Skip to main content

ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் முன்னெடுத்த கூலிம் இலக்கிய முகாமும், கலையின் மகத்துவமும்



          ஜெயமோகனைச் சந்திக்கும் தருணம் வாய்க்கும் போதெல்லாம் மெல்லிய பதற்றம்  ஏறி விடுகிறது எனக்கு. அவர் எழுத்து உருவாக்கிய பிரம்மாணடம் அவர் உரையாடலில் பொங்கி  எழும் அறிவார்த்தம், இடைவிடாது அசுரத்தனமாக் எழுதும் ஆற்றல்,. நான் ரொம்ப பின்னால் இருக்கிறேன் என்ற தாழ்மை உணர்வு காரணமாக இருக்கலாம்.
இம்முறை மலேசியாவில் நான்காவது முறையாக சந்திக்கிறேன். அவரிடம் எப்படி உரையாடலைத் துவக்குவது என்ற முன்யோசனையோடு நான் என் ஊரான சுங்கைப் பட்டாணியிலிருந்து , கூலிம் தியான ஆஸ்ரமத்துக்குச் செல்கிறேன். கோலாலம்பூர் வல்லினம் நடத்திய குறுநாவல் சிறுகதைப் பயிலரங்கை முடித்துக்கொண்டு , ஜூலை 2 ம் தேதி சுங்கை கோப் பிரம்ம வித்யாரணயத்தில் நடைபெறும் இலக்கிய முகாமுக்கு, இன்னொரு இலக்கியப் பயிலரஙக்கை நடத்த வந்திருந்தார்  ஜெ. வல்லின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பதிவு செய்திருந்தேன். ஆனால் எங்கள் வீடமைப்புப் பகுதியில் கடுமையாக பரவி வந்த சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு நானும் பலியாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சக மனிதர்களுக்கே நான் படைப்பாளன் என்று அறிமுகமாகாதபோது வெள்ளந்தி மனம் கொண்ட கொசுக்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்திருக்கும்  என்னை?
 இம்முறை அவரோடு நாஞ்சில் நாடனும் வந்திருந்தார். 2,3,4 ஜூலை மூன்று நாட்களை இருவருமே இலக்கிய விருந்தளிக்க எங்கள் நவீன இலக்கியக் களம் அமர்வுத் தலைப்புகளைத் தயார் செய்து வைத்திருந்தோம். இரு ஆளுமைகள் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.


நான் ஆஸ்ரமத்தில் நுழைந்த போது ஓர் அறையின் அரைக் கதவு பாதி திறந்திருக்க ஜெ கணினியில் டைப் செய்துகொண்டிருந்தார் ஜெ. என் நிழல் அவரைத் தொந்தரவு  செய்ய ஏறிட்டுப் பார்த்தார். நான் வாங்க ஜே என்றேன். அவர் கண்கள் ரத்தச் சிவப்பில் கனிந்துந்தது. வெண்முரசின் போர்க் களத்தை எழுதிக் கொண்டிருக்கிறாரோ என்று நினைத்தேன். அவரும் பாத்திரமாகவே  மாறியிருக்க வாய்ப்புண்டு.

கண்ல இன்பெக்சன். மலேசியா வந்த வுடனே மோசமாயிடுச்சு என்றார்.  அவர் வெண்முரசு எழுதிக் கொண்டிருந்ததால் நான் எழுதுங்க பின்னர் பேசலாம் என்று விலகி வந்து விட்டேன்.

சுவாமியின் அறையில் தமிழ் மாறன், குமாரசாமி , சுவாமி, ஜெமோவின் மலேசிய மெய்க் காப்பாளன் ராவணன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மகாபாரதத்தை எழுதும்  எழுத்தாளருக்கு இராமாயண இராவணன் சாரதியாகவும் மெய்க்காப்பாளராகவும் இருப்பது சுவாரஸ்யமானதுதான். அறையில் ஜெ வெண்முரசு எழுதிக் கொண்டிருக்கிறார் என்றால் இங்கே கம்பர் பாடல்களில் உரையாடல் போய்க் கொண்டிருந்தது. என்ன முரண் நகை! நாஞ்சில் இருப்புதோறும் கம்பர் கனிந்து உருவாகி வருவது வியப்பொன்றுமில்லையே.

நான் ஆஸ்ரமத்துக்குச் சென்றது ஜேவையும் நாஞ்சிலையும் என் வீட்டுக்கு விருந்துண்ண அழைக்கவே. ஜெ வெண்முரசின் அத்தியாயத்தை முடித்துக் கொண்டு நாங்கள் அமர்ந்திருந்த சுவாமி அறைக்கு வந்துவிட்டார்.
இந்த அத்தியாயத்தில் வெண்முரசில் இடது சாரிப் பார்வை விழுந்திருக்கிறது யாரேனும் புகார் சொல்லக் கூடும் என்றார். வீங்கிச் சிவந்திருந்த அவர் இடது கண்ணை ஒற்றியபடியே. அப்போது சிங்கப்பூரிலிருந்து ஜெவின் வாசகர் சரவணனும் ஆஸ்ரமத்துக்கு வந்துவிட்டிருந்தார். மூவரையும் அழைத்துக்கொண்டு என் வீட்டுக்குப் புறப்பட்டேன். வரும் வழி முழுதும் அவருடைய சமீபத்திய ‘வெற்றி’ கதை தொடர்பான ஆழகலங்களை தொட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்.. வெற்றிய கதைக்குள் அவர் வாசகப் பங்களிப்புக்கு விட்டிருந்த பகுதிகள் புதிய திறப்புகளை கண்டடைவதில் பேரானந்தம். வெற்றி கதை அந்தோன் செக்கவ்வின் ‘பெட்’ அதாவது பந்தயம் கதைபோல துவக்கம் கொண்டிருந்தது. ஆனால் அதன் முடிச்சுக்குப் பின்னரான பயணம் அதி வேகம், அதி சுவாரஸ்யம். அதிகம் பேசாத நமச்சிவாயத்தின் மனைவி பாத்திரம் வாசகன் மனதில் அலையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அவள் கணவனான நமச்சிவாயம் அவளை அசிங்கமாகத் தூற்றத் தூற்ற அவள் மனம் ரங்கப்பர் பக்கம் சாய்வதை வாசகன் தன் பங்களிப்பாக உணரும் இடங்களும், அவள் தன்னை இழக்க நேரும் தருணமும் கதையின் உச்சம்.
நான் பயணத்தின் போது ஜெவிடம் ஒர் சந்தேகத்தைக் கேட்டேன். நான் திருவிதாங்கூர் அரண்மனை சென்றபோது, மர சிற்ப வேலைப்பாடுகள் மினாங்கபாவை ஒத்திருக்கிறது. சரவாக்காரர்கள் அதனை தங்களின் சொந்தச் சிற்பக்கலை என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் ஏன் இரண்டு வேலைப்பாடுகள் ஒன்று போல் இருக்கின்றது. சரவாக் சிற்பக் கலைஞர்கள் திருவனந்தபுறம் அரண்மனைக் கலையைக் காப்பி அடித்திருப்பார்களோ என்று கேட்டேன். அதற்கு ஜெ ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார். பதினேழாம் நூற்றாண்டில்  கேரள மரச்சிறபக் கலைஞர்கள் ஆசியா முழுவதும் பயணம் செய்தார்கள். அப்படிப் பயணம் செய்தபோது சராவாக்கிலும் அவர்கள் சென்று மரச் சிற்ப நுணுக்க வேலைகளை செய்தார்கள். இந்த வரலாறு  தெரியாத மலாய் இனம் இது அசல் சரவாக்கியர்களின்  கை நேர்த்தி என்று உண்மை வரலாறை மறைத்தார்கள். மலாயா தீப்கற்பத்திலும் மலாய்க்கார கிராம வீடுகளில் இவ்வாறான சிற்பக் கலை வேலைப்பாடுகள் காணக்கிடக்கின்றன. மலேசிய தேசிய பொருட்காட்சி சாலையின் கட்டட அமைப்பு இதே மரச் சிற்ப வேலைகளாலானது.


மூன்று   நாள் கரு த்தரங்கில் 100 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். நான் ஐம்பது பேர் கூட வரமாட்டார்கள் என்று எண்ணியிருந்தேன். பினாங்கில் நடந்த முதல் பயிலரங்கில் 30 பேர் மட்டுமே கூடினோம். ஆனால் இம்முறை எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம்.  மலேசியாவில்   ஜெவின் வாசகர்கள் கூடியிருக்கிறார்கள் என்பதே இவ்வெண்ணிக்கை அதிகரிப்பின் முக்கிய காரணம்.

மூன்றாவது நாள் பாவா செல்லதுரையும் அவரின் மனைவி மொழிபெயெர்ப்பாளர் சைலஜாவும் எதிர்பாரா விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். பாவாவுக்கு ஒரு மணி நேர அங்கம் ஒதுக்கிக் கொடுத்திருந்தோம். நேர நெருக்கடி காரணமாக திருமதி சைலஜாவின் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அதனை அடுத்து மலேசிய எழுத்தாள்ர்களோடு ஓர் உரையாடல் அங்கம் நடைபெற வேண்டும் என்று ஜெ விருப்பப் பட்டார். அவர் மலேசிய இலக்கிய வளர்சிதை மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தார். என்னையும் ஒருவராக இதில் சேர்த்திருந்தார்கள். சீ.முத்துசாமி, நவீன், யுவராஜன், பாலமுருகன் ஐவரும் கலந்துரையாடலில் பங்கொள்ள வேண்டும் என்று ஜெ குறிப்பிட்டிருந்தார். பாலமுருகனால் கலந்து கொள்ள முடியவில்லை. இதில் யுவராஜனுக்குப் பதில் அ. பாண்டியனைச் சேர்த்திருக்கலாம். அ. பாண்டியன் தீவிரமாக எழுதி வருபவர். எழுத்துச் சோம்பல் காட்டாதவர்.

ஜெ வைத்த முதல் கேள்வி  தமிழகத்தில் கா.நா.சு செய்த படைப்பிலக்கிய சார்ந்த கறாரான விமர்சனம் இங்கே நடைபெற்றதா என்பதே. விமர்சனக் கலை இங்கே முன்னெடுக்கப்படவே இல்லை என்பதே எல்லோருடைய கருத்தாகவும் இருந்தது. எனக்கும்  அதில் உடன்பாடு இருந்தது. இணைய வசதி வருவதற்கு முன்னர் முன்று நான்கு பத்திரிகைகளே ஞாயிறு பதிப்பில் இலக்கியத்துக்கென்று ஆறு ஏடுகளை ஒதுக்கித் தரும். இதில் ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் ஒரு சிறுகதையாவது பிரசுரமாகும். அதற்கடுத்த வாரம் அச்சிறுகதை குறித்து நாலைந்து வரிகளில் ஒரு கருத்தை வாசகர் எழுதியிருப்பர். பெரும்பாலும் ஓரிருவரே ஒவ்வொரு வாரமும் கருத்துரைப்பர். ‘கதை சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள். அவர் தொடர்ந்து எழுத வேண்டும்’ என்றே பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கும். எழுத்தாளர்களின் கூடுகையில் நாலு வரியில் இருப்பதல்ல விமர்சனம்  என்று நாம் குறை சொல்லும் போது , பத்திரிகை எடிட்டர், யாரும் எழுதிறதில்லைங்க.. சொல்ற நீங்க எழுதுங்களேன் என்பார். அதற்கடுத்த வாரம் நானும் அரை பக்கத்துக்குக் குறை நிறைகளை எழுதி அனுப்பிருக்கிறேன். அது பத்திரிகையில் வரவில்லை. ஏனென்று கேட்டேன். ரொம்ப நீளமாருக்கு. எடம் பத்தாது. அதோட கொறையும் நிறைய சொல்றீங்க, இதப் படிச்சா எழுதினவன் மனம் ஒடஞ்சிபோயிருவான். எங்களுக்குக் கதை கெடைக்காது ‘ என்று பதிலிருப்பார்கள்.  ஆனால் இலக்கிய பத்திரிகையில் இரண்டு முழு வண்ணப் பக்கம் சினிமாவுக்கு ஒதுக்கியிருப்பார்கள். திர்ஷா, அமலா, கீர்த்தி சுரேஷ் என சமீபத்திய பிரபலங்கள் தொடை மார்பு காட்டி முழுப் பக்கத்தையும் நிறைத்திருப்பார்கள். மலேசிய இலக்கிய ஏடுகள் குறிப்பாகப் ஞாயிறு இலககிய ஏடுகள்  ராசிபலன்,சினிமா, லாட்டரி முடிவுகளுக்காகவே பார்க்கப்படுகிறன்றன. இதனால், இலக்கியம் ஊறுகாய் அளவுக்கே தொட்டுக்கொள்ள  இருக்கும். அவர்கள் மேல்  தவறு சொல்லிப் பயனில்லை. வணிக நோக்கத்திலேயே பத்திரிகைகள் நடத்தப் படுகின்றன என்பதே முழுமுற்றான உண்மை. கதை கவிதை போடுவது பழக்க தோஷத்தில்தான். இதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று!

இன்னொரு காரணமும் முன்வைக்கலாம். மலேசிய நூல் வெளியீடுகளில் நூலைப் பற்றிப் பேசும் அங்கம் ஒன்றிருக்கும். பெரும்பாலும் பண வசூல் நோக்கத்தோடே இந்த நூல் வெளியீடுகள் நடந்தேறும். தொழிலதிபர்கள், அமைச்சர்கள் கெஞ்சி வரவழைக்கப்பட்டிருப்பார்கள். இவர்கள் தாமதமாகவே நிகழ்ச்சிக்கு வருவார்கள். இவர்கள் ஒருவருக்குக் கூட இலக்கிய ரசனை இருக்காது. சிலருக்குத் தமிழே பேச வராது. இவர்களெல்லாம் உளறிய பிறகே நூல் விமர்சனம் நடக்கும். அதிலும் விமர்சகருக்கான நேரம் கனிசமாக குறைக்கப் பட்டிருக்கும். அவங்கெல்லாம் போயிடுவாங்க , அப்புறம் நூல் விக்காது. நீங்க அஞ்சி பத்து  நிமிசம் பேசுங்க போதும், அதான் புக்க படிக்கப் போறாங்களே, என்பார்கள் ஏற்பாட்டாளர்கள். (அப்புறம் என்னா மசுருக்குடா என்ன கூப்பிட்டீங்க) அப்படியே நேரம் கொடுத்தாலும் விமர்சகர் ஒரு பொய் முகத்தோடு  நூலைப்பற்றி வானுயர உயர்த்தியே பேசுவார். எல்லாரும் புத்தகம் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை அவரிடம் முன்னமேயே வைக்கப்பட்டிருக்கும்.  புத்தகத்தகத்தைத்  திறந்தால்தான் உண்மை லட்சணம் புரியும். இதில் விமரசனக் கலை எப்படி வளரும்?

ஆனால் இன்றைக்கு கணினி உபயோகம் பரவலாக இருப்பதால் எண்ணற்ற பக்கங்கள் எழுதக் கிடைக்கின்றன. வல்லினம் போன்ற இலக்கிய ஏடுகள் விமர்சனக் கலையை முன்னெடுக்க தொடங்கியிருக்கிறது, சிங்கப்பூரின் பால பாஸ்கரன் மலேசிய சிறுகதைகள் பற்றி விரிவான நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். பொருட்படுத்த வேண்டிய முக்கியமான விமர்சன நூல்.
நிகழ்வில் விமர்சனக் கலை பற்றிப் பேசும்போது ஒருவர் தேவையில்லாமல் ஒப்பீட்டளவில் எழுத்தாளர்களை தரம் தாழ்த்திப் பேசினார். “இத இங்க சொல்லலாமான்னு தெரில” என்று சொல்லிவிட்டு இந்த ஒப்பீட்டை முன் வைத்தார். சிலர் அவர் பேசிய பிறகு என்னிடம் முறையிட்டார்கள். சினம் கொண்டார்கள். அது நியாயமாகவே பட்டது. ஒருவரை உயர்த்திக் காட்ட பிறிதொருவரை தரம் இறக்கிப் பேசுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை! பொதுவில் பேசும்போது ஒரு நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற மிகச் சாதாரண பண்பு அவருக்கு பழக்கமாகவில்லை என்றே பட்டது.

மலேசிய அரசாங்கத்தின் சட்டம் உங்களைச் சுதந்திரமாக எழுத வைக்கிறதா என்று தமிழ் நாட்டிலிருந்து வந்த கிருஷ்ணன் கேட்டார். நானும் சீ. முத்துசாமியும் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தோம். ஆனால் நவீன் எழுதலாம் , ஈரான் போன்ற நாடுகளின் சினிமா அந்நாட்டுக் கெடுபிடியைத்  கலை நயத்தோடு சொல்லி தங்களின் அதிருப்தியை நிரூபித்திருக்கிறார்கள் என்றார்.

இங்கே மலேசியாவில் கலையுணர்வு மங்கிக் கிடக்கிறது. தீவிர இலக்கியம      வாசகர்கள்  ஒரு 500 பேர் தேருவார்களா என்பது சந்தேகமே. நாம் ஐநூறு பேருக்குச் சொல்ல வேண்டுமா அல்லாது 5000 பேருக்குப் போய்ச் சேரும்படி சொல்ல வேண்டுமா என்பதுதான் முக்கியம். எப்படிச் சொன்னாலும் போட்டுக் கொடுப்பவர்கள் நம் தோள் மீது கைபோட்டுக்கொண்டிருப்பவர்கள் தான். இங்கே எழுத்தாளர்களுக்கே கலை என்றால் என்ன என்று தெரியவில்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன். சமீபத்தில் ஈப்போவில் யுமா வாசுகி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் ஐம்பது ஆண்டுகாலம்  மரபுக் கவிதை எழுதிவரும் பாண்டிய மன்னன் வம்சத்தைச் சேர்ந்தவர், யுமாவை நோக்கி ஒரு வினாவைக் கேட்டார். “ஆமாம் கலை கலைன்னு பேசறீஙசுகளே, கலைன்னா என்னா? என்று தீவிரமாகவே கேட்டார். அவர் நாடகக் கலை சினைமாக் கலை என்பதைத் தாண்டி சிந்தித்திருப்பாரா  என்ற சந்தேகம் எழுந்தது. கலையில் இயங்கிவரும் ஒரு அரை நூற்றாண்டுக் கவிஞரின் இந்தக் கேள்வியை வைத்தே நான் கலைசார்ந்த பூடக அல்லது பின் நவீனத்துவ எழுத்து செல்லுபடியாவது குறித்து எண்ணிப் பார்க்கிறேன்.

ருஷ்ய இலக்கியம், அரசு / முதலாளித்துவ கெடுபிடியிலிருந்து, சுதந்திரமான எழுத்துக்குத் வர மூன்று தலைமுறைகள் கடந்த பின்னரே முடிந்தது என்று ஜெ வெளியே உரையாடும்போது குறிப்பிட்டார்.
ஈப்போ கல்லூரியிலிருந்து வந்து பேசிய ஒரு விரிவுரைஞர் சரcடெர் அச்சcஇனடிஒன்  அதாவது ஆளுமைக் கொலை செய்ய ஆரம்பித்தார். இலக்கியக் கோட்பாடு இங்குள்ள எழுத்தாளருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அவருக்குத் தெரியும். இவருக்குக் கொஞ்சம் தெரியும், அவருக்கு அறவே தெரியாது என்று சுட்டிப் சுட்டி சுட்டித்தனமாய்ப் பேசினார். அவரின் அமானுட சக்தியைக் கண்டு நான் பிரமித்தே போனேன்.  எல்லாம் அறிந்த முத்திப்போன சித்தராய் இருப்பாரோ என்னவோ? இவருக்கும் அவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. பாருங்க அவரு அந்த ஓரத்தில் இவரு இந்த ஓரத்தில்  அமர்ந்திருக்கிறார்கள் என்று புனித நட்புணர்வோங்கும் ஞானத்தோடு வேறு விளித்தார். எங்கள் உறவு பற்றி ஞானக்கண் தரிசனம் கிடைத்திருக்கிறது அவருக்கு.  அப்படியானால் அவர் முத்திப்போன சித்தர்தான்.

நன்றியுரையை தமிழ் மாறன் பேசியிருக்கலாம். அவரிடம் அரிய கருத்துகள் இருந்தன என்று வெளியே அவரோடு உரையாற்றியபோது தெரிந்தது.
இந்த நிகழ்வை நிறைவாக ஒருங்கமைத்த குமராசாமியையும் , தமிழ்மாறனையும் குறிப்பிட்டாக வேண்டும் . சுவாமி எல்லாம் சரியாக நடக்கிறாதா என்று சமையலறை. தங்கும் அறைகள், நிகழ்ச்சி நடைபெறும் இடம் என மாறி மாறி கண்காணித்துக் கொண்டே இருந்தார். ஒரு நாளைக்கு சுற்றிச் சுற்றி 10 கிலோ மீட்டர் நடந்திருக்கலாம் அவர்.
நான் ஜே விடம் கென் நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்க நினைத்திருந்தேன். தமிழில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தீவிரமாக எழுதி வரும் உங்களுக்குள் ஏதோ நாஞ்சில் நாடனின் ஏவல் கதையில் வரும் அமானுட சக்தி இருப்பதாக  சந்தேகப் பட்டேன். அந்தச் சந்தேகம் உங்கள் மலேசிய வருகையால் நிரூமனமானது. நீங்கள் எவ்வளவோ மறைக்க முயற்சி செய்தும் உங்கள் கண்கள் சிவந்தபடி இருந்து நீங்கள் வேற்றுலக மனிதர் என்ற உண்மையை போட்டு உடைத்துவிட்டது.

போகன் சங்கர் உங்களைப்பற்றி முகநூலில் சொன்னதும் என் சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.  ‘எல்லா மலையாளத்தானுக்குள்ளும் பாதி மந்திரவாதி இருக்கிறான்’ ஜாக்கிரதை!

















Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின