Skip to main content

விளையாட்டுப்பருவத்தைக் கபளீகரம் செய்யும் கல்வித்திட்டம்

நேற்று என் பேரன் முதலாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கிறான்.

பள்ளி ஆண்டு துவங்குவதற்கு முன்னாலிருந்தே அவனைப்பதிவதற்கான முன்னேற்பாடுகளின் போது

அவன் காட்டிய ஆர்வமும் பரபரப்பும் அவன்பால் அதிகம் ஈர்க்கவைத்தது.



அவனுக்காக வாங்கப்பட்ட புத்தகப்பையை என்னிடம் காட்டி அவன் ஆத்தா வாங்கிக்கொடுத்ததாக சொல்லி அதனைப் பயன்படுத்தும் முறையை என்னிடம் விளக்க ஆரம்பித்தான். புத்தகப்பையைத் தூரமாக எடுத்துச்செல்லும்போது அதனை இலகுவாக இழுத்துச்செல்லமுடியும் எனச்செய்து காட்டினான். அதனை முதுகிலும் சுமந்து செல்வதற்கான முறையையும் செய்து காட்டினான். தன் புதிய வெள்ளைக்காலணிகளையும் காலுறைகளையும் போட்டுக்காட்டி அவை பள்ளியில் சுத்தமாகப்பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்கினான்.

அவனுக்கு வாங்கித்தரப்பட்ட பென்சில் பெட்டியையும் காட்டி, அவற்றுக்குள் என்னென்ன இருக்கிறது அதன் பயன்பாடு என்ன என்பதையும் விளக்கிய வண்ணமிருந்தான். அப்போது அவன் முகத்திலிருந்தும் உடல் மொழியிலிருந்தும் வெளிப்பட்ட வெளிச்சம் பிரகாசமாய் இருந்தது. அவன் பெறப்போகும் புதிய அனுபவத்தின் படிமங்களை ரசித்தது சுகானுபவமாக இருந்தது. தனக்கான ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கி அதில் மிதந்து சுகம் காணும் இளம் வயது அவர்களுக்கு. ஒருவகையான ஆழ்நிலை படிமத்தில் அவன் சஞ்சரிப்பதை பள்ளிப்பாட அழுத்தங்கள் சிதைத்துவிடும் என்பதை உணராத குழந்தைகள் பள்ளியின் வாசலை மிதிக்கிறார்கள், பாவம்.



அவனைப்பிரமிக்க வைத்த விஷயங்கள் நமக்கு புதியவை இல்லைதான் இருப்பினும் அதனை அவன் அனுபவித்துச்சொல்லும் அழகில்தான் நாம் நம்மை மறந்துபோகிறோம். பள்ளிக்குச் செல்வதற்குமுன் பள்ளி வாழ்க்கைப்பற்றிய அவனுடைய கனவுகள் அலாதியாய் இருந்திருக்கக்கூடும். பள்ளி செல்வதற்கு முன்னரே புதிய புதிய பொருட்களுக்கு தான் சொந்தக்காரராகிவிட்டோமே, பள்ளி வாழ்க்கை தொடங்கியதும் இன்னும் என்னென்னவெல்லாமோ கிடைக்குமே என்ற கற்பனையில் அவன் திளைத்திருக்கக்கூடும்.

ஆனால் இன்றைய பள்ளி வாழ்க்கை அவன் கற்பனைக்கு முரணான ஒன்றை வடிவமைத்து வைத்திருக்கிறது, என்பது அவனுக்குத்தெரியாதிருப்பது வியப்பதிற்கில்லைதான். பள்ளியில் நுழைந்தது தொடங்கி ஆறாண்டுகள் கலாச்சார அதிர்ச்சியில் சிக்கி பின்னர் மெதுவாகத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் பக்குவத்தை அடைந்துவிடுவான் என்பதுவும் உண்மைதான்.

இருப்பினும்......

ஆறாண்டுகளில் அவனிடமிருந்து என்னென்னவெல்லாமோ பறித்துவிடப்போகிறது இந்த புதிய ‘வாழ்விடம்’.....!

என் இன்னொரு பேத்தி முன்னர் படித்த பாலர் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கிறாள்.

பள்ளி விட்டு அவளை வீட்டுக்கு ஏற்றிக்கொண்டு வரும் போது, “பள்ளி பிடித்திருக்கிறதா?” என்று கேட்டேன்.

“பிடிச்சிருக்கு” என்றாள்.

“ முன்ன படிச்சியே அநத ஸ்கூல் பிடிச்சிருந்ததா?” என்று கேட்டேன்.

“ இல்ல” என்றாள்.

“ இந்த ஸ்கூல் ஏன் பிடிச்சிருக்கு ?” என்று மேலும் கேட்டேன்.

“ இங்க ஹோம் வர்க் இல்லை !” என்றாள்.

அவள் ஒராண்டுகள் படித்த பழைய பள்ளியை வீட்டுப்பாடத்தினாலேயே வெறுத்திருக்கிறாள் என்ற செய்தி என்னை வியக்க வைத்தது. புதிய பள்ளியில் இது முதல் நாள்தான் - போகப்போக இங்கேயும் வீட்டுப்பாடங்கள் மலிந்துவிடும் என்று உணராத பால்யம்.

“ பாலர் பள்ளியிலேயே வீட்டுப்பாடங்களைத் திணிக்க ஆரம்பிக்கும் இன்றைய கல்விமுறையை மாணவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை என்ற புரிதலை நாம் எளிதில் அடைந்துவிடுகிறோம்.

அமெரிக்காவின் கல்வி முறையோடு ஒப்பிடும்போது நம் கல்வி முறை பின்னடைவை நோக்கி நகரும் ஒன்று என நாம் உணருவதில்ல..

அமெரிக்காவில் தொடக்கக் கல்வியைபடித்து இங்கே தொடர்ந்து பயில நேர்ந்த ஒரு மாணவி எதிர்கொண்ட சிக்கலை கேள்வியுற்று திகைப்புக்குள்ளானேன்.

மாணவியை பள்ளியில் சேர்க்க அவளுக்கு எழுத்துச்சோதனையை நடத்தினார்களாம். அந்த எழுத்துச்சோதனையை எதிர்ப்பார்க்காத மாணவி எழுதுவதிலும் பதிலளிப்பதிலும் மிகுந்த கலாச்சார அதிர்ச்சியை அடைந்திருக்கிறாள். அமெரிக்காவில் கல்வி கற்கும் மாணவர்கள் practical முறையிலேயே போதிக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையுமே தேடல், கண்டடைதல், பிறகு செய்முறையில் ஒப்புவித்தல் என்பதான உத்தியே அதிகம் பயன்படுத்தப்படுவதாக உள்ளதாம்.

இங்கே என்ன நடக்கிறது? மாணவர்கள் சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டுமென்பதற்காக இன்ன கேள்விக்கு இன்ன பதில் என்ற முறையே பரவலாகவும், பலாத்காரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நம் கற்றல் கற்பித்தல் முறை தேடலையும் கண்டடைதலையும் உள்ளடிக்கியது என்பது உண்மைதான் என்றாலும் ஆண்டுக்கு இரண்டு சோதனைப்பருவங்கள், மாதச்சோதனைகள், பின்னர் ஆறாண்டுகள் நிறைவுபெறும் தருவாயில் upsr என்று சொல்லக்கூடிய ஆறாம் ஆண்டு அடைவு நிலைச் சோதனைகளை பள்ளி வாழ்வு நெடுக்க மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அடிப்படைக்கல்வி ஆறாண்டுகள் முடிவுபெறுவதற்குள் ஒரு மாணவன் எதிர்நோக்கும் சோதனைகளின் எண்ணிக்கை கிட்டதட்ட 100ஐ எட்டிவிடுகிறது. இந்த 100 சோதனைகளுக்கு அவனைத்தயார் செய்வது எதற்கென்றால், ஆறாம் ஆண்டு அடைவு நிலைச்சோதனையில் அவன் சிறந்த மதிப்பெண்கள் பெறவெண்டுமென்பதற்காகத்தான். 12 வயது முடிவடைவதற்குள் அவனுக்குச்சோதனைமேல் சோதனை.

பள்ளியும் பெற்றோரும் அதிகம் எதிர்பார்க்கும் upsr முடிவுகளுக்காக தன் விளையாட்டுப்பொருளை யாரோ பலாத்காரமாய் பறித்துவிடுவதுபோல, தன் பால்ய பிராயத்தை கபளீகரம் செய்துவிடுகிறது இன்றைய கல்விமுறை.

ஆறாம் ஆண்டு அடைவு நிலைசோதனை நெருங்க நெருங்க அவனுக்கு உடற்பயிற்சி பாடம் அபகரிக்கப்பட்டுவிடும். ஓவியம் என்று சொல்லக்கூடிய கலைக்கல்வி பிடுங்கப்பட்டுவிடும். பிற சோதனைக்குட்படுத்தாத நன்னெறிக்கல்வியும் போதிக்கப்படாது. அந்தப்பாட வேளைகளில் சோதனைக்குட்படுத்தப்பட்ட பாடங்கள் மட்டுமே போதிக்கப்படும். வீட்டுப்பாடங்கள் பை நிரம்பி வழியும். வீட்டுப்பாடம் கொடுக்கும் ஆசிரியர்களும் பிற ஆசிரியர் எவ்வளவு பாடம் கொடுத்திருக்கிறார் என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. வீட்டுப்பாடம் செய்து வரவில்லையென்றால் பல்வகைத் தண்டனைக்குள்ளாவான் என்பது கூடுதல் செய்தி.

பள்ளி நேரம் முடிய மாலையில் சிறப்புப்பாட வேளைகள் இருக்கும். வெள்ளி சனி மற்றும் பருவ விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு பாடம் போதிக்கப்படுவார்கள் . இது போதாதென்று பெற்றோர் சிறப்பு வகுப்புகளுக்கு (tution) அனுப்பிவிடுவார்கள். இவை யெல்லாமே ஒரே நோக்கமுடையதுதான். upsr சோதனையில் அவன் பெறப்போகும் மதிப்பெண்களே அடிநாதமாகிப்போன அவலம்தான் அது.

நான் பணிபுரிந்த ஒரு பள்ளியில் ஒரு குறிப்பிட்ட மாணவன் செவ்வாய் வியாழக்கிழமைகளில் பள்ளிக்கு வருவான், ஏனைய மூன்று தினங்களில் மட்டம் போட்டுவிடுவான். வகுப்பு பதிவேட்டிலிருந்து இது துல்லிதமாகத் தெரிய வந்தது. இந்த இரு கிழமைகளில் மட்டுமே அவன் பள்ளிக்கு வந்து, மீதமிருக்கும் வாரத்தின் மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு வராதிருப்பது ஏனென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் பெற்றோருக்கோ, வகுப்பு ஆசிரியருக்கோ கூடத் தெரியவில்லை. ஒருநாள் அவனைப் பள்ளிச் சிற்றுண்டிக்கொண்டுபோய் அவனைக்குளிரவைத்து அன்போடு விசாரித்தபோதுதான் ஒரு உண்மை புரிந்தது. குறிப்பிட்ட அந்த இரு தினங்களில் உடற்கல்வி இருப்பதால் விளையாடுவதற்கென்றே தான் பள்ளிக்கு வருவதாகச்சொன்னான். அவன் நமக்குத் தந்த செய்தி மிக அத்தியாவசியமான மாணவ உளவியல் சார்ந்த பிரதிநிதித்துவம் வாய்ந்தது. எந்த அளவுக்கு நாம் அச்செய்தியை உள்வாங்கிக்கொள்வோம் எனத்தெரியவில்லை!

பள்ளிக்கூடம் முற்றிலும் குழந்தைகளுக்கான உலகம். மதிப்பெண்களின் மேல் செலுத்தப்படும் அதீத அக்கறையில் எத்தனையோ வகைக் கல்வி தெரிந்தோ தெரியாமலோ புறக்கணிக்கப்படுகிறது. இசை வழிக்கல்வியின் மீதான பாடம் நடப்பது குறைவாகிப்போகிறது. நாடக் வழிக்கல்வியை கிட்டதட்ட புறக்கணித்துவிட்டோம். கதை சொல்வதிலும் வாசித்துக்காட்டுவதற்கும் நாம் நேரத்தை ஒதுக்குவதில்லை. விளையாடு வழிக்கல்விக்கும் நமக்குமான தூரம் அதிகரித்தவண்ணம் உள்ளது. குழந்தைகளுக்கான திட்டமிடல் நம் கற்றல் கற்பித்தலில் இருந்தாலும் சோதனைப்பேய் அதற்கு உரித்தான இடத்தை அபகரித்துவிடுகிறது. குழந்தைகளை மனிதமயமாக்கும் செய்முறைலிருந்து தவறிவிடுகின்றன இன்றைய பள்ளிகள்.

இதில் நகைச்சுவைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால், 15 வயதில் ஒரு மாணவன் எதிர்நோக்கும் pmr சோதனையைவிட, 17 வயதில் எதிர்நோக்கும் spm சோதனையைவிட, 19 வயதில் எதிர்நோக்கும் stpm சோதனையைவிட, ஏன் பல்கலைக்கழகப் படிப்பைவிட upsr க்கு நம் மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மிகப்பெரியது.

வாழ்க்கைக்கல்விக்குக் கொடுக்கும் இடம் மிகச்சிறியது.

(கபலீகரத்தைக் கபளீகரம் செய்துவிட்டேன்)

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின