Skip to main content

ஆணாதிக்கக் குரலும், பெண்ணிய சிந்தனையும்


                        
    கடந்த ஞாயிற்றுக்கிழமை என் நண்பர் எனக்குச்சொன்ன ஒரு அபலைப் பெண்ணின் கதையை உங்களுக்கும் சொல்கிறேன். இந்த ஒரு வாரமாய் என்னை நிலைகொள்ளாமலாக்கிய கதை. நம் வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் சம்பவங்களில் ஒன்று இது என்றாலும், இது பெண்களின் கதையென்பதால்தான் சோகம் ஒவ்வொரு முறையும் பழையதை வென்று புதிய துயரத்தைப் பெயர்த்து கொண்டுவந்து அலைக்கழிக்க வைத்துவிடுகிறது.
  
 அவள் வீட்டை விட்டு ஓடி வந்தவள். அதற்குப் பெரும்பாலும் காதலன்றி, வேறு காரணமாக இருக்க முடியாது. தன் காதலின் பிடிப்பால் அம்மாவின் அறிவுரையை தூக்கியெறிந்தவள். அண்ணன் அடியையும் வாங்கிக்கொண்டு காதலே பெரிதென தாங்கிக்கொண்டவள். குறுக்கே நின்றை அத்தனைத் தடைகளையும் உடைத்து நொறுக்கிவிட்டு சுவரேறிக் குதித்தவள்.
  
ஓடிவந்தவள் அந்தப் பட்டணத்தில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்ந்தாள். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக நகர்ந்து கொண்டிருப்தாய்த்தான் பட்டது. வானத்தில் எப்போதுமே முழு நிலா நிலைப்பதில்லை. ஓடைகள் நீர் நிறைந்து சலசலப்பதுமில்லை!
 
  •  மலேசியாவுக்கு வருகை தந்த ஜெயமோகனோடு எங்கள் இலக்கிய நண்பர்கள்
  •  

 அநேகமாக எல்லா ஓடிவந்த காதலும் எதிர்கொள்ளும் அதே வாழ்வை இவளுடைய காதலும் எதிர்கொண்டது. திட்டமிடப் பாடாத வாழ்வின் இன்னல்களால் சிலந்தி வலையெனப் பின்னல்கள் சிக்கு மாட்டத் துவங்கின. வாயுக்கும் வயிற்றுக்குமான போராட்டம் தின்னத் துவங்கியது.
   அந்தப் பதிய தம்பதிகளின் காமம் கரைந்ததோடு புரிந்துணர்வும் கரையை அரிக்கும் அலையென கரைத்துச் செல்லத் தொடங்கியது. காதலன் இவளை வெறுக்க ஆரம்பித்திருக்கிறான்.


      “நீ என்னோடு ஓடிவந்தவள். உடலிச்சைக்காக அவசரப்பட்டவள்,” என்றெல்லாம்  கீழ்மையாகப் பாவிக்க ஆரம்பித்தான். அவன் வரம்பற்ற சொற்கள் அவளைச் சுட்டன. காதலித்தபோதும், அதன் பொருட்டு ஓடிவந்தபோதும், காமம் துய்த்தபோதும் உண்டான மகிழ்ச்சி இப்போது புரண்டு கொண்டது. மேனியில் புண்கள் புதிதாய் முளைத்துவிட்டாதாய் புரட்டிப் போட்டது.
       பெண்களுக்கு நேரக் கூடாத இன்னொரு துயர், கணவன் இன்னொரு பெண்ணின் மேல் கொண்ட மையலில், கொண்டவளை துச்சமாக்குதல். அவன் அவளை ஒதுக்க ஆரம்பித்தான். அவளிடம் நேரடியாகவே நீ எனக்கு வேண்டாம், எனக்குப் புதியவள் போதும் என்று கூறி அவளை குப்பையைப் போல கசக்கித் தூக்கி எரிந்தான்.வெள்ளத்தின் புரளலில் கரை ஒதுங்கிய வண்டலாய் நின்றாள்.

     அவளிடம் போராடும் குணமில்லை. நசுக்கினால் சத்தமில்லாமல் சாகும் பூச்சி இனம் அவள். அங்கீகாரமற்ற முறையில் அவனோடு வாழ்வதே இந்த இக்கட்டான நிலைக்குக் காரணம் என்றே அவள் செய்வதறியாது தவித்தாள்.

      கொஞ்ச நாள் பொறுமையாக இருந்து பார்த்துவிட்டு, இது சரிபட்டு வராது என் முடிவெடுத்து  தனக்கான உடமைகளை எடுத்துக் கொண்டு  வேலை செய்யும் இடத்துக்கு வந்து விட்டாள். அடுத்தத் திக்கு புலப்படவில்லை. அவள் மௌனமாக அழ, அதைக் கண்ட அவளின் முதலாளி என்ன ஏதென்று விசாரிக்க, அவள் நடந்ததைச் சொல்கிறாள். அவளுக்கு உடனடி ஆறுதலாக தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறாள் முதலாளி. இதற்கிடையில் அப்பெண்ணின் தாயிடன் போய் நடந்ததைக் கூறச்சொல்லி அனுப்பியிருகிறார்கள். தாய் மனம் அவளை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் என்றார்கள்.
  
   ஆனால் அது நடக்கவில்லை. தன்மானம் அவளை ஏற்கவில்லை. குடும்ப அந்தஸ்து அதற்கு இடம் கொடுக்காது என்றாள். நீ இங்கே இனி வராதே என்றாள் பெற்ற தாய். ஓடிப்போனவள் என்ற பட்டம் குடும்பத்தையும் பறக்கவிடும் என்றாள். அண்ணனோ இனி வந்தால் அடி உதைதான் கிடைக்கும் என்று மிரட்டினான். அரவணைக்க வேண்டியவர் அனைவரும் அவளை அப்புறப்படுத்தவே நினைத்தனர். அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வாழ்வின் மிகத் துயரமான, எந்தத் திசைக்குப் போவது என்ற நிச்சயமற்ற நாற்சந்தியில் நின்று அவள் குழம்பினாள். ஒரு கணம் தன்னையே முடித்துக் கொள்ளலாமே என்றுகூட நினைத்தால். குழப்பமும் குமுறலும் குடைந்தெடுத்தது. நல் வாழ்வென்ற கனவு வெடித்து கண்முன்னாலேயே சிதலம் சிதலமாகித் தரையில் விழுந்தது. அவள் கதி என்னாகும் என்று தெரியவில்லை!
   
 பெண்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது?  உடலால் தப்பிழைத்தால் வேசி என்றே கருதுகிறது. ஆனால் ஆண் செய்தால் அவனை ‘ஆம்புல புள்ள’ எப்படியிருந்தா என்ன என்கிறது.  இந்த அவதானிப்பு ஒரு கையில் சுண்ணாம்பும் மறு கையில் வெண்ணையும் இடும் செயல். ஆணாதிக்க வர்க்கம் தொன்றுதொட்டே தன் கைகளில் விடாப்பிடையாய் வைத்திருக்கும் அதிகாரமிது. பெண்களின் உடல் பலவீனமும், தற்காப்புக்காக ஆண்களையே சார்ந்திருக்கும் போக்கும் ஆண்களுக்கு இரட்டிப்பு மனவலிமையைக் கொடுத்துவிடுகிறது. பெண் எப்போதுமே ஆணின் உடமை என்ற ஆதிக்க மன்நிலையும் பெண்டிமையை உரமிட்டு வளர்க்கிறது. பெண்களைச் சிறுமையாகப் பார்க்கும் காரணத்தையும் நம் சமூக மரபு முன்வைக்கிறது. குடும்ப சொத்துக்கு ஆண்தான் வாரிசாக இருந்து அடுத்தடுத்த சந்ததிக்கு அதனை எடுத்துச் செல்ல முடியும் என்ற கற்பிதத்தை நிலைக்கச் செய்துவிட்டது. ஆண்கள் கைகளில் இருக்கும் இந்த நிலப்பிரபுத்துவ மரபுச் சரடை கறாராக வைத்திருந்தே கைமாற்றிக்கொள்ளும் தந்திரமும் இதில் உண்டு. பெண்கலை வீட்டுப் பொறுப்பேற்க வைத்து ஆண்கள் போருக்குச் செல்லும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த வரலாறு இன்றைக்கிருக்கும் நவயுக வாழ்விலும் பயன்படுத்துகிறார்கள். இடத்துக்கும் காலத்துக்கும் தகுந்தார் போன்று மாற்றிக்கொண்டு. ஆனால் ஆணாதிக்கப் போக்கின் நிறம் மாறாமல். பெண்கள் கல்வி கற்று வெளியுலக அனுபவத்தைக் கவசமாகக் கொண்டிருந்தாலும் பெண்களின்மேல் செலுத்தப்படும் ஒடுக்குமுறையும் வன்முறையும்  காலத்துக்கேற்றபடி மாறியிருக்கிறதேயன்றி ஒட்டு மொத்தமாய் ஒழிந்துவிடவில்லை.
  
  பெண்களை இன்றைக்குள்ள முக்கிய எழுத்தாளர்களில் ஜெயமோகன் எப்படி அவதானிக்கிறார் என்று பார்க்கலாம். அவர் எழுதிய ‘கூந்தல்’ ஆண்வர்க்க அடாவடிக்கு அங்கதக் குரல் கொடுக்கும் சிறுகதை . ஜெயமோகன் போன்ற ஒரு முழுமையான தமிழ் எழுத்தாளரை நான் வாசிப்பு பரப்பில் கண்டதில்லை. அவர் ஓர் ஈட்டற்ற எழுத்தாளுமை. மற்ற எழுத்தாளர்கள் படைப்பின் ஒரு வரையறைக்குள் நிறுத்திவிட முடியும். இவர் அதற்கு முரண். ஒரு காட்டாறு.
   
  கூந்தல் சிறுகதையில் மையமிட்டு உரக்க ஒலிப்பது ஆணாதிக்கமே. ஆனால் அக்குரலை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடுவார் இறுதியில். பெண்கள் ஆணாதிக்கச் சிந்தனைக்கு எதிர்க்குரல் கொடுக்கும் ஒரு போர்க்குணத்தை மடித்து உள்வைத்து திடுமெனப் பிரித்துக் காட்டி மலக்கச் செய்கிறார்.
  
   ‘கூந்தல்’ கடந்த நான்கு தலைமுறையில் ஆண்கள் பெண்களை நடத்தும் கேவலமான நிலை பற்றிப் பேசுகிறது. என்னதான் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகள் கடந்தாலும் அதன் ஊடுபாவக சமூக மாற்றங்கள் நிகழ்ந்தாலும், பெண்களை நடத்து நிலையில் பெரிய மாற்றம் ஏது நிகழ்ந்துவிடவில்லை என்பதை கதை சொல்லிச்செல்கிறது.

     நீலாயதாட்சி நான்கைந்து தலைமுறைக்கு முன்னால் பிறந்தவள். அவள் கணவன் ஒரு இருதய நோயாளி. அவள் கணவன் இறந்தபின் புத் என்ற நரகத்துக்குப் போவதற்கு அஞ்சி நீலாவை அவனுக்கு மணம் செய்கிறார்கள். மனம் செய்துவைத்தால் அவன் விமோசனம் மாறும் என்பது நம்பிக்கை! இவள் ஏழைக் குடும்பத்தில் பிறந்த பாவத்தால் பணக்காரனுக்குப் பலி கொடுக்கவேண்டியதாயிற்று. எதிர்பார்த்தபடியே அவன் இறந்துவிடுகிறான். விதவையாகிறாள் நீலா. அதற்குப் பின்னர்தான் நீலாவின் நரகம் தொடங்குகிறது. விதவைக்கு தினமும் மொட்டையடிக்க மாமியார் உத்தரவிடுகிறார். தினமும் காலையில் ஒரு பெண் நாவிதர் இTஹைச் செய்தாக வேண்டும். அவளுக்குப் பிரதி தினமும் பொழுது மொட்டையாகத்தான் விடியவேண்டும்.

அவள் கூந்தல் மிக கரிய தேர்வடம் மாதிரியான மயிர்க் கற்றை. நீலாவுக்குக் கூந்தலே யவ்வன அழகை அள்ளிக் கொடுக்கிறது. அந்த அழகுதான் சமூகம் பாவமாகக் கருதுகிறது. விதவைக்கு அழகு தேவையோ. தலையை அம்மனமாக்கு! முக்கால் அழகு போய்விடும். கணவன் இறந்ததற்கு அப்புறம் அவளுக்கு எதற்கு கொண்டாட்டமெல்லாம்? மூலியாகக் கடவாய்! இதுதான் அன்றைய பிற்போக்கான சாபம்!
நீலாவுக்கு கூந்தல் மேல் ஒரு பிரேமையே உண்டாகிவிடுகிறது. முன்பு போல தரை வரை தட்டும் மயிர்கற்றையை கைகளில் கோர்த்து பார்த்து மகிழ ஆசை அவளுக்கு. நடந்துவிடக்கூடிய ஆசையா அது? ‘பொம்மனாட்டி அப்படியெல்லாம் ஆசைப் படக் கூட்டது!
 
   ஐந்து தலைமுறை தாண்டி அவளுடைய கொள்ளுப் பேத்தியின் கதையைச் சொல்கிறார் ஜெ. கிட்டதட்ட பிரச்சினை தலை முடிதான். அவள் பெயரும் நீலா. அவளுக்கும் கருநாகம் மாதிரி கருத்துச் சுருண்ட தலமுடி. தரையைத் தாவித்தொட முனையும் நீளம். கணவனுக்கு அவளின் முடிமீது ஆசை. அந்த ஆசையை அவனின் அகந்தையாகவும் காட்டுகிறார் ஜெ.
   
அவளுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கிறது. கணவனுக்குப் பொறுக்குமா? பொறுமல் அப்போதே ஆரம்பித்துவிடுகிறது கணவனுக்கு.

    நீலாவின் முதலாளி பழைய மாதிரி உடுத்தக் கூடாது. மேல் நாட்டு உடைதான் இவ்வேலைக்குப் பொருந்தும். எனவே உடைக்குத் தகுந்தார் போன்று முடியையும் கச்சிதமாய் வைத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுருத்துகிறார். கணவனின் அபிப்பிராயம் என்னவாக இருக்குமோ என்று குழம்புகிறாள்.

     அவள் நினைத்தபடியே கணவன் அவளிடம் கூந்தலில் கை வைக்காதே எனக் கட்டளையிடுகிறான். இப்பொழுது அவளுக்கு வேலையா கணவனா என்ற குழப்பம். இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அவனிடம் மன்றாடிப் பார்க்கிறாள். உன் தலைமயிரை வெட்டுவதாக இருந்தால் நான் உன்னை விவாகரத்து செய்ய நேரிடும் என்கிறான். அவனுக்கு உள்ளே குமையும் காழ்ப்பின் நெருப்பு இவலைத் தீண்டுகிறது. குடும்பம் செழிக்கத் தானே பதவி உயர்வு. அதற்காக முடியைக் கத்தரிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? தன்னை ‘மயிராகவா’ அவர் பார்க்கவேண்டும் என் இரவு முழுதும் தூக்கமின்றி  தவிக்கிறாள். மன்றாடிப் பார்த்தாயிற்று. கணவன் தன் பிடிவாதத்தை தளர்த்துவதாய் இல்லை. ஆண் கர்வம் அவனை மனம் இரங்கவிடாமல் செய்கிறது. பெண்ணைச் சுயமாய்ச் சிந்திக்க விடாமல் தடுக்கும் ஆணாதிக்கப் போக்கு அவளை அருவறுக்கச் செய்கிறது. தனக்கு வேலைதான் முக்கியம் எனக் கருதி ஒரு முடிவெடுக்கிறாள்.னந்த இரவு வேளையிலேயே ஒரு கத்தரிக்கோலை எடுக்கிறாள். கற்றையாகப்  பிடிக்கு அடங்காமல் இருக்கும் கனமான முடியைக் கத்தரிக்கிறாள். கை வலிக்கிறது. மொத்தத்தையும் வெட்டி ஒரு உறையில் திணிக்கிறாள்.

      பின்னர் கைப் பேசியை எடுத்து, “காலையில் நான் இருக்கமாட்டேன். டிரஸிங் மேசையின் மேல் ஒரு பொட்டலம் இருக்கிறது. அதுதான் என் முடிவு.” என்று கனவனிடம் சொல்லிவிட்டு போனை அணைத்து விடுகிறாள்.

     கதை முடிந்து விடுகிறது. “தலை முடிதானே வேண்டும் உனக்கு. இதோ எடுத்துக் கொள், எனக்கு வேலைதான் முக்கியம். என் சுய சிந்தனைக்கும் செயலுக்கும்தான் இனி முக்கியத்துவம் கொடுப்பேன், ” என்பதை கதை சொல்லாமல் சொல்கிறது.

    இக்கதை ஆணாதிக்கக்கதை எதிர்த்துப் போராடும் ஒரு நவயுகப் பெண்ணைக் காட்டிச் செல்கிறது. ஐந்து தலைமுறைப் பெண்ணுக்கும் இப்போதுள்ள பெண்ணுக்குமான பெண்ணடிமைத்தன இடைவெளி குறைந்திருப்பதைச் சொல்கிறது. ஆண் வர்க்கத்தின் அகந்தை மனநிலை பெண்கள் வலிந்து வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று வலிந்து நிறுவுகிறது.

    பெண்கள் ஆண்களை முன்னிறுத்தி வாழும் வாழ்க்கை தன் சுயத்தைத் தின்றுவிடும். தான் முடிவெடுப்பதை நிறுத்திவிடும். தன் முன்னேற்றத்தைக் குலைத்துவிடும். மனைவிமார்கள் தன்னைவிட அறிவாளியாக இருக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் கணவன்மார்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் குறுகிய புத்திக்கு ஒரு சாட்டையடி இக்கதை.
  
 கதை எப்போதுமே வாசிப்புக்கான மனமகிழ் கதைகளாகவே இருந்துவிடுவதில்லை. மனக்கிலேசத்தை கிளறிவிடுபவை.அவை வாழ்வின் அனுபவப் பிரதி. கறை படிந்த மரபான மனநிலையை மாற்றும் மந்திர சக்தி.சிந்திக்க வைத்துச் சீர் செய்யும் வார்த்தைக் கருவி. போராட்ட குணத்தை விதைக்கும் படிப்பினை.



  

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த