Skip to main content

பயணக் கட்டுரை 5 : இருபதும் எழுபதும்.


5. கீழடி நிலப்பகுதியும் மதுரைத் தமிழ்ச்சங்கமும்

தஞ்சையிலிருந்து மதுரைக்கு  நெடு நேரப் பயணம்பயணம் செய்த எங்களுக்கே களைப்பு உடலை வருத்தியது என்றால் ஓட்டுனரின் நிலையைச் சொல்லவேண்டியதில்லை. ஆனாலும் கீழடியைப் பார்க்காமல் அந்த நாள் நிறைவு பெறாது. கடந்த ஓராண்டாகக்  கீழடி பற்றிய அகழ்வாராய்ச்சித் தகவல்கள் பிரமிப்பை உண்டாக்கிய வண்ணமிருந்தன. எனவே உள்மன எழுச்சிகொண்டு எங்களை உந்தித் தள்ளியபடி இருந்தது கீழடி.

முதலில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் இருக்கும் அகழ்வாராய்ச்சிப் பொருட்களைக் காணச் செல்வதா அல்லது அகழ்வாராய்ச்சி நடந்த நிலத்தைப் பார்க்கச் செல்வதா என்று முடிவெடுக்க முடியாமல் இருந்தோம். பேராசிரியர் வல்லபாய் (டாக்டர் மிமியின் தந்தை) நிலத்தை முதலில் பார்க்கலாம் என்றார். சிலர் அங்கே  அகழ்ந்தெடுத்த அடையாளமே இல்லை, இப்போது பார்க்க என்ன இருக்கிறது என்றனர். குறைந்தபட்சம் அந்த மண்ணில் எங்கள் பாதம் படவேண்டும் என்ற அவா நீர்க்குமிழிபோல தீர்ந்துவிடாமல் இருந்தது. 
ஹரி , நான்,மிமி,பேராசிரியர்

கிட்டதட்ட 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்கள் சுவாசித்த காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. எனவே , முதலில் அங்கே போவதாக முடிவெடுத்தோம். ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுக்குப் பின்னர் பெரிய அளவில் அகழ்வாராய்ச்சி கீழடியில்தான் நடத்தப்பட்டது. சுமார் 2600 ஆண்டு பழமை வாய்ந்த தொல்லியல் பொருட்கள் இந்த வைகை நதிக்கரையில் கிடைத்துக்கொண்டிருப்பதாக செய்திகளை ஊடகங்கள் சுடச் சுடத் தந்தவண்ணமிருந்தன.வைகை நதிக்கரை அக்காலத்தில் வணிகத் துறைமுகமாக செயல்பட்டதன் காரணமாக இங்கே முன்னர் ஆய்வுகள் நடத்தப்பட்டு நிறுத்தப்பட்ட நிலையில் இங்கே நடந்த எதேச்சையான ஒரு சம்பவம் அகழ்வாராய்ச்சிக்கு வழிகோலியது. கீழடியில் செங்கல் சூலைக்கு மண் எடுப்பதற்காகத் தோண்டப்ப்பட்டபோது  ஒரு செங்கல் சுவர் தட்டுப்பட்டு,  அது என்ன ஏது என்று விசாரிக்க, சுவர் தொல்பழங்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கவேண்டுமென்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதற்கு பின்னர் அகழ்வாராய்ச்சியாளர்களைத் தொடர்புகொண்டு சொல்லியிருக்கிறார், அந்த நில உரிமையாளர். தொடர்ந்து   
வேட்டியில் நில உரிமையாளர் கருப்புச்சட்டையில் முனைவர்
அகழாய்வுகள் செய்ய பல குழிகள் தோண்டப்பட்டன. அதன் பலனாக தமிழரின் தொன்ம வாழ்வியலை அடையாளங்காட்டும் பல் பொருள்கள் கிடைத்துள்ளன .சிந்து சமவெளி, கங்கை கரை நாகரிகம் அந்நாளைய தமிழர் வாழ்வை, பண்பாட்டை திட்டவட்டமாகச் சொல்லவில்லை என்பது  அறிஞர்களின் பரவலான கூற்று. ஆனால் கீழடி அகழாய்வுகள் முற்றும் முழுக்க தமிழர் பண்பாட்டை 2600 ஆண்டுகளுக்கு முன்னரான நாகரிகத்தை தெள்ளத் தெளிவாகக்  காட்டின. இந்தத் தகவல்கள் உலகத் தமிழர்களின் நெஞ்சை நிமிர வைத்தன.
 நெடுஞ்சாலையிலிருந்து அந்நிலப்பகுதி வெகுதூரமில்லை.எங்களை அழைத்துச் செல்ல டாக்டர் மிமியின் உறவினர் சாலையோரத்தில் காத்திருந்தார்கள். அவர் ஒரு பல்கலையின் தமிழ்ப் பேரசிரியர்.
அந்நிலத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருந்ததுஏனெனில் நாங்கள் எதிர்பார்த்ததுபோல அகழ்வாராய்ச்சி செய்த தடயங்கள் ஏதுமற்று யானைச் சோளம் பயிரிடப்பட்ட பச்சைச்  சோளவயலில் இளம் கதிர்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. இளவெயில் நேரம். மிதமான காற்று வீசிக்கொண்டிருந்தது, நில உரிமையாளர் அங்கேதான் இருந்தார்.

வைகைக் கரை என்று சொன்னார்களே வைகை நதியின் அடையாளமே இல்லையே என்று கேட்டேன். ஒரு காலத்தில் வைகை நதி  ஓடிய நிலம் பிற்காலத்தில் நில அமைப்பு மாறிவிட்டது என்று பதிலுரைத்தார். எவ்வளவு காலத்துக்கு நில மைப்பு மாறாமல் இருக்கும்? மழையும் வெயிலும் காற்றும் இல்லாமல் இருந்தால் ஒருவேளை அமைப்பு மாறாமல் அப்படியே இருக்கும்.
எங்கே அகழ்ந்தெடுத்த பகுதிகள் எனக் கேட்டேன். போதுமான அளவு பொருட்கள் கிடைத்துவிட்டன. கிடைத்தவரை தமிழரின் நாகரிகம் 2600 ஆண்டுகள் இருந்த வரலாற்றைத் துல்லிதமாய்ச் சொல்கிறது.எனவே நிலத்தை நில உரிமையாளரிடமே ஒப்படைப்பது நல்லது. அதனை வைத்திருப்பதில் அரசுக்கு எந்தப் பயனுமில்லை என்று எங்களுக்கு வழிகாட்ட வந்திருந்த டாக்டரின் உறவினர் ஒரு முனைவர் சொன்னார்.சோளச்செடிகள் டி வரை வளர்ந்து உயர்ந்து நிலத்தின் தோற்றத்தை மாற்றிவிட்டிருந்தது. அங்கே இருப்பதில் பலனில்லை என்று கூறிக்கொண்டிருந்தது அந்த நிலம். நில உரிமையாளர் சொன்னார்,நான் நெலத்த ஆய்வுக்கு எடுத்துக்குங்க என்று சொன்னேன், ஆனா அரசு வேணாம்னு மறுத்துடுச்சு என்றார். நம் தொன்ம வரலாற்றை அறிந்துகொள்ள அவரின் அரிய தியாகமாகவே அதனை நான் கருதினேன்.

அங்கிருந்து புறப்பட்டு மதுரைத் தமிழ்ச்சங்கக் கட்டடத்துக்குச் சென்றோம்
மதுரையில்தான்டைச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டிருக்கிறது. அதன் நீட்சியாகவே மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கக் கட்டடம் புத்தம் புதியதாக காட்சி தந்தது . கம்பீரமான திருவள்ளுவர் சிலை எங்களை வரவேற்றது. சுற்றுச் சுவர்களில் 1330 குறள்கள் எழுதப்பட்டு பொருளும் எழுதப்பட்டிருந்தன. அகழ்வாய்வுப்பொருள்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதால் கடைத் தமிழ்ச்சங்கப் புலவர்கள் ஆன்மாவின் வாசம் வீசியது.

ஆயிரக் கணக்கான அகழாய்வு பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆய்வுபற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தையும் ஒரு பெரிய பதாகையில் அச்சிட்டு
பதாகை
சுவரில் பார்வைக்கு அல்பமாக காட்சி தந்தது. வெளி நாட்டிலிருந்து ஆயவைப்பற்றி அறிய வந்திருந்த குழுக்களுக்கு விளக்கம் அளிக்கபட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தோம்..

ஆய்வில் கிடைக்கப்பட்ட 1000க்கணக்கான பொருட்கள் பெயரிடப்பட்டு விளக்கங்களும் புரியும்படி இருந்தன. நாங்கள் வந்த செய்தி அறிந்த அகழ்வாய்வுக் குழுவில் முழுமையாக ஈடுபட்ட முனைவர் ஆசைத் தம்பி எங்களுக்கு விளக்கம் அளிக்க உடனே  வந்து சேர்ந்தார்.என் பல சந்தேகங்களுக்கு தெளிவை அளித்தார். அதில் ஒரு கேள்வி , தமிழர்கள் சார்ந்த நாகரிகம் தொல்லியல் ஆய்வில் கிடைக்கப்பெற்றதால் அதனை இருட்டடிப்பு செய்ய மத்திய அரசு அகழாய்வை பாதியிலே நிறுத்தியாக ஊடகம் வழி வாசித்தேனே உண்மையா என்றேன். தமிழர்களின் நாகரிகம் உலக நாகரிகத்தில் முற்பட்டது என்ற செய்தி அவர்களுக்கு உவப்பானதாக அமையவில்லையா எனவும் கேள்வி எழுப்பினேன்.அப்படியெல்லாம் இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்தார். இதே தமிழ்ச்சங்கக் கட்டடத்தில் சமீபத்தில் நடந்த ஒர் ஆய்வரங்கில் வட நாட்டுப் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர் என்றார். அவர்களும் இதனைக் கொண்டாடினர். அகழாய்வின் முடிவை அவர்களும் ஏற்றுக்கொண்டனர் என்றார். நடுவன் அரசு இந்த ஆய்வை முழுமையாக ஆதரித்தது என்றார்.ஆனால் முனைவரின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்போதுமே இவ்வாறான விடயங்களில் அரசியல் புகுந்துவிடுவதுண்டு. அதனை அடுத்த கட்டுரையில் எழுதுவேன்.
கீழடியில் நடந்த 5 கட்ட ஆய்வின் இறுதிக் கட்டத்தில்தான் மிக முக்கியமான  பொருட்கள் கிடைத்தன அவையே தமிழர் நாகரிகத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பறைசாற்றின என்றார். மன்னர்கள் மேட்டுக்குடியினர் மட்டும் எழுத்தறிவைப் பெறவில்லை, சாதாரண குயவர்கள் கூட எழுத்தறிவுள்ள சமூகமாக இருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் அங்கே இருந்தன. அவற்றில்  பிராமி எழுத்துகள் கீறப்பட்டிருந்தன. அதனை பிராமி எனச் சொல்வதைவிட தமிழி என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்றார் முனைவர் ஆசைத்தம்பி. தமிழ்ப்பிராமி என்று அதனை வகைப் படுத்தினார். பிராமி எழுத்துகளில் சில அசோகர் காலத்து எழுத்து வகை ஒன்றுண்டு. ஆனால் இது தமிழ் பிராமி.
தமிழ்ச்சங்கத்ததின் முனைவர் ஆசைத்தம்பி குழந்தைக்குப் பின்னால்
தமிழி கல்வெட்டுகள் குகைகளில் வாழ்ந்த துறவிகளின் கல்லாலான படுக்கைகள் கிடைத்தன என்றார். கிட்டதட்ட மதுரை பட்டணம் முழுதும்  வைகை நதி ஓடிய கரைகளில் மேலும் தொல்லியல் பொருள்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.பெரு நகரமாக வளர்ந்துவிட்ட நிலையில் அகழாய்வு செய்வது சாத்தியமல்ல என்றார்.
கிட்டதட்ட 500 பொருள்கள் ஆதாரமாகக் காட்சி தந்தன.பானை ஓடுகள் அவர்கள் தண்ணீர் எடுக்கப் பயன்பட்டிருப்பதைச் சான்றுகள் கூறின. சமைப்பதற்கும் பயன் பட்ட இவற்றுக்குக் கூடுதல் சான்றாக இரும்பால் ஆன அடுப்புகளும் கிடைத்திருக்கின்றன.2600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர அமைப்பும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சாலை அமைப்பு , நீர்க்குழாய் அமைப்பு, கிணறுகள் என வியக்கவைக்கும் சான்றுகள் தமிழரின் நாகரிகத்தைப் பறைசாற்றுகின்றன. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தில் கிடக்கப்பெற்ற திருக்குறள் தமிழரின் அறிவாற்றலைப் பறை சாற்றினாலும் அது 2000 ஆண்டு பழமை வாய்ந்தது என்று துல்லியமாகச் சொல்ல முடியவில்லை இந்த அகழ்வாய்வுக்குப் பிறகு. மூன்றாம் நூற்றாண்டில் கிடைத்த அரிய நூல் பதினென்கீழ்க் கணக்கு. இத்தொகை நூலில் திருக்குறள் இடம்பெற்றிருக்கிறது . மூன்றாம் நூற்றாண்டு என்று சொல்லும்போது கீழடி நாகரீகத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறது என்பது தெளிவு. ஏனெனில் கீழடி நாகரிகம் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கணிக்கிறார்கள். இந்த அகழாய்வுச் சான்றுகளின் வழி இந்தக் காலக்கணக்கு மிக சரியெனத் திட்டவட்டமாய்ச் சொல்கிறது.


நிகழும்...



Comments

சிறப்பாகச் செல்கிறது. அரிய தகவல்கள்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த