Skip to main content

கடைசி சந்திப்புக்குப்பிறகான நினைவுக்குறிப்புகள்

கோ.புண்ணியவான்





ஜனவரி 28. மாலை மணி 6.25.



ராணி கடைசியாக வீட்டுக்கு வந்தபோதுகூட இழை சந்தேகங்கூட உதிராமல் தன்னைப்பற்றிய அந்தரங்கத்தைத் தன் பிடியிலேயே பதுக்கி வைத்திருந்திருக்கிறாள். ராணி தாதிமைப்பயிற்சியின் விடுமுறை காலத்தில் வரும்போதெல்லாம் முக்கால் வாசி இயல்பு மாறாத, பழைய ராணியாகவே இருந்திருக்கிறாள். கோலாலம்பூரின் நவநாகரிகப்போக்கு, கலாச்சார அதிர்ச்சி, மொழி எதுவும் அவளிடம் பெரிதான மாற்றங்களைப்பதிவு செய்திருக்கவில்லை. உடையில் ஒப்பனையில் அவ்வப்போது சின்னச் சின்ன மாறுதல்கள் ஊடுருவியிருந்தன. அதிலும் ஒரு கட்டுக்கோப்பு, தன்னடக்கம் என சிறு வயது முதலே பெற்றோர் கட்டமைத்துக்கொடுத்த ஒழுங்கோடு-எல்லையைத்தாண்டாமல், சுயத்தோடு அவள் அவளாகவே இருந்திருக்கிறாள். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் எல்லாப்பருவப் பெண்களிடம் இருக்கும் விருப்பம் அவளிடமும் இருந்ததை எப்படி சந்தேகப்பிரதேசத்துக்குள் நுழைப்பது?



ராணி மீண்டும் பயிற்சிக்கு வீட்டை விட்டுக்கிளம்பி அன்றிரவு அவள் போய்ச்சேர்ந்துவிட்டாளா என்று உறுதிப்படுத்திக்கொள்ள தொடர்பு கொண்ட போது தொலைப்பேசி அம்மாவின் தகவலைப் பதிவு செய்துகொண்டதே தவிர, வெகு நேரம் நீண்டும், மறுமொழி எதுவும் கொண்டுவரவில்லை.



சரி, யோரோடும் பேசிக்கொண்டிருக்கலாம். பிறகு தொடர்பு கொள்வாள் என்று சமாதானமாகிறாள்.

நள்ளிரவைத்தாண்டிய அந்தகாரத்தில் படுக்கைக்குச்செல்லுமுன்னர்,எதிர்பார்ப்பு மிகுதியோடு, மீண்டும் அழைக்கிறாள்.. . இவள் அழைப்பை வாங்கிக்கொள்ளும் அடையாள ஒலிகூட அந்தப்பக்கமிருந்து வரவில்லை. அப்போது மெல்லிய பதற்றம் விட்டப்பல்லியென ஊர்கிறது.

கணவன் நள்ளிரவுக்குப்பிறகுதான் வேலை முடிந்து திரும்புவார்.அவரை அழைத்துச்சொல்லலாமா?

எதற்கும் இன்னொருமுறை மகளை அழக்கிறாள். மீண்டும் அழைப்பை வாங்கிக்கொள்ளாமல் முரண்டு பிடிக்கிறது எதிர்முனை கைப்பேசி. அசதியில் படுத்திருக்கலாம். அல்லது கிரடிட் முடிந்திருக்கலாம்.நாளை பேசுவாள். உள்மனம் சமாதான தேட்டத்தில் அமைதிகொள்கிறது ஒரு கனம். அந்தச்சமாதானம் ஓரிரு வினாடிகூட இடைவெளி தரமறுத்து மறுகனமே புலம்ப ஆரம்பிக்கிறது.



தொலைக்காட்சியை முடக்கி தன்னை ஆசுவாப்படுத்திக்கொள்ளும் பிரயத்தனத்தில் தன்னை வற்புறுத்திக்கொள்கிறாள். என்னவோ வண்ண வண்ண பிம்பங்கள் திரையை மேய்கிறது. என்ன கதை யார் நடிகர் என்ன காட்சி எதுவுமே பிடிபடவில்லை. மனம் மின்திரையிலிருந்து விலகி, சுயமாக ஒரு காட்சியை அவதானிக்க முனைகிறது. இல்லை மகள் போய்ச்சேர்ந்திருப்பாள் மறுநாள் அழைப்பாள்.ஏதோ காரணத்தால் அவளிடமிருந்து மறுமொழி வரவில்லை.அவ்வளவுதான்.

வாசலைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.மின்திரையில் ஏதோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மனம் லயிக்காமல் கணவனின் வருகையை எதிர்நோக்கி இமை மூடாது காத்திருக்கிறது.

கார் வரும் சந்தடியோ, வெளிச்சமோ வீட்டு வாசலை மொய்க்கவில்லை. இன்றைக்குப்பார்த்து தாமதமாகிறது. மின்பிம்பங்கள் வண்ணங்களின் குறைந்தும், நிறைந்துமான ஒளி நகர்தலை அவளின் கவலைகூடிவரும் முகத்துக்கு முன்னால் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.வண்ணங்களின் விளையாட்டு அவளின் கவனத்தை- மகளின் நிலை பற்றிய அவதானிப்பைத் தூண்டியிருப்பதால், ஈர்க்கவில்லை. செயலிழந்துபோன உடலின் ஒர் அங்கத்தின் பிரதிபலிப்பின்மையே தொலைக்காட்சியின் பிம்ப ஆடலுக்கான அவளின் மரத்த செய்கையாக இருக்கிறது.

பலமுறை கார்வரும் சத்தம் அவளை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது. வீட்டின் வாசலில் காரின் ஒளிவெள்ளம் பாய்ந்து நகர்கிறது.காரின் விளக்கு அணைக்கப்பட்டு ஓய்ந்த இன்ஜின் சப்தம்போல, அலைபாய்ந்த மனம் அக்கனம் சாந்தமாகிறது.

கணவன் காரிலிருந்து இறங்குகிறார்.

“ராணிக்கிட்டேர்ந்து கோல் வந்துச்சா?”

“இல்லையே!”

சற்றே தளர்த்திக்கொண்ட பதற்றம் தன் பிடியால் மீண்டும் பற்றிக்கொள்கிறது.

“நான் மூனு தடவ போட்டேன். அவக்கிட்டேர்ந்து பதிலே இல்ல.”

“ ஏதாவது காரணமிருக்கும்.போய் படு”

“ எனக்கென்னவோ பயமா இருக்குங்க.ஒரு மொறகூட இப்படிச் செஞ்சதில்ல! ஒடெனே அடிச்சி சொல்லிடுவாளே.”

“இப்ப அடிச்சா தூங்கி இருப்பா; பாரு மணி ஒன்னாவப்போது. அவள் நிம்மதியா தூங்க விடு, நீயும் போய் தூங்கு. நாளைக்குக் காலையிலியே போன் போடுவொம்.”



ஜனவரி 29

வெகு நேரம் விழித்திருந்து, அரை தூக்கத்தில் புரண்டு, சற்றே கண்ணயர்ந்து, திடுக்கிட்டு எழுந்தவாறே இரவு கழிந்துவிடுகிறது. முதல் வேலையாகத் தொலைப்பேசியை எடுத்து மிஸ் கோல்கள் இருக்கிறதா என்று பார்க்கிறாள்.திரை ஏமாற்றிவிடுகிறது.

“உங்க போன்ல மிஸ் கோல் இருக்கா பாருங்க?”

“ இல்ல” என்று சொல்லிவிட்டு மகளின் எண்ணுக்கு அழைக்கிறார்.அழைப்பு போய்ச்சேரவேயில்லை.

“மணி எட்டு போல போடலாம்” என்கிறார்.

பசித்த நாய் வாயின் எலும்புதுண்டாய் பதற்றம் அவளைக்கவ்விக்கொள்கிறது.

காலையில் மலிந்து கிடக்கும் வீட்டு வேலையைச்செய்யவேண்டுமென்று அவளுக்குத்தோணவில்லை.எல்லாருக்கும் காலை உணவு தயாரித்துத்தரவேண்டும் என்ற பிரக்ஞை துளிரவில்லை. தன்னைத்தூய்மை படுத்திக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைய வேண்டுமென்ற அன்றாடக்கடமை நினைவுக்கு வரவில்லை.ராணியிடமிருந்து அழைப்பு வரவேண்டும். அது ஒன்றுதான் அன்றைய பொழுதின் அவளின் இயல்பான உற்சாகத்தை மீட்டுக்கொடுத்துவிடும்.

அழைப்பு வருவதாக இல்லை. எத்தனையோ முறை அழைத்தும் அவளிடமிருந்து பதில் வராதது அவளின் சோர்வை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.

மணி எட்டு. கணவனை அழைக்கச்சொல்லி ஞாபகப்படுத்துகிறாள்.

அவர் அழைக்கிறார். செயலிழந்துபோன தொலைபேசியின் ஒலியே மீண்டும் மீண்டும் கேட்கிறது.

மனைவியைப்பீடித்திருந்த மகளைப்பற்றிய அச்சம், ஒரு தொற்றுநோயைப்போல இவருக்குள்ளேயும் ஊடுருவிச்செல்கிறது. அதனைப்பலவந்தமாகப் பிடித்துப் வெளியே தள்ளி அதனால் தானும் பாதிப்புறக்கூடாது என்பதற்காக நம்பிக்கைக்கதவால் தாழிட்டுக்கொள்கிறார்.

ஒரே அறையைப்பகிர்ந்துகொள்ளும் இளையவள் அமுதாவிடம் தன் அந்தரங்கத்தின் கசிவு ஏதும் பதிவாகியிருக்குமா என்று உறக்கத்தில் இருக்கும் அவளை எழுப்புகிறார்கள்.தாங்கள் அவளை விசாரிக்கும்போது பருவ வயதினர் செய்யும் கோளாறுகளின் பாதிப்புகள் அவளை நெருடிவிடக்கூடாது என்பதற்காக வார்தைகளை வடிகட்டி, மிகுந்த கவனத்தோடு பிரயோகிக்கிறார்கள்.

“அமு, அக்கா உன்னோட தங்கி இருக்கும்போது ஏதும் சொன்னிச்சாம்மா?”

“ம்.....” தூக்கத்தின் இறுக்கத்திலிருந்து தளர்த்திகொள்ளாமல் திணறுகிறாள்.

அரைக்கண்ணால் இருவரின் பிம்பத்தையும் ஒரே நேரத்தில் தரிசிப்பது, என்னவோ ஏதோ என்று அவள் எழுந்து அமர்ந்து இருவரையும் நோக்குகிறாள்.

“அக்கா போம்போது ஏதும் சொன்னிச்சா?”

சுதாரித்துக்கொண்டு “இல்லியே”

“ரூம்ல இருக்கும்போது யாரோடையும் ரொம்பநேரம் பேசிக்கிட்டு இருந்திச்சா?”

“இல்லியே, நா பாக்கலியே !”

“நல்லா யோசிச்சு பாரு, அது மெசெஜ் பண்ணுச்சா, மேசேஜ் வந்துச்சா இப்டி ஏதாவது?”

“ம்.... சரி விடு.” கணவர் குறுக்கிடுகிறார்.

“இல்லம்மா”

அதிர்வு மோடில் கைப்பேசியை இயங்க வைத்திருப்பாளோ! இவள் உறங்கியபிறகான தருணங்களில் ரகசியங்களை அரங்கேற்றியிருப்பாளோ?

தங்களை இப்போது அமுதா உன்னிப்பாகக் கவனிப்பதை அறிந்தவர்கள் ஏதும் நடவாதது போன்ற பாவனையோடு அறையைவிட்டு வெளியாகிறார்கள்.

“நீங்க எதுக்கும் அவ கோலேஜுக்கு போன் பண்ணி விசாரிச்சுப்பாருங்க”

அவருக்கும் அது தோணவே, காலேஜ் எண்ணைத்தேடி தொடர்பு கொள்கிறார்.

அவள் சோதனையில் தோல்வி கண்டுவிட்டாள் எனவும்.படிப்பைத் தொடரமுடியாதெனவும் அதிர்ச்சியான பதில் வருகிறது. இந்தச்செய்தி தீப்பிழம்பென் முகத்தை அறைகிறது.

“இத நம்மகிட்ட சொல்லியிருக்கலாமே”

“அவ மேல நம்ம திணித்த எதிர்பார்ப்பு. நம்மல ஏமாத்தக்கூடாதுன்னு அவ விலகியிருக்கக்கூடும்”

‘பெயிலாயிட்டு இந்தப்பக்கம் வந்திடாத’ என்று கண்டிப்புக்காகச் சொன்னது என்பதை உணராமல் கடைபிடிபிடிப்பதற்காகச்சொன்னதாக எடுத்துக்கொண்டாளோ?’ உதறியது அவளுக்கு.

அவள் முகத்தில் மெல்ல இருள் படியத்துவங்கியது.

“எனக்கென்னவோ வேறமாதிரி தோணுது.படிப்பில தோல்விகண்டதுக்கு காதல் காரணமா இருக்கலாமோன்னு!”

“ஆரம்பத்திலிருந்தே அவளைக்கவனிக்காமல் விட்டது தப்பாயிடுச்சி”.அவள் மேல் செலுத்திய அதீத பாசத்தின் ஊடேயான நம்பிக்கை கூட காரணமாக இருக்கலாம்.



பிப்ரவரி 1 காலை 8.30

கோலாலம்பூருக்கு முதல் பேருந்தைப்பிடித்தால்தான் அவள் படிக்கும் கல்லூரியை அடைந்து விசாரிக்கமுடியும்.

அலுவலகத்தில் அவள் தோல்வியடைந்ததையும், படிப்பைத்தொடரமுடியாததையும் உறுதிப்படுதுகிறார்களே தவிர வேறெந்த தகவலும் கிடைக்கவில்லை. அவளுக்குப்போதித்த ஆசிரியரிடம் ராணிக்கு நெருங்கிய தோழிகளின் முகவரியைப்பெற்றுக்கொண்டு அவர்களிடம் தகவல் கிடைக்கலாம் எனக்கருதுகிறார். அவர்கள் அவளுக்குத் ஆண் நண்பர் இருப்பதாகவும் அவனோடு வெளியில் சுற்றியதாகவும் அதிர்ச்சித் தகவலைத்தந்துவிட்டு மேற்கொண்டு வேறெதுவும் தெரியாதெனவும் கைவிரித்துவிடுகிறார்கள்!



வீடு திரும்பும்போது அவருக்கு எங்கேயும் சாப்பிடத்தோணவில்லை. தாகமெடுக்கவில்லை. பக்கத்தில் அமர்ந்திருக்கும் மனிதர் பேச்சுக்கொடுத்தாலும் உரையாடலைத்தொடரப் பிரியமில்லை. சந்திக்கும் மனிதர்கள் மரங்கள், ஓடும் வாகனங்கள், எதுவுமே தன்னைப்போல ஜீவனற்று சக்தியற்று இருப்பதுபோலவே தெரிந்தது.

விசாரித்துக்கொண்டிருக்கும்போதே மகளின் புதிரான நடவடிக்கைகளுக்கு உசிதமான பதில் ஏதும் தரமுடியாத தோல்வியில் மனைவியின் முகத்தில் மீண்டும் விழிப்பது வெட்கமான செயலாகவே படுகிறது.

சந்தேகப்படுவதெல்லாம் சாத்தியமாகிப்போகும் துர்ரதிஸ்டத்தின் நாற்சந்தியில் குழம்பிப்போய் திணறுகிறது உள்மனம்.



ஜனவரி 31.

அவர்களின் தினசரி கடமைகள் யாவும் கிட்டதட்ட முடங்கிப்போய் சந்தேகப்படும் இடங்களிலெல்லாம் தொடர்புகொண்டு தேடும் நடவடிக்கையைத்தொடர்வதிலேயே முடிந்துவிடுகிறது.

தொலைபேசி ஒலித்து ஆவளோடு எடுக்கும்போதெல்லாம் ஏமாற்றித்தின் விளிம்புக்குத் தள்ளிவிடுகிறது.

உடன் பிறந்தவர்களிடம்கூட தன் மகளைப்பற்றிய செய்தி கசிந்துவிடாமலிருக்க கவனமாகவே காயை நகர்த்துகிறார்கள்.அவர்களுடைய பிள்ளைகளெல்ல்லாம் பொறியியலாளர்களாக.டாக்டர்களாக, ஆசிரியர்களாக பெற்றவர்களின் பெயரைக்காப்பாற்றும் பொறுப்புள்ளவர்களாக வளர்ந்துவிட்ட பிறகு, தன் பிள்ளையின் போக்கை எப்படி வெளியே சொல்வது? உறவினர்களிடம் சொல்வதில் உள்ள ஆபத்து வேறெதிலும் இல்லை. ஒருநாள் அது ஊரறிந்த ரகசியமாக உருக்கொண்டுவிடும். இதனை உலகம் அறிவதற்குமுன்னால அவள் கிடைத்துவிடக்கூடும் என்ற நம்பிக்கையின்பேரில் பொய்களால் நிறைந்த வார்த்தைகளை, நாடகத்துக்கான அரிதாரமாகப்பூசிக்கொள்கிறார்கள்.



பிப்ரவரி 3

ராணியைப்பற்றிய எந்தத்தகவலும் கிடைக்கவில்லை.தேடும் நடவடிக்கைத்தொடர்கிறது.அவளின் தோழிகளை, வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் உறவினர்களை, நண்பர்களை .......தான் ஒரு நண்பரின் மகளைத்தேடுவதாக பொய்யை நிறுவியும் ......ஒரு தடயம் கூடக்கிடைக்கவில்லை. ஒரு தடயம் கூட வைக்காமல் போய்விட்ட தன் மகளின் சதூர்யம் தங்கள்மேல் துப்பப்பட்ட ஏமாற்றமாக வேகிறார்கள்.இந்தப்பூனையும் பால் குடிக்குமா?

மகள் படிக்கவேண்டும் என்பதற்காகவும், மெலிந்த உடல் வாகு கொண்டவள் என்ற கரிசனத்திலும் அவளை வேலை வாங்கியதில்லை.எல்லாமே தானே எடுத்துக்கட்டி செய்ய, அவள் பள்ளியிலிருந்து திரும்பிய களைப்பில் தூங்கும் அழகை ரசித்தவள். ‘அம்மா’ ‘அம்மா’ என்று சுற்றிச்சுற்றி வந்தவளுக்கு நாவுக்கு ருசியாக கேட்டதெல்லாம் சமைத்துக்கொடுத்தவள். கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்தவள்......

எல்லாம் அர்த்தமற்றதாக...... பிரதிபலன் மறந்ததாக.....எல்லாமும் முடிந்துவிட்டதோ......?



கணவர் பின்னிரவு கழிந்தே வீடு திரும்புகிறார்.மகளுக்காகக் குடியை நிறுத்தியவர், மகளுக்காகவே குடிக்க ஆரம்பித்துவிடுகிறார்.போதை சற்றே அவள் நினைவை மறக்கடிக்கும் என்ற நப்பாசை. மாறாக அது அவளைப்பற்றிய இறந்தகால நினைவுகளை வேர்வரை சென்று கிளறிவிடுகிறது.விபத்துக்களைத்தப்பி வீடு வந்து சேர்வது அவரின் துரதிர்ஸ்டமாக நினைக்கிறார். வேலை இடத்தில் நண்பர்கள் இரண்டு மூன்று முறை கூப்பிட்ட பிறகே தன் சுய நினைவுக்குத் திரும்பி, எதுவும் நடவாததுபோன்ற பாவனையில் ‘ம்’ என்கிறார்.நண்பர்களுடனான உரையாடலின்போது முழுமையாய்த் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளமுடியாமல் ‘என்னாச்சு ஒனக்கு? இப்பல்லாம் ஒரே கற்பனையில இருக்கியே’ என்ற வினாவுக்கு ஒரு தட்டையான புன்னகையையே பதிலாக்குகிறார். சாலை சந்துகளில் , அழுக்கேறி கிழிந்து தொங்கும் ஆடையோடு அங்குமிங்கும் அலையும் மனம் பிறழ்ந்தவர்களைப் பார்க்கும்போதெல்லாம், தனக்கும் அந்த நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் நத்தயைப்போல ஊர்ந்தது செல்கிறது.

நடமாடும் பிணமாக மனைவி. கணவனைத்தவிர வேறு யாரிடம் சொல்லி அழுவது? இதனைப்பிறரிடம் பகிர்ந்து வேதனையைக்கலைத்துவிட முடியாத அளவுக்கு மகளின் செய்கை அவர்களைச் செயலிழக்க வைத்துவிடுகிறது.

கணவனின் புதிய பரிமாணம் வேறு அவளை அதிரச்செய்கிறது. அது மகளைக்காணாது துடிக்கும் மனதுக்குக் கூடுதல் சுமையாகச் சேர்ந்துவிடுகிறது.

சில கணம் மகள் தன்னோடு இருப்பதாகவே நினைத்து அவளை அழைக்கிறாள்.

அவளோடு பேசுவதாக ஒரு பிரம்மையில் இருகிறாள்.பின்னர் தன்னிலை உணர்ந்து புலம்புகிறாள்.அம்மாவின் அபூர்வ சுபாவம் அமுதாவின் புருவத்தை உயர்த்துகிறது. அவள் மனதிலும் அக்காவைப்பற்றிய நிலை குறித்த சந்தேகங்கள் முளைவிடத்தொடங்கின.





பிப்ரவரி 10 மாலை 6.05

அக்காவும் அத்தானும் எதிர்ப்பாராத நேரத்தில் வந்துவிடுகிறார்கள்.

தன் முகம் வரண்டு , வெளறி துவண்டு இருப்பதை அவள் அப்போது, தீர்க்கமாய் உணர்கிறாள். உடல் நலிந்து, உற்சாகமிழந்து சோகம் கவிந்து முகம் தன்னைக்காட்டிக்கொடுக்கும் பிடிவாத்தோடு காத்திருப்பதுபோலத்தெரிகிறது. கண்ணாடியைப்பார்த்ததும், அவள் முகம் கலையிழந்து வேறொன்றாய்த்தெரிகிறது. அவர்கள் உள் நுழையுமுன், தன் சுய முகத்தைக்கொண்டுவர, அவசரமாய் முடியைக்கோதி, இரு கைகளாலும் முகத்தைத்துடைத்து மிருதுவான புன்னகையை ஒட்டவைக்க முயல்கிறாள். ஆனால் அது செயற்கையான, பாவனை நிரம்பிய ஒன்றாகவே காட்சிதருகிறது. பழைய, மகிழ்ச்சி குழைந்த முகத்தை மீட்டெடுக்கும் அவளின் முயற்சி பலனளிக்காமல் அவளை அலைக்கழிக்கிறது. குறைந்தபட்சம் தன் இயல்பான புன்னகையை வலிய ஒட்டவைத்து சமாளித்துக்கொள்ளலாம் என்று சுதாரிக்க முயல்கிறாள். வாசலுக்கு வருகிறாள்.

“வாங்கக்கா.. வாங்கத்தான்” முகத்தில் புன்னகை ஒட்டப்பட்டவாறு இருக்கிறதா, உரிந்து தொங்குகிறதா, என்பதில் அவளுக்குச்சந்தேகம் தோன்றித்தோன்றி மறைகிறது.

“வேலையெல்லாம் முடிச்சிட்டியா, என்ன சமையல்?”

“ அவரு வாங்கிட்டு வரன்னு சொல்லிட்டாரு, மூனு பேருக்கு என்னா சமைக்கிறது?”

“யான் ஒரு மாறியா இருக்க?”

“ ஒன்னுமில்லியே, கொஞ்சம் ஒடம்புக்கு முடில, நேத்தெல்லாம் காச்ச.

தண்ணி கலக்கட்டா?” ஒரே பொய்யை எத்தனை முறை எத்தனை பேரிடம் ஒப்புவிப்பபது.மனதில் பதிந்து போன பொய் இப்போது ஒரு பொய்யாக இல்லாமல் சாதாரண சொற்களாகவே உதிர்வது சகஜமான ஒன்றாகவே மாறி இருக்கிறது.

“ இல்ல வேணாம், நான் வேற எடத்துக்கு போனொம். பேரனுக்கு பெத்டே, அழைப்பு கொடுக்கத்தான் வந்தோம். ராணி எப்படி படிக்கிறா? லீவ்ல வந்தாளா?”

“ போன மாசந்தாங்கா வந்தா, செகமாட்ல இருக்கிற பிரைவேட் ஆஸ்பிட்டல்ல பிரக்டிக்கல் செய்றா, அதனால் அடிக்கடி லலீவ் போட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டா.”

“ பாத்துக்க காலங் கெட்டுக் கெடக்கு...... காலேஜ்ல யுனிவசிட்டியில படிக்கிற நம்ம புள்ளைங்க கதைய கேக்கும்போது கவலையா இருக்கு!”

எல்லாமும் முடிந்துவிட்டது. இப்போதுதான் சூரியா நமஸ்காரமா?



எப்படிப்போவது? போகாமல் இருப்பதே மேல்.மொய்யைக்கொடுத்தனுப்பிவிட்டு பின்னர் ஏதாவது காரணம் சொல்லிக்கொள்ளலாம். கொண்டாட்டக்கலையில் வீடே மூழ்கியிருக்கும்போது கிடட்தட்ட இயற்கை எய்திவிட்ட இந்த முகத்தோடு எப்படிக்கலந்து கொள்வது? உரக்கப்பேசும் தன்னுடைய இயல்பான சுபாவத்திலிருந்தும், சுழன்று சுழன்று வேலை செய்யும் போக்கிலிருந்து முற்றாய் முரண்படவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்ட சூழலிலிருந்து தப்பிக்க வழியில்லை.”என்னாச்சு

ஒனக்கு ? ஏன் இப்படி இருக்க ?” என்ற கேள்விகளுக்குத் தன்னிடம் நிதர்சனமான பதில் இல்லை. பாவனையோடும், தனக்குப்பழக்கமில்லாத சொற்களோடும், உடல்மொழியோடும் எவ்வளவு நேரம் செயற்கையாகப்பழக முடியும்? எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்பது போன்ற பத்தாம்பசலித்தனத்தை கற்பிதம் செய்துவிடுவோமோ என்ற சுயநம்பிக்கையின்மையில் அவள் குடும்ப நிகழ்வுகளைத் தவிர்க்க முற்பட்டாள்.

இப்படித்தவிர்ப்பதென்பது தற்காலிகமான செயல்தான்.எவ்வளவு காலத்துக்கு இந்த நாடகத்தை அரங்கேற்ற முடியும்? போலித்தனம் புலப்படும்போது உண்டாகப்போகும் புண்ணிலிருந்து, நிணம் பீய்ச்சி வெளியாகி நாற்றம் கசிந்து வியாபிக்கும். நினைக்க நினைக்க நெஞ்சுக்குலை நடுங்குகிறது அவளுக்கு.

வாழ்க்கையின் மிக இருண்ட பகுதி அவளுக்குள் சூழ்ந்துகொண்டிருந்தது.

மனம் பேதலிக்கிறது. பிறழ்கிறது. தன் சுயநிலைக்குதிரும்புகிறது. மீண்டும் மீண்டும் புரளுகிறது. தனாகப்புலம்புகிறாள்.





மே 29

அவள் கிடைப்பாள் என்ற நம்பிக்கை பாம்பைப்போல் நழுவிவிடுகிறது.மறுகணம் வந்துவிடுவாள் என்ற எண்ணம் துளிர்ந்து துளிர்ந்து வாடிவிடுகிறது.அரைகுறையான வாழ்க்கையையாவது வாழ்வதற்கான முயற்சியில் இறங்கும்போதெல்லாம் மனம் தளர்ந்து உடைந்து சிதறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு சிதறலிலும் ராணியின் முகம் தெரிகிறது. வாழும் தருணங்கள் தீராத ரணங்களின் வலியாக நோகிறது.

இரவு நேரத்தில் ராணியின் பெயரைக்கூறி அழைக்கிறாள்.அவள் தன் முன்னால் பிரசன்னமாகாத பட்சத்தில் அறை, அடுக்களைவரை சென்று தேடுகிறாள். அழைப்பு ஒலித்த பிரம்மையில் தொலைபேசியை எடுத்து “ராணி” என்கிறாள்.மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு ஒங்க போனுக்கு கூப்பிட்டாளா எனக்கேட்கிறாள். எங்க அவளைக்காணம்? என்கிறாள்.

அவளை வேளா வேளைக்குச் சாப்பிடச்சொல்லுங்கள் என்கிறாள். இந்த லீவுக்கு வருவா, காண்டா நண்டுக்கு சொல்லி வைங்க என்கிறாள். மல்லிகை பூவைப்போல அவளின் வாசம் வீடு நிறைய வியாபித்தவண்ணமிருக்கிறது. அவளின் நினைவு வீடு முழுக்க ஈரமாகவே இருக்கிறது.

பல சமயங்களில் எந்நேரமும் யோசனையிலேயெ முங்கிக்கிடக்கிறாள்.முனகுகிறாள். பதை பதைக்கிறாள்.

கறையான் அரித்த மரத்தைபோல தூக்கம் தேய்ந்துகொண்டே போகிறது.

தறிகெட்டு ஓடும் நினைவுகளே தினசரியாகிவிட்ட, அவளுக்கான வாழ்க்கை மெல்ல நகர்ந்தவண்ணம் அவளின் பொழுது ஓடுகிறது.



(நன்றி: நயனம்:22.11.09)

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின