Skip to main content

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்.


10. மழையில் நனையும் வார்த்தைகள்.

நான் சமீபத்தில் ராஜஸ்தானின் தலை நகரமான ஜெய்ப்பூருக்குச் சென்றிருந்தேன். நூற்றுக்கண்கான ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த மன்னர்களால் கட்டப்பட்ட பெரும் கோட்டைகளைக் கொண்ட ஒரு புராதன ஊர் ஜெய்ப்பூர். நாம் ஊருக்குள் நுழையும் போதே கோட்டைகள் நம்மை வரவேற்கும். ஊருக்குள் நுழைந்தவுடன் கோட்டைகள் நம்மை சூழ்ந்துகொள்ளும். ஒரு தலை நகரமாக இருந்தாலும் புராதன கட்டமைப்புக் கொண்ட நகரமாகத்தான் அதனை நாம் அவதானிக்க முடியும். நூதன கட்டடங்களையோ, பட்டணத்துக்கே உள்ள நேர்த்தியையோ , குறிப்பாக பச்சை வெளியையோ நாம் பார்க்கமுடியாது. நம் ஊரில் நாம் காணும் பட்டண வளாகத்துக்குள்ளிருக்கும் பச்சை புல் வெளியையும் பூந்தோட்டங்களையும் கண்டிப்பாய் ஜெய்ப்பூரில் பார்க்க முடியாது. ஏனெனில் அது மழை காணாது வானம் பார்த்த பூமி. ஜெய்ப்பூரிலிருந்து நூறு கிலோமீட்டர் துரத்தில்தான் புகழ்பெற்ற பாலைவனமிருக்கிறது. பாலைவனம் என்று சொன்னாலே மழைக்குப் பெரும் எதிரி என்றே பொருள் கொள்ளலாம். ஜெய்ப்பூரில் மழை பெய்யாமல் இருப்பதற்கு அந்த நகரைச்சுற்றியுள்ள மாபெரும் கல் மலைகள் ஒரு காரணமாக இருக்கிறது. மழை மேகங்களைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட கல் மலைத்தொடர்கள் அவை. மன்னர்கள் கட்டிய பெருஞ்சுவர்களை விட இயற்கை கட்டிய தொடர் மலைகள் அவை. இந்த ஊரில மழையைக் காண்பது அரிது என்று சொல்லும்போதே ஒரு தீராத சோகத்தை சுற்றுப்பயண வழைகாட்டியின் முகத்தில் படர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. நீர் இல்லாத ஊர் பாழ் என்ற பழஞ்சொல்லின் பொருளை அங்கே பார்க்கமுடிந்தது. அத்து வான வெளிக்குள் மழை மேகம் வரக்கூட அஞ்சும்  இயற்கைச் சூழல். வரண்டு வெடித்துத் தூசு கிளம்பும் மண்தரை. வீடுகள் மேலும் , கட்டடங்கள் கடைகள் மீதும், மனிதர்கள் மீதும் விடாது துரத்தும் தூசுப்பேய் , சதா  படிந்த வண்ணமே இருக்கிறது. தூய்மையான காற்றைச் சுவாசிக்கும் கொடுப்பினை இல்லாத மக்கள் வாழும் ஊர் அது. நாங்கள் தங்கி இருந்த விடுதியில் குளிக்கப் பயன் படும் நீரில் குளிக்காமல் இருப்பதே நல்லது என்ற காலங்கடந்த ஞானத்தை தரும் நீரின் இயல்புத் தண்மை அற்றுபோன நிலை.
மண்ணுக்குப் புனிதம் எப்போது உண்டாகும்? மழை பெய்வதால்தானே. மண் பூப்பெய்தி புதுப்பெண்ணாய் காட்சி தருவது எப்போது? மழை பெய்த பின்னர்தானே! மண்ணுக்கு எப்போது பண்டிகைத்திருநாள் வருகிறது. மழைக்குப்பின்னர் துளிரும் பச்சை நிறத்தால் தானே! தண்ணீர் என்று எப்படிப்பெயர் வந்தது. அது தண்மையாக இருப்பதால்தானே! களைப்புத் தீர்வதற்கு உடனடி நிவாரணம் தண்ணீர்க் குளியல்தானே.
மழைக்காக வெகு நாட்கள் ஏங்கிடக்கும் மண்ணின் மீது  திடீரென அடை மழை பெய்து மண்ணை ஈரமாக்கினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்த போது கவிஞர் •பஹீன் ஜஹான் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. நீங்களும் இந்தக் கவிதை மழையில் கொஞ்சம் நனைந்து நெகிழ்ந்து பாருங்களேன்.
மழை

இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வர முடியாது
நனைந்து கொண்டிருக்கிறது
மழை

ஆட்டுக்குட்டிகளுடன்
தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று
இன்னொரு
புல்வெளி தேடிப்போவதற்குத்
தருணம் பார்க்கிறது

புகார்கொண்டு
தன்னைப்போர்த்தியவாறு
தென்னந்தோப்பில்
வழிதவறியலைகிறது

வாய் திறந்து பார்த்திருந்த
நீர் நிலைகளின்
கனவுகளை நிறைவேற்றிய பின்
மீன் கூட்டங்களைச்
சீதனமாகக் கொடுத்துச் செல்கிறது

யார் யாரோ
வரைந்த கோடுகளையெல்லாம்
தனது கால்களால் தேய்த்து அழித்துச்
சேற்றில் புரண்டவாறு
வீதிகளைக்கழுவுகிறது

பெரும் கோட்டைகளையெலாம்
கரைத்தழித்திட நினைத்து
நிறைவேறாமல் போகவே
அவற்றின் வசீகரங்களைக்
கழுவிக்கொண்டு நகர்கிறது

ஆழ் மண்வரையும்
நீரிட்டு நிரப்பிய பின்
அடுத்துச் செய்வதென்ன?
என்ற வினாவுடன்
தரை மீது தேங்கி நிற்கிறது

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்துகொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப்போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை.

இக்கவிதை ஒரு சிறுகதையைப்போல வளர்ந்து சோகமான திருப்பத்தோடு வாசகனை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
அழகியல் நேர்த்தியோடு புனையப்பட்ட கவிதை நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. மழையே நனைந்து கொண்டு வாசலில் காத்திருப்பதும், ஆட்டுக்குட்டிகளுடன் தாழ்வாரத்தில் ஒதுங்கி நிற்பதும், வழியைத் தவறவிட்டு அலைவதும், குட்டைக்குள் மீன் கூட்டகளைச் சீதனமாக தந்துதவுவதும், மழைத்தாரைகள்கொண்டு மண்ணின் ஓவியத்தை கழுவுவதும், கோட்டை வசீகரங்களைக் கழுவிப் பளிச்சிட செய்வதபின்னர் அடுத்துச் செய்வது புரியாது விழி பிதுங்குவதுமான கற்பனை படிம அழகில் நம்மை லயிக்கச் செய்துவிடுகிறது. உள்ளபடியே மழையில் நனையும் போது உண்டாக முடியாத உணர்வை இக்கவிதை உணர்த்திவிடுகிறது. கவிஞன் தான் உணர்ந்ததை வாசகனுக்கு உணர்த்த்துவதில்தான் அவனின் வெற்றி அமைகிறது. ஆழமான தரிசனத்தால் மட்டுமே மறுபதிவு செவ்வனே நிறைவேறும்.
  மேற்காணும் இறுதி வரியில் ஒரு வற்றாத கவலையையும் நம் மனதுக்குள் வரைந்துவிடுகிறது மழை. கண்ணீர் மழையில் நனைந்துகொண்டிருக்கும் ஒரு அபலையின் முன் வந்து நிற்கும் மழை, அவளின் சோகத்தைப் போக்க வழியற்று பெய்வதை நிறுத்தி  கவலையில் விழுகிறது மழையும். மழையின் கரிசனம், குதூகலம், கொண்டாட்டம், அழகு எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கிவிடுகிறது ஒரு பெண்ணின் கண்ணீர். இந்த முரண் அணியில் கவித்துவம் உச்சம்  அடைகிறது.

Comments

MUNIANDY RAJ said…
அருமையான கவிதை. அருமையான விளக்கம். கவிதைக்குத் தாங்கள் பொழிந்திருக்கும் விளக்கம் நீர்வீழ்ச்சியில் குளித்து எழுந்தது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. கவிதையைப் போன்ற சிறந்த மொழியில்லை..... தங்களைப் போன்றவர்கள் அதற்கு விளக்கம் கூறும்போது, அந்தக் கவிதை மகுடத்தைத் தானே சூட்டிக்கொள்வது போல் இருக்கிறது.
முனியாண்டி ராஜ் said…
கவிதை மிக அருமை. அந்தக் கவிதைக்குத் தாங்கள் கூறிய விளக்கமோ அதை விட அருமை. கவிதையை வாசித்துக் கிரகித்து, அதன் அழகில் மயங்கி, கருத்தில் கரைந்து பயணிப்பதே ஒரு சுகம்தான்.
ko.punniavan said…
நன்றி கவின்.
நான் சமீபத்தில படித்த கவிதைகளில் முத்திரை கவிதை இது. இதில் ஊறும் படிமம் அலாதியான சுகத்தைத் தருகிறது. கவிதை என் அனுபவத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது.நன்றி

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின