Skip to main content

எல்லாவற்றையும்விட தமிழனுக்குத் தமிழ்மொழிதான் ஆகக்கடைசித்தேர்வு

சம்பவம் 1
ஒரு நாள் தேனீர்கடையில் இருவர் உரையாடலைச் செவிமடுத்தபடி அமர்ந்திருந்தாராம் நண்பர் ஒருவர். அவர்களின் போதாத காலம் செவிமடுத்துக்கொண்டிருந்த நண்பர் தமிழ்ப்பற்று(வெறி) உள்ளவர். தமிழ் மொழியால் ஏற்படும் பின்னடைவுகள் பற்றிப்பேசப்படும் தருணங்கள் வெகுண்டெழுந்துவிடுவார். யார் பேசுகிறார் எங்கே பேசுகிறார் என்றெல்லாம் பார்க்கமாட்டார்.
கடையில் பேசிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் தமிழ்மொழி கற்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றிப்பேச, பிறிதொருவர் அதனால் உண்டாகும் தேக்கங்கள் , வனிக ரீதியிலான பின்னடைவுகள் பற்றிய தன் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். தர்க்கங்கள் வெப்பமேறிக் கொண்டிருந்த வேளையில்,”தமிழ் சோறு போடுமா?” என்ற தமிழ்மொழியைக் கேவலப்படுத்தும் வினாவை முன் வைக்க உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தவர் தடாலடியாகப்பாய்ந்து,” உனக்குச் சோறுதான வேணும் இந்தா தின்ரா” என்று தன் மேசையில் உள்ளதை எடுத்துக்கொடுத்திருக்கிறார். “ன்னும் வேணும்னா சொல்லு ஆர்டர் பண்றேன்,” என்று காத்திரமான முறையில் யானை பாத்திரக்கடையில் புகுந்ததுபோல உரையாடலின் இடையில் புகுந்தாராம்.
ஒரு அறிஞர் இதே வினாவுக்கு அறிவார்ந்த முறையில் பதில் கூறிருக்கிறார் -இப்படி, தமிழ் சோறும் போடும் அதை விட முக்கியம் சொரணையும் போடும் என்றாரம். ஒரு மொழி சோறுபோடத் தகுந்த மொழியா என் வினவுவது மொழியை ஆகக்கடை நிலையில் வைத்து கீழ்மைப்படுத்துவதற்குச் சமம். சூடு சுரணை தரும் மொழி மனிதனின் ஆக்கச்சக்திக்கும், முன்னேறத்துக்குமான தேடலையும் தூண்டலையும் தரும் மேதைமையைக்கொண்டது. பள்ளியில் கற்பவர்கள் தமிழ்மொழியை மட்டுமா படிக்கப்போகிறார்கள், மற்ற முக்கிய பாடங்களோடு தமிழ் மொழியையும் ஒரு பாடமாகப்படிப்பதால் எந்த குறையும் வந்துவிடப்போவதில்லை. துணைப்பாடமாகப் பயிலப்போகும் தமிழ்மொழிமீது தமிழர்களுக்கு அப்படியென்ன வன்மம்?

சம்பவம் 2

இதே நண்பரின் தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறார் அந்தத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர். அப்போது தமிழ் பள்ளியின் மாணவர் சேர்க்கை பற்றிய கருத்துப்பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன.அவ்வேளையில் தமிழ்ப்பள்ளிகளின் மேல் தனக்கு மிகுந்த கரிசனமிருப்பதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார் சட்டமன்ற உறுப்பினர். ( எங்கள் மலேசிய சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள், இன்ன பிற அரசியல் தலவர்களும் தமிழ்ப்பள்ளிகளையும் கோயில்களையும் தங்களின் அரசியல் லாபத்துக்கான கவசங்களாகவே பயன்படுத்திக்கொள்வர்) கவசங்கள் தற்காப்புக்கு மட்டுமே தாக்குவதற்குப் பயன்படாதுபோலும்.
தன் கருத்துக்களூக்குக் கூடுதல் பலம் சேர்க்க தான் தமிழ்ப்பள்ளியில்தான் படித்தவன். ஒரு தமிழ்ப்பள்ளியில் அல்ல பல தமிழ்ப்பள்ளிகளில் படித்தவன் என டம்பமடித்திருக்கிறார்.( மலேசியாவில் முதல் ஆறு ஆண்டுகள் மட்டுமே பள்ளியில் தமிழ்க்கல்வி உண்டு) இந்த ஆறு ஆண்டுகளில் மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு தான் மாற்றமானதை அவர் தமிழ்மேல் பற்றுள்ளவர் என்பதைக்காட்ட நிறுவ முயன்றிருக்கிறார். இந்தக்கூற்று எவ்வளவு அபத்தமானது, எவ்வளவு அறிவீனமானது என்பது எல்லாருக்கும் தெரியும். ஆறு ஆண்டுகளில் அறுபது பள்ளியில் படித்தாலும் ஆறு ஆண்டுகள் படித்ததாகத்தான் பொருள். எல்லாரையும் முட்டாளாக்க நினைத்து தன்னை முழு முட்டாளாக்கிக்கொண்ட கதை இது!
இதனைக்கேட்டுக்கொண்டிருந்த நண்பர் மீண்டும் பாய்ந்தார் அவர் மேல். “நீங்க உங்க பிளைகள எந்த ஸ்கூல்ல போட்டிங்க”. ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் கேட்கக்கூடாத கேள்வி. மேல்தட்டு சமூகமும் நடுத்தர வர்கத்தினரில் பெரும்பாலோர், தங்கள் பிள்ளைகளை வசதி குறைந்த தமிழ்ப்பள்ளியில் படிக்கவைப்பது அரிது. அரிது அரிது மேல்தட்டு மக்கள் தமிழ் படிப்பது அரிது என்று அவ்வையார் பாடியிருந்தாரென்றால் அந்தப்பாடல் இன்று உயிர்த்தன்மையோடு மிகப்பொருந்தியிருக்கும்.
“ நான் மூன்று தமிழ்ப்பள்ளிகளில் படித்தவன்.” என்று தன் பல்வீனத்தைத் திசை திருப்ப முயன்றிருக்கிறார். நீ எத்தன தமிழ் பள்ளியில படிச்சா என்ன, உங்க பிள்ளைங்க தமிழ்ப்பள்ளியில படிக்குதா?” எனக்கேட்க அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டிருக்கிறது. அங்கே சூழ்ந்திருந்தவர்கள் பின்னர், பெரிய மனுஷங்கிட்ட இதெல்லலாம் பேசப்பிடாது என்று தடுத்து நிறுத்திவிட்டனர். அவர் முகத்தில் ஈ டிஸ்கோ ஆடவில்லை பாவம். பேசாமல் இடத்தைக் காலி செய்துவிட்டார். மேல் வர்க்க மனிதர்களிடம், நடுத்தர வர்கத்திடமும், குறிப்பாக அரசியல் தலைவர்களிடம் ஆசிரியர்களிடம் இக்கேள்வியைக் கேட்டுவிடக்கூடாது- அவர்களுக்கு இது மிகுந்த ஒவ்வாமையை உண்டாக்கிவிடும் பாவம்.

தமிழர்கள் இயல்பாகவே உணர்ச்சிவயப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது உண்மைதான் என் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் தமிழ் மொழி என்று வந்துவிட்டால் அந்த உணர்ச்சிவயப்படல் என் நண்பரைப்போன்ற ஒரு சிலருக்கே நேருகிறது. இப்படி மிகச்சிறுபான்மையினருக்கு நேருவதால் தமிழ்க்கல்வியின் பாதிப்பை நிறுத்தமுடிவதில்லை. உணர்ச்சி யாருக்கு வரவேண்டுமோ அவர்களுக்கு வருவதில்லை. நாடாளு மன்றத்தில், சட்ட மன்றத்தில், அரசியல் வாதிகளுக்கு, அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு, கல்வியாளர்களுக்கு இப்படி யாருக்குமே உணர்ச்சி பொங்குவதில்லை. ஹாஙாட் ஹாஙாட் தஹி அயாம் என்று மலாய் மொழியில் ஒரு பழமொழி உண்டு. அதாவது கோழியின் கழிவு போல கழிந்தபோது சுடாயிருக்கும் பின்னர் ஆறிக்காய்ந்துவிடும். தமிழர்களுக்குப் பிரச்னை வந்துவிட்டால் முதலில் பொங்கி மெதுவாக ஆறப்போட்டு பின்னர் அதனிலிருந்து நழுவிவிடுவதை மிகச்சமார்த்தியமாகச் செய்கிறார்கள். ஆறிய கஞ்சி பழங்கஞ்சி ஆகிவிடுவதில்லையா? (தொடரும்)

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின