?
4. நாம் புத்தகம் எழுதி சில காலமே ஆகியிருக்கும். ஊடகங்களில் அந்த நூல் பற்றிய அறிமுகமும் விமர்சனமும் சில காலம் ஓயாது வந்திருக்கும். இருப்பினும் அதைக்கூட பார்த்திராதாவர்தான் அப்பாவித் தனமாய் இவ்வினாவை வைப்பார்கள்.
5. இக்கேள்விகள் இரண்டும் என்னை கொஞ்சம் அவமானப் படுத்தியதாக உணர்ந்திருக்கிறேன். இவர்கள் எழுத்து சார்ந்து பேசாமல் வேறு விஷயத்தை பேசியிருக்கலாம். அல்லது ஒரு ஹை சொல்லிவிட்டுக் கடந்திருக்கலாம். அவ்வாறான உடல்மொழி நாம் பழகிவிட்டிருந்தமையால் அதில் நம்மைக் கண்டுகொள்ளாமை புண்படுத்த வாய்ப்பில்ல்லை.

 எனக்கு இந்த இரண்டு ஆசிரியர்களிடம் அவ்வளவு பழக்கமில்லை. ஆனால் அவர்கள் இருவரும் எந்நூலை கேட்டு வாங்கி வாசித்தவர்கள். அதன் உள்ளடக்கம் சார்ந்த விடயங்களைப் பேசியிருக்கிறார்கள். மருதா டீச்சர் ‘நீங்கள் இப்படியெல்லாம் வன்முறையாய் எழுதக் கூடாது. உங்கள் எழுத்தில் துன்பியல் நிறைந்திருக்கிறது. நம் சமூகம் ஏற்கனவே கெட்டுக்கிடக்கிறது. நீங்கள் வலிந்து சுட்டிக்காட்டி அதனை வளர்க்கிறீர்கள் என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார். அந்த அறச்சீற்றத்தை நான் பெரிதும் ரசித்தேன். ஒரு நல்ல வாசகரைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி துளிர்ந்தது.
சுங்கை சோ இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திரு ரவிச்சந்திரன் நல்ல வாசகர். தொடக்கத்தில் எழுத்துத் துறையில் கவனம் செலுத்தியிருக்கிறார். இப்போதும் வாசிப்பதை விடவில்லை. வாசிப்புப் பழக்கம்தான் தான் அவரை அடுத்த சந்ததியின் நல் வாழ்வு சார்ந்த கவனத்தையும் பொறுப்புணர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.  அவர் முகநூல் பதிவில் இதனை நான் அவதானித்தேன்.

மேலே நான் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கும் இவர்களுக்குமான ஒரு  பிளந்து பிரிந்து கிடக்கும் இடைவெளியைச் சொல்லவே இதனைச் சுட்டிக்காட்டுகிறேன்.
திருமதி மருதா டீச்சரும், திரு ரவிச்சந்திரனும் என்மீது காட்டிய அக்கறையையும் அன்பையும் மீண்டும் பதிவு செய்யக் கடமைப் பட்டிருக்கிறேன். எனக்கு எல்லா விதத்திலும்  எந்த இடையூறும் நிகழாமல் இருக்க மிகுந்த கவனம் செலுத்தினார்கள். நான் பயிலரங்குக் கட்டணம் வேண்டாம் என்று தொடக்கத்தில் அறிவுறுத்தியும் கேட்கவில்லை.

 திரு. ரவிச்சந்திரம் முதல் நாள் இரவே என்னை இரவு உணவுக்கு அழைத்திருந்தார். அவர் மனைவி என்னைச் சந்திக்க விரும்பியதாகக் குறிப்பிட்டார்.  பயணக் களைப்பு, பயிலரங்கு களைப்பின் காரணமாக நான் படுக்கைக்குப் போய்விட்டேன். இருப்பினும் மறுநாள் அவர்கள் அளித்த பகல் உணவின்போது அவர்கள் உண்மை அன்பு புலனானது.


தொடக்க உரை ஆற்றுபவர் திரு ராமன்
















Comments

Kasthuri Rengan said…
அருமையான் முயற்சி
நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முன்னெடுப்பு

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த