Skip to main content

ஓடாதே -கதை விமர்சனம்

22.7.12ல் ஞாயிறு தினக்கதிரில் பிரசுரமான ஓடாதே கதையைப் பற்றி என் பார்வை 
ஓடாதே கதையை ஒரு கட்டாயத்தின் பேரில், ஒரு ஆர்வமற்ற மனநிலையோடுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் கதையைத் தொடங்குவதற்கு முன்னாலேயே பொதுவாகவே புதியவர்களின் படைப்பை வாசிக்கும்போது  தோன்றும் முன்சலிப்பு, கதையைத் தொடங்கியதும் பட்டென விலகிக்கொண்டது. தொடங்கியபோது உண்டான ஆர்வநிலை முடியும் வரை அகலவே இல்லை என்பதிலிருந்தே இக்கதை மிக அருகில் வந்தமர்ந்து என்னோடு கைகோர்த்துக்கொண்டு கடைசிவரை பயணித்தது.
 நேர்க்கோட்டு உத்தியையச் சார்ந்து கதையைப் பின்னியிருக்கிறார் ஐஸ்வரி. Linear என்று சொல்லக்கூடிய நேர்க்கோட்டு உத்தி மிகப் பழைய கதைசொல்லும் பாணி. ஆனாலும் இக்கதைக்கு (கருவுக்கு) இவ்வுத்தியின் செய்நேர்த்தி  மிகப் பொருத்தமாவே அமைந்துருந்தது. மொழி நடையின் அழகியல் இதற்குக் கூடுதல் சான்று.
   ருக்குமணி டீச்சரில் தொடங்கி அவரிடமே ஒரு அதிரடி முடிவோடு வந்து நிற்கிறது கதை.
   பொதுவாகப் பள்ளிகளில் ருக்குமணிச் டீச்சர்களின் சாகசங்களால் சமூகத்தில்  சாதனையாளர்களாக வரவேண்டியவர்களை எண்ணற்றவர்களை மிகச் சாதூர்யமாக ,அதிலும் மிக துச்சமாக தெருவில் எரிந்ததுவிடுவதுண்டு. அப்படி இல்லையென்றால் நமக்குள் ஏன் இத்தனை குண்டர்கள் , குற்றங்கள், கொலைகள்? ருக்குமணி டீச்சர்கள்தானே அவர்களின் தொடக்க நிலை உருவாக்கிகள்! .(கணிதப் பாடத்தின் மேல் எரிச்சலை உண்டாக்கிய கைங்கர்யத்தால் இவ்வாறான மாணவர்கள் உருவாகிவிடுகிறார்கள்)
   கதாசிரியர் ருக்குமணி டீச்சர் பற்றிய பாத்திரப் படைப்பை மிக அங்கதத் தொனியில் சொல்லிக்கொண்டு போகும் தருணத்தில் , சாமான்ய வாசகனுக்குத் உண்டாக்குகின்ற கோபம் மிக முக்கியமானது. இந்த அழகியலில் தான் வாசகன் கதையோடு கூடிவிடுகிறான். ருக்குமணி டீச்சர் கணிதம வராத கதை சொல்லிக்கு உண்டாக்கும் மன அழுத்தத்தையும், ஏமாற்றத்தையும் கதை சொல்லியின்(முக்கிய கதாப்பாத்திரத்தின்) மேல் கரிசனத்தை உண்டு பண்ணுகிறது.  வாசகனுக்கு மாணவிமேல் கரிசனமும் ,ருக்குமணி டீச்சரின் மேல் கோபமும் உண்டாக்கும் கதைப் போக்கு கதையின் இறுகப் பிடித்துக்கொண்டு வாசகனை கதைக்குள் ஒன்றிடவைத்துவிடுகிறது ,
     இக்கதையின்மையப் புள்ளியாக கதைசொல்லி முன்னின்றாலும், கதை கலிவித்துறையின் முகாமையான பின்னடைவை ஒன்றை மிக கவனமாக் முன்னகர்த்திய வண்ணம் இருக்கிறார். ஆசிரியர் மாணவரை சிறுமை செய்வதலும், மாணவர்கள் மற்ற துறைகளில் ஆர்வமாக ஈடுபடுதலைக் கருணையற்று வெட்டி எறிவதிலும், மாணவ சமூகத்தைச் சோதனையை நோக்கியே மூலைச் சளவை செய்வதிலும்...விளையாட்டெல்லாம் உப்புக்கும் ஆகாது என்ற துர்போதனை செய்தலையும் பிரச்சார வாடை அறவே தலைகாட்டசெய்யாமல் கதைக்குள் ஊடாட வைத்திருக்கிறார். மாணவர்களின் இயல்பாக விரும்பும் துறையில் குறுக்கே நின்று ,சிதைத்து தங்களின் குறுகிய நோக்குக்குக்காக மடைமாற்றம் செய்து அவர்களின் வாழ்வை பலியிட்டுவிடும் கல்வித்துறையினரின் பிற்போக்கு நிலையை கதை சொல்லாமலே சொல்லிவிடுகிறது.  சமீபத்தில் நடந்து முடிந்த சுக்மா தடகள ஓட்டப்பந்தயத்தில் காலங்காலமாக நாம் பெறும் வெற்றிக்கிண்ணங்களை பிற இனத்தவர் தட்டிச்சென்ற காரணத்தை ஆராய்ந்தால் ருக்குமணி டீச்சர்களின் வன்மம் புரிபடும்.
   இதில் முரணான இரண்டு பாத்திரங்களின் படைப்புத்திறன் சுட்டிக்காட்டப் பட வேண்டிய அம்சம். அவர்களின்  குறிக்கோளை நிறைவேற்றும் விடாப்பிடி கதைக்குள்ளிருந்து வாசகனை வெளியேற விடாத படைப்புச்சாதூர்யம் பாராட்டத்தக்கது. ருக்குமணி, மாணவி(கதைசொல்லி) மேல் வலிந்து செலுத்தும் கணித வாய்ப்பாட்டு மனனமும் , அதன் மேல் விருப்பமுற்று ஓட்டப்பந்தயத்தில் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட மாணவியும் இந்த முரணியக்கத்துக்கு நல்ல அடையாளம். இது கதையை சோர்வடையாமல் நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது.
    கல்விச்சான்றிதழ் மட்டுமே வாழ்வைச் செம்மையாக்கும் என்ற கருத்தாக்கம் கல்வியாளர்களாலும் அரசியல் வாதிகளாலும் கட்டமைக்கப் பட்ட ஒன்று. இது தவறான ஒன்று என்பதை ஓடாதே கதை வலிந்தே நிறுவியிருக்கிறது. மாணவர்களின் அபிலாசைளை களவாடுகின்ற இச்சமூகத்தின் மீதான கோபமும்,அதனைமடைய முடியாது தவிக்கும் அவர்களின் கையறு நிலையையும் நாம் அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும்.
    இந்த ஒற்றைக் கதையோடு  இலக்கியவாழ்வை முன்னெடுக்க வேண்டும் ஐஸ்வரி. சமீபத்திய தினக்குரல் கதைகளை வாசித்து வந்தவன் ஓடாதே கதையை வாசித்து, மூச்சுவாங்க சற்றே நின்று இதனை எழுதுகிறேன்-அல்லது கதை எழுத வைத்தது.
(இக்கதை கதாசிரியரின் கைவண்ணமாக இருக்கவேண்டுமே என்பதே என் நம்பிக்கை)

Comments

"நேர்க்கோட்டு உத்தியையச் சார்ந்து கதையைப் பின்னியிருக்கிறார் ஐஸ்வரி. Linear என்று சொல்லக்கூடிய நேர்க்கோட்டு உத்தி மிகப் பழைய கதைசொல்லும் பாணி. ஆனாலும் இக்கதைக்கு (கருவுக்கு) இவ்வுத்தியின் செய்நேர்த்தி மிகப் பொருத்தமாவே அமைந்துருந்தது. மொழி நடையின் அழகியல் இதற்குக் கூடுதல் சான்று." என்று பகர்ந்துள்ளீர்கள் அண்ணா! பல ஜாம்பவான்களும் இந்த உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எந்த உத்தியாக இருந்தாலும் கதை வெற்றிபெற்றால்தான் சிறப்பு. அந்தவகையில், இந்தக்கதை மிகச்சிறப்பு. அரசல்புரசலாக ஒரு செய்தி வந்தது - 'அடையாளம் தெரியாத, திடீரென்று முளைத்த ஒரு இளம்பெண் இப்படி எழுத முடியுமா' என்று! அதற்கு நான் பதில்சொல்ல இயலாது. நீங்கள்தான் சரியான ஆள். ஆனால், எனக்கொரு கேள்வி உண்டு! இந்தக் கதைக்கு நல்ல விமர்சனம் தந்த உங்களிடமே கேட்டுவிடலாம் என்றுதான் இதன்வழி எழுதுகிறேன். "ஆறாம் வகுப்பு படித்துகொண்டிருக்கும் ஒரு மாணவி சொல்லும்/எழுதும் நேர்க்கோட்டு உத்தியையச் சார்ந்த கதை இது என்பதால், அவள் (12 வயது மாணவி) இப்படி இலக்கண நயமிக்க மொழிநடையிலா கதையைப் படைப்பாள்? இதை, 'அடையாளம் தெரியாத, திடீரென்று முளைத்த ஒரு இளம்பெண் இப்படி எழுத முடியுமா' என்று சிலரால் வினவப்பட்ட ஐஸ்வர்யா உணரவில்லையா???
'ஓடாதே' என்ற பெயரில் தினக் குரலில் வெளிவந்த போட்டிக்கதையை நானும் படித்தேன். மிக நன்று! தங்களின் விமர்சனமும் அருமை! "இக்கதைக்கு (கருவுக்கு) இவ்வுத்தியின் செய்நேர்த்தி மிகப் பொருத்தமாவே அமைந்துருந்தது. மொழி நடையின் அழகியல் இதற்குக் கூடுதல் சான்று" என்றும் பாராட்டியிருக்கிறீர்கள். "மேலும், நேர்க்கோட்டு உத்தியையச் சார்ந்து கதையைப் பின்னியிருக்கிறார் ஐஸ்வரி. Linear என்று சொல்லக்கூடிய நேர்க்கோட்டு உத்தி மிகப் பழைய கதைசொல்லும் பாணி" என்றும் பகர்ந்திருக்கிறீர்கள். எந்தப்பாணியாக இருந்தாலும் கதை சொல்லும் பாணி சிறப்பாக இருந்தால் போதும்! பிரபல ஜாம்பவான்களும் நேர்க்கோட்டு உத்தியைப் பயன்படுத்திதான் அழகான படைப்புகளை பிரசவித்திருக்கிறார்கள். 'புதிதாக எழுத வந்திருக்கும் ஒரு இளம்வயது பெண் இப்படி எழுதுவாளா' என்ற கேள்வி பொதுவாக எழுந்துள்ளதாக அரசல்புரசலாக என் காதுகளில் எட்டியது! இது உண்மை. எனக்குத் தெரியாது, ஆனால் சிறந்த விமர்சனம் கொடுத்திருக்கும் உங்களுக்குத் தெரியும், புதியவள் இப்படி எழுதமுடியுமா முடியாதா என்று! ஆனால், எனக்கும் ஒரு கேள்வி உண்டு! அதாவது, 12 வயதுடைய 6'ஆம் வகுப்பு மாணவியான அந்தக் கதாபாத்திரம், 'நேர்க்கோட்டு உத்தியையச் சார்ந்து' கதையை இந்த இலக்கணமான மொழிநடையில் சொல்லமுடியுமா?
இதை கதாசிரியரான ஐஸ்வரி உணர்ந்தாரா? மிகச்சாதாரண பேச்சுமொழியில்தானே கதை சொல்லியிருக்கப்படவேண்டும்? அதுதானே கதைக்கு மேலும் அழகைச் சேர்த்திருக்கும்?'

அன்புடன்
பாலகோபாலன் நம்பியார்
Anonymous said…
'ஓடாதே' என்ற பெயரில் தினக் குரலில் வெளிவந்த போட்டிக்கதையை நானும் படித்தேன். மிக நன்று! தங்களின் விமர்சனமும் அருமை! "இக்கதைக்கு (கருவுக்கு) இவ்வுத்தியின் செய்நேர்த்தி மிகப் பொருத்தமாவே அமைந்துருந்தது. மொழி நடையின் அழகியல் இதற்குக் கூடுதல் சான்று" என்றும் பாராட்டியிருக்கிறீர்கள். "மேலும், நேர்க்கோட்டு உத்தியையச் சார்ந்து கதையைப் பின்னியிருக்கிறார் ஐஸ்வரி. Linear என்று சொல்லக்கூடிய நேர்க்கோட்டு உத்தி மிகப் பழைய கதைசொல்லும் பாணி" என்றும் பகர்ந்திருக்கிறீர்கள். எந்தப்பாணியாக இருந்தாலும் கதை சொல்லும் பாணி சிறப்பாக இருந்தால் போதும்! பிரபல ஜாம்பவான்களும் நேர்க்கோட்டு உத்தியைப் பயன்படுத்திதான் அழகான படைப்புகளை பிரசவித்திருக்கிறார்கள். 'புதிதாக எழுத வந்திருக்கும் ஒரு இளம்வயது பெண் இப்படி எழுதுவாளா' என்ற கேள்வி பொதுவாக எழுந்துள்ளதாக அரசல்புரசலாக என் காதுகளில் எட்டியது! இது உண்மை. எனக்குத் தெரியாது, ஆனால் சிறந்த விமர்சனம் கொடுத்திருக்கும் உங்களுக்குத் தெரியும், புதியவள் இப்படி எழுதமுடியுமா முடியாதா என்று! ஆனால், எனக்கும் ஒரு கேள்வி உண்டு! அதாவது, 12 வயதுடைய 6'ஆம் வகுப்பு மாணவியான அந்தக் கதாபாத்திரம், 'நேர்க்கோட்டு உத்தியையச் சார்ந்து' கதையை இந்த இலக்கணமான மொழிநடையில் சொல்லமுடியுமா?
இதை கதாசிரியரான ஐஸ்வரி உணர்ந்தாரா? மிகச்சாதாரண பேச்சுமொழியில்தானே கதை சொல்லியிருக்கப்படவேண்டும்? அதுதானே கதைக்கு மேலும் அழகைச் சேர்த்திருக்கும்?'

அன்புடன்
பாலகோபாலன் நம்பியார்
ko.punniavan said…
முதலில் கதை பற்றிப்பேச வந்ததற்கு நன்றி. எனக்கு மிக உவப்பான விஷயமும் கூட. அந்தக்கதை சுயகற்பனையாக இருக்கமுடியாது என்பதை நானும் உணர்ந்தேன். ஞாயிறு குரலின் ராஜசோழனுக்குப் போன் செய்து இநதக் கதாசிரியரின் நிஜத்தன்மை பற்றிக் கேட்டேன்.இது சொந்தக்கதையாக இருக்க முடியாது என்று கடிதம் ஏதும் வந்ததா என்று கேட்டு வெள்ளிக்கிழமை வரை காத்திருந்தேன். அப்படி எதுவும் வரவில்லையென்று சொன்னார்கள். பின்னர்தான் என் விமர்சனத்தைப் போடச்சொன்னேன்.
காதாப்பாத்திரத்துக்கான் 12 வயது. கதாசிரியருக்குமா?
கதைசொல்லியே பாத்திரமாவது சாத்தியம்தான் என்றாலும் அந்த உண்மை கதாசிரியருக்கு மட்டுமே தெரியும் , நமக்கு எப்படித்தெரியும்?
சரி, கதை சொல்வதற்கு முன்னரே உத்தியை யாரும் தேர்வு செய்ய மாட்டர்கள். கதைதான் உத்தியைத் தேர்வு செய்து கொள்கிறது.
சரி விடுங்கள்- ஆரம்ப எழுத்தாளரின் துவக்கம் போலியாக இருக்கட்டும். அவர் தொடர்ந்து சுயத்தைக் காட்டுவதற்கு இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும். மன்னிக்கலாம்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த