Skip to main content

தூவானம் , பா.அ.சிவம்

மௌனம் சிற்றிதழில் வெளியான என் பேட்டி தொடர்பான...




கோ.புண்ணியவான் : சிறு குறிப்பு

‘ மெளனம் ’ , கவிதை பேசும் இதழ் என்பதை மீண்டுமாய் நிரூபித்துள்ளது. கவிதைக்கும் கவிஞனுக்கும் என்ன செய்ய வேண்டுமோ அதை மெளனம் நிறைவாகவே செய்துகொண்டு வருகிறது. ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும் கவிதையும் கவிதை இதழும் எப்படியெப்படியெல்லாமோ வரவேண்டுமோ, அப்படியே மெளனம் இதழ் வெளிவருகிறது. மெளனம் இதழின் மூலம் நல்ல கவிதைகள் முன்னிறுத்தப்படுவதையும் அதைப் பற்றி விவாதிப்பதையும் தரமான இரசிகர்கள் வரவேற்கிறார்கள்.

அந்த வகையில், கடந்த மெளனம் இதழ், எழுத்தாளர் கோ.புண்ணியவானின் சிறப்பிதழாக வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி. இதுபோன்று இதர கவிஞர்களின் சிறப்பிதழ்களும் தொடர்ந்து வர வேண்டும். அதனை மெளனம் செய்யும் என்றே நான் எண்ணுகிறேன். இதுபோன்ற நகர்த்தல்கள் மிகவும் அவசியம். இல்லையேல், நாம் காலம் காலமாகத் தமிழகக் கவிஞர்களின் நேர்காணல்களையும் அனுபவங்களையும் மட்டுமே வாசித்து, மனம் நெகிழ்ந்து, பாராட்டி மலேசியத் தமிழ்க் கவிதை உலகோடு ஒப்பிட்டுத் தூற்றிக் கொண்டிருப்போம். கோ.புண்ணியவானோடு இது நின்று விடக்கூடாது. இங்குப் பலர் இருக்கின்றனர். அவர்களையும் முன்னெடுத்துச் செல்கிற தார்மீகக் கடப்பாட்டை மெளனம் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். ஏனெனில், இது கவிதைக்கான இதழ்.கவிஞர்களுக்கான இதழ். மெளனம் செய்யாவிடில் யார் செய்வார் ? எனும் கேள்வியும் இங்குத் தயார் நிலையில் உள்ளது.

கடந்த இதழ், கோ.புண்ணியவான் பற்றிய இதழ் என்றாலும், அவருடைய நேர்காணல், சரிதம் தவிர்த்து, அவர் பற்றிய ஏனைய பகிர்வுகள் இல்லாதது ஒரு குறையாகவே இருந்தது. இதற்குக் காரணம் எல்லாம் என்னைப் போன்றவர்கள்தான். கோ.புண்ணியவான் குறித்துக் கட்டுரை கேட்ட போது, அலுவல் பளு காரணமாகத் தவிர்த்துவிட்டேன். ஆனால், கடந்த இதழ் கைக்குக் கிடைத்த போது, எனது தவற்றை நன்குணர்ந்தேன்.

நண்பர் என்றாலும் நாட்டில் அறிமுகம் தேவையில்லாத ஓர் எழுத்தாளர், கவிஞர் குறித்து நான் எழுதுவதற்கு மெனக்கெடாதது எனக்குப் பின்னர் வெட்கக் கேடாகத் தெரிந்தது. ஏனெனில், எனது இலக்கிய வாழ்க்கையில், மிகவும் அக்கறை உள்ளவராக மட்டுமின்றி, எனக்குப் பரவலான அறிமுகத்தையும் ஏற்படுத்தித் தந்தவராகக் கவிஞர் கோ.புண்ணியவான் அவர்களை நான் பார்க்கிறேன். எனவே, இந்த முறை, அவரைப் பற்றிக் குறிப்பிட வேண்டும் எனத் தீர்மானித்துவிட்டேன்.

கொஞ்சம் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. மன்னிக்கவும். இப்போது பகைவர்களாக இருப்பவர்கள் அனைவரும் அப்போது நண்பர்களாக இருந்த 2001 ஆம் ஆண்டு. தமிழ்ப்பேரவையின் செயலாளராக இருந்த போது, 16 வது பேரவைக் கதைகள் போட்டியை நான் இயக்குனராக ஏற்று நடத்தினேன்.அந்தச் சிறுகதைத் தொகுப்பைத்தான் எனது முதல் நூலாக இன்றுவரையில் கருதுகிறேன். 2001 ஆம் ஆண்டு, கோ.புண்ணியவான் அவர்களின் சிறுகதை தேர்வாகியிருந்த போது, அவரைக் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். அப்போது அவர் கேட்ட கேள்வி இன்றுவரையில் என் நினைவில் பசுமையாக உள்ளது. ‘நீங்கள்தானே பத்திரிக்கைகளில் எழுதும் பா.அ.சிவம்?’ என்ற போது... ஒரு மூத்த எழுத்தாளர் பெயர் குறிப்பிட்டு கேட்கும் வகையில் நான் இருந்தது எனக்குப் பெருமையாகத்தான் இருந்தது. அப்போது மட்டுமல்ல. இப்போதும் நினைத்தால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமாக அது உள்ளது. நானும் குமார்,லிங்கேஸ்,ஷான், சுதேஷ் போன்று மிகவும் சாதாரண, சராசரி மனிதன்தான். அப்படித்தான் தொடங்கியது அவருடனான நட்பு.

பின்னர் 2002ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அல்லது 2003 ஆம் ஆண்டாகவும் இருக்கலாம். கோ.பு அவர்களைப் பினாங்கு-புக்கிட் மெர்தாஜாம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதைக் கருத்தரங்கில் சந்தித்தேன். அவர் மூன்று மாதக் கவிதைகளுக்கான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

நான் நயனம் இதழில் எழுதிய "இடைப்பட்டவை" எனும் கவிதை முதல் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்தனைக்கும் அக்கவிதை நயனம் இதழின் ஓரப்பகுதியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கவிதை வெளியானபோது, யாராலும் கண்டுகொள்ளப்பாடாத கவிதையாகவே இருந்தது. ஆய்வுக்குப் பின்னர், பலர் அக்கவிதை குறித்து என்னிடம் நேரடியாகவும்,தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசினர். பின்னர், மக்கள் ஓசையில், இரண்டாம் முறையாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆகக் கடைசியாக, நான் அக்கவிதையை அனுப்பவே இல்லாத தமிழ் நேசனிலும், இரு வாரங்களுக்கு முன்னர், பிரசுரிக்கப்பட்டிருந்தது. கவிதை நயனம் இதழில் வெளிவந்து எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். இப்போது எங்கிருந்து எடுத்துப் பிரசுரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இரு வாரங்களுக்கு முன், அக்கவிதையை முதல் முறையாகப் படித்து விட்டுப் போர்ட்டிக்சனிலுள்ள எனது வாசகி (இன்னும் நேரில் சந்தித்திராத வாசகி) சிலாகித்துப் பேசினார். அக்கவிதையை நான் மிகவும் இரசித்து இரசித்து எழுதியிருந்தேன் என்பதை என்னால் இன்றும் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. பினாங்கு கவிதைக் கருத்தரங்கில், நான் மிகவும் நேசிக்கும் எனது நண்பர் மணிமாறன்,’இடைப்பட்டவை’ போன்று, கவிஞர் சினேகனும் எழுதியிருக்கிறார் என்றார்; வாசிக்கவும் சொன்னார். பின்னர், மலாக்காவில் நடைபெற்ற புதுக்கவிதைக் கருத்தரங்கில், கவிஞர் சினேகன் கலந்து கொண்டபோது,அவரிடமிருந்து வாங்கிய "புத்தகம்" எனும் கவிதை நூலில், எனது கவிதை போன்று உள்ளதாகக் கூறப்பட்ட அவரின் கவிதையைத் தேடிப் பிடித்து வாசித்தேன்.

ஒருவேளை, கோ.பு அவர்களின் கண்ணில் ‘இடைப்பட்டவை’ தென்படாமல் இருந்திருந்தால், இவ்வளவும் நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகமே...அவரைப் பொருத்தவரையில் அவர் தமது பணியைச் செய்தார். என்றாலும், நான் அவருக்கு நன்றி கூற என்றும் கடமைப்பட்டுள்ளேன். அவருக்கு மட்டுமல்ல. மேலும் சிலருக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். இவ்வாறு பகிரங்கமாக எழுதுவதற்கு, நான் ஒருபோதும் தயங்கியதில்லை. என்னதான் உலகம் நவீனமயமாகிப் போனாலும், பண்பும் பாரம்பரியமும் முக்கியம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நன்றிக்கடன் பட்டவர்கள், கடனாளிகள்தான், எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும். நான் நன்றி சொல்வதென்றால் முதலில்,டாக்டர் சண்முகசிவாவிற்குத்தான் சொல்ல வேண்டும். அவருடனான எனது வாழ்வின் பகிர்வுகள், பல பக்கங்கள் கொண்ட நீண்ட கட்டுரையாக விரியும். இத்தனைக்கும் நான் அவரை அடிக்கடி சந்திப்பவன் அல்லன். ஆடிக்கொருமுறைதான். இருந்தாலும், எனது எழுத்துகளை உசுப்பி விட்டவர் அவர்தான் எனக் கூறுவேன்.பாதுகாக்க வேண்டிய அவருடனான நினைவுகளை நான் பத்திரமாகவே வைத்துள்ளேன். பிறகொரு முறை வாய்க்கும்... நான் அக்கட்டுரையை எழுதி, நீங்கள் வாசிக்கும் அந்த இளவேனில் காலப் பொழுது.

சீ.முத்துசாமி, சை.பீர்முகமது, கோ.முனியாண்டி, ப.சந்திரகாந்தம் என என்னோடு வயதில் பெரும் இடைவெளியைக் கொண்டவர்கள்தான் என்னைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா? மிகையில்ல.உண்மை!

ஆகக் கடைசியாக நடைபெற்ற புதுக்கவிதைத் திறனாய்வில் கூட, கோ.பு சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையில், அநங்கத்தில் வெளிவந்த எனது அம்மாவின் துர்க்கதை எனும் கவிதை முதல்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர் எனது கவிதைகளை முன் நிறுத்துகிறார் என்று நான் சொல்ல வரவில்லை. ஒவ்வொருமுறையும், பொது வாசிப்பிலிருந்து விடுபட்ட கவிதைகள், இம்மாதிரி வேறு வகையில், முன்நிறுத்தப்படும்போது, இலக்கியம் மீதான நம்பிக்கை வலுபெறுகிறது என்பதை நான் குறிப்பிடுகிறேன். உண்மையைச் சொல்லப் போனால், நான் ஒரே ஒரு காரணத்திற்காகவாவது கோ.பு பற்றிச் சிறு குறிப்பு எழுத வேண்டும் எனத் தீர்மானித்திருந்தேன். அது பற்றி இன்னும் குறிப்பிடாமல் இதர விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்.

சரி, விஷயத்திற்கு வருகிறேன். தென்றல் இதழ் வெளிவந்த புதிதில், எனது ‘சாமி’ கவிதை வண்ணப்படத்தில் போடப்பட்டிருந்தது. மறுவாரமே கோ.பு ‘மிசா’ எனும் தலைப்பில் எனது ‘சாமி’ கவிதைக்குச் சார்புக் கவிதை எழுதியிருந்தார். பெரும்பாலும், வேறு எவரும் இப்படி எல்லாம் செய்யமாட்டார்கள். அப்போதுதான் அறிமுகமாகிக்கொண்டிருந்த எனக்கு, அவரது கவிதை பெரும் ஊட்டச்சத்தாக அமைந்தது. எனது சிறுகதைக்குக் கூட, அவர் மக்கள் ஓசையில், விமர்சனம் எழுதியுள்ளார்.

இவற்றை எல்லாம் நான் நினைவுகூர்ந்து குறிப்பிடுவது அவரது நல்லாசியையும், அபிமானத்தையும் பெற வேண்டும் என்பதற்காக அல்ல. அவர் எனக்குச் செய்த அறிமுகத்தை நான் குறிப்பிடுகிறேன்; நன்றி தெரிவிக்கிறேன்; நினைத்துப் பார்க்கிறேன்.அவ்வளவே...

இதுபோன்று இதர எழுத்தாளர்கள் குறித்தும், அவர்களுடனான எனது வாழ்வின் தருணங்கள் குறித்தும் உரிய நேரத்தில் நிச்சயம் எழுதுவேன்.

பொதுவாக, நாம் இந்நாட்டில் நமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், மலாய்க்காரர்கள் நம்மை அங்கீகரிக்க மறுக்கிறார்கள் என்றும் பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். நான் இதனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஏனெனில், எனது இன சக படைப்பாளனே, சக படைப்பாளனுக்கு உரிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் தர மறுக்கும் போது, ஆளுமைகளை நிராகரிக்கும்போதும், சலீமையோ, அபுவையோ அல்லது சைபுலையோ நான் நொந்து என்ன ஆகப் போகிறது ? என்னால் இதற்கு மேலும் எடுத்துரைக்க முடியும்...ஆனால், பத்து அல்லது இருபது ஆண்டுகள் ஆனாலும், நாம் இந்நாட்டுப் படைப்பாளனை அல்லது படைப்பாளர்களை அங்கீகரிக்க மாட்டோம். இது நமக்கே நாம் வழங்கிக் கொண்ட தீர்ப்பாக/ சாபக்கேடாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். நீங்களும் நினைக்கலாம். அல்லது என்னோடு முரண்படலாம். என்னோடு உடன்பட வேண்டும் என்பது சட்டம் இல்லையே...



Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின