Skip to main content

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்.


10. மழையில் நனையும் வார்த்தைகள்.

நான் சமீபத்தில் ராஜஸ்தானின் தலை நகரமான ஜெய்ப்பூருக்குச் சென்றிருந்தேன். நூற்றுக்கண்கான ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த மன்னர்களால் கட்டப்பட்ட பெரும் கோட்டைகளைக் கொண்ட ஒரு புராதன ஊர் ஜெய்ப்பூர். நாம் ஊருக்குள் நுழையும் போதே கோட்டைகள் நம்மை வரவேற்கும். ஊருக்குள் நுழைந்தவுடன் கோட்டைகள் நம்மை சூழ்ந்துகொள்ளும். ஒரு தலை நகரமாக இருந்தாலும் புராதன கட்டமைப்புக் கொண்ட நகரமாகத்தான் அதனை நாம் அவதானிக்க முடியும். நூதன கட்டடங்களையோ, பட்டணத்துக்கே உள்ள நேர்த்தியையோ , குறிப்பாக பச்சை வெளியையோ நாம் பார்க்கமுடியாது. நம் ஊரில் நாம் காணும் பட்டண வளாகத்துக்குள்ளிருக்கும் பச்சை புல் வெளியையும் பூந்தோட்டங்களையும் கண்டிப்பாய் ஜெய்ப்பூரில் பார்க்க முடியாது. ஏனெனில் அது மழை காணாது வானம் பார்த்த பூமி. ஜெய்ப்பூரிலிருந்து நூறு கிலோமீட்டர் துரத்தில்தான் புகழ்பெற்ற பாலைவனமிருக்கிறது. பாலைவனம் என்று சொன்னாலே மழைக்குப் பெரும் எதிரி என்றே பொருள் கொள்ளலாம். ஜெய்ப்பூரில் மழை பெய்யாமல் இருப்பதற்கு அந்த நகரைச்சுற்றியுள்ள மாபெரும் கல் மலைகள் ஒரு காரணமாக இருக்கிறது. மழை மேகங்களைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட கல் மலைத்தொடர்கள் அவை. மன்னர்கள் கட்டிய பெருஞ்சுவர்களை விட இயற்கை கட்டிய தொடர் மலைகள் அவை. இந்த ஊரில மழையைக் காண்பது அரிது என்று சொல்லும்போதே ஒரு தீராத சோகத்தை சுற்றுப்பயண வழைகாட்டியின் முகத்தில் படர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. நீர் இல்லாத ஊர் பாழ் என்ற பழஞ்சொல்லின் பொருளை அங்கே பார்க்கமுடிந்தது. அத்து வான வெளிக்குள் மழை மேகம் வரக்கூட அஞ்சும்  இயற்கைச் சூழல். வரண்டு வெடித்துத் தூசு கிளம்பும் மண்தரை. வீடுகள் மேலும் , கட்டடங்கள் கடைகள் மீதும், மனிதர்கள் மீதும் விடாது துரத்தும் தூசுப்பேய் , சதா  படிந்த வண்ணமே இருக்கிறது. தூய்மையான காற்றைச் சுவாசிக்கும் கொடுப்பினை இல்லாத மக்கள் வாழும் ஊர் அது. நாங்கள் தங்கி இருந்த விடுதியில் குளிக்கப் பயன் படும் நீரில் குளிக்காமல் இருப்பதே நல்லது என்ற காலங்கடந்த ஞானத்தை தரும் நீரின் இயல்புத் தண்மை அற்றுபோன நிலை.
மண்ணுக்குப் புனிதம் எப்போது உண்டாகும்? மழை பெய்வதால்தானே. மண் பூப்பெய்தி புதுப்பெண்ணாய் காட்சி தருவது எப்போது? மழை பெய்த பின்னர்தானே! மண்ணுக்கு எப்போது பண்டிகைத்திருநாள் வருகிறது. மழைக்குப்பின்னர் துளிரும் பச்சை நிறத்தால் தானே! தண்ணீர் என்று எப்படிப்பெயர் வந்தது. அது தண்மையாக இருப்பதால்தானே! களைப்புத் தீர்வதற்கு உடனடி நிவாரணம் தண்ணீர்க் குளியல்தானே.
மழைக்காக வெகு நாட்கள் ஏங்கிடக்கும் மண்ணின் மீது  திடீரென அடை மழை பெய்து மண்ணை ஈரமாக்கினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்த போது கவிஞர் •பஹீன் ஜஹான் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. நீங்களும் இந்தக் கவிதை மழையில் கொஞ்சம் நனைந்து நெகிழ்ந்து பாருங்களேன்.
மழை

இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வர முடியாது
நனைந்து கொண்டிருக்கிறது
மழை

ஆட்டுக்குட்டிகளுடன்
தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று
இன்னொரு
புல்வெளி தேடிப்போவதற்குத்
தருணம் பார்க்கிறது

புகார்கொண்டு
தன்னைப்போர்த்தியவாறு
தென்னந்தோப்பில்
வழிதவறியலைகிறது

வாய் திறந்து பார்த்திருந்த
நீர் நிலைகளின்
கனவுகளை நிறைவேற்றிய பின்
மீன் கூட்டங்களைச்
சீதனமாகக் கொடுத்துச் செல்கிறது

யார் யாரோ
வரைந்த கோடுகளையெல்லாம்
தனது கால்களால் தேய்த்து அழித்துச்
சேற்றில் புரண்டவாறு
வீதிகளைக்கழுவுகிறது

பெரும் கோட்டைகளையெலாம்
கரைத்தழித்திட நினைத்து
நிறைவேறாமல் போகவே
அவற்றின் வசீகரங்களைக்
கழுவிக்கொண்டு நகர்கிறது

ஆழ் மண்வரையும்
நீரிட்டு நிரப்பிய பின்
அடுத்துச் செய்வதென்ன?
என்ற வினாவுடன்
தரை மீது தேங்கி நிற்கிறது

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்துகொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப்போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை.

இக்கவிதை ஒரு சிறுகதையைப்போல வளர்ந்து சோகமான திருப்பத்தோடு வாசகனை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
அழகியல் நேர்த்தியோடு புனையப்பட்ட கவிதை நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. மழையே நனைந்து கொண்டு வாசலில் காத்திருப்பதும், ஆட்டுக்குட்டிகளுடன் தாழ்வாரத்தில் ஒதுங்கி நிற்பதும், வழியைத் தவறவிட்டு அலைவதும், குட்டைக்குள் மீன் கூட்டகளைச் சீதனமாக தந்துதவுவதும், மழைத்தாரைகள்கொண்டு மண்ணின் ஓவியத்தை கழுவுவதும், கோட்டை வசீகரங்களைக் கழுவிப் பளிச்சிட செய்வதபின்னர் அடுத்துச் செய்வது புரியாது விழி பிதுங்குவதுமான கற்பனை படிம அழகில் நம்மை லயிக்கச் செய்துவிடுகிறது. உள்ளபடியே மழையில் நனையும் போது உண்டாக முடியாத உணர்வை இக்கவிதை உணர்த்திவிடுகிறது. கவிஞன் தான் உணர்ந்ததை வாசகனுக்கு உணர்த்த்துவதில்தான் அவனின் வெற்றி அமைகிறது. ஆழமான தரிசனத்தால் மட்டுமே மறுபதிவு செவ்வனே நிறைவேறும்.
  மேற்காணும் இறுதி வரியில் ஒரு வற்றாத கவலையையும் நம் மனதுக்குள் வரைந்துவிடுகிறது மழை. கண்ணீர் மழையில் நனைந்துகொண்டிருக்கும் ஒரு அபலையின் முன் வந்து நிற்கும் மழை, அவளின் சோகத்தைப் போக்க வழியற்று பெய்வதை நிறுத்தி  கவலையில் விழுகிறது மழையும். மழையின் கரிசனம், குதூகலம், கொண்டாட்டம், அழகு எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கிவிடுகிறது ஒரு பெண்ணின் கண்ணீர். இந்த முரண் அணியில் கவித்துவம் உச்சம்  அடைகிறது.

Comments

MUNIANDY RAJ said…
அருமையான கவிதை. அருமையான விளக்கம். கவிதைக்குத் தாங்கள் பொழிந்திருக்கும் விளக்கம் நீர்வீழ்ச்சியில் குளித்து எழுந்தது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. கவிதையைப் போன்ற சிறந்த மொழியில்லை..... தங்களைப் போன்றவர்கள் அதற்கு விளக்கம் கூறும்போது, அந்தக் கவிதை மகுடத்தைத் தானே சூட்டிக்கொள்வது போல் இருக்கிறது.
முனியாண்டி ராஜ் said…
கவிதை மிக அருமை. அந்தக் கவிதைக்குத் தாங்கள் கூறிய விளக்கமோ அதை விட அருமை. கவிதையை வாசித்துக் கிரகித்து, அதன் அழகில் மயங்கி, கருத்தில் கரைந்து பயணிப்பதே ஒரு சுகம்தான்.
ko.punniavan said…
நன்றி கவின்.
நான் சமீபத்தில படித்த கவிதைகளில் முத்திரை கவிதை இது. இதில் ஊறும் படிமம் அலாதியான சுகத்தைத் தருகிறது. கவிதை என் அனுபவத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது.நன்றி

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...