இம்முறை வல்லினம் விருது பி.எம்
மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப்
பகிர்வு இது.
மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான் சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது, சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ணீர் ஊற்றியும் வெப்பத்தைக் குறைக்க முடியாமல் போனபோதுதான் அது அசட்டுத்தனம் என்று புரிந்தது. நான் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுங்கைப் பட்டாணிக்கு ஓடிப்போய் இழந்த தூக்கத்தை மீட்டுவிடுவேன். மூர்த்தியும் காணாமற்போய்விடுவார். அவருக்கு பீடோங் கெடாவில் உறவினர் இருந்திருக்கலாம். ஆனால் அதிர்ஸ்டவசமாக அந்த அறையின் வெப்பத்தை மறைக்க எங்களிடம் இலக்கியம் இருந்தது. உள்நாட்டு இலக்கியம் பேசிப் பேசி சமன்செய்துகொண்டோம்.
| கேமரன் மலையில் தலைமை ஆசியரியர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை ஒன்றில் மூர்த்தியின் இலக்கியப் பாட சாதனையை ஒட்டி நான் வாழ்த்துக் கவிதை வாசித்தபோது. |
என்னை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார் மூர்த்தி. முதல் அறிமுகக் கைகுலுக்கிலேயே
கோ.புண்ணியவானா என்று ஒரு வியப்போடு மகிழ்ந்தார். நான் அப்போது எழுதிய கதை கவிதைகளை
நினைவு கூர்ந்தார். அவரும் புனைவுகள் எழுதியதாகச் சொன்னார். ஆனால் நான்
அப்போதைக்கு வெளிவந்த காகித ஊடகங்களில் அவர் பெயரை வாசித்திருக்கவில்லை. ஒரு மாத
காலம் ஐ ஏ பியில் குறுகிய கால பயிற்சியில் இருந்தபோது பெரும்பாலான முக்கிய எழுத்தாளர்கள்
எழுதிய புனைவுகளைப்பற்றிச் சிலாகிப்பார். எனவே அந்த ஒரு மாதகால வெப்பத்தை எங்கள்
இலக்கிய உரையாடல் தணித்துவிட்டிருந்தது.
சில
ஆண்டுகளுக்குப் பிறகு அவரை நான் பள்ளிச் சோதனை வாரிய அதிகாரியாகச் சந்திக்க
நேர்ந்தது.
அவர் தலைமை ஆசிரியப் பணியிலிருந்து பள்ளிச் சோதனை வாரியத்துக்கு அதிகாரியாகப் போனபோது
அடிக்கடி தலைமை ஆசிரியர்,
ஆசிரியர் கூட்டங்களுக்கு அரசு சோதனை முறைமைகள் சார்ந்த விவரணைகளைப் பற்றி உரையாற்றுவார்.
அவ்வாறு நடந்த கூட்டங்களில் கண்டிப்பாக எஸ்பி எம் சோதனை பாடம் பற்றியதாகவும் இருக்கும். அப்பாடம் சோதனை பட்டியலிலிருந்து நீக்கப்படும்
அபாயம் நெருங்கிகொண்டிருப்பதாக எச்சரித்துக்கொண்டே இருந்தார். (நீக்கப்பட்டுவிட்டால்
பின்னர் அதனை மீண்டும் சோதனைப் பாடமாக கொண்டுவர முடியாது. தெலுங்கு மொழிப்
பள்ளிகள் இதற்கோர் உதாரணம். மாணவர்களின் எண்ணிக்கை சரிந்த பின்னர் பள்ளிகள்
மூடப்பட்டன. தெலுங்குச் சமூகம் அரசின் கதவை எவ்வளவு தட்டியும் பள்ளிகளை மீண்டும்
நிறுவ இணங்கவில்லை). மேலதிகாரிகள் தமிழ் இலக்கியப் பாடம் விரைவில்
நீக்கப்படவேண்டிவரும் என்று உயர்மட்ட கூட்டங்களில் பேசி வருவதாகச் சொல்வார். குறிப்பிட்ட
எண்ணிக்கைக்கு குறைந்ததும் சோதனையில் அப்பாடம் அகற்றப்படும் என்றும் அபாய நிலையைச்
சொல்லி ஆசிரியர்களின் கவனத்தை ஈர்த்தார். உள்நாட்டு இலக்கிய வளர்சிதை மாற்றங்களை
உன்னிப்பாகக் கவனிக்கும் ஒருவரால் மட்டுமே அதன் இல்லாமை அபாயத்தை உளப்பூர்வமாக உணர
முடியும். இலக்கியமே வாசிக்காதவர்கள் அல்லது ஈடுபாடு இல்லாதவர்கள் அதிகாரிகளாக
நியமிக்கப்பட்டிருந்தால்,
நேரப்போகும் இந்த இழப்பை உணர்ந்திருக்கவே வாய்ப்பில்லை. மூர்த்திக்கு முன்னால்
இருந்த சோதனை வாரிய அதிகாரிகள் இந்தப் பாடத்தை எடுக்கும் எண்ணிக்கையின்
தேய்மானத்தைப் பற்றி அழுத்தத்திருத்தமாகப் சமூகத்தின் கவனத்துக்குக்
கொண்டுவரவில்லை,
என்பது கல்விப்புலம் சார்ந்து இயங்கியவர்கள் நன்கு அறிவர். நல்ல வேளையாக மூர்த்தி ஒரு
படைப்பாளியாக உள்நாட்டு இலக்கியப்போக்கை அறிந்தவராக இருந்ததால் தொடக்கத்திலேயே
அந்த இழப்பின் நீட்சி எவ்வாறிருக்கப்போகிறது என்பதை ஊகித்திருந்தார். எனவே
இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள்,
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை
ஆசிரியர்கள்,
பெற்றோர்கள், சமூக இயக்கங்கள் என எல்லாத் தரப்பினரிடமும் இந்த ஆபத்தைப் பற்றித் தொடர்ந்து
பேசிக்கொண்டே இருந்தார். தான் இருக்கும் அந்த இடம் வயிற்றுப் பிழைப்புக்காக
வருமானம் ஈட்டும் இடம் மட்டுமல்ல,
நாட்டில் படைப்பிலக்கியம் விதைக்கப்படுவதற்கான அடிப்படையான விளைபூமி என்று
உணர்ந்ததாலேயே அப்பாடம் எடுக்கும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தவேண்டிய காட்டாயத்தை
எல்லாருடைய மனதிலும் ஊன்றினார். சமுகத்தில் உள்ள எல்லாத் தரபினரிடையே இந்த
விழிப்புணர்ச்சியைத் தூண்டினாலொழிய இது வெற்றிபெற சாத்தியமில்லை என்று முறையாகத்
திட்டமிட்டார். அதற்கான மும்முரம் அவருடைய சொற்களின் ஊடுபாவாக பயணித்துக்கொண்டிருந்தது. அதன்
காரணமாகச் சரிவை நோக்கி வீழ்ந்துகொண்டிருந்த எண்ணிக்கை தலைகீழ் மாற்றங்கண்டு, ஒவ்வோராண்டும் மெல்ல மெல்ல
உயர்ந்துகொண்டிருந்தது.
பணி
ஓய்வு பெறும்வரை தான் ஆற்றும் பணியில் எந்தப் பிரச்னையும் உண்டுபண்ணிவிடக்கூடாது
என்றும், எந்தப் பிரச்னையிலும் தலையிடக்கூடாது என்று
வியூகம் வகுத்துப் பணியாற்றும் பல அரசு மேல் அதிகாரிகளை நாம் சந்தித்திருக்கிறோம்.
வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி செயல்படுவது
ஆபத்தானது என்று தங்களை ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே நிறுத்திக்கொண்டு
களமாடுவார்கள். மாறாக மூர்த்தியிடம் இந்தப் பாதுகாப்பு அரண் இல்லை. இலக்கியமே
முக்கியம் என்று நினைத்து செயல்பட்டார். இது அவருக்கு இடப்பட்ட வேலையல்ல.ஆனாலும் அவரே அப்பாடத்தின்
முக்கியத்துவம் கருதி முன்னெடுத்த செயல். அதனால் அவர் சில இடையூறுகளைக்கூடச் சந்திக்கவேண்டி
வந்திருக்கலாம்.
ஆனால்
அவ்வளவு எளிதில் இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்திவிட
முடியாதபடி சில தடைகள் பெரும்பாறைகளாய் எதிரே நின்றன.
1. . 1. இடைநிலைப்பள்ளி
முதல்வர்களுக்கு இதில் அக்கறை இல்லை. இப்பாடம் போதிக்கப் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள்
இல்லாததாலும், தோல்விகண்டால்
பள்ளியில் ஒட்டுமொத்த சோதனை முடிவுகளை கீழே தள்ளி பள்ளியின் பெயரைக்
கெடுத்துவிடும் என்றும் காரணம் காட்டி தமிழ் இலக்கியத்துக்குக் குறுக்கே
நின்றார்கள். ‘தாங்களே
சுயமாகப் படித்துக் கொள்கிறோம்’ என்று
வாய்ப்பு கேட்டு முன்வந்த மாணவர்களை அவர்களின் அதிகாரம் அவர்களைப் பின்வாஙகச்
செய்தது.
2. 2. இடைநிலைப்பள்ளிகளில்
தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் எஸ்.பி.எம்மில் தமிழ்பாடத்தில
தேர்ச்சிபெற்றவர்களைத் தமிழ்மொழிப்பாடம்
போதிக்க நியமித்தத்தும் ஒரு காரணம்.
3. 3. பெற்றோர்களேகூட
இப்பாடத்தை எடுக்கவேண்டாம். தமிழ் இலக்கியம் சோறு போடாது என்று தன் பிள்ளைகளைத்
தடுத்தனர்.
4. 4. எஸ்.பி.எம்
சோதனையில் மாணவர்கள் எடுக்கக்கூடிய பாடங்களில் தமிழும் தமிழ் இலக்கியமும் கடைசி
உபரித் தேர்வாகவே வைக்கப்பட்டது இன்னொரு தடை.
5. 5. பள்ளியில்
தமிழ் மொழி பாடம் போதிக்கும் ஆசிரியர் ‘தான் ஒரு தமிழ் ஆசிரியராக’ அடையாளப்படுத்தப் படுவதைக் கேவலமாக நினைத்தார்கள். இவர்கள்
மாணவர்களின் ஆர்வத்தைக் குறைப்பவர்களாகவும் இருந்தார்கள். ஆனாலும் பல ஆசிரியர்கள்
தமிழ் மீது மாறாத பற்றுகொண்டவர்களாக இன்றும் இருக்கிறார்கள். இவர்கள்தான்
மூர்த்தியின் திட்டத்தை வெற்றிபெறச் செய்யத் தன்னலம் கருதாமல் உழைத்தவர்கள்.
6. 6. ஆரம்பப்
பள்ளியில் படித்த தமிழே போதுமானது, அதுவே
தங்களுக்குள்ள தாய்மொழிப்பற்றைப் பறைசாற்றுவதற்கான ஆதாரம் என்றே பல பெற்றோர்கள்
கருதினர். எனவே தம் பிள்ளைகளுக்குக் கூடுதல் தமிழ் தேவையற்ற சுமை என்று
இலக்கியப்பாடத்தை ஓரம் தள்ளினர். தமிழ் மொழிப்பாடத்தையும்தான்!
ஈ இந்தச் சிரமங்களையெல்லாம் கடந்து வந்து களைத்துப்போய் நிற்கும்போது, இலக்கியத்துக்கான பாட நூல்களும் பயிற்சி நூல்களும் இல்லாமை இன்னொரு பெரும் சோதனை. தேவையான இலக்கிய பாட நூல்களை எழுத வைத்து யாராவது செல்வந்தர்களின் கைகாலைப்பிடித்து நுலாக்கி மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் வண்ணம் தொண்டாற்றியதும். மூர்த்திதான். அதற்கு மூர்த்திக்குக் கைகொடுத்த ஆசிரியர் பெருமக்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இவ்வாறான இடர்களையெல்லாம் முறியடிப்பதென்பது எளிமையான காரியமல்ல. சமூகத்தின் பாதி பேர் தமிழைத் துச்சமாக மதிக்கும் போக்கு இன்றைக்கும் நிலவுகிறது. தமிழினத்தின் அரைவாசி பேர்தான் தம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அங்கிருந்து இடைநிலைப் பள்ளிக்கு வருபவர்களில் தமிழை ஒரு பாடமாகப் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு அரசு சோதனையிலும் சன்னஞ்சன்னமாகக் குறைந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிடுகிறது.
இந்தக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் மாணவர்களை இலக்கியத்தை எடுக்க வைப்பதுதான் பெரும் சவால்.ஆனால் தொடர்ந்து
அறைந்தால் ஆணியும் ஆழமாகப் பதியும் என்று மூர்த்தி விடாப்பிடியாய் நம்பினார்.
அதனாலேயே தன் பதவியை ஒரு கவசமாகக் கொண்டு செயலில் தீவிரம் காட்டினார். செயலில்
முழுமூச்சோடும் உள உண்மையோடும் இறங்கும்போது
வெற்றி உறுதியாக நிறைவேறிவிடும் என்பது சாதனையாளர்கள் நிரூபித்த உண்மை.. நான்கு ஆண்டுகளிலேயே அப்பாடம்
எடுக்கும் மாணவர் எண்ணிக்கை மள மளவென உயர்ந்து
ஐயாயிரத்தைத் தாண்டிவிட்டிருந்தது. இவ்வளவு தடைகளையும் குறிக்கீடுகளையும்
கடந்து இப்புள்ளியை வந்தடைவதென்பது தீவிர முயற்சியினால் மட்டுமே ஆகக்கூடிய ஒன்று.
| கேமரன் மலை பயிற்சிப் பட்டறையில் |
| கேமரன் மலை கருத்தரங்கில் புலவர் அம்பிகாபதி,கவிஞர் முரசு நெடுமாறன், மூர்த்தி, அண்ணாமலை |
| வாழ்த்துக் கவிதை |
| சுங்கைக் கோப் வித்யாரண்ய ஆஸ்ரமத்தில் |
Comments
இந்நிலையில் 18 வயதில் சுங்கை பட்டாணியிலிருந்து கோலாலம்பூர் சென்று கோலிசியும் பட மேடை அருகே ஒரு பழைய புத்தகக் கடையில் அகிலனின் சினேகிதி நாவலை வாங்கி வந்து படித்து SPM தேர்வெழுதினேன்.
அந்தக் காலக் கட்டத்தில் காந்தி மண்டபத்தில் வார இறுதியில் தமிழாசிரியர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் , இலக்கிய வகுப்புகள் நடத்துவார்கள். இவர்களின் உழைப்பில் வளர்ந்தவன் தான் நான் . இந்தத் தூண்டுதலுக்குக் காரணம் மரியாதைக்குரிய பி எம் மூர்த்தி என்று அறியும்போது மனம் மகிழ்கிறது . அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள் . வல்லினம் பரிசு பெற்ற அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் .
S. செபஸ்டியன், Sungai Petani