Skip to main content

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?


8. சகலமும் சாமியே
 



ஜாலியன்வாலா படுகொலை மனதைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. ஒரு அமைதிப் போராட்டம்  அதிகாரத்துக்கும் அடக்கமுறைக்கும் அடிபணிந்ததுதான் போனது என்றாலும் அந்தப் போராட்டத்தின் நீட்சியாகத்தான்  விடுதலை பிறந்தது. இந்தியாவில் ஒரு பக்த் சிங் மட்டுமல்ல பல பகத் சிங்குகள் விடுதலைக்கு வித்திட்டார்கள். இந்தியா எழுப்பிய விடுதலை அலைதான் ஆசிய நாடுகளின் அடிமைத்தளத்திலிருந்து அறுபட ஒரு முன்னோடி. ஏகாதிபத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டே ஆக வேண்டுமென்ற வேட்கையை முன்னெடுத்த காந்தியே ஆசியா அடிமை நாடுகளுக்கான விடுதலையை விதைத்த தீர்க்கதரிசி. விடுதலைப் போராட்ட உணர்வு மற்ற நாடுகளுக்கு பரவியது காந்தியால்தான்.

அன்றைக்கு நான்கு இடங்களைப் பார்த்தாக வேண்டும். முதலில் பொற்கோயில்  , பின்னர் ஜாலியான்வாலா நினைவகம். அதனையடுத்து  காளிக்கோயில், கடைசியாக நான்கு மணிக்கு மயிர் கூச்சரியும் பாகிஸ்தான் இந்திய ராணுவ அணிவகுப்பு.


காளிக்கோயிலைப் பார்க்கப்போகிறோம் என்ற மனநிலையோடு போனது தப்பாகிவிட்டது. கோயிலுக்கு பேருந்தில் போக முடியாது. மக்கள் கூடும் இடங்களுக்கு வாகனங்களை ஒரு எல்லை வரைதான் வரையறுக்கிறார்கள். அதன் பின் ரிக்‌ஷாவில்தான் போகவேண்டும், கோயிலை நெருங்கியதும் கால்நடையாகத்தான் போகவேண்டும். நல்ல ஏற்பாடுதான் என்றாலும் அம்ரிஸ்டார் பட்டணமோ கோயில் வளாகமோ சுத்தமாக இல்லை. மக்கள் நெருக்கடியும், சுத்தம் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமையே காரணம். குப்பையும், தூசு துப்பட்டியும் நிறைந்து கிடக்கிறது.


கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு படியேறிப் போகிறோம். கீழ்த்தளத்தில் பஜனை நடக்கிறது. 1000 பேருக்குமேல் நாள் முழுக்க பஜனை செய்கிறார்கள். சாமியார்கள் பாட பக்தர்கள் சேர்ந்து பாடுகிறார்கள். எல்லாம் இந்தியில்தான்.

மேலே ஏறியவுடன் கண்களைப் பறிக்கும் வண்ண கற்களாலான சிலைகள் வைக்கப் பட்டிருக்கின்றன. சிலைகள் மட்டுமல்ல சுவர்களும், விட்டமும் கூட பளிங்குவண்ணத்தில் மின்னிக்கொண்டே இருக்கிறது. வண்ணக் கற்களைச்  சிற சிறு சில்லுகளாக உடைத்து கைகளால்யே சிலையை வடிவமைத்திருக்கிறார்கள். எல்லா சந்நிதானத்திலும் வண்ணக் கற்களாலான  சிலைகள்.கண்களைக் கூசச் செய்யும் நவரத்தினக்களாய் சிலைகள் மலைக்கவைக்கின்றன.

கோயிலின் உள்ளே சாதாரணமாய் நடந்து போக முடியாது. படியேறிப் போனதும். ஒரு கடவுளை தரிசித்துவிட்டு குகையில் புகுந்து குனிந்து முட்டி போட்டு அடுத்த சிலைக்குப் போகவேண்டும். அங்கொரு புத்தர் சிலை இருக்கும். என்னால் குகைக்குள் முட்டிபோட்டு போக முடியவில்லை. எனக்கு மூட்டு வலி என்று டாக்டர்கள் இந்தியா போகுமுன்னரே எச்சரித்து விட்டார்கள். ஆனால் இளமை நினைப்பு மட்டும் மனதில் நிலைகொண்டு விட்டதால் முட்டி போட்டு இரண்டு அடி நகர்ந்தேன். இரண்டாவது அடியில் முட்டி தாங்காது என்றே பட்டது. சிரமப்பட்டு போய்விடாலாம். இடையில் சிக்கிக் கொண்டால் என்னைக் காப்பாற்ற கோயில் கடவுளாலும் முடியாது என்றே பின்வாங்கி விட்டேன். என் மனைவி நுழைந்து போய்விட்டாள். எப்படி எங்கே மீண்டும் தோன்றுவாள் என்றே உத்தேசிக்க முடியவில்லை. இதோடு
காணாமல் போவிட்டாலும் தேவலாம் என்றே நினைத்தேன். ஆனால் நான் வேறு பக்கம் போனது அங்கே பிரசன்னமானாள். என்ன செய்வது நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! எத்தனையோ முறை அவளை அழைத்துக் கொண்டு வெளிநாடு சென்றிருக்கிறேன். அந்த 'அற்புதம்' நிகழவே இல்லை. திட்டமிடாமலேயே 'அற்புதம்' நடந்துவிடுமென்பது நப்பாசைதான்.அற்புதங்கள் திட்டமிடாமலேயே பல இயேசுநாதருக்கும்,நாயன்மார்களுக்கும், புத்தருக்கும் நடந்திருப்பதை நினைக்கும் போது பொறாமையாகத்தான் இருக்கிறது.

படியேறி, குகை புகுந்தது மட்டுமல்ல. இன்னொரு குகையில் புகுந்து வழுக்கிய நீர்நிலை வழியாகச் என்று இன்னொரு குகை வழியாகவும் சென்று சாமியை வழிபடவேண்டும். ஏன் பக்தர்களை இவ்வளவு சிரமத்துக் குள்ளாக்குகிறார்கள். மனிதன் பணிவும் பொறுமையும்       கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக இருக்கலாம். அல்லது ஞானமார்க்கத்தை அடைய தாந்திரீக மார்க்கத்தை கடந்தாக வேண்டும்  என்பதாகவும் இருக்கலாம். ஏதோ ஒரு பாடத்தை புகட்டவே இந்தத் தடங்கள்கள், சிரமங்களை உள்ளே வடிவமைத்திருக்கிறார்கள்.

கோயிலில் காளி மட்டும் குடிகொண்டிருக்கவில்லை. பல இடங்களில் புத்தர் நிறுவப்பட்டிருந்தார்,சிவன் இருந்தார், காளி பல வடிவங்களில் இருந்தார். விநாயகர் இருந்தார். கிருஷ்ணர் சொல்லவே வேண்டாம், வடக்கில அவர்தான் செல்லப் பிள்ளை. அதற்கப்புறம்தான் சிவன். காளியெல்லாம். இக்கோயிலில் மற்ற கடவுளர்கள் இருப்பது மிக விநோதமாக இருந்தது. கடவுள்களின் நல்லுறவுதான் நோக்கம் போலும். மனிதர்கள்  இந்த நல்லுறவிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.


நான் பார்த்தவரை முருகர் வழிபாடு வட நாட்டில் அறவே இல்லை. விநாயகர் சிவன், பார்வதி இருக்கும் போது முருகர் ஏன் இல்லை என்று தெரியவில்லை. ஒருகால் முருகன் ஆண்டியாகி மலையில் குடிகொண்ட நேரத்தில் சிவ குடும்பம் விடுமுறைக்கு வடநாட்டுக்கு வந்திருக்கக் கூடும். அந்தச் சந்தர்ப்பத்தை முருகன் கோபத்தின் காரணமாக இழந்துவிட்டிருக்கிறார்.( முருகர் தமிழ்க்கடவுள் அதனால் வடநாட்டாரிடம் போய்ச்சேரவில்லை என்பதை முழுமையாக மனம் ஏற்கவில்லை)

கோயிலில் அரை மணிநேரமே செலவிட்டோம் பின்னர் , நாங்கள் தங்கிய அதே விடுதியில் மதிய உணவை முடித்துக் கொண்டு ராணுவ அணி வகுப்பைப் பார்க்கக் கிளம்பிவிட்டோம். போன முறை வந்தபோது இந்த பொறிபறக்கும் அணிவகுப்பைப் பார்க்க நேரம் அனுமதிக்கவில்லை. எனவே இம்முறை அப்படி என்னதான்' நெருப்பாய்' இருக்கிறது என்பதை பார்த்தே ஆகவேண்டுமென்ற ஆவல் மிகுந்தபடி
இருந்தது.

தொடரும்.......








 

Comments

Unknown said…
வட நாட்டு காரர்கள் முருகரை கடவுளா ஏற்று கொள்வது கிடையாது, ஏன்னா அவர் தமிழர்களின் கடவுள் .
நம்பளை மனுசனா மதிக்கிறார்களா என்பது இன்னொரு கேள்வி ?
ko.punniavan said…
நன்றி வேலு,

நீங்கள் சொல்வதுகூட பரவலான உண்மைதான். ஆனால் சிவன் பார்வதிக்கு மகனாக வினாயகரும் முருகனும் இருக்க வினாயகர் மட்டும் ஏறுக்கொள்ளப் பட்டது ஏன்? வினாயகருக்கும், சிவனுக்கும், பார்வதிக்கும் முருகனைப்போலவே தமிழில் பதிகங்கள் உண்டே!
இதோடு
காணாமல் போவிட்டாலும் தேவலாம் என்றே நினைத்தேன்.// அட முருகா. ஹாஹாஹா
ko.punniavan said…
நன்றி வருகைக்கு.
அப்ப்டியெல்லாலம் அவ்வளவு எளிதா காணாமப் போய்டமாட்டாங்க, விஜி.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த