Skip to main content

எழுத்தாளராய் இருப்பதில்......

எழுத்தாளராய் இருப்பதில்......


பலருக்கு அறிமுகமான எழுத்தாளராய் இருப்பதில் வில்லங்கமும் பல வடிவத்தில் வந்து சேரும். கலை சார்ந்து இயங்கக்கூடியவர்களில் எழுத்தியக்கத்தில் இயங்குபவர்களுக்குத்தான் ஆகக் குறைந்த ரசிகர்கள் இருப்பார்கள். இவர்களுள் பலர் நம் எழுத்தைப் படித்திருக்கமாட்டார்கள் ஆனால் ஊடக விளம்பரங்கள் மூலம் நாம் அவர்களுக்கு அறிமுகமாகி இருப்போம்.
“சார் நேத்து ஒங்கள டிவில பாத்தேன்,  பேப்பர்ல போட்டோ பாத்தேன், ரேடியோவில பேர் சொன்னாங்க,” என்றெல்லாம் முகமன் பேசுவார்கள். வில்லங்கம் இவர்களிடமிருந்தே பெரும்பாலும் வந்து சேரும்.

இரண்டு வாரங்களுக்கு முன் என் மகள் எனக்கு குறுந்தகவல் அனுப்பி ஒருவருடைய தொடர்பு எண்ணையும் கொடுத்து “அவர் உங்களிடம் பேசணுமாம்” என்றார். அடடே இன்னொரு வாசகர் கிடைத்துவிட்டார் என்று நான் தொடர்பு கொண்டேன்.

“ஐயோ சார்.. நான் உங்கள அவசியமா சந்திக்கணுமே?” என்று தொடங்கினார்.
“சந்திக்கலாமே,” என்றேன். எனக்கும் பெருமிதம் உச்சியைத் தொட்டது.
“ரொம்ப நன்றிங்க சார், ரொம்ப நாளா உங்கள் சந்திக்கணும்னு காத்துக்கிட்டிருக்கேன் சார், எப்போ சந்திக்கலாம் சார்...?
வாசகரைச் சந்திக்க நேரங்காலமெல்லாம் ஒரு பொருட்டல்ல! “போன் பண்ணிட்டு வாங்க...” ஏதோ என் படைப்பைப் பற்றிப் பேசப் போகிறார். என் நூலை என் கையெழுத்திட்டு வாங்கப் போகிறார். எனக்கு இன்னொரு அரிய வாசகர் கிடைத்துவிட்டார்.
“நான் வரேன் சார்..அதுக்கு நீங்கதான் சரியான ஆளு” என்றார்.
“வாங்க பேசலாம்”
“இந்த சனிக்கெலம சார்”
“ஓகே வாங்க பிரிதான்.”
“இல்ல சார், நான் கம்ப்போங் மேவா முனீஸ்வரர் கோயில் தலைவர் , போன வருஷத்துக்கான ஆண்டறிக்க தயார் பண்ணனும். அதுக்கு நீங்கதான் சார் சரியான ஆளு.”
“எனக்கு நேரமில்லீங்க..”
“கொஞ்ச நேரத்து வேலதான் சார். அப்படிச் சொல்லாதீங்க!
“இல்லிங்க என்ன விட்டுடுங்க....”
நல்ல வேளையாக அவர் தொடரவில்லை.

ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்  சைக்கிளில் போகும் ஒருவரை  நான் எதிர்கொண்டு ஒருவரைப் பார்ப்பதுண்டு. என் நடைப் பயிற்சி களம் அது! என்னை  ஓர் எழுத்தாளன் என்று அவர் அறிந்து வைத்திருக்கலாம். ஒருநாள் சைக்கிளை நிறுத்தி...சார் வணக்கம் என்று சொல்லிக்கொண்டே இறங்கினார்...”
“ஒங்களப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன் சார்...நீங்க பெரிய எழுத்தாளர் சார்...”
“மகிழ்ச்சிங்க...உங்க பேரு..?
“ராமலிங்கம் சார்...ஒங்களைப் பாத்துப் பேசணும்னு இருந்தேன், அதுக்கு சரியான சந்தர்ப்பம் வாக்கில..”
“பரவால்ல இப்போ பேசுங்க...”
“சார் ஒரு நாவல் எழுதிருக்கேன் அத நீங்க படிக்கணும் சார்..” எழுத்துத் துறையில் அவர் பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. நாவல் என்றதும் நான் விக்கித்துப் போனேன்.
“பேப்பர்ல ஏதும் எழுதியிருக்கீங்களா?”
“இல்ல சார் அறிவோம்னு , இதான் மொதல்ல எழுதிருக்கேன்.”

 சொல்ல முடியாது ஜோடி குருஸ் போன்றவர்கள் முன்பின் அறிமுகமிலாதவர்கள். ஆழி சூழ் உலகு நாவலைக் கொடுத்து பட்டென்று வெளிச்சத்து வந்தவர். தமிழுலகில் பிரசித்தம். இவரும் ஏன் அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருக்கக் கூடாது..?
“அப்படியா எடுத்திட்டு வாங்க.. படிக்கிறேன்,” என்றேன்.
“போக்கெட்லியே வச்சிருக்கேன் சார்.. உங்கள சந்திச்சி, எப்படியாவது கொடுத்திடனும்னு இருந்தேன், “ என்று பையிலிருந்து உருவி எடுத்தார். அதோடு ஏதோ மளிகை லிஸ்டும் உடன் கோத்துக் கொண்டு வந்தது. அதனைப் பிரித்து எடுத்து, நாவல் கத்தையைக் கொடுத்தார்.

பையில் ரொம்ப நாளாய் இருந்ததால் அதன் தொடக்கம் எது என்று தெரியாத அளவுக்குக் கசங்கி இருந்தது. பிரித்து எடுத்தேன். வீட்டில் தபால் பெட்டியில் போடும் விளம்பரத்தாளின் பின் பக்கங்களில் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. எல்லாம்  சாணித் தாட்கள்! பல்வேறு சைசில் உள்ள விளப்பர ஏடுகள். மேல் முனையிலிருந்து தாள் முடியும் கீழ்முனை வரை கிறுக்கெழுத்தால்    நெருக்கி நெருக்கிப். பேனாவாலும் பென்சிலாலும் கலந்து கலந்து எழுதப்பட்ட 10க்கு மேற்பட்ட பக்கங்கள். சைக்கில் சீட்டையே மேசையாக பயன்படுத்தியிருக்கலாம் போல. எழுத்து வடிவம் கோணி, வாக்கிய வரிசை ஏறுமுகமாயும் இறங்குமுகமாயும் அலை பாய்ந்து,  கால்புள்ளியோ முற்றுப்புள்ளியோ ஏனைய புள்ளிகளோ கண்களில் படாத நாவல். கடைசி ஏட்டின் முடிவிலாவது முற்றுப்புள்ளி இருக்கிறதா என்று பார்த்தேன்.   இல்லை! நாவலும் முவுறுவதில்லை. அது இன்னொரு நாவலுக்கான தொடக்கமாகவே தொக்கி நிற்கும்! அதனைப் புரிந்து வைத்திருக்கிறார். நாவலுக்குத் தலைப்பும் காணவில்லை. பின்னர் வைப்பார். இப்போதென்ன அவசரம்?
நான் மூச்சடைத்துப் போனேன். ஆனால் இன்னொரு ஆதர்ஸ வாசகர் கிடைத்திருக்கிறார். விடலாமா?
“நான் படிச்சிட்டு சொல்றேன்”
“நல்லது சார்.. நீங்கதான் சார் சொல்லணும்... .காத்திருப்பேன் சார்..”
“ நாவல் பக்கம் சரியா அடுக்கியிருக்கா?”
" இருக்கு சார்..."
அவர் விடை பெற்றார். நான் வீட்டுக்குப் போகும் வழியிலேயே படித்தேன். பின் நவீன இலக்கியம் என்று சொல்கிறார்கள். அந்த வகையைச் சேர்ந்ததாக  இருக்கலாம் இது. பின்னிப் பின்னி எழுதப்பட்டு. தொடக்காமா முடிவா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இடியப்பப் பின்னல் நாவல். எனவே அது பின் நவீன நாவலேதான்!

மறுநாள்  அந்தப் பாதையில் நடைப்பயிற்சி செய்வதை நிறுத்திக் கொண்டேன். பாவம் அவரிடம் இருந்த ஒரே கையெழுத்துப் பிரதியும் அதுதான். அந்தக் குற்றமனத்தை நான் வாழ்நாள் முழுதும் ஏந்த வேண்டியிருக்கிறது!

வேறு நடைப் பயிற்சி இடத்தை மாற்றியும் அங்கேயும் வில்லங்கம்  வேறு வகையில் வந்து சேர்ந்தது.!

ஒரு வாசகர் எதிர் கொண்டார்.
"சார் நான் உங்களக் கண்டிப்பா சந்திச்சே ஆகனும்னு இருந்தேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி , நான் கண்கண்ட தெய்வம் நீங்கள்," என்றார். இன்னும் என்னென்னவோ புகழ் வார்த்தைகள். என் கொள்ளளவையும் தாண்டி நிறைந்து வழிந்தோடிய சொற்கள் எல்லாம் சொன்னார். எனக்குக் கூச்சமாக இருக்கிறது அவற்றையெல்லாம் எழுத!
"சார் நான் புத்தகம் போடணும் அதுக்கு நீங்கதான் முன்னுரை எழுதணும் " என்றார். என் ஊரில் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் எனக்கு அறிமுகம். இவரை நான் முன்பின் பார்த்ததேயில்லை."
"இதுக்கு முன்ன ஏதும் எழுதியிருக்கீங்களா?"
"இல்ல சார் இதான் மொத புக்கு. ஒங்களப் போல எழுத்தாளருங்க ஆசிக்காகத்தான் இவ்ளோ நாளு காத்திருந்தேன்."
எனக்கு ஏற்கனவே அவர் சொன்ன வார்த்தைகளால் புல்லரிப்பு நின்று போயிருந்தது. புல்லில் இன்னும் புரட்டியெடுத்தார்.
"என்னா எழுதியிருக்கீங்க..?"
"நான் கொண்டாரம் பாருங்க.. எப்போ சார் மறுபடியும் இங்க வருவீங்க?"
"ம்..... நாளைக்கு பாக்கலாம்..."
அவர் நான்கைந்து நகல் எடுத்த புத்தகப் பிரதிகளோடு வந்தார். எல்லாம் பொன்மொழிகள், பழமொழிகள், மூத்தோர் வாக்குகள், கையெழுத்தில் எழுதி, நகல் எடுத்து கணினி கிராபிக் மூலம் புத்தக அட்டை போடப்பட்டு பைண்ட் செய்யப்பட்டிருந்தது.
" எல்லாம் பொன்மொழிகளா இருக்கு..?"
"எல்லாம் நான் பத்து பதனஞ்சி வருஷமா கொஞ்சம் கொஞ்சமா எழுதினது சார்...?"
"இதெல்லாம் சான்றோர்கள் பொன்மொழிகளாச்சே ..நீங்க எழுதினதுன்னு சொல்றீங்க...?"
"ஆமா சார் நான் பாத்துப் பாத்து எழுதினதுன்னு சொன்னேன்.."
அதான் அவங்க எழுதி வச்சீட்டாங்களே.. இத நீங்க மீண்டும் பிரதி எடுத்திருக்கீங்க..அவ்ளோதான?
" என்னா சார் இவ்ளோ சிம்பளா சொல்லிட்டீங்க, என் கையெழுத்து சார் எல்லாம், நான் எழுதினது...சார்.. இரவெல்லாம் முழிச்சு எழுதினது சார்..."
" நீங்க எழுதினதுதான் நான் இல்லேன்ல...ஆன ஏற்கனவே மத்தவங்களால எழுதப்பட்டதுதானே...."
"இருக்காட்டுமே சார்... என கையெழுத்து எவ்ளோ அழகா இருக்கு பாருங்க.. இதுக்குனே என் புக்க வாங்குவாங்க சார்..?
"அழகாத்தான் இருக்கு ஆனா...ஆனா படைப்பு உங்களோட இல்லியே..."
"சார்... நீங்கப் புரியாம பேசுறீங்க... ரொம்ப பேரு சொன்னாங்க இத புக்கா போடலாம், ஸ்கூல்ல விக்கலாம்னு.. அதனாலத் தான் உங்ககிட்ட முன்னுரை வாங்க னும்னு முடிவெடுத்தேன்."
எனக்கு இவ்ளோ நேரம் ஒன்னு புரியாமலே இருந்திருக்க்கிறது. புத்தகமாக்கலாம்னு இவர தட்டிக் கொடுத்து பேசறவங்க இவர 'நல்லா' புரிஞ்சிக்கிட்டவங்கதான். நான் தான் புரியாம பேசிக்கிட்டிருக்கேன்.
" நீங்க ஒன்னு செய்ங்க..இது ஒருதொகுப்பு நூல். தொகுத்தவர் யாருன்னு ஒங்க பேர போட்டுக்கோங்க...அது தப்பில்ல," என்றேன்.

"தொகுப்புன்னா என்னா சார்?"

இவர ஏத்தி விட்டவங்கள் யாருன்னு தெரிஞ்சா நான் அவர்களைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகத் தயங்க மாட்டேன்.
'' வீரையா இருங்க தோ வந்துட்டேன்..." அவர் எட்டு ரௌண்டில் ஏழை முடித்திருந்தார். நான் ஏழரையோடு மாட்டிக் கொண்டேன்.

 வீரையா வருவதற்கு முன்பே இந்த தொகுப்பாசிரியர் என்னை விடாமல் பிடித்திருந்தார். ஒரு மணி நேரம் அல்லாட்டம்.
“ நீங்க இதையே தொடர்ந்து செய்ங்க..அது ஒங்களுக்கு மனச் சாந்திய கொடுக்கும்.. நாளைக்குப் பாக்கலாம்..என்னா?” அவரைத் திரும்பிப் பார்க்காமல்    நான் வீரையாவை நோக்கி வேக நடை போட்டேன்.

நாளை மீண்டும்  நடைப் பயிற்சி இடத்தை மாற்ற வேண்டும்!

இதற்கும் மேலாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு வரலாற்றாசிரியர் என்னைப்பற்றி, தன் முகநூலில் அவதூறு செய்து எழுதியிருந்தார். அன்று இரவே சை. பீர் முகம்மது..” என்னையா அந்த ஆளு உங்கள கண்ணா பிண்ணாணு எழுதிகிட்டிருக்காரு..நீங்க பதில் சொல்லாம இருக்கீங்க. நான் பாத்தா அடிப்பேன்னு சொல்லி பதில் எழுதிருக்கேன்!” என்றார். விஷயம் சீரியசா இருக்கும் போலருக்கே என்று நினைத்து அவர் சுவருக்குப் போய்ப் பார்த்தேன். நான் லஞ்சம் கொடுத்து விருதுகள் வாங்கியிருக்கிறேன், என்பது போன்ற பதிவுகள் திரும்பத் திரும்ப ஐந்தாறு முறை எழுதப்பட்டிருந்தன.ஆனால் சை.பீர் சொன்ன ஒரு மோசமான அவதூறு பிற பின்னூட்டக்காரர்களால் சான்றுகள் கேட்கப்பட்டதாலும். மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்க்கப்பட்டதாலும் , நீக்கப்பட்டு விட்டிருந்தது. என் வட்சாப்பில் வேறு சிலர் இதுபற்றி குறிப்பிட்டு குறைபட்டிருந்தார்கள். எல்லா பதிவுகளும் இரவு 10 மணிக்கு மேல் எழுதியிருந்தார் அவர்.

மறுநாள் அவருக்குத் தொடர்பு கொண்டேன். அவர் எடுக்கவில்லை. அவர் மனைவி எடுத்தார். முழு விபரமும் நான் சொல்ல வேண்டியதாயிற்று அவருக்கு. சார் எனக்கு ஒன்னுமே தெரியாது சார்..இப்படித்தான் சார் தண்ணி போட்டுட்டு எல்லார்ட்டேயும் வம்பு இலுத்துக்கிட்டுருக்காரு. இப்ப கூட பாருங்க சார் சிகரெட் ஒரு பேக்கட் இங்க இருக்கு, அது தெரியாம புதுசா வாங்கப்போயிருக்காரு”, என்றார்.
“அவரு தண்ணி போடுவாரா..?”
“அய்யோ சார் தெனைக்கும் இதே பாடுதான்..”
“அவருகிட்ட சொல்லுங்க, ரொம்ப சீக்கிரம் அவர் பேர்ல ஒரு லாயர் நோட்டிஸ் வருமுன்னு!”
“சார் ஏதோ பண்ணுங்க சார்..அவர் புள்ளைங்க வரட்டும். மெரட்டி வைப்பானுங்க!”
ஒருவருடைய கனவு நிலையிலும் நான் ஒரு எண்டி ஹோரோவாக வந்திருக்கிறேன் என்பது கூட படைப்பாளனுக்கான பெருமைதான்!















Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின