Skip to main content

கோலகிட்டில் இடைநிலைப் பள்ளியில் படிவம் 3, 4, 5 மாணவர்களுக்கான சிறுகதைப் பட்டறை



இன்று 17.2.2011 வியாழக்கிழமை கோல கிட்டில் இடை நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு சிறுகதைப் பட்டறையை நடத்தி முடித்தேன் . மதிய 12.00 மணிக்குத் தொடங்கி 2.00 மணிவரை நடந்தது. அவர்கள் எனக்குக் கொடுத்த நேரம் போதுமானதாகவே இருந்தது. ஒரு சிறுகதைகான கூறுகளையும், கட்டமைப்பையும், செய்நேர்த்தியையும் சொல்ல நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார் - முனைப்போடு செயல்பட்ட ஆசிரியை திருமதி கமலா. தமிழ் மொழி பாடக்குழுத் தலைவர் குமாரி மலர்க்கொடி, குமாரி ராஜேஸ்வரி, திருமதி பாரதி, ஜஸ்பிர் கோர் ஆகியோர் இறுதிவரை மாணவர்களுடன் அமர்ந்திருந்தனர்.

நான்கைந்து  நாட்களுக்கு முன்பிருந்தே என்னைத்தொடர்பு கொண்டு மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் சிறுகதைக்  கலையைப்பற்றிச் சொல்லித்தரவேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார். புரியும்படி என்ற வார்த்தையின் பொருளை நான் உள்வாங்கிக்கொண்டேனா என்பதில் அவர் கவனம் மையமிட்டிருந்தது. அவர் காட்டிய அக்கறை என்னை ஊக்குவித்துக்கொண்டிருந்தது. ஏற்கனவே பட்டறையின் செய்பொருள் என்னிடம் இருந்தமையால்  இலகுவாக அதை என்னால் நடத்த முடிந்தது.

கெடா மாநிலத்தில் தமிழ் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கொண்ட இடைநிலைப்பள்ளி கோல கெட்டில் இடைநிலைப்பள்ளி. அந்தப் பள்ளிக்குப் போவதில் எனக்கு சற்று மிகுதியாகவே ஆர்வம் இருந்தது. நான் ஆசிரியர் பயிற்சிக்குப் போகுமுன்பே இதே பள்ளியில் ஒராண்டு காலம் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றியதே அப்பள்ளிக்குச் செல்வதற்கான ஈர்ப்பைக் இரட்டிப்பாக்கிக் கொண்டிருந்தது. அங்குப் போதித்த நாட்களின் நினைவலைகளில் நான் நெகிழ்ந்திருந்தேன்.

சுமார் நூற்றைம்பது மாணவர்கள் மண்டபத்துக்குள் வந்து சேர்ந்திருந்தனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே மாணவர்களிடம் இரு சிறுகதைளை  வாசிக்கக் கொடுத்தேன். அதில் ஒன்று ருஷ்ய எழுத்தாளர் லியோ டோல்ஸ்டாயின் கதை. பலர் ஆர்வத்தோடு வாசிக்க ஆரம்பித்தனர். தலைமை ஆசிரியர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்கு வந்துவிட்டதால் சிலரால் வாசித்து முடிக்க முடியவில்லை. அன்றைக்குத்தான் வாழ்க்கையின் முதல் சிறுகதையை வாசித்தவர்களும் இருந்தார்கள். சோதனையை நோக்கியே நம் மாணவர்கள்  ‘தள்ளப்படுவதால்’ கலை சார்ந்த கல்வியும் ,அனுபவமும் அவர்களுக்குக் கிடைப்பது அரிதாகிப் போய்விட்டது. நல்ல வேளையாக அப்பள்ளியின் தமிழ்ப்பாடக்குழு தலைவர் குமாரி மலர்க்கொடி போன்றவர்கள் எழுத்துக்கலையை முன்னெடுக்கிறார்கள்.

முதலில் இறை வாழ்த்துப்பாடல் தொடங்கியது. அது இறை வழிபாடு என்று தெரிந்தும் அப்பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் திருமதி சாடியா இப்ராஹிம் இருக்கையை விட்டு எழவில்லை. திருமதி கமலா ஆசிரியை அவரிடம் சொல்லி எழுந்து நிற்கச் செய்தார். இது கொஞ்சம் துணிச்சலான செயல்தான். இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து சமயப் பண்பாடு ‘ஒவ்வாமையை’ உண்டாக்கும். மலேசியாவில் மற்ற சமயக் கல்விக்கு போதிய இடம் தராத கல்விக்கொள்கையும் ஊடகங்களும் செய்துவரும் அருஞ்செயலால் வந்த வினை இது. இது மலேசியாவில் நடக்கும் வழக்கமான ஒன்று. அந்த அறையில் துணைத்தலைமை ஆசிரியரைத்தவிர மற்றெல்லாரும் தமிழர்களாக் இருந்ததால் வேறு வழியின்றி அவர் எழவேண்டியதாயிற்று. திருமதி கமலாவை இதற்காகப் பாராட்டாமல் இருக்க முடியாது. பல பள்ளிகளில் அவர்கள் டோவா சொல்லும்போது மற்ற இன மாணவர்களும் அதனைப் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயத்தை நிறுவுகிறார்கள். ஒருமுறை திருக்குர்ரானை எடுத்ததற்கு ,அந்தப் புனித நூலை முஸ்லிம் அல்லாதவர்கள் தொடக்கூடாது என்று என்னை எச்சரித்தனர். ஏன் இந்த முரண்? அவரவர் நம்பிக்கையைப் பின்பற்ற அந்தந்த சமயத்தாருக்கு வாய்ப்பளித்தால்  இன மத சமத்துவம் மேலோங்குமல்லாவா?

நான் சிறுகதை எப்படி அமையவேண்டும் என்பது பற்றி உரையாற்றினேன்.

1.    சிறுகதை என்றால் என்ன?
2.    அதன் வடிவமைதி
3.    அழகியல் கூறு.
4.    உவமை நயம்
5.    செய்பொருள்
6.    முடிவு
7.    தலைப்பு
போன்ற மரபார்ந்து கூறுகளை விளக்கிச் சொன்னேன். மாணவர்கள் கூர்ந்து கவனித்தார்கள். என் உரையில் எல்லா கூறுகளுக்கும் கதைகளை எடுத்துக்காட்டுக்குச் சொன்னதால் மாணவர்களின் கவனம் பிசகவில்லை. ஆர்வத்தோடு பின் தொடர்ந்தார்கள். சில கதைகளின் முடிவைச்சொல்லும்போது கைத்தட்டி மகிழ்ந்தார்கள்.

என் பேச்சு முடிந்து நிறைய மாணவர்கள் சிறுகதைத் தொடர்பான வினாக்களை எழுப்பினர். பேச்சு மொழியில் எழுதலாமா? பிற மொழியைக் கலக்கலாமா? முடிவில் கண்டிப்பாய் திருப்பம் வேண்டுமா? போன்ற வினாக்கள் எதிர்பார்த்ததுதான். மாணவர்கள் சிறுகதை சார்ந்த வினாக்களைச் சோதனையிலும் எதிர்நோக்குவதால், அவர்கள் மதிப்பெண்கள் பாதிப்புராத வண்ணம், என் விளக்கங்கள் அமைந்தன. வாசிக்கும் பழக்கம் இலக்கிய ஈடுபாட்டுக்கு அவசியம் என்பதை எடுத்துச் சொன்னேன். நாம் எதிர்நோக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை போதாமையையும் , கற்பனை வரட்சியையும் போக்குவதற்கு வாசிப்பு நல்ல நிவாரணி என்பதைப் புரியவைத்தேன். புத்தகங்கள் கிடைக்காதவர்கள் இணையத்தை நாடச்சொன்னேன்.

பட்டறையின் இறுதியில் ஒரு கருப்பொருளைக்கொடுத்து , அதற்கான கருவையும் கொடுத்து தொடக்கத்தை மட்டும் எழுதச்செய்தேன். பல மாணவர்கள் ஒரு சிறுகதைக்கானத் தொடக்க வரிகளைச் சரியாகவே புரிந்துகொண்டு எழுதித்தந்தனர். அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து பரிசளித்துவிட்டு விடை பெற்றேன். ஒரு முழு கதையை எழுதச்செய்ய நேரமில்லை.
   அடுத்த முறை நாடகம் எழுதும் கூறுகளையும் போதிக்கவேண்டும் என்று    கேட்டுக்கொண்டார்கள்.








Comments

முனியாண்டி ராஜ். said…
எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளர்கள் உருவாக தங்களைப் போன்ற எழுத்தாளர்களின் பங்கு மறுதலிக்க முடியாததது. இது போன்ற சேவைகளைத் தாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வர வேண்டும். நம் நாட்டில் எழுத்துத்துறை ஏற்றம் பெறவும் இளைய சமுதாயம் கொஞ்சம் எழுதிப்பார்க்கவும் இது வழிகோலும். தொடரட்டும் தங்கள் சேவை!
ko.punniavan said…
உங்கள் வருகைக்கு நன்றி,
நாம் நம் கலை சார்ந்த விஷயங்களில் பின்தங்கி இருக்கிறோம் .நாம்தான் முன்னோடியாக இருந்து இலக்கிய ஆல்ளுமைகளை உருவாக்கவேண்டும். பள்ளியின் ஏட்டுக்கல்வி மட்டும் போதாது.
அன்பு நண்பரே!
மிகச் சிறந்த முயற்சி!
சிறுகதை எழுதுவதன் முறைகளை காணொளியாக எங்களுக்கும் தந்திருக்கலாம்.
உங்களின் தீராத இலக்கிய ஆர்வம் பிரமிக்க வைக்கிறது.
ko.punniavan said…
தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி. காணொலி மிகச்சுருக்கமான வடிவத்தில் இருப்பதால் பதிவேற்றம் செய்யவில்லை. இருப்பினும் உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த