Skip to main content

3. சை. பீர் முகம்மது எனும் இலக்கிய வம்பாளி


 


சை. பீர் முகம்மதுவை நான் முதன் முதலில் சந்தித்தது கூலிம் தியான ஆஸ்ரமத்தில்.  என் நிஜம் என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு அங்கே வெளியிட ஏற்பாடாகியிருந்தது. 1999 வெளியான அந்நூலின்  பின்னட்டையில் என்னை அறிமுகம் செய்து எழுதியிருந்தார்.  என் நூல் வெளியீட்டுக்கு அவரை அழைக்கவில்லை. மனிதன் தொலைதூரத்திலிருந்து வரவேண்டுமே என்ற காரணத்தால் அவருக்குச் தகவலை மட்டுமே அனுப்பியிருந்தேன். ஆனால் நிகழ்ச்சி துவங்க ஐந்து நிமிடத்துக்கு முன்னால் அவருடைய பழைய மெர்சடிஸ் ஆஸ்ரம வளாகத்துக்குள் நுழைந்தது. அதில்தான் அவருடைய வேரும் வாழ்வும் பெருந்தொகுப்பை அறிமுகம் செய்ய ஜெயகாந்தனை மலேசிய முழுதும் ஏற்றி வலம் வந்தார். சிரித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கியவரை ஓடிப்போய் வரவேற்றேன்.


"என்னையா இது வரேன்னு ஒரு வார்த்தை சொல்லலியே" என்றேன். அவருடன் சிங்கப்பூர் மணிமாறன், கவிஞர் க. இளமணி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.  அப்போதெல்லாம் கைப்பேசி  கிடையாது. எல்லாம் கடிதப் போக்குவரத்துதான். கடிதம் பற்றிச் சொல்லும்போது அவர் கையெழுத்தின் கலையழகு நினைவைத் தட்டுகிறது. கையெழுத்து முத்து முத்தாய் எல்லாம் இருக்காது. ஒரே சீராய் இருக்கும்.எங்கேயும் வெட்டு குத்து இருக்காது. மை பேனாவால் எழுதியிருப்பார். அவர் கட்டுரை நடைபோலவே ஆற்றொழுக்கோடு இருக்கும். எழுத்து சற்றே சாய்ந்து நேர்க்கோடு போட்டது போல ஒரு ஒழுங்கு தென்படும். கோடில்லாத ஏட்டில் கோடு போட்டதுபோல எழுதுவது ஒரு கலை. அது அவருக்குக் கைகூடி இருந்தது.அவருடைய நிறுவன பெயர் பொதித்த கடித ஏடு அது.

"நீங்கெல்லாம் என்ன கூப்பிடுவீங்களா?" பெரிய பெரிய ஆளாப் பாத்துதான் கூப்பிடுவீங்க என்று எம் ஏ இளஞ்செல்வனைப் ஒரு பார்வை பார்த்தபடி சொன்னார். 

"அப்படியெல்லாம் இல்ல நீங்க வந்ததும் இந்நிகழ்ச்சி மேலும் சிற்ப்படைந்துவிட்டது," என்று சொன்னேன்." 

அந்நிகழ்ச்சியில்  அவரையும் பேச வைத்தேன். பீர் முகம்மதுவுக்கு முன் தயாரிப்பெல்லாம் தேவையற்ற ஒன்று. அபாரமான நினைவாற்றல் உள்ளவர். நீரோடை போல சல சலவென்று பேசிக்கொண்டே போவார். பேச்சு முதிர முதிர சுவாரஸ்யமும் மிகும். அது பெரும்பாலும் அனுபவப் பகிரவாகவே இருக்கும். சில சமயம் இவரை ஏன் மேடையில் பேச வைத்தோம் என்று ஏற்பாட்டாளரையே வருந்தவும் வைத்துவிடுவார். பின்னொரு சமயம் இப்படி சிக்கலில் மாட்ட வைத்துவிடுவார். 

ஒருமுறை நானும் நண்பர் செபெஸ்டியனும் சுங்கைப் பட்டாணியில் தமிழர் திருநாளை கொண்டாடுவோம் என்று அவசர முடிவெடுத்து மளமளவென செயலில் இறங்கிவிடோம். அப்பாது அமரர் நகைச்சுவை பேச்சாளர் சிற்சபேசன் மலேசியாவில் சில காலம் தங்கியிருந்தார். அவர் மட்டுமே  நிகழ்ச்சியில் முதன்மை பேச்சாளராக அழைப்பு விடுத்திருந்தோம். அவர் இசைந்தார். நிகழச்சி நடைபெறும் தினத்தில் சை.பீர் முகப்பது தான் வேலை நிமித்தமாக பட்டர்வர்த் வந்திருப்பதாக சொன்னார். என் போதாத நேரம் அந்த கணத்தில் இருந்துதான் துவங்கியது என்று அறியாமல் இருந்திருக்கிறேன்.

"கண்டிப்பா வரேன்யா..." என்றார்.

தமிழ்மொழி இலக்கியம் சார்ந்து 30 நிமிடங்கள் பேசுங்கள் என்று மட்டும் சொன்னேன்.

பேசிக்கொண்டே இருந்தவர் சுங்னைப் பட்டாணி ஸ்ரீசுப்ரமணியர் தேவஸ்தானத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார். நிர்வாக உறுப்பினர்களுக்குள் பிரச்னை உண்டானதை, அதனால் அந்த ஆலயம் சீல் செய்யப்பட்டதைப் பற்றி விலாவாரியாக பேசத்தொடங்கிவிட்டார். நிகழ்ச்சி நடநதது அவ்வாலய அண்ணாசாமி மண்டபத்தில்தான். முன்னால் அமர்ந்திருக்கும் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் அவ்வாலயத் தலைவரும் ஒருவர். அவர் பேச்சு அந்த விவகாரம் தொட்டே வளர்ந்துகொண்டிருந்தது. நான் கீழிருந்தபடியே அதனைப்பேசவேண்டாம் என்று சங்கேத மொழியில் சொல்ல முயற்சி செய்துகொண்டிருந்தேன். அவர் என்னை கவனிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அந்தச் சீல் சற்றே விவகாரம் ஓய்ந்திருந்த நேரம் அது

என் நல்ல நேரம் நிகழ்ச்சி முடிந்து ஓரிருவர் மட்டுமே அதுபற்றி என்னிடம் புகார் கூறினர். மற்றபடி பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை.

"ஏன்யா மைக்க புடிச்சா இத பேசணும் இத பேசக்கூடாதுன்னு கூடவே தெரியாது?' என்றேன். 

"இப்ப என்னையா அதுக்கு? நடந்தததான சொன்னேன், நான் துலக்கன்னவாசி இதெல்லாம் பேசக்கூடாதுங்கிறியாய்யா," என்றார். தமிழ் கலை இலக்கிய நிகச்சிகளில் தனக்கான இடம் கொடுக்கபடாத வேளையில், அவராகவே தன்னைத் தாழ்வாக நினைத்துக்கொண்டு  அந்த வார்த்தையை பயன்படுத்துவார். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் பேசி இருக்கிறார். இப்படி வெளிப்படையாக பேசுவது அவருடைய இயல்பு என்று பின்னர் தெரிந்துகொண்டேன்.

நான் இனிமே இந்த ஆள மேடையில் பேச வாய்ப்பளிக்கக்கூடாது  என அன்றே முடிவெடுத்துக் கொண்டேன். ஆனால் எங்கள் நட்பு எப்போதும் போலவே இயல்பாகவும் நெருக்கமாகவும் இருந்தது.

ஆனால் பல சமயங்களில் இலக்கியம் சார்ந்த விடயங்களில் அவரது கலகக் குரல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் ஓங்கி ஒலித்தபடியே இருக்கும். அந்த நியாயக் குரல் இனி ஒலிக்காதே என்று எண்ணும்போது அவரின் இழப்பு உள்ளபடியே   பேரிழப்புதான் என உணர்கிறேன்.

 

முற்றும்.



Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின