Skip to main content

இந்தியர்களின் வாக்கு வேட்டைக்காக நஜீப்பின் அரசியல் வியூகம்


                                                 Najib                                        Anwar
 
             இன்றைய மலேசியப் பிரதமர் நஜிப் முந்தைய பிரதமர்களைவிட சற்று வித்தியாசமானவர். எந்த நேரத்திலும் நாடு எதிர் நோக்கியிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற அவர் எதிர் நோக்கியிருக்கும் சவால்கள் முந்தைய எந்தப் பிரதமரும் சந்தித்திராதது. 2008க்குமுன்னர் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தை எளிதில் கைப் பற்றி ஆட்சி பீடத்தில் தன்னை அமர்த்திக் கொண்டது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறு வடிவம் கொண்டு அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது.   
   
               முந்தைய காலங்களைவிட தற்சமயம் எதிர் கட்சிகள் குரல் ஓங்கியிருப்பதே காரணம். எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தேர்தலில் ஜெயிப்பதற்கான அரசியல் வியூகமும் முன்னகர்வும் பிரதமரை மிகுந்த கவலைக் குள்ளாக்கியிருக்கிறது. அதனாலேயே அவர் தன் அரசாங்கத்தின் மரபான இனவாத அரசியல் பாணியைக் கைவிட்டு ‘எல்லாருக்கும் எல்லாமும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தன்னை தகவமைத்துக்கொண்டு கவனமாகக் காயை நகர்த்தியபடி இருக்கிறார். 2008ல் நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு , எதிர்கட்சி கிட்டதட்ட ஆட்சியைக் கைப்பற்றிவிடக்கூடிய சாத்தியங்கள் தெரியத் தொடங்கின. அதன் நீட்சியாக இந்தத் தேர்தல் எதிர்க் கட்சியின் கையில் விழுந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். அரசியல் கருத்தாக்கங்களும் ஆரூடங்களும் இந்த எதிர்பார்ப்பைத்தான் நிறுவுகின்றன.  அப்படி அரசு எதிர்கட்சி  ஆட்சியை வென்றால்   இதுவரை   மலேசிய வரலாறு கண்டிராத அதிர்ச்சி தேர்தல் முடிவாகத்தான் அது அமையும். (நாடு சுதந்திரம் பெற்ற நாள் தொட்டு இன்று வரை தேசிய முன்னணியே ஆட்சியைக் கைப்பற்றி தன் ‘இஷ்டப்படி’ ஆண்டு வந்தது.)
       
             மக்களின் எண்ணமும் பெரும்பாலும் எதிர்கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தையே கொண்டிருக்கிறது. நான் புழங்கும் எல்லாத் தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப் பெற்ற வாய்மொழி தகவல் இது . இது வாய்வழித் தகவல்யதானே என்று  ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் இணையம், டிவீட்டர், முகப் பக்கம், அனைத்துலக ஊடகத் தகவலின் அடிப்படையில் இதனை அருதியாக கட்டியங் கூறலாம். இம்முறை எதிர்க் கட்சியின் வாய்ப்பு கூடுதல் பிரகாசத்தோடு ஒளிர்கிறது.
      
             2008ல் மலேசிய இந்தியர்கள் பெரும்பாலும் எதிர்க் கட்சிக்கே வாக்களித்தன. ஹிண்ட்ராப் போராட்ட அலை அவர்கள் மடை மாற்றம் செய்துவிட்டிருந்தது ஒரு முக்கியக் காரணம். இந்தியர்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்யாமல் இருந்ததே அதற்குக் காரணம். அதனைக் கறாராக முன்னெடுத்த ஹிண்ட்ராப் போராட்டக் குழுவுக்கு இன்றைக்கும் மக்கள் சிலர் நன்றி பாராட்டி நெகிழ்ந்து போகின்றனர்.  அந்தப் போராட்டத்தின் பலனாக இன்றைக்கு இந்தியச் சமூகம் இழந்த பல வாய்ப்புகளை மீட்டுக்கொணர வழிவகுத்திருக்கிறது. ஆனாலும் ஐம்பதாண்டுகள் இழப்பை இந்த நான்கு ஆண்டுகளில் சரி செய்துவிட முடியுமா என்ற எண்ணம் படித்தவரிடையே எழும் முகாந்திரமான கேள்வி.
   
              நஜீப் பிரதமராக வந்தவுடன் சமூகங்களிடையே நிலவிய கல்வி, சமூக , பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் 2008 தேர்தல் முடிவை நிர்ணயித்துவிட்டது என்பதை உணர்ந்துவிட்டிருந்தார். அதிலும் ஹிண்ட்ராப் இயக்கப் போராட்டம் இந்திய இனத்துக்கு மட்டுமின்றி மற்ற இனத்தையும் உசுப்பி விட்டு இந்த இனப் பாகுபாட்டுப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டிருக்கிறது என்பதை படிப்பினையாக் கொண்டே நஜீப் இந்திய சீன சமூகம் எதிர் நோக்கிய பிரச்னைக்கு தீர்வு காண, மிகுந்த முனைப்போடு செயல் பட்ட வண்ணம் இருக்கிறார். ‘என்ன வேண்டும் கேள் மனமே’ என்பதோடு நின்றுவிடாமால் ‘நீங்கள் தட்டவே தேவையில்லை நான் தருவேன், நீங்கள் கேட்கவே தேவையில்லை நான் வருவேன்,’ என்ற எதிர்கொண்டு வருவதும், பூட்டிக்கிடந்த வாசலைத் தட்டித் திறந்து உதவி செய்வதுமாய் இருக்கிறார் நஜிப். இதனால் சீனச் சமூகம் உச்சி குளிர்ந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. கொடுப்பதெல்லாம் வாங்கிக் கொண்டு பெருக்கல் குறியை மட்டும் யாருக்குப் போடுவதென்ற ஒரு தீர்க்கமான குறிக்கொளோடுதான் இருக்கிறது. பினாங்கு மாநிலம் எதிர்க் கட்சியான ஜனனாயக செயல்கட்சியின் ( பெரும்பாலும் சீனச் சமூகத்தினரைக் கொண்ட அரசியல் கட்சி)  கையில் விழுந்த நாள் தொட்டு அது காட்டிவரும் முன்னேற்றம் , முந்தைய ஆளுங்கட்சி அரசின் பலவீனங்களைக் துல்லியமாக அடையாளம் காட்டி தன் இருப்பை ஸ்திரப் படுத்திக் கொண்டிக்கிறது. அதனைச் சீன சமூகம் அங்கீகரித்து தங்கள் சமூகத்தின் கெட்டிக்காரத்தனத்துக்கான நிரூபனமாக நிறுவிய கர்வத்தோடு தன்னை பிற இனத்திடம், குறிப்பாக மலாய்க்கார இனத்திடமும், பொதுமையில் மக்களிடமும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளத் தவறவில்லை. சீன சமூகம் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்காது என்பதற்கான மிக முக்கியக் காரணங்களில் ஒன்று இது.
              
             ஆனால் இந்திய சமூகம் யாருக்கு வாக்களிக்கும் என்று என்னைக் கேட்டால் நான் ஆளுங்கட்சிக்குத்தான்  பெரும்பாலானோர் வாக்களிக்கப் போகிறார்கள் என்று சொல்வேன்.
   
               ஏன்? ஹிண்ட்ராப் போராட்ட உணர்வு மங்கிவிட்டதா என்ற கேள்வி இத்தருணத்தில்  கண்டிப்பாய் எழும். நான் அதற்கும் ஆம் என்றே பதிலுரைப்பேன்.
   
            அது எப்படி என்ற தொடர் வினாவைக் கேட்பீர்கள்.
    2008ல் நடந்த ஹிண்ட்ராப் இயக்கப் போராட்டம் இந்திய சமூகத்துக்கு அரசாங்கம் இழைத்த போதாமையை உள் நோக்கமாகக் கொண்டது. அரசாங்கம் இந்தியர்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யாமையால் உண்டானது. ஆனால் இந்த நிலையை மெல்லக் கலைந்து வருகிறார் நஜீப். இனி அரசாங்கம் ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்காது என்று உறுதிபடக் கூறியும், நடந்தும் வருகிறார் . (தேசிய முன்னணி வெற்றி பெற்ற பின்னர் என்ன நடக்குமென்று இங்கே நான் ஆரூடம் கூற விரும்பவில்லை) இன்றைக்கானத் தோசையை இந்தியர்களுக்குக்  கிழி படாமல் கொடுப்பதில் கூடுதல் கவனமாக இருக்கிறார் நஜீப். இது ராஜ தந்திரம் என்றும், ஓட்டு வேட்டை என்றும் குத்தலாகக் கூறுகிறார்கள் தெளிவுள்ளவர்கள். இந்தியர்கள் தெளிவுள்ளவர்கள் எத்தனை சதவிகிதம் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் வண்டவாளம் தண்டவாளத்தில் ஓடும்! இப்படி ஒரு சமூகத்தின் கண்கள் திறக்கப் படாமல் இருந்ததற்கு காரணி யார் என்ற காரணமும் தெரியாதவர்கள் பெரும்பாலான இந்தியர்கள்.
  
                 அதனால்தான் சொல்கிறேன் இந்தியர் ஓட்டு ஆளும் தேசிய முன்னணிக்குத்தான். சரி இதற்காக நான் கூறும் காரணங்கள் ஒத்து வருகிறதா என்று பாருங்கள்.

1. புதிய பிரதமர் கேட்டதெல்லாம் கொடுக்கிறார். அரசாங்கம் தன் தவற்றை உணர்ந்துவிட்டது. இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற மனப்பாண்மை வளர்ந்து வருகிறது. அதற்கான நடவடிக்கை கை மேல் பலன் அளிக்கத் துவங்கியும் விட்டது.( ஒரு புதிய தமிழ்ப் பள்ளி கட்டுமானம் தொடக்கப் பட்டுவிட்டது, கெடா மாநிலத்தில்) முன்னர் அரசாங்கம் புதிய தமிழ்ப்பள்ளி நிறுவப் படுவதற்கான எந்த அக்கறையும் காட்டவில்லை. மறைம்கமாக அதனை முடக்கவே முன்நின்றது.

2. மன்னித்து குற்றங்களை மறந்துவிடும் மனப் போக்கு இந்தியர்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. அதனால் பழையதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

3. இந்தியர்கள் அதிகாரத்துக்கு அடிபணிந்த மரபில் இருந்து வந்தவர்கள். ஒருவகையில் அதிகாரத்தின் கீழ் வாழ்வது பழக்கமாகிப் போய்விட்டது. தேசிய முன்னணி அதிகார அரசாங்கமாகத்தானே இருந்தது( இருக்கப் போகிறது .உள்நாட்டுப் பாது காப்புச் சட்ட, மலாய்ச் சமூகம் எஜமானச் சமூகம் என்ற கோட்பாட்டை வரையறுத்து வைத்து நிறுவ முனைவது) அப்படியானால் மலாய்ச் சமூகம் அதிகாரச் சமூகம் தானே?

4.,இந்தியரகள் பெரும்பாலும் அரசு சார்ந்த ஊடகத்தையே படிப்பவர்கள்.  தொலைக் காட்சி, வானொலி,  போன்ற மின் ஊடகங்களையும், செய்தித்தாட்கள் போன்ற அச்சு ஊடகங்களுமே உண்மையான தகவலைத் தரும் என்று நம்புபவர்கள். இன்றைக்கான நவீனத் தகவல் மையங்களான் அவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது. அல்லது கால மாற்றத்துக்கு ஏற்ப நவீன ஊடக வாய்ப்பைத் தேடிப் போகாதவர்கள். எனவே முற்போக்கான, தர்க்கரீதியான தகவல்கள் அவர்களைச் சேர்வதில்லை.

5. எதிர்க் கட்சி வெற்றிபெற்றால் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று நினைத்து அஞ்சுகிறார்கள். எதற்கு எலிகப்டரில் போகும் சனியனை ஏணிவைத்து இறக்கி குத்துதே குடையுதே என்று வருந்தவேண்டும்?  இந்தியர் மட்டுமேவா சனியனுக்கு ஏணி பிடிக்கப் போகிறார்கள்?

6. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? நடப்பது நடக்கட்டும் என்ற போக்கு உடையவர்கள் இந்தியர்கள்.

7. எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் 2008ல் ஒற்றுமையாக இருந்து போராடிய ஹிண்ட்ராப் குழு இன்றைக்கு நவக்கிரகங்களாய்  ஆளுக்கொரு திசையில் முகங்களைத் திருப்பிக் கொண்டு விட்டார்கள். நம் சமூகத்தில் இருக்கும் மிகப் பெரிய பலவீனமிது. தங்களுக்கு விழிப்புணர்வையும் வழிகாட்டலையும் வழங்கிய தலைமைத்துவம் இன்றைக்கு  இல்லையே.  இ வர்களே    இப்படியென்றால் தங்கள்
தலையெழுத்தை வேறு யாரிடம் ஒப்படைப்பது  என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது!

    இதையெல்லாம் கருத்தில் கொண்டே இந்தியர் ஓட்டு ஆளும் கட்சிக்கே போய் விழும் என்று சொல்லலாம். ஆனால் இந்தியர் ஓட்டுகள் மட்டுமே (ஏறத்தாள ஏழு விகிதம்)  ஆளப்போகும் அரசை நிர்ணயித்துவிடும் என்பது ஒரு அபத்தமான கருத்துதான். இருப்பினும் இந்தியர் வாக்கு அரசு வேட்பாளர்களின் வெற்றி தோல்வித் தருணங்களின் இக்கட்டான தடுமாற்ற நிலையிலிருந்து கண்டிப்பாய் கைதூக்கிவிட்டுவிடும்.  இதுவே நஜீப்பின் நம்பிக்கை. இதற்காகத்தான் நஜீப் இந்தியர்களின் நம்பிக்கையை மீட்கத் துடித்து மெல்ல மெல்ல பெற்றும்விட்டார் என்றும் கருதலாம்.
            (சீனர்களின் வாக்களிப்பு அரசியலையும் அடுத்து காணலாம்)

Comments

மலேசிய தேர்தலை பற்றிய ஒரு நல்லதொரு பதிவு.
மிக்க நன்றி.
ko.punniavan said…
உங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றி

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த