Skip to main content

மு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்.



பொன்னாடையோடு அன்புச் செல்வன்
தஞ்சைத் தமிழ்ப் பலகலைக்கழகத்தில் கட்டுரை சமர்ப்பித்தபோது 


        ஒரு படைப்பாளனின் மரணத்தை சாதாரணமாகக் கடந்து விட முடியவில்லை. ஏனெனில் அவன் அறிவு சார்ந்து இயங்குபவன். தனக்குள்ள சொற்களின் பலத்தால் தன்னை தகவமைத்துக்கொண்டவன் அவனை ஒரு தனிமனித  இயக்கமாக மாற்றுவதும் அவன் சேகரித்து வைத்துள்ள சொற்கள் செய்த கைங்கர்யம்தான். அவனின் மரணம் அவன் கருத்துலகின் மரணம். படைப்பிலக்கியம் சார்ந்த புதிய கருத்துகள் அவனிடமிருந்து இனி வரப்போவதில்லை. அவனிடமிருந்து இனி புதிய சிறுகதைகள், கட்டுரைகள், என் எதுவுமே வர வாய்ப்பில்லை என்பதால் அவனின் விடைபெறல் சாதாரணமானது அல்ல.
      மு.அன்புச்செல்வன் நினைவுக்கு வரும்போதெல்லாம் அவரின் கிண்டல், அங்கதத்தொனி முன்னிற்கிறது. ஒரு படைப்பாளனின் படைப்பில் அங்கதம் ஒலிக்கிறதென்றால் அந்தப் படைப்பு வாசகனின் மனதில் நிலைத்துவிடுகிற சாத்தியாத்தைப் பெற்றுவிடுகிறது. புதுமைப் பித்தனை, நாஞ்சில் நாடனை, ஆதவன் தீட்சண்யாவை, அவர்களின் கேலி மொழி கொண்டே மனிதி நிற்கிறார்கள். அது ஒரு படைப்பு வித்தை. கதைகளில் கட்டுரைகளில் சினிமா கேள்வி பதில்களில், கதை விமர்சனங்களில் அன்புவுடைய அங்கத அடையாளம் ஊடுறுத்துக்கொண்டே இருக்கும். அவை வலிய திணித்தவையல்ல, சிந்தனை ஓட்டத்தின் குறுக்கே வந்து விழும் சொற்கள். நம்மோடு பேசுகையிலும் கூட ஒரு மெல்லிய நகைச்சுவையை ஊடாட விடுவார். அது துர்நோக்கம் அற்றதாயிருக்கும்.
நான் இளமைக் காலத்தில் எழுத வருகிறேன். எனக்கு ஒரு நெருங்கிய எழுத்து நண்பராக அறிமுகமாகிறார் அமரர் கரு.வேலுச்சாமி. அவர் ஒரு சிறுகதை தொகுப்பு நூல் போட முனைந்தபோது மு.அன்புச்செல்வனின் சிறுகதை ஒன்றையும் சேர்த்துக்கொண்டார். சிறுகதை எழுதியவனிடம் அனுமதி பெறாமல் நூலாக்குவது சட்டத்துக்கு விரோதமானது என்று உணர்ந்தவர், “உங்கள் சிறுகதை நான் போடும் தொகுப்பு நூலில் சேர்த்திருக்கிறேன், உங்கள் அனுமதி வேண்டும்,” என்று கடிதம் எழுதுகிறார் அன்புச்செல்வனுக்கு. இரண்டு வாரம் முடிந்து அவரிடமிருந்து ஒரு பதில் கடிதம் அவருகிறது. கொஞ்சம் கடுமையாக,” என்னுடைய அனுமதியை முன்னாலேயே பெறாமல் என் கதையைத் தொகுப்பில் இணைப்பது எழுத்தாளனுக்குச் செய்யும் அநியாயமாகும்,” அந்தக் கடுங்குரல் என்னை அதிரவைத்தது. படைப்பாளனுக்கு எதிர்க்குரல் இருக்கவேண்டும். கருத்து உடன்படாமை அவனின் தேடலை அதிகரிக்கும்.   என் படைப்பு உங்கள் தொகுப்பில் இடம்பெறுவது எனக்குக் கிடைத்த மகா பெரிய கௌரவம் என்று தலைசொரிந்து நிற்பவன் எதிர்க்குரல் ஒலிக்கமாட்டான். அவன் எல்லாவற்றுக்கும் உடன்படும் முதுகெலும்பற்றவன். மு.அன்புச்செல்வனின் அந்த எதிர்க்குரல் தொடுக்கும் புல்லியிலிருந்தே எனக்கு அறிமுகமாகிறார்.
அந்தக் கதைதான் அவரின் படைப்புலகை எனக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. அக்கதையின் நடையும் கேலிக்குரலும் எனக்குப் புதிது. முழுக்க முழுக்க உள்நாட்டுக் கதைகளையே படித்திருந்தவன்,அன்புச்செல்வனின் கதையில் ஒரு பெரிய வேறுபாட்டை உணர முடிநதது. அவர் புனைவில் கதாபாத்திரமாக இருக்கும் நிஜ மனிதன் அக்கதையைப் படித்திருந்தால் நொந்து போயிருப்பான். அதன் அங்கத மொழி அவனை கூர் பார்த்திருக்கும்.
வாசித்து கால் நூற்றாண்டு கழித்தும் அவரின் ஒரு சிறுகதை மனதில் நின்று வருடுகிறது என்றால் அக்கதை வெற்றிபெற்ற கதைதான். அதுவும் இன்னொரு சக படைப்பாளனை நினைவுறுத்திக்கொண்டே இருக்கிறதென்றால் அக்கதை காலத்தை வென்று நிற்கிறது என்றே பொருள்படும். அந்தக் கதையை இப்படி எழுதியிருப்பார். ஒரு குடும்பத்தலைவன் இறந்துவிடுகிறான். மனைவி குழந்தைகளை அனாதையாக விட்டு விட்டு. அவன் ஒருவன் சம்பாதித்தே அத்தனை வயிறும் நிறைய வேண்டும். நம்பி இருந்தவன் சடக்கென தன் வாழ்நாளை முறித்துக் கொண்டபோது குடும்பம் கதறுகிறது. அந்த எதிர்ப்பாரா மரணம் மனைவியை உலுக்கிவிடுகிறது. துக்கம் தாள முடியவில்லை. நினைத்து நினைத்து அழுகிறாள். நாள் பட நாள் பட மரணச்செய்தி பழையதாகி பழைய நிலைக்குத் திரும்பி விடுகிறது குடும்பம். ஆனால் ஒவ்வொரு நாளும் மாலை சூடப்பட்டு பொட்டு வைக்கப்பட்ட அவர் புகைப்படத்தைப் பார்க்குந்தோறும் இழப்பின் துக்கம் நீங்கியபாடில்லை. மெல்ல மெல்ல புருஷன் படமாகிப்போய் தொங்குவதும் பழகித்தான் போகிறது. துக்கம் மெல்ல நகர்ந்து தூராமாய்ப் போய்விடுகிறது. ஒருநாள் காலையில் அவர் படத்தை கும்பிடும்போது ஒரு சொல்லொணா கோபம் பீறிடுகிறது மனைவிக்கு.” என்ன மனுஷன் இவன்… இவனை நம்பியே ஒரு குடும்பம் இருக்கிறது என்று கூட உணராமல் ஒன்றுமே சேர்த்து வைக்காமல் இப்படி தத்தளிக்க வைத்துப் போய்விட்டாரே. இப்போது எவ்வளவு அவதிப்படவேண்டி இருக்கிறது” என்று சலித்துப் புலம்புகிறாள். கதை இந்தப் புல்லியில் முடிந்துவிடுகிறது. இறந்துபோனவன் கணவனாக இருந்ததால் எப்போதுமே கழிவிரக்கத்துக்கு ஆளானவன் என்ற சமூக அறத்தை உடைத்து நொறுக்குகிறது கதை. கணவனை இழந்தவள் குடும்ப பாரம் அழுத்தும் தருவாயில் இவ்வாறான சலிப்புக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. எல்லா விதவைகளுக்கும் உண்டாகும் மிக யதார்த்தமான உணர்வு இது. இறந்துவிட்டபோது கணவனின் கையாளாகாத்தனத்தை நினைத்து விம்முவது யாதார்த்த வாழ்வின் நிதர்சனம்தான். ஆனால் இதனை வெளியில் காட்டாமல் இருப்பதே பதி பக்தித் தன்மைக்குச் செய்யும் தார்மீகம். இது ஒரு அந்தரங்க உணர்வாக நிலைக்கச் செய்துவிட்டார்கள். இதனை  மனைவி காதாபாத்திரத்தின் வழியாக உரக்க ஒலிக்கச் செய்ததே சமுகம் கட்டமைத்து பாதுகாத்த வந்த ஒழுங்கை உடைத்தெறிவதற்குத்தான். இந்த உணர்வை கதை வழியாக பெண்பாத்திரத்தை புலம்ப விடுவதையும் அதனை வாசகனிடம் மடைமாற்றம் செய்யும் திறனும்  ஒரு ஆளுமையால் மட்டுமே ஆகக் கூடிய செயல்.
       உள்நாட்டு இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர் மு.அன்புச்செல்வன். அதனால்தான் பத்திரிகைகளில் இலக்கியப் பக்கப் பொறுப்பாளராக பணியாற்றிய காலத்தில் ஒவ்வொரு சிறுகதைக்கும் சிறிய கருத்தையாவது  கட்டம்போட்டு எழுதிவிடுவார். இது படைப்பாளனுக்கு பலனளிக்கவேண்டுமல்லாது வேறு காரணத்தைக் கற்பிக்கமுடியாது. “நம்ம ஊர் கதைகளைப் பற்றி எழுதுங்கள் புண்ணியவான், என்னா பெரிய தமிழ்நாடு?” என்று பலமுறை எனக்கு எதிர் நின்றார்.  மலேசியாவில் எழுதப்பட்ட சிறந்த கதைப் பட்டியல் அவரிடம் உண்டு. என் “குப்புச்சியும் கோழிகளும்” கதையைப் பற்றி சந்திக்குப் போதெல்லாம் சிலாகித்ததை மற்க்க முடியாது. மலேசிய நண்பனில் அவர் இலக்கிய பொறுப்பாசிரியரான பின்னர், உள்நாட்டில் பேசப்பட்ட கதைகளை மீள் பிரசுரம் செய்து வந்தததை இங்கே கட்டியங் கூறுகிறேன்.
என்னால் எளிதில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. மலாயாப் பல்கலைக் கழக பேரவைச் சிறுகதைப் போட்டியில் நானும் அவரும் பங்கெடுத்த ஆண்டுகளில் ஓராண்டு பரிசளிப்புக்கு அழைக்கப்பட்டு இருவருமே பக்கம் பக்கம் அமர்ந்திருக்கிறாம். ஆறுதல் பரிசிலிருந்து ஒவ்வொரு பரிசாய் அறிவிக்கிறார்கள். மு.அன்புச்செல்வந்தான் இம்முறையும் முதற்பரிசு பெறுவார் என்று எங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறோம். ஆனால் அவருக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப் படுகிறது. பரிசுபெறுவோரில் என் பெயர் மட்டுமே அறிவிக்கப்படாமல் இருந்துபோது “ஓ இந்த முறை புண்ணியவானுக்கா?’’ என்று சொல்லிக் கைகுலுக்கிவிட்ட பின்னரே பரிசு வாங்க மேடையேறுகிறார். ஒரு மதிப்புமிக்க ஆளுமை சக படைப்பாளியைப் பாராட்டுவது தமிழ்ப் படைப்பு வெளியில் அபூர்வமாகவே காணமுடியும்.
யானை இறந்தாலும் ஆயிரம் பொன்.
கோ.புண்ணியவான்


Comments

சார், அற்புதமான கட்டுரை இது. நிச்சயம் பத்திரிகைகள் இதைப்பிரசுரிக்கவேண்டும்.
அங்கதத் தொனிக்காரர் என்று சொல்கையில், பேசும்போதே பேச்சுகளை கிசுகிசுத்துக்கொண்டே விழுங்குவார். விளங்கவில்லை மீண்டும் சொல்லுங்கள் என்றால்.. தொல்காப்பியமா சொல்றேன்.. என்று சொல்லி அடி தொட்டையில் சிரிப்பார். அவரிடம் பேசினால் சிரித்துக்கொண்டே இருப்பேன்..
உங்களின் இந்த இரங்கல் கட்டுரை அருமை சார்..
படைப்புகளை காலம் பேசும்...
Unknown said…
புண்ணிவான் சார் ,
நீங்களே ஓர் அங்கதத் தொனி எழுத்தாளர் . உங்கள் இல்லத்தில் நுழைய முயன்ற திருடன் பற்றிய உங்களின் அண்மைய கட்டுரை தக்க சான்று . உங்களையே கவர்ந்தவர் மு. அன்புசெல்வன் என்பதை அறிந்து மகிழ்கிறேன். திருமகள் மாணவர் பத்த்ரிகை நடத்திய கரு. வேலுச்சாமி ஐயா அவர்களை இக் கட்டுரையில் குறிபிட்டது அவர் என் இல்லத்தில் சந்தித்த பழைய சம்பவத்தை நினைவு படுத்தியது.
ko.punniavan said…
பின்னூட்டங்களை பதிவு செய்த விஜிக்கும்.விக்கிக்கும்,மாறன் நண்பனுக்கும் நன்றி. நண்பர் மாறன் குறிப்பிடும் நபர் சி.வேலுசாமி.நான் குறிப்பிடும் இவர் கரு. வேலுச்சாமி. ச் என்ற ஒற்றை கவனியுங்கள். மரபுக்கவிஞர்கள் இப்படித்தான் பிடிவாதமாக இருப்பார்கள்.நன்றி.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த