Skip to main content

பயணக் கட்டுரை 15 : இருபதும் எழுபதும்

15. பாதாளக் கிணறு.


காஞ்சிபரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்  தொன்ம நூல்களில் திருக்கச்சியேகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவும் ஒரு பாடல்பெற்ற தலம்தான்.திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் இத்திருத்தலத்தைப்பற்றி தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர். பௌத்த சமயமும்,சமண மதமும் கோலோச்சிய காலத்தில் சைவத்தை மீண்டும் நிறுவ, கோயில் கோயிலாகச் சென்று  பிரச்சாரம் செய்வதன்மூலம் இவர்கள் சைவ சமயத்தைச் செழிக்கச்செய்தனர். திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும், சுந்தரரும் வந்தடைந்த திருத்தலங்களில் ஒன்று ஏகாம்பரேஸ்வரர் ஆலயமாகும். இங்கு மூலவ மூர்த்தியாக இருப்பவர் சிவபெருமானும் காமாட்சியம்மனும் ஆவர். தேவாரத் திருப்பதிகங்கள் பாடிய இம்மூன்று சைவப் பெருமகனாரும் இக்கோயிலில் தேவாரம் இயற்றிப் பாடியமையால் இதுவும் பக்தர்கள் கூடும் திருத்தலங்களில் ஒன்றாக புகழுடன் விளங்கிவருகிறது.

பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலில் மகத்தான சிற்பங்களை இங்கே காணமுடியும்.  இது இரண்டாம் நரசிம்மப் பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது என்று விக்கி சொல்கிறது. இங்கே மேலுமொரு சிறப்பு விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரம்கால் மண்டபமும் ஒன்றுண்டு. ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் நம்மை மலைக்கவைக்கின்றன. எவ்வளவு காலம் எத்தனை சிற்பிகள் இக்கலைகோயிலை உருவாக்கினார்கள் என்று எண்ணும்போது வியப்பு மேலிடுகிறது. தமிழகக் கோயில்களில் இருக்கும் இதுபோன்ற 1000 கால் துலாபார மண்டபங்களுக்கு மன்னர்கள் பொன்னும் பொருளும் நன்கொடையளித்து, கருங்கல்லில் சிற்பங்கள் செதுக்க தங்கள் பங்கை அளித்துள்ளதாக வரலாறு சொல்கிறது.

அடுத்து காஞ்சிபுர கைலாசநாதர் கோயிலை அடைந்தோம்.காஞ்சிக்கு பயணமானது புண்ணியஸ்தலத்துக்கான பயணமாகவே ஆகிவிட்டது. அப்படியெல்லாம் பிளான் பண்ணிச் செல்லவில்லை.சென்னையில் மூன்று நாள் கழிக்கவேண்டியிருந்ததால் அதில் ஒரு நாளில் காஞ்சிபுரம் போலாம் என்று ஹரி முன்மொழிய அருமை நண்பர் பத்ரியின் உதவியால் காஞ்சி நகர ஸ்தலங்களைக் காண நேர்ந்தது. பக்திப் பயணத்திலும், பக்தி இலக்கியத்திலும் நான் என்னை ஈடுபடுத்திக்கொண்டதில்லை. போகிற போக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்து வைத்திருந்ததைத் தவிர. ஆனால் தம்பி ஹரிக்கு இதில் தீவிர ஈடுபாடு உண்டு. நான் வீட்டில் ஓய்வெடுக்கிறேன் என்று முதல் நாள் நள்ளிரவுக்குப் பிறகு முடிவெடுத்துவிட்டு நழுவிக்கொள்ளப் பார்த்தேன், ஆனால் அன்று அதிகாலையிலேயே காஞ்சி ஸ்தலங்களின் நாயகர்களான சிவனும், பெருமாளும் , நாயகி காமாட்சியும் என்னைப் பள்ளியெழச் செய்து இங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டனர்.

அதனால் சிற்பங்களின் நேர்த்தியை அதன் நுண்ணிய வேலைப்பாடுகளைப் கூர்ந்து பார்த்து வருகிறேன். மெல்ல மெல்ல எனக்குப் புலனாகிற மாதிரியும் தெரிகிறது புலனாக நிலையும் சூழ்கிறது. அதனால் மேலும் சிற்பங்களைப்பற்றி அறிந்துகொள்ள விக்கிப்பிடியா, இந்தா பிடியா என்று  எனக்கு அறிவு புகட்டிக்கொண்டிருக்கிறது. தொன்மக் கலை இலக்கியம் இவற்றைத் தேடல் மூலம் ஆழ்ந்தறிவது பேரின்பமாகும். துல்லியமாய்ச் செய்திகள் சொல்லியாக வேண்டும், எனவே தேடலில் கிடைத்ததை உள்ளது உள்ளபடி உரைக்கவேண்டும். என் புனைவிலக்கிய கற்பனைக்கு இங்கு சற்றும் இடமில்லை! இன்னும் சில ஜென்மங்கள் எடுத்தாலும் தமிழகத் திருத்தலங்களைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியாது போலும்.

கைலாசநாதர் கோயில் இரண்டாம் நரசிம்மப் பல்லவரால் கட்டப்பட்டது என்பதை தெரிந்துகொண்டோம்.இக்கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பக்கலை தோன்றிய தொடக்க காலத்தவை என்று சொல்லப்படுகிறது.அங்குள்ள சிற்பங்களும் சற்றுச் சிதலமடைந்த நிலையில் உள்ளன. ஆனாலும் தொட்டுணரவும், படங்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கிறார்கள்.
கோடிக்கனக்கான விரல்களின் தொடுதல்களிலும் வெயில் மழை போன்ற இயற்கை மாறுதல்களிலும் சிற்பம் அதன் நுட்ப வேலைப்பாடுகள் தேய்வுநிலை அடைகின்றன என்பது சிற்பங்களைப் பார்க்கும்போது உணரமுடிகிறது. தொட்டுணரவும் சாய்ந்து படம் எடுக்கவும் தடை விதித்தால் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு இச்சிற்ப நுடபக்கலை நின்று பிடிக்கும். இவ்வேலைப்பாடுகள் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டி முடிக்கப்பட்டது எனவும், பின்னர் 14ம் நூற்றாண்டில் விஜய நகரக் காலத்தில் சீர் செய்யப்பட்டது எனவும் வரலாறு பதிவு செய்கிறது. பல்லவர்களுடைய கட்டடக் கலைகளிலேயே மிகவும் உன்னதக் கலையம்சம் கொண்டது கைலாசநாதர் கோயில் என விக்கி குறிப்பிடுகிறது.

இந்த ஆலயம் பல கேள்விகளை நம்மிடையே எழுப்புகிறது. மூலஸ்தானத்தை நாம் கற்பகிரகம் என்றும் சொல்வோம். இந்த ஆலயத்தின் கற்பக்கிரகத்தின் சுற்றத்தில் ஒரு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தான வாயிலின் இடதுபுறத்தில் உள்ள குறுகிய பாதைவழி நாம் உடல் சுருக்கிக் குனிந்து உள்ளே சென்று, அந்த கற்பக்கிரகத்தை ஒரு வளம் வந்து, வலப்பக்கத்தில் உள்ள குறுகிய வாயில்வழி வெளிவருகிறோம். நுழைந்தவாயில் நரக வாசல் என்றும், வெளிவந்த வாசல் சொர்க்க வாசல் என்றும் அங்குள்ள பிரதான ஐயர் விளக்கினார். கைலாசநாதரை வணங்கி பாவம் துறந்த நிலையில், கற்பப்பையிலிருந்து குழந்தை வெளிவருவதுபோல இந்த கற்பக்கிரகத்திலிருந்து நாம் பரிசுத்தமாய் வெளிவருகிறோம் என்று நம்பப்படுகிறது.
இந்தக் கோயிலின் கட்டமைப்பு எல்லோரா குகையிலுள்ள மிகப்புகழ்பெற்ற குடைந்து கட்டப்பட்ட கைலாசா ஆலயத்தை ஒத்திருப்பது வியத்தகு விடயம். எந்த ஆலயம் எதனை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது? வரலாற்றின் கூற்றுப்படி காஞ்சி கைலாசநாதர் கோயில் எல்லோரா கைலாஷாவைவிட 50 ஆண்டுகள் மூத்தவர். உள்ளூர்வாசிகளும் சில ஆய்வாளர்களும் காஞ்சி கைலாசநாதர் இன்னமுமே பல ஆண்டுகள் முந்தையவர் என்று சொல்கின்றனர். எப்படி பார்த்தாலும், இவர்தான் மூத்தவர்.
இவ்விரு ஆலயங்களிலுமே, சொல்லி வைத்தார்போல் மொத்தமாக 56 இரகசிய தியான அறைகள் உள்ளன. ஹரி அங்கே தியானம் செய்தார். இந்த ஆலயம் இக்காலத்திய "ஜியோபோலிமர்" தொழில்நுட்ப அடிப்படையில் அந்தக் காலத்தில் கட்டப்பட்டிருப்பது நமையெல்லாம் வாய்பிளக்கச் செய்கிறது. இவ்வாறாக இந்த ஆலயம் பல விடயங்களைத்  ( நான் சொல்லாதவை இன்னமும் நிறைய உள்ளன. விக்கி தம்பியை நாடவும் ).தன்னுள் தாங்கி இன்றளவும் காஞ்சிபுரத்தின் புராதன வழிபாட்டு மற்றும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

நான் விநோத  முகங்களைப் படம் எடுத்துக்கொண்டிருந்தேன்.இந்தக் கோயில் வளாகச் சுவர் ஒன்றின்மீது ஒரு வெள்ளையப் பெண் அமர்ந்திருந்தாள்.அவர் முகத்தோற்றம் என் கலைப்படங்களுக்கு ஏற்புடையதாக இருந்தமையால் நான் அவளிடம் அனுமதி கேட்டேன். அவள் நோ என்றாள். சில முகங்களை உங்கள் பார்வைக்குக் கொணருகிறேன்.






அங்கிருந்து சற்று தூரத்தில் காஞ்சிபுரத்தின் ஒதுக்குப்புறத்தில் நடைவாய் கிணறு ஒன்றுள்ளது. இது சாதாரணக் கிணறு போலல்லாமல் நீர் தேங்கி  நிற்கும்  ஆழமான ஏரிபோல உள்ளது. சித்ரா பௌர்ணமிக்குச் சில தினங்கள் இருக்கும்போது இக்கிணறு இறைக்கப்படும். அப்போது உள்ளே உள்ள சிற்பக்கலை நிறைந்த அம்சங்களை நன்றாகப் பார்க்கமுடியும். இக்கிணற்றூக்குள் இன்னொரு கிணறுண்டு.
அந்தக் கிணற்றைச் சுற்றி நடந்து செல்ல தாழ்வாரம் உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று  வரதராஜ பெருமாளின் உற்சவ மூர்த்தி கிணற்றுக்குள் இறக்கப்பட்டு பின்னர் மூன்று முறை அவ்வளாகத்தை சுற்றி வலம் வருவார். 
அவ்வைபவம் முடிந்து மீண்டும் வரதராஜப்பெருமாளை கோயிலுக்கே கொண்டு போய்விடுவர். உள்கிணற்றின் நான்கு பங்கங்களில் ஒரு பக்கத்தில் , 4 அடிக்கும் ஆழமான ( இதுவரையில் கிடைக்கப்பட்டத் தரவுகளின் அடிப்படையில், அந்த அளவு வரைக்குத்தான் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கும் ஆழச் சென்றதில்லை எனவும் தெரியவருகிறது. எனவே, இந்தத் துவாரத்தின் உண்மையான உயரம் தெரியாது. அப்போதிருந்த நீர் மட்ட அளவோடு அளக்கையில் 4 அடிக்கும் கூடுதலாக இருந்தது. ) துவாரம் ஒன்று இருக்கிறது. இக்கிணற்றின் ஆழம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது. அந்தத் துவாரம்  எதுவரை தோண்டப்பட்டு எந்த இடத்தை இலக்காகக் கொண்டது என்று யாருக்கும் தெரியாது. கோயிலுக்கான சுரங்கப்பாதையா அல்லது அரண்மனைக்கான ரகசியப் பாதையா என்று யூகிக்கமுடியவில்லை. இது எதனால் அமைக்கப்பட்டது என்ற ரகசியம் வெளியாகவில்லை.அரச ரகசியமாகவோ, கோயிலின் ரகசியமாகவோ இருக்கலாம். நீங்கள் பார்க்கும் அரண்மனைக் கிளி விஜய் தொடர் நாடகத்தில் இக்கிணற்றைத்தான் ஜானு வழிபடச்சென்ற வாசுகி நாகத்தின் கோயிலாகக் காண்பித்தனர்.  சித்ரா பௌர்ணமி முடிந்து இக்கிணற்றின் நீரளவு தானாகவே கூடும்.
எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த வரதராஜ பெருமாள் கோயிலின் அத்திவரதர் வெளியெடுக்கப்பட்டு 48 நாள்களுக்குக் காட்சிக்கு வைத்திருக்கும் காலங்களில் ரொம்பாத குளம், அவரைக் குளத்திற்குத் திருப்பியப்பின், சில தினங்களிலேயே மழை பெய்து நிரம்பும். அதையொத்த மர்மம் இங்கேயும் நிகழ்கிறது, ஓர் அளவுக்கு நிறைந்தவுடன் இந்தக் கிணறு நிரம்புவதை நிறூத்திக்கொள்ளும்.  உற்சவ மூர்த்தி சித்ரா பவுர்ணமிக்கு இங்கு கொண்டு வருவதன் நோக்கம் எதற்கு என்பது இதுநாள் வரை புதிராகவே உள்ளது.

இரவு சூழ்வதற்குள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்றாகவேண்டும்.
இக்கோயில் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த புரட்சி கவிஞர் பாரதியாரை உங்கள் நினைவுக்குக் கொண்டு வரலாம். 1921-ஆம் ஆண்டு பாரதி இங்கேதான் யானையால் தாக்கப்பட்டான் என்ற வரலாறு உண்டு. இக்கோயிலில் பாரதியின் 'கால் தடம்'  பதிவாகி இருக்கிறது என்பதற்காகவே வந்தோம். யானையால் தாக்கப்பட்ட பின்னர் அவன் வயிற்றுப்போக்கு  நோயால் உயிர்துறந்தார் .
கோயிலில் இசைவிழாக் கோலம் பூண்டிருந்தது. நாங்கள் போன நேரம் பூசை நேரம். தீர்த்தத்தை வாங்கிக்கொண்டு சில ஐயர்களை பாரதி எந்த இடத்தில் கோயில் யானையால் தாக்கப்பாட்டர் என்று கேட்டேன். குறைந்தது ஐந்து பேரிடம் விசாரித்தேன். பலர் அக்கறையில்லாமலேயே தெரியாது என்று கைவிரித்தனர். அந்த இடத்தை குறைந்த பட்சம் படம் எடுத்துக்கொள்ளலாம் என்ற என் நோக்கம் நிறைவேறவே இல்லை.

 இதற்கிடையில் மெரினா பீச்சில் இருக்கும் சுந்தரி அக்காவைக் காணத் துடித்துக் கொண்டிருந்தார் ஹரி. எத்தனையோ மாதங்கள் ஹரி அவருக்காகக் காத்திருக்கிறார். எங்கள் கார் மெரினாவுக்குப் பறந்தது.

நிகழும்.....





Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின