Skip to main content

.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் கரிகாற் சோழன் விருதும்




7.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக  இலக்கிய விழாவும் கரிகாற் சோழன் விருதும்

கரிகாற் சோழன் சிறந்த நூலுக்கான விருது விழா மாலை 5.00 மணிக்குத் தொடங்கவிருந்தது. என் நூலுக்கு நான் விருது பெறப்போகிறேன் என்ற திகைப்போ பதட்டமோ நான் உணராமல் இருந்தது எனக்கே  வியப்பாக இருந்தது. நான் என சிறுகதைகளுக்கும் நாவலுக்கும், கவிதைகளுக்கும் நிறைய பரிசுகளும் பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் உண்டான மகிழ்ச்சி இந்த விருதுக்கு ஏற்படவில்லை.


அதற்கு ஒரு காரணம் இருந்ததை பின்னர் நான் உணர்ந்தேன்.

நான் எழுதிய கையறு நாவல் மலேசியாவிலும்  சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் பரவலாகவே வாசிக்கப்பட்டு மதிப்புரைகளும் விமர்சனங்களும் பல்வேறு மின்னிதழ்களில் வந்த வண்ணம் இருந்தன.  ஒரு நூலுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் அவை. அதுவே படைப்பாளனுக்குக் கிடைத்த மதிப்புமிக்க விருதுகள். அதன்பொருட்டே அதீத மகிழ்ச்சி உண்டாகவில்லை. நூலுக்கான வாசகர்/ விமர்சகர் மதிப்பை முன்னமேயே பெற்றுவிட்டதால் நான் என்னை இயல்பாக எதிர்கொண்டதாகத்தான் உணர்ந்தேன். என் முகநூலில் Punniavan Govindasamy அவற்றைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். 

கரிகாற்சோழன் விருதுக்கு நான் முதலில் நாவலை அனுப்புவதாய் இல்லை. எழுதாளர் அ. பாண்டியன் அழைத்து நினைவு படுத்தினார். ஏற்கனவே அனுப்பிய என் நூல்களுக்குக் கிடைக்கவில்லை. மாறாக மோசமான நூல்களுக்கு வழங்கப்பட்டு நான் ஏமாற்றமடைந்ததைச் சொன்னேன். சார் கண்டிப்பா அனுப்புங்க என்றார்.உடனே சிங்கை பிரேமா மகாலிங்கத்திடம் நான் விற்பனைக்குக் கொடுத்த நூலில் ஐந்து பிரதியை ஷானாவாசிடம் ஒப்படைக்கச் சொன்னேன். மறுநாளே  நூல்கள் வந்து சேர்ந்தன என்று மின்னஞ்சல் வந்திருந்தது. மலேசிய எழுத்தாளர் சங்கம் ஒருமுறைகூட அவ்வாறு உறுதிப்படுத்தியதே இல்லை!!!!!

நிகழ்ச்சி மிக நேர்த்தியாக ஏற்பாடாகியிருந்தது.
நெல்லை ஜெயந்தா,துணைவேந்தர் வி திருவள்ளுவன், தஞ்சை மேயர், கோ.புண்ணியவான், சிநேகன்


தஞ்சை மாநகர மேயர் மாண்புமிகு சண்.இராமநாதன்  சிறப்பு  வருகையாளராக அழைக்கப்பட்டிருந்தார். குறிஞ்சி வேந்தன் என்னிடம் பேசும்போது தமிழக முதல்வரை வரவழைப்பதாக இருந்தது என்றும் அதற்காக மண்டபம் ஒன்றை புதுப்பித்துக்கொண்டிருப்பதாகவும்  சொன்னார். அதன் பொருட்டே விருது விழா தள்ளிப்போகிறது என்றார். ஆனால் அது நிகழாமல் போகவே நவம்பர் 28ல் தஞ்சாவூர் மாநகர்  மேயர் சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டு நிகழ்ச்சியை  நடத்த ஏற்பாடாகியிருந்தது.  

முன்னாள் பேராசிரியர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்கள் வாசகர்கள் தஞ்சை பல்கலை மாணவர்கள் என கிட்டதட்ட 800 பேர் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். 

சிறப்புப் பேச்சாளர்களாக சினிமா பாடலாசிரியர்கள் நெல்லை  ஜெயந்தாவும்   .... சிநேகனும் வந்திருந்தார்கள். தஞ்சை பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு வி திருவள்ளுவன் முக்கியப் பிரமுகராக வந்திருந்தார். முனைவர் வெற்றிச்செல்வன், முனைவர் குறிஞ்சிவேந்தன் நிகழ்ச்சியை ஒருங்கு செய்து    செய்துகொண்டிருந்தனர். அதே வேளையில் முனைவர் குறிஞ்சி வேந்தன் வரவேற்புரையும் நிகழ்த்தினார்.   
முஸ்தப்பா அறக்கட்டளையின் முக்கிய பொறுப்பளர் சிங்கை ஷாநவாஸ் நன்றியுரை ஆற்றினார்.


இந்த விருதுவிழா நடக்க அடிக்கல் நாட்டியவர் சிங்கை தொழிலதிபர் முஸ்தபா அவர்கள்.  2008ல் நான் எழுத்தாளர் சங்கத்தோடு தஞ்சைத் தமிழ்ப்பல்கலை வந்தபோது சிங்கை முஸ்தபா அங்கே வந்திருந்தார். அப்போதுதான் தமிழ்ப்பல்கலையில் அயல் நாட்டு நூல்களுக்கென ஒரு இருக்கை அமைக்கப்பட்டது. அந்த நிகச்சியில்தான் முஸ்தபா தமிழகத்தைத் தவிர மலேசியா சிங்கை (ஸ்ரீலங்கா பின்னர் செர்த்துக்கொள்ளப்பட்டது) சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கவேண்டும் அதற்கான செலவை முஸ்தபா அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்திருந்தார்.அந்த ஆண்டுதான் புதிதாய் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருந்த ம. ராஜேந்திரன் அந்த விருதுக்கு கரிகாற்சோழன் விருது என்று பெயர் சூட்டினார். இடத்துக்கேற்ப மிக மிகப் பொருத்தமான விருது என்று எல்லோராலும் நிறைமனதோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. என்னுடைய ஏற்புரையில் இதனை நான் குறிப்பிட்டேன்.


சினிமாக் கவிஞர் நெல்லை பேச்சு சபையினரைக் கவர்ந்திருந்தது. 

விருதுபெற்ற ஒன்பது எழுத்தாளர்களையும் ஏற்புரை நிகழ்த்த வாய்ப்பு நல்கப்பட்டது சிறப்பு. ஒன்பதில் எழுவர் வந்திருந்தனர். எல்லாருமே நேரம் கருதி உரையைச் சுருக்கமாகப் பேசிச்சென்றனர்.

விருது விழாவில் விருதாளர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்..தஞ்சை மேயர் வர சற்று நேரம் ஆகிவிட்டிருந்தது. ஆனாலும் அவரும் சிறப்பாகவே பேசினார்.

அன்று இரவு பல்கலைக்கழக விருந்தினர் மண்டபத்தில் அறைகள் எங்களுக்கு ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. எனக்கும் பிரான்சிஸுக்கும் வழங்கப்பட்ட அறையில் குளிர்சாதனம் வேலை செய்யவில்லை. நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் அங்குள்ள இரண்டாவது மாடி அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். அது கோடைகாலமாதலால் இரவு முழுக்க வியர்ந்து நனைந்துகொண்டே இருந்தது. பலர் அறையில் இல்லாமல் காற்றுக்காக வெளியே வராந்தாவில் நடமாடிக்கொண்டிருந்தனர். அந்த துர் நினைவால் விருந்தினர் மண்டப அலுவலரைச் சந்தித்துப் பிரச்னையை சொன்னேன். அவர் வந்து பார்த்துவிட்டு குளிர் சாதன இயந்திரம் பழுதாகிவிட்டது என்று சொன்னார். வேறொரு அறை கிடைக்குமா என்றேன். இல்லை சார் குளிபதன வசதியுள்ள நான்கு அறைகள்தான இருக்கின்றன. அவ்வறைகளில் விருந்தினர் இருக்கின்றனர் என்றார்.

நான் மீண்டும் திருச்சி விடுதிக்கே போய்விடலாம் என்று முடிவெடுத்தேன்.  செழியனிடம் சொன்னேன் அவர் முயன்று பார்த்து திருச்சியிலிருந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் திரும்பிவிட்டனர் என்று கைவிரித்துவிட்டார்.

அவர் அவ்வாறு சொன்னவுடன் எனக்கு அந்தப் புழுக்கமான இரவின் உறக்கமின்மை  நினைவை அச்சுறுத்திக்கொண்டே இருந்தது.

அவ்வேளையில்தான் சிங்கை எம் சேகரைச் சந்திக்க நேர்ந்தது. என் இக்கட்டைச் சொன்னேன். சார் நான் என் அறையைக் காலி செய்கிறேன். நீங்கள் வந்து தங்கிக்கொள்ளுங்கள் என்றார். கும்பிடப் போன தெய்வம் சேகர் வடிவில் குறுக்கே வருமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலை மாணவர்கள் சிலர், விருந்தினர்களுக்கு எந்த அசௌகர்யமும் வராமல் கவனித்துக்கொண்டனர். அன்று இரவிலும் மறுநாள் காலை விரிவுரைக்குப் போகுமுன்னர் எங்களுக்குத் தேவையான பணிவிடைகளைக் குறையில்லாமல் பார்த்துக்கொண்டனர். முனைவர் குறிஞ்சிவேந்தநின் மாணவர்கள் அவர்கள்.
                      உடனிருந்து பணிவிடை செய்த பல்கலை மாணவர்கள்

அந்த இரவுதான் நான் இனிய நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரைச் சந்தித்தேன்.  2017 நவம்பர் நந்தவனம் இதழில் என் படத்தை முகப்பட்டையில் போட்டு அதகளம் பண்ணியிருந்தார். நான் நடிகனல்லவே. ஒரு எழுதாளனை கொண்டாடும் மனம் அவருக்கு இருந்தது. இது இரண்டாவது முறையாக முகப்பு அலங்கரிப்பு, அதற்கு முன்னால் ம. நவீன் காதல் தீவிர இலக்கிய இதழில் என்னை நேர்காணல் செய்து முகப்பில் போட்டிருந்தார். என் தகுதிக்கு இதெல்லாம் ஓவர் யா என்று எனக்குத் தெரியும், அவர்களுக்கு? நான் செலிபிரிட்டியாக இருக்க எனக்கும் உள்ளூற விருப்பம்தான்.
இனிய நந்தவனம் சந்திர சேகர்


நான் மறுநாள் திருச்சியில் விடுதியில் தங்கினேன். அன்று சந்திர சேகர் என்னைப் பார்க்க வந்தார். அன்றைய அவர் பணிகளை தள்ளிவைத்துவிட்டு எனக்காக தன் நேரத்தைச் செலவழித்தார். அவர் டூ வீலரிலேயே என்னை ஏற்றிச் சென்றார். திருச்சியிலேயே கொஞ்சம் சோப்பிங் செய்தேன். சந்திரசேகர் . ஆனந்தா புத்தகக் கடையில் சில புத்தகங்களை வாங்கிக்கொண்டேன்.
மறுநாள் 9.45க்குதான் நான் மலேசியா திரும்பவேண்டும். விடுதி அறையை 1.00 மதியம் காலி செய்துவிட்டேன். நேரம் ஓட மறுத்தது. விடுதியிலிருந்து நடந்தே கடைத்தெருவுக்குப் போனேன். ஒரு கடையில் காலான் 65 பொறியலும் எலுமிச்சை தேநீரும் அருந்தினேன். அந்த மூன்று நாள் பயணத்தில் அந்த உணவே மிகவும் பிடித்திருந்தது.

மறுநாள் மீண்டும் மலேசியா நோக்கிப் பயணம். கே எல் ஐ ஏ வை கருக்கலில் 430க்குப் போய்ச் சேர்ந்தேன். முன்னமேயே நான் எழுத்துச் சகோ ஸ்ரீராமுலுவிடம் , எனக்கு பினாங்குக்குப் பறப்பதற்கு 9 மணிநேர இடைவெளி உண்டு, என்னோடு அளவளாவ வேண்டுமென்றீர்களே வாங்க பழகலாம் என்றேன். காலை 5க்கே வந்துவிடார். அவர் வீட்டில் ஓய்வெடுக்க வைத்து சைபர் ஜயாவில பகல் உணவைச் சாப்பிடவைத்து மீண்டும் 2 மணிக்கு கே எல் ஐ ஏ வில் இறக்கிவிட்டார்.
                                                      ஸ்ரீராமுலுவோடு

நன்றி.

 

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின