Skip to main content

மாடுகள் மலைகள் ஏரிகள் ~2

மாடுகள் மலைகள் ஏரிகள் ~2

















கோல்ட் கோஸ்டில் என்ன மணி என்று தெரியவில்லை.  நேரம் தெரியாமல் இருப்பதுதான் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்குகிறது. ஆம் நாங்கள் உல்லாசமாக இருக்கத்தானே புதிய ஊரைத் தேர்ந்தெடுத்தோம்.  நியூசிலாந்து நேரத்துக்கு மணியை மாற்றியும் வைக்கவில்லை . அவர்களுக்கும் நமக்கும் ஐந்து மணி நேர வித்தியாசம்.  நமக்கு இங்கே காலை ஆறு என்றால் அங்கே பதினொன்று. அது ஒன்றரை மணி நேர நிறுத்தம். கோல்ட் கோஸ்ட்டில் இறங்குபவர்களுக்காக மட்டுமல்ல . பெட்றோல் நிரப்பவும்தான். அங்கே எல்லாப் பயணிகளும் சுங்கப் பரிசோதனைக்கு ஆளாக்கப் படுகிறார்கள. போதைப்பொருள் , ஆயுதக் கடத்தல் நடக்காமல் இருக்க இந்தப் பரிசோதனை. போதைப்பொருள் கடத்தலுக்கு கடுமையான தண்டனை என்று  எச்சரிக்கிறார்கள். கோல்ட் கோஸ்ட்டில் சுங்கச் சாவடியில்  பொருள் வாங்கலாம், காப்பி அருந்தலாம் ஆனால் அமெரிக்கன் டாலர் கேட்கிறார்கள். நியூசிலாந்து பணத்தை வாங்க மறுக்கிறார்கள். ஆங்கிலமும் டாலரும் உலகத்தை அடிமையாக்கி விட்டிருக்கிறது.

மீண்டும் விமானத்துக்குள் நுழைந்தால் புதிய பணிப்பெண்கள் மலர்ந்த பூக்களாய் நின்று வரவேற்கிறார்கள்.  முன்பு இருந்தவர்கள் டியூட்டி முடிந்து கோல்ட் கோஸ்ட்டில்  இறங்கிவிட்டார்கள். நாங்களோ விடிந்தும் கசங்கிய மனிதர்களாய் களைத்துக் கிடக்கிறோம்.
அங்கிருந்து மூன்று மணி நேரப் பயணம் நியூ சிலாந்துக்கு. ஆக்லாந்தில் தரை இறங்கியபோது மாலை மணி நான்கு. புதிய நிலம், புதிய வானம், புதிய காற்று கைவிரித்து எங்களை அணைத்துக் கொள்கிறது.
என் மருமகன்தான் எல்லா ஏற்பாடுகளையும் இணையம் வழி செய்து முடித்திருந்தார். வாகன வாடகை, விடுதி (அப்பார்ட்மெண்ட்) வாடகை  இதில் அடங்கும். விமான நிலையத்திலேயே வேன் காத்திருந்தது. விமான நிலையத்தில் உள்ள லூசி கம்பனி கிளை அலுவலகத்தில் வேன் சாவியைப் பெற்றுக்கொண்டு கார் நிறுத்தகம் சென்று வேனைக் கண்டுபிடித்து விடுதியை நோக்கிப் பயணமானோம்.

வேனை எடுக்குமுன் அதன் எல்லாப் பகுதிகளையும் தன் கைப்பேசி வழி படம் எடுத்துக் கொண்டார். ஏனெனில் நாங்கள்  அதனை உபயோகிக்கும் இந்த பதினோரு நாட்களில் ஏதும் புதிய பழுதுகள் இருக்கக் கூடாது. இருந்தால்  அதற்கான நஷ்ட ஈடைக் கொடுத்தாக வேண்டும். எனவே நாங்கள் வேனை எடுக்கும் போது எப்படி இருந்தது என்பதை உறுதி செய்யவே இந்த முன்னேற்பாடு. எங்களுக்கு முன்னர் இதனை உபயோகப் படுத்தியவர்கள் பழுதாக்கி அது, உரிமையாலர் கண்ணுக்குப் படாமல் இருந்தால் ஆப்பு எங்களுக்குத்தான்.
விடுதியைக் கண்டுபிடிக்க பெரிய சிரமம் ஏதுமில்லை. இருக்கவே இருக்கிறது இடம் தேடித் தரும் மேஜிக் கருவி ஜி.பி.எஸ். அந்தக் கருவிக்கும் தனி வாடகைப் பணம் செலுத்தியாக வேண்டும். Wifi வசதி கொண்ட ஜிபிஸ் கருவி அது.. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவை மீறினால்  கூடுதல்   கட்டணம் உண்டு..
 விடுதியில் மூன்று இரண்டிரண்டு படுக்கை கொண்ட அறைகள். நாங்கள் மொத்தம் ஏழு பேர். என் மகள் மருமகன், அவர்களின்கடைசி பையன் சூர்யா, என் மருமகனின் நண்பர் சேது அவர் மனைவி செல்வி, என் மனைவி, நான்.  குளித்து முடித்துவிட்டு ஆக்லாந்து பட்டணத்தில் உணவுக் கடையை தேட ஆரம்பித்தோம். எங்கள் கெட்ட நேரம் ஒரு இந்தியர் உணவுக் கடை தென்பட்டது. சோறு கண்டால்தான் நமக்கு சொர்க்கம் ஆயிற்றே. சரி ஒரு தட்டு கோழிச்சோறு கேட்டு பசியோடு உட்கார்ந்தால் சாப்பிட முடியவில்லை. என் மகள் அதனைப் பார்த்துவிட்டு வேறு உணவுக் கடையைத் தேடிப் போய்விட்டாள். பயணக் களைப்பு இரவில் நெடு நேரம் சுற்றும் ஆவல் இல்லை. உணவுக் கடை தேடி அலைந்தார்கள். என் மருமகன் ஒரு பக்கம் தேட நானும் என் மனைவியும் பரிமாறப்பட்ட உணவில் வசமாய் மாட்டிக் கொண்டோம். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டோம். நான் வலிந்து வாயில் போட்டுக் கொண்டிருந்தேன். அவளை எப்படியாவது சப்பிட வைத்துவிட வேண்டுமென்று.
 இரண்டு வாய் சாப்பிட்டதும் என் மனைவி எனக்கு வேண்டாம் பிடிக்கவில்லை என்றாள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் கொடும் பசியாக இருந்தாலும் அமுதம் கூட அருந்த மாட்டாள்! எனக்குக் கோபம் வர ஆரம்பித்தது.

இந்த ஒரு தட்டு உணவின் விலை நம்மூர் பணத்துக்கு அறுபது ரிங்கிட். இப்படியா அனாமத்தாய் கொட்டுவது? என்றேன் .
நீங்களே சாப்பிடுங்கள் என்றாள்.
அவ்வளவையும் சாப்பிட்டு முடிப்பதற்கு நான் என்ன பீமனா? நீதானே வேண்டுமென்றாய் உட்கார்ந்து சாப்பிடு என்றேன்.
எனக்கு வேண்டாமென்று பிடிவாதம் செய்தால்.
சரி எனக்கும் வேண்டாம். நான் சாப்பிடும்    மனநிலையைக் கெடுத்துவிட்டாய், வேண்டாம் வா கிளம்பலாம் என்றேன்.
 இப்படி அவிச்சி கொட்டுனா எப்படி திங்கிறது? என்றாள்.
நீதானே வேண்டும் என்று கேட்டாய்? என்றேன்.
இந்த ஊர் மாடுதான் இதைத் தின்னும் என்றாள்.
மாட்டைப் பழிக்காதே. மாட்டுக்கு பிரத்தியேக புல் வைக்கோல் தருவார்கள் என்றேன்.
அப்ப்டின்னா நீங்க சாப்பிடுங்க என்றாள்.
ஒருநாள் முடியப் போகிறது இன்னும் சண்டைவரவில்லையே. சண்டை போடவில்லையென்றால் அந்த நாள் எங்களுக்கு முழுமையடைவதில்லையே! இது புதிய மண்ணில் முதல் அத்தியாயம்!
சரி இன்னொரு அறுபது ரிங்கிட்டுக்கு செலவு வரப் போகிறது, என்று நினைத்துக் கொண்டே உணவை பார்சல் செய்துகொண்டு வெளியே வந்தோம்.. கடைக்கு வெளியே வந்து என் குழுவைத் தேடினோம். என் மகள் மெக்டானல்டு கடைக்குள் இருந்தார். என் மருமகனும் சேதுவும் சீன உணவுக் கடையைத் தேடிப்போய் சீன உணவை வாங்கி வந்தனர். எல்லாரும் மெக்டானல்டு உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட்டோம்.
 இனிமே இந்த இந்தியக் கடைப் பக்கமே வரக்கூடாது என்று சொன்னாள் மனைவி. எதற்கும் கடைப் பெயரை நினைவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று பெயர்ப் பலகையப் பார்த்தோம். ‘அவிச்சி’ என்று எழுதியிருந்தது. தப்பு நம் மீதுதான். அவன் அவிச்சிப் போடப் போவதை   குறியீட்டு மொழியில் நம்மை எச்சரிக்கை  செய்தும் நாம் உஷாராய் இருக்கவில்லையே என்றேன்.
உணவின் பொருட்டு சிக்கல் உண்டானதும், அதனை  எங்கள் பயண நாட்களுக்கான   ஒரு மோசமான சமிக்ஞையாகக் கருதினோம்.  எப்படியாவது சமாளித்தாக வேண்டும்.
தொடரும்.....

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின