Skip to main content

குப்புச்சியும் கோழிகளும்- சிறுகதை

குப்புச்சியும் கோழிகளும்-
சிறுகதை

தோட்டங்களின் எல்லை என்றும் சொல்ல முடியாமல், காட்டின் அடிவாரம் என்றும் சொல்ல முடியாத மனித நடமாட்டமே அற்றுப் போன அல்லது தபால் இலாகாவின் முகவரிப் பதிவேட்டில் துருவித் துருவித் தேடினாலும் காணப்படாத பகுதியில்தான் குப்புச்சி வசித்து வருகிறாள். அவள் கணவன் உயிராய் இருக்கும் போதே இந்த இடத்தை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு செத்துப் போய் விட்டான்.

அவன் செத்துப் போன செய்தி கூட இவளை முழுசாய் வந்து சேரவில்லை. வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாத காரணத்தால், இடம் விட்டு இடம் பெயரும் இவள் கணவன், ஒரு நாள் ஆள் அரவமில்லாத ஓர் இடத்தில் ஏதோ இடித்து உதவிக்கு ஆள் இல்லாமல் நிர்க்கதியாய் உயிர் விட்டிருப்பான் என்ற ஆரூடம், சாவு வீட்டில் பேசப்பட்டிருந்தது.

நாலு பேர் கூடிவிட்ட இறப்பு வீட்டில் சாங்கியத்துக்காக அழலாம் என்றாலும், அந்தப் பாழாய்ப் போன கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் கூட உதிர்க்க முடியாமல் போனது அவளுக்கு மட்டும் அதிசயமாய்ப் படவில்லை.

வேலைதேடி தனியே விட்டுப்போனப்பிறகு  குப்புச்சிக்கு என்ன நடந்தது? அவள் எப்படி இருந்தாள்? என்ன ஆனாள்? அவளை விட்டுப் போனபோது இருந்த பரிசுத்தம் இப்போதும் இருக்கிறதா ? என தெரிந்து கொள்ளும் கரிசனை கூட இல்லாத புருஷனை நினைத்து எப்படி அழுவது? ஒவ்வொரு வேளையும் தவறாமல் சோறு போடுவதற்கு உழைக்கும் வக்கனை இல்லாதவனுக்காக கண்ணீர் எப்படி வழியும்?

உடலை மறைக்கவாவது வருஷா வருஷம் வந்து விட்டுப் போகும் தீபாவளிக்காகவாவது துணிமணி வாங்கித் தர வக்கில்லாத புருஷனுக்காக எப்படி இயற்கைத் திவலைகள் வெளியாகும்? மனுஷியாய்ப் பிறந்து இவனைக் கட்டிக் கொண்ட பிறகு மனுஷியே அல்லாத ஏதோ ஒரு ஜடப் பிறவியாய் உருமாறிப் போன குப்புச்சிக்கு எங்கிருந்து வரும் அந்தக் கண்களில் ஊற்று? கணவனை மறந்து போய்விட்டது உள்ளிருக்கும் ஜீவன்.

கணவனின் அந்த புத்திச்சுவாதினம் இல்லாத நிலைக்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான்.

அந்தச் சம்சுவின் ஆதிக்கம் அவனோடு போயிருந்தால்தான் தேவலை. அந்த ஆதிக்கத்தின் சுகானுபவத்தை குப்புச்சியின் மேலுமல்லவா செலுத்தி விட்டுப் போயிருந்தான்.

ஒருநாளைக்கு மருந்து மாத்திரை மாதிரி  மூன்று வேளை ஊற்றிக் கொள்ளவில்லையாயின் அவளின் உடலில் உண்டாகும் நடுக்கம், பார்வையில் உண்டாகும் ஒளிக்குறைவு , அவள் வாழ்வின் சுவையே அற்றுப் போனவளாய் உயிர் வாழ்வதன் அர்த்தத்தையே அழித்துக் கொண்டவளாய் ஆக்கிவிடுகின்றது. அது வேண்டும் அவளுக்கு அவசியமாய்.

என்ன புண்ணியம் செய்தாளோ! இப்போது அவளுக்கு அது தவறாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. நாளுக்கு மூன்று வேளை உணவும் தவுக்கே வாங்கி வந்து கொடுத்துவிடுவான். உணவோடு நெகிழிப் பையில் அதுவும் கிடைத்து விடும். தீபாவளியோ சீனப்புத்தாண்டோ வருஷத்துக்கு இரண்டு முறையாவது உடம்புக்கு துணியும் வந்து கொடுத்து விடுவான்.

மனசுக்குள் கணவனை விட இவன் எவ்வளவோ மேல் என்ற ஆத்ம திருப்தியில் அவள் நிரந்தரமாய் இந்தக் கோழிப் பண்ணையில் குடிபுகுந்து விட்டாள்.

பண்ணையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட கோழிகளுக்கு இவள் ஒருத்தி மட்டுமே ஆதாரம். கோழிகளுக்குத் தீனி போடுவதிலிருந்து – நீர் ஊற்றுவதிலிருந்து – அவை ஏற்றுமதியாக்கப் படும் வரை அவற்றின் நலனபிவிருத்திக்கெல்லாம் இந்தக் குப்புச்சியை விட்டால் வேறு ஆள் இல்லை.

குப்புச்சி ஒருத்தியே போதும், தவுக்கேவின் வங்கி இருப்பை வலிமைப்படுத்துவதற்கு. இரவில் அவளுக்கும், கோழிகளுக்கு காவலாய் இருக்கும் மூன்று அல்சேஷன் நாய்களுக்கும் சேர்த்தே வந்து விடும் உணவு.

தவுக்கே வந்து பார்த்துவிட்டுப் போகும் போதெல்லாம்  “இன்றைக்கு வேறு ஏதும் வேண்டுமா? கோழிகளுக்குத் தீனி போதுமா…? நாய்களுக்கு வேறு ஏதும் வேண்டுமா… உனக்கும் ஏதும் தேவைப்படுகிறதா?” என்று அவைகளின் தேவைகளோடு இவளுடைய தேவையையும் கேட்கும் கரிசனைக்காக அவள் மனம் மகிழ்ந்ததுண்டு. அதனால்தான் இவன் வேற்று சாதிக்காரனாய் இருந்தாலும் கணவனை விட இவன் எத்தனையோ படி மேல் என்று நினைத்தாள். இப்படி கணவன் அவளை ஒரு நாளாவது கேட்டிருப்பானா? அந்தத் தவுக்கேயின் கரிசனை அத்தோடு முடிந்து விடுவதில்லை!

அவள் கோழிகளுக்குத் தீனி போடும் போதும், பண்ணையைச் சுத்தம் செய்யும்போதும் பக்கத்திலிருந்து பார்வையிடும் வேளையில்,

“குப் சீ… கமு ரஜின்… கெலிஜா, வா… சுக்கா குப் சீ…” என்று சொல்லும் போதும், ஒரு முதலாளி என்ற அந்தஸ்திலிருந்து இறங்கி இவளை முகமனுக்காகப் பாராட்டும் போது அவள் உள்ளபடி நெகிழ்ந்தே போகிறாள். தவுக்கேயின் மேல் அவளுக்கு இருந்த மரியாதை விஸ்தாரம் காணுகிறது!

“குப் சீ… வா தா போலே பிச்சாயா… லு அடா அன்னாம் ஓலாங் அனாக் ஓ…” என்று தவுக்கே தன் வாளிப்பான – ஆறு பெற்றும் உடைந்து விடாத மேனியைப் பார்த்து தரும் சான்றிதழ்கூட அவளை மெல்லியதாய் கிரங்க வைத்ததுண்டு. இப்படியெல்லாம் பேச்சை அச்சாரமாய் ஆரம்பித்தானானால் அன்று நேரங்கழித்துத்தான் தவுக்கே தன் வீட்டுக்குத் திரும்புவது வழக்கமாகிவிட்ட நிகழ்வுகளாகி விடுகிறது!

இந்த அரணில்லாத வாழ்க்கையை விட்டு அவள் போக வேண்டிய அவசியமுமில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கை போகத்திலிருக்கும் காரணத்தால் யாருக்கும் நிர்ப்பந்தமாக வேண்டும் என்ற அழுத்தத்திலும் அவள் இல்லை.

விடுதலை உரிமை அறவே மறந்துபோன கோழிகளுடன் இருப்பது ஒருவகையில் அவளுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. கதவைத் திறந்து விட்டு வெளியே விரட்டினாலும்  அடித்துத் துரத்தினாலும்  ஓடத் திராணியில்லாமல்  அப்படியே மண் புற்று மாதிரி ஸ்தம்பித்துப் போய் நிற்கும் இந்தக் கோழிகளுடனான அலைச்சலில்லாத வாழ்க்கை பழகிப்போயிருந்தது.

ஆறு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதுகூட தவுக்கே ஞாபகப்படுத்தும்போது, பொறியைத் தட்டுகிறதே… அதோடு சரி…

புருஷன் என்பவன் செத்துப் போன பிறகு அங்கேயும் போய் இருந்து பார்த்துவிட்டு வந்துவள்தான்! மகன் ஒவ்வொருவனும் சுயமாய்க் கல்யாணம் என்கிற பேரில் தான் விரும்பிய கழிசடைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

குப்புச்சி அவர்கள் வீட்டுக்குப் போய் பார்த்தபோதுதான் தெரிகிறது வண்டவாளம். அப்பனைப் போல் ஆண் பிள்ளைகள் ஐந்து பேரும் சம்சுக்கு ‘சலாம் போடும்’ சங்கதி. இந்தப் பழக்கம் கூட அப்பனால் வந்ததாகக் கூட இருக்கலாம்.  

மருமகள்களுக்கு முன்னால் தன் சுதந்திரம் பறிபோனது… மகன்கள் முன்னாலேயே அதுகள் மாமியாரை மரியாதையில்லாமல் நடத்தியது… வாய்ச்சண்டை, குடுமிப்பிடி சண்டையாகி… பிறகு… ‘ச்சே… இந்த நாய்கள் முன்னால் இருப்பதே கேவலம்; இதைவிட பிச்சையெடுத்து உண்ணலாம்’ என்று ஓடி வந்தவள்தான். எப்போதோ கணவனும், இவளும் கொஞ்ச நாள் வேலை செய்து வயிறு வளர்த்தது ஞாபகம் வரவே இந்தக் கொழிப்பண்ணைக்கே மறுபிரவேசம் செய்திருந்தாள்.

இங்கே சகலமும் சாதகமாகும் போது அதுகள் வாசற்படி துச்சமாய் இருந்தது. ஆறாவதாக இருக்கும் பெண் பிள்ளை சாரதாவின் நிலைதான் மனதுக்குள் தேய்ந்த பிம்பமாய் வந்து போய் விடுகிறது! ஐந்து ஆண் பிள்ளைகளில் யாராவது ஒருவன் வீட்டில் இவளுக்கு சோறு கிடைக்காமலா போய் விடும் என்ற ‘இருக்கட்டும் பரவாயில்லை’ என்ற எண்ணம் அவளைத் திருப்தியடையச் செய்திருந்தது. மரம் வச்சவன் தண்ணி ஊத்தாமலா போய்விடுவான்? அதுகூட அவள் போதையில் இருக்கும்போது அற்றுப் போய் விடுகிறது.

பண்ணையில் எல்லா வேலைகளும் முடியும் போது சூரியன் மெதுவாய் மலைகளுக்கிடையே அமுங்கி மறைந்து விடுகிறான். அந்தக் கோழிப் பண்ணையில் அக்கடா என்ற பெருமூச்சோடு உட்காரும் போது, அன்றைக்கு வளைந்து, நெளிந்து, குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ததன் வலி தெரிகிறது. அவள் குடி வைக்கப்பட்டிருக்கும் அந்தக் குடிசைகூட கோழிப் பண்ணைக் கூண்டுகளில் ஒன்றா என்று சந்தேகப்படத் தோன்றும்.

தகரக்கூரை. அறைகளே இல்லாது ஒரே ஒரு படுக்கையும், அவ்வப்போது அவசியம் ஏற்படும் போது தண்ணி போடுவதற்கு விறகடுப்பும், நாற்பது வாட் பல்பும், கோழிகளுக்குப் போடப்பட்ட குழாய்களில் ஒன்றிலிருந்து குடித்து குளித்துக் கொள்ள வேண்டிய சூழல்தான் அவளுக்கு.

பிள்ளைகள் வீட்டுலிருந்து ‘ச்சீ’ வாங்கி காலத்தைக் கழிப்பதைவிட, இந்தக் கோழிகளினால் வரும் நாற்றம் மேல் என்பதாலேயே இது எவ்வளவோ தேவலாம் என்றிருந்தாள்.

குப்புச்சியின் வாழ்க்கை பிறர் கண்ணுக்கு எவ்வளவுதான் மோசமாகப்பட்டாலும் அவளுக்கு இந்த வகை வாழ்க்கை நிலையே திருப்தியைக் கொடுத்திருந்தது.

ஒருநாள் காலை பண்ணையில் பெரிய லாரி ஒன்று வந்து முகாமிட்டிருந்தது. அந்த லாரியிலேயே தவுக்கேயும் தொத்திக் கொண்டு வந்திருந்தான். முதல் நாளே கோழிகளுக்குத் தீனி அதீதமாகக் கொடுக்கச் சொல்லியிருந்தான்.

லாரி வந்த கொஞ்ச நேரத்தில், ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்து இறங்கினர். குப்புச்சியின் மூத்த மகனும்  அவள் கடைக்குட்டி சாரதாவும்தான் என அடையாளம் கண்டுக்கொண்டாள்.

சாரதாவின் கையில் துணி பிதுங்கிய ஒரு பிளாஸ்டிக் பை இருந்தது. குப்புச்சி புரிந்து கொண்டாள்.

“அம்மா… இந்தக் கழுதைய நீயே பாத்துக்கே.. இது அடங்காது… என் பொண்டாட்டிக்கும் இதுக்கும் ஒத்து வரல. தம்பிங்க வூட்லேயும் சண்ட சச்சரவானதால நான் கொண்டாந்து வெச்சுப் பாத்தேன்.. சரிப்பட்டு வரல” என்று விறைப்பாய் நின்று கொண்டிருந்தான் மகன்.

குப்புச்சி கோழிகளுக்குத் தீனி போடுவதை நிறுத்தி சற்று ஏறிட்டுப் பார்த்தாள்.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசம் தெளிவாய்த் தெரிந்தது. இந்தப் பதினைந்து பதினாறு வயதில் அவள் தோற்றம் ஒரு பூரண வடிவெடுத்து பெண்ணாய் வார்க்கப் பட்டிருந்தாள். சிவந்த மேனி, இடை வரை நெளிந்து நிற்கும் கூந்தல், எவரையும் ஈர்க்கும் விழிகள், மொட்டெடுத்த புதிய மலர்ச்செடிபோல மனதுக்கு ரம்மியம் தந்து கொண்டிருந்தாள். இருக்கும் நிலையில் இவளை எப்படி வைத்து பார்த்துக்கொள்வது என குழப்பமும் அச்சமும் மனதில் பரவியது.

மூத்த மகன் கொஞ்ச நேரம் நின்று பார்த்தான். அம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவன் வந்த வழியே திரும்பி விட்டான்.

லாரியில் கோழிகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

“இனி சாப்பா…?” தவுக்கே அருகில் வந்தவனாய் தீர்க்கமாய்ப் பார்த்தான் சாரதாவை.

“சாயா அனாக்...” என்றாள்.

“வா ச்சாந்திக் மாச்சாம் லு லா!” என்று தவுக்கே கூறும் போது அவனுள் இளமை நரம்புகள் நர்த்தனம் ஆடுவது குப்புச்சிக்கும் புரிந்தது. அவன் பார்வை சாரதாவை விட்டு விலகவில்லை .


கோழிகள் ஏதோ சில சூப்பர் மார்க்கெட் விற்பனையின் அறுப்புக்காக ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. சாரதாவைப் பராமரித்துவிட முடியும் என்ற  நம்பிக்கையில் தௌகேவைப் பார்த்துச் சிரித்தாள் குப்புச்சி. 

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின