Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 13

சாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13. 

மிகச்சரியாக கணிக்காமல் செய்யப்பட்ட பிழை ஒன்று, இன்று உலக அதிசயமாக உருவெடுத்துள்ளது. இத்தாலியிலுள்ள பைசா நகர் மக்கள், தங்களது யுத்த வெற்றி ஒன்றைக் கொண்டாட, நிர்மாணித்த கோபுரம் நேராக நிற்காமல் ஒரு பக்கமாக சாயத்தொடங்கியதால் இன்று எல்லோரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது.

        பிசா நகர் அல்லது பைசா நகர் என்று பலவாறு உச்சரிக்கப்படும் ஊர் 1000 வருடங்களுக்கு முன் மிகச்சிறிய கிராமமே. இத்தாலியிலுள்ள மத்தியத் தரைக்கடல் பகுதியில், டஸ்கன் பிரதேசத்தில் ஃபுளோரிடா என்கிற பிரபலமான வணிக நகரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் பைசா நகரம் அமைந்துள்ளது.

         கி.பி. 1068 ஆம் ஆண்டு பிசியன்கள் எனப்படும் இத்தாலிய இனக்குழு ஒன்று சிசிலித்தீவின் பாலெர்மோ நகரைத்தாக்கி அங்கிருந்த விலை உயர்ந்த செல்வங்களையும், ஆபரணங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை கவர்ந்து வந்தனர். இந்த மாபெரும் வெற்றியைக்கொண்டாடவும், தங்களைப்பற்றி சரித்திரத்தில் ஒரு நிலையான இடத்தை குறிப்பிடும் விதமாகவும் ஒரு கோபுரத்தை கட்ட முடிவெடுத்தனர். அந்த கோபுரம் அவர்கள் வணங்கும் தேவாலயமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தனர்.

         கி.பி. 1073 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பைசா நகர் கோபுரப்பணிகள் இடையிடையே நடைபெற்ற உலகப்போர், அன்னிய நாடுகளின் ஆக்ரமிப்புகள் போன்ற பல்வேறு தடைகளைத்தாண்டி கிட்டத்தட்ட 344 ஆண்டுகள் கழித்து கி.பி. 1417-இல் இன்றைய முழுமையான நிலைக்கு வந்திருக்கிறது.

          இத்தாலியின் தலைச்சிறந்த கட்டடக்கலை நிபுணர்கள் போனானோ பிசானோ மற்றும் கெரார்டோ ஆகியோர் தலைமையில் 1073 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி கோபுரப்பணிகள் துவங்கின. பைசா நகரத்தின் மீது இருந்த அதீத பற்று காரணமாகவும், அமையப்போகும் கோபுரத்தின் மீது இருந்த பெருத்த நம்பிக்கை காரணமாகவும் போனானோ, அஸ்திவாரத்துக்கான செலவை தானே ஏற்றுக்கொண்டார் என்ற ஒரு தகவலும் உண்டு.கட்டடத்தின் உட்பகுதி வெற்றிடமான உருளை வடிவத்தில் இருக்கவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு, அதன் படியே உருவான கோபுரத்தின்  சுவர்பகுதி சுண்ணாம்புக்கற்களால் ஆனவை. அதன் மீது வனப்புமிக்க சலவைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

        இன்றைக்கு காட்சியளிக்கும் பைசா கோபுரத்தின் மொத்த உயரம் அஸ்திவாரத்திலிருந்து 58.36 மீட்டரும், தரைப்பகுதியிலிருந்து கணக்கிட்டால் 55 மீட்டர் உயரம் கொண்டது. எட்டு அடுக்குகள் கொண்ட அந்தக் கோபுரத்தின் மொத்த எடை 14, 453 டன்கள். கோபுரத்தின் உட்புறம் பார்வையாளர்கள் ஏறுவதற்கு வசதியாக தென்புறத்தில் 296 சுழற்படிகளும், வடக்குப்புறத்தில் 294 சுழற்படிகளும் உள்ளன. செங்குத்தான அந்த படிகளின் வழியே மேல்தளத்துக்குச்செல்ல அசாத்தியமான துணிச்சலும், நல்ல உடல்நிலையும் அவசியம். இன்றைக்கும் அவற்றின் வழியே ஏறுபவர்களில் ஒரு சிலர் அச்சம் காரணமாக பாதியில் திரும்புவதும், தலைச்சுற்றல், வாந்தி காரணமாக மருண்டு நிற்பதும் அன்றாடக் காட்சிகள்.

        கோபுரத்தின் பகுதிகள் மூன்றாக பிரிக்கப்பட்டு ஒன்று தேவாலயமாகவும், இன்னொரு இடம் ஞானஸ்தான தலமாகவும், மூன்றாவது பகுதி மணிக்கூண்டாகவும் இருந்திருக்கின்றன. கோபுரத்தின் மேல்தளத்தில் 1198-இல் முதல் மணி பிரம்மாண்டமான அளவில்  பொருத்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொன்றாக  மொத்தம் ஏழு மணிகள் பொருத்தப்பட்டன. இந்த ஏழுமணிகளும் ஏழுவிதமான இசையில் ஒலிக்கும்படி வடிவமைக்கப்பட்டவை. கோபுரத்தின் உச்சியில் பார்வையாளர்கள் கண்டு ரசிக்க ஒரு மேடை அமைக்கப்பட்டது. அதன்மீது நின்று பார்த்தால் மத்திய தரைக்கடல் அழகும், பைசா நகரின் பேரெழிலும் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

        பைசா நகரத்துக்கு அதன் கோபுரம் காரணமாக மட்டும் பெருமையில்லை. அதையும் தாண்டி கலிலியோ கலிலி என்கிற மகத்தான வானவியல் அறிஞர் பிறந்த நகரம் அது. கலிலிதான் சூரிய மையக்கொள்கையை பிரகடனப்படுத்தி, அதன் காரணமாக அவர் வாழும் காலத்தில் பலத்த எதிர்ப்பையும், வீட்டுச்சிறை தண்டனையையும் பெற்றவர். கலிலியோ ஒரு முறை பைசா நகர் கோபுரத்தின் மேல் தளத்திலிருந்து இரண்டு வெவ்வேறு எடையுள்ள பொருட்களை கீழே எறிந்து,  அவை ஒரே நேரத்தில் தரைப்பகுதியை அடைந்ததை நிரூபித்தார். இதன் மூலம் அரிஸ்டாட்டில் சமதூரத்திலிருந்து, வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் கீழே விழும்போது அவை வெவ்வெறு நேரத்தில் பூமியை அடையும் என்ற கருத்தினை பொய்ப்பித்தார் என்று கலிலியோவின் உதவியாளர் வின்சென்சோ விவியானி எழுதிய கலிலியோவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

        பைசா கோபுரத்தின் முதல் அடுக்கு முடிவுறும் தறுவாயில் இருந்தபோதே அது சாயத்தொடங்கியதை, கட்டடப்பணியில் இருந்தவர்களால் உணரமுடிந்தது. கி.மு 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் அங்கு ஓடிக்கொண்டிருந்த ஆர்லோ நதியின் ஆற்றுப்படுகையில்  கட்டப்பட்டதால், அதன் அஸ்திவாரம் இளகும் தன்மை அதிகம் கொண்ட மணல்பகுதியில் இருப்பதனால் கோபுரம் மெல்ல மெல்ல சாயத்தொடங்கியது. வருடத்துக்கு 1 மி.மீ வீதம் தென்கிழக்கு திசையில் சாய்ந்த அந்த கோபுரத்தின் சாய்வு கோணம் அதிகபட்சம் 5.5 ஆக இருந்திருக்கிறது.

        1234-இல் கட்டடக்கலை நிபுணர் பெனெட்டோ சாய்வு கோணத்தை துல்லியமாக அளவிட்டு, கட்டடப்பணிகளை உடனே நிறுத்தும்படி அறிவுறுத்தினார். அதன்படி சில ஆண்டுகள் கட்டடப்பணிகள் நிறுத்தப்பட்டன. கோபுரம் மேலும் சாயாமல் இருக்க சில ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் கட்டுமானப்பணிகள் 1260-இல் வில்லியம் இன்ஸ்பர்க் தலைமையில் துவங்கின. அப்பொழுதிலிருந்தே தொடர்ந்து அதன் சாய்வுத்தன்மையைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி காலத்தில்கூட அதன் ஒரு பகுதியாக, கோபுரத்தைச்சுற்றிலும் துளைகள் போடப்பட்டு, அதன் வழியே சிமெண்ட் கலவைகள் ஊற்றப்பட்டன. ஆனால் அந்த முயற்சி பெரிதாக பலனெதையும் தரவில்லை.

         இத்தாலியில் ஏற்கனவே இரண்டு கோபுரங்கள் கொஞ்சம், கொஞ்சமாக சாய்ந்து அவை விழுந்திருக்கின்றன. வெனிஸ் நகரத்திலிருந்த சான் மார்கோ மணிக்கூண்டு கட்டடமும், பாவியோவிலிருந்த ஒரு தேவாலயமும் விழுந்து அதன் காரணமாக உயிர்ப்பலியும் சில சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே பைசா கோபுரத்தின் சாய்நிலை அவர்களுக்கு பெருமையையும், சுற்றுலாப் பயணிகளால் பெரும் வருமானத்தையும் தந்தாலும் அது விழுந்துவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருப்பதையும் இத்தாலிய அரசும், பொதுமக்களும் உணர்ந்தே இருந்தனர். 1989-இல் யுனெஸ்கோ பைசா கோபுரத்தை புராதன சின்னமாக அறிவித்ததலிருந்து கூடுதல் கவனமும், நிதி ஆதாரங்களும் கிடைத்தன.

         1990-இல் அதன் சாய்வு கோணம் அதிகரித்ததன் காரணமாக பைசா கோபுரம் பார்வையாளர்கள் வருவதற்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கோபுரத்தின் சாய்வுத்தன்மையை குறைப்பதற்காக குழு ஒன்றை இத்தாலிய அரசு நியமித்தது.

          ஜான் பர்லாண்ட் என்கிற மண்ணியல் பொறியாளரின் தலைமையில் 14 பேர் கொண்ட குழு கோபுரத்தை நிமிர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது. ஜான் பர்லாண்ட் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவமிக்க புவியியல், மற்றும் கட்டடக்கலை நிபுணர். அவர்கள் முதலில் கோபுரத்தைச்சுற்றிலும் இரும்புக் கம்பிகளையும், வடங்களையும் துளைகளிட்டு செலுத்தினர். ஆனால் அந்த முயற்சி எதிர் விளைவையே தந்தது. இளகியத்தன்மை கொண்ட மண் இன்னமும் பலமிழந்தது. மேலும் எடை அதிகரித்ததன் காரணமாக கோபுரம் இன்னும் அதிகமாக சாய்ந்தது. இத்தாலி மக்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் கோபத்துடன் கோபுர மறுசீரமைப்புக்குழுவினரின் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். குழுவினர் வந்த வாகனங்கள் மீது அழுகிய தக்காளிகளை வீசி எறிந்தனர். உடனே அந்த பணிகள் நிறுத்தப்பட்டு குழுவின் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது.

          அந்தக்கூட்டத்தில் இதற்கு முன்னர் சாய்ந்த கோபுரங்களை நிமிர்த்து பணியில் ஈடுபட்டு, அதில் வெற்றி கண்ட சம்பவங்கள் விவாதிக்கப்பட்டன. 1832 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள நான்ஸ்விச் நகரில் இருக்கும் புனித சாட்ஸ் தேவாலயம் இப்படி சாய்ந்துகொண்டிருந்தபோது, விக்டோரியா மாகாணத்தின் தலைச்சிறந்த பொறியாளர் ஜேம்ஸ் ட்ரூப்ஷா மேற்கண்ட உத்திகளை பின்பற்றலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோபுரத்தைச்சுற்றிலும் 120 துளைகள் ஒன்றை ஒன்று தொடுமளவு மிக நெருக்கமாக போடப்பட்டு அவைகளின் வழியே இளகியத்தன்மை கொண்ட மண் வெளியேற்றப்பட்டது உள் சுற்றில் இணையாக மேலும் சில துளைகள் போடப்பட்டு கெட்டித்தன்மையுள்ள மண் கொட்டப்பட்டது. அதன் ஈரப்பதத்துக்காக தேவையான அளவு நீர் ஊற்றப்பட்டது. இந்த முயற்சிக்குப்பின் கோபுரத்தின் சாய்வு கோணம் 5.5 டிகிரியிலிருந்து 3.9 டிகிரியாக குறைந்தது. கோபுரத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டபின்  பார்வையாளர்களுக்காக 2001 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது.
 
குழந்தை ஒன்று மழையில் பொம்மையை நனைக்கும் காட்சி இது. அவளுடைய தாய்

  மகள் மழையில் நனைவதைப் பார்த்து ரசித்தாள்.









 பிசா கோபுரத்துக்குப் போகும் வழியில் தங்க முலாம் பூசிய சிலை யொன்று 
இருந்தது. அதன் அருகில் நீர் புட்டி வேறு இருந்தது. சிலைக்கு எதற்கு நீர்ப்புட்டி.
அது சிலையல்ல மனிதனின் சாகசம் என்றே தெரிந்தது. மழை 
பெய்துகொண்டிருந்ததால் 'சிலை' இடம் மாற அரம்ப்த்தது. என்னைப் 
பார்த்ததும் புன்னகையை வீசியது. மழை பெய்யாமல் இருந்திருந்தால்
அது சிலையென்றுதான் எண்ணியிருப்பேன்.

 நன்றி : பாரதிகுமார் வலைப்பு

தொடரும்......

Comments

வணக்கம்
ஐயா.
நல்ல விளக்கமும் படங்களும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரா !
தங்களின் தளத்திற்கு இன்றுதான் முதன்முறையாக வந்துள்ளேன் .
சிறப்பான பகிர்வுகளைத் தந்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் தங்களின்
படைப்புகள் மென்மேலும் சிறந்து விளங்கட்டும் !
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/09/RAJA-DAY-9.html?showComment=1409625104465#c5929268728443619592

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:

வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின