Skip to main content

அதே பெண்ணை இன்று மீண்டும் பார்த்தேன்

2007 ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு அந்திசாயும் வேளையில் சுங்கைப்பட்டாணி சுப்பிரமணியர் தேவஸ்தானத்தின் வாயிலில் பெரிய பேன்னர் ஒன்றைக்கட்டுவதற்கான வேலையில் நானும் நண்பர் செபஸ்டியனும் வேறு சில நண்பர்களும் ஈபட்டிருந்தபோது மேற்கு திசையிலிருந்து நடந்துவந்த ஒரு பெண் எங்களைப்பார்த்ததும், நின்று விட்டாள்.

நாங்கள் கொஞ்சமும் எதிர்ப்பாராதவாறு, “என்னைக்கொண்டுபோய் பஸ் ஸ்டேசனில் யாராவது விடமுடியுமா?” என அதிகாரக்குரலில் பேசத்துவங்கினாள். எல்லாரும் வேலையை விட்டு விட்டுத் திரும்பிப்பார்த்தனர்.கையில் ஒரு பாலித்தின் பையிருந்தது. ஐந்தடிக்கும் குறைவான குள்ளம். கண்டிப்பாய் முப்பத்து மூன்று வயதைக்கடந்திருக்கும் உடல். நேர்த்தியாக உடையணிந்திருந்தாள். சற்று செழிப்பான ஸ்தனங்களும் பிட்டங்களும் அவளுக்கு.

அவளின் அதிகாரத்தோரணையைப் பொருட்படுத்தாமல் அவளுக்கு உதவி செய்யும் மனோபாவத்தோடு “இந்த நேரத்தில் என்ன தனியா வரீங்க? தொனைக்கு யாரும் கூட வர்லியா?” கரிசனத்தோடு கேட்டு வைத்தேன்.

“இல்லைங்க அதான் ஒங்கள கேக்குறேன்,” என்றாள்.

முதல் பார்வையுடன், அவளின் உரையாடலைப்பொருட்படுத்தாமல் மற்ற அனைவரும் பேன்னர் கட்டுவதிலேயே கவனமாக இருப்பதுபோலப்பட்டது. இந்தப்பெண்ணின் இருப்பும் செயலும் அவர்களை ஈர்க்காதது எனக்கு வியப்பாகவே இருந்தது. நான் அவளோடு உரையாடுவதைப்பார்த்தும் அவளிடம் து¨ணைக்கேள்விகளைத் தொடுக்காதும் கண்டுகொள்ளாமல் இருப்பது எனக்குக்கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. நான் மட்டுமே அவளிடம் ஈர்க்கபட்டுவிட்டவனைப்போல குற்றமனம் எனக்குள் தலைகாட்டத்தொடங்கியது.

“தனியா ஒரு பெண் இந்த நேரத்தில் தொணை இல்லாமல் வரலாமா?” என்ற வினாவோடு என் காருக்குப்போக ஆயத்தமாகும் வண்ணம் கால்சடடைப்பையிலிருந்து சாவியை வெளியே எடுத்துக்கொண்டிருந்தபோது, என் தொலைபேசி ஒலித்தது. அதன் திரையில் செபஸ்டியன் பேர் முகத்தைக்காட்டியது. அருகில் இருக்கும் செபஸ்டியன் தொலைபேசி வழி ஏன் தொடர்புகொள்ளவேண்டும் என அவர் இருந்த திசைக்குத்திரும்பினேன். சற்று நேரத்துக்கு முன்னமேயே மனிதர் ஒரு ஆறடி தள்ளிப்போய் வேறுபக்கம் திரும்பி நின்று தொலைபேசியைக் காதில் வைத்துக்கொண்டு வேறு யாரிடமோ பேசுவதுபோன்ற பாவனையை அரங்கேற்றிய வண்ணமிருந்தார். அவரின் முன்னேற்பாடான பாவனையில் ஏதொ வில்லங்கம் இருப்பதை உணர்த்தியது.

“சார், try to avoid her please, I will explain afterwords” உடனே தொடர்பைத்துண்டித்துவிட்டவர் என் பக்கம் திரும்பவில்லை. ஒற்றை வரியில் வந்த எச்சரிப்பில் நான் உஷாராகத்துவங்கினேன். செபஸ்தியன் பிரதி தினமும் சுங்கைபட்டாணியோடு ஒட்டி உறவாடும் மனிதர். அவருக்குத்தெரியாதவர் எண்ணிக்கை சுங்கைப்பட்டாணியில் மிகக்குறைவாகத்தான் இருப்பார்கள். அன்றாடம் எல்லாத் திசைகளையும் அவருடைய கார் பயணித்த வண்ணம் இருக்கும். MCIS முகவராக நுகர்வோரிடம் நல்லுறவை வளர்த்துக்கொண்டவர். அவரைப் பிடிக்கவேண்டுமென்றால் இரவில்தான் சாத்தியமாகும். அப்படிப்பட்ட வேலை பளு கனத்த மனிதரைப் பிடித்துவைத்துக்கொண்டு தமிழர் திருநாளுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டபோதுதான் இந்தப்பெண்ணுடனான உரையாடலில் சிக்கிக்கொண்டிருந்தேன்.

கையில் எடுத்த சாவியை மீண்டும் பைக்குள் போட்டுவிட்டு அவளுடனான உரையாடலைத் நிறுத்திக்கொள்ளும்பொருட்டு ,“எனக்கு நெறைய வேலை இருக்கு,” என்று பின்வாங்க எத்தனித்தேன்.

“யாங்க இத்தனை ஆம்புல இருக்கீங்க ஒங்கள்ள யாராவது ஒருத்தர் என்ன பஸ் ஸ்ட்டேசன்ல உடலாமில்ல,” என்றாள். இந்த முறை அவளின் குரல் உரத்து ஒலித்தது.

இந்த முறையும் யாரும் பேசவில்லை. பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்த நானும் அமைதியானதில் அவளின் எரிச்சல் கூடியிருக்ககூடும்.

“ஒரு பொண்ணு கேக்குற ஒதவிய செய்ய யாருக்குமே மனசு வர்லியா?” என்றாள் உக்கிரமாக. செப்ஸ்டியன் எச்சரித்ததற்கான பொருள் மெல்லப்புரியத்துவங்கியது.

எனக்கு வார்த்தைகள் நாக்கு நுணி வரை வந்து எச்சிலில் நனைந்து நீர்த்துப்போனது.

“ நீங்கள்லாம் என்னா ஆம்பிலைங்க,” என்றாள் மீண்டும். புத்தி சுவாதீனமற்றவளாக இருப்பாளோ. இல்லை! கண்டிப்பாக இருக்காது. அவளிடமிருந்து ஆகக்கடைசியாக வெளிப்பட்ட வாக்கியம் அவள் சுய நினைவுள்ளவள்தான் என்பதற்கான நல்ல ஆதாரம்.

“ இந்த நேரத்துல ஒரு பொண்ணு கேக்குற உதவிய செய்ய வராத உங்கள எவன் மதிப்பான்” என்று சொல்லிக்கொண்டே நடக்கத்துவங்கினாள். வேறென்னென்னவோ சொல்லிக்கொண்டே எங்களைவீட்டு சற்றுத்தள்ளிப்போய்விட்டவளின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. அநேகமாக கெட்ட வார்த்தைகளாகக்கூட இருக்கலாம்.

கண்ணிலிருந்து அவள் மறைந்தவுடன் தான் மீண்டும் பிரசன்னமானார் செபஸ்தியன்.

“சார் நல்ல காலம் நீங்க அவளுக்கு லிப்ட் கொடுக்கல. கொடுத்திருந்திங்க, ஒங்க பேரு கெட்டுப்போயிருக்கும்,” என்றார். பக்கத்திலிருந்த நண்பர்கள், “அவ ஒரு மாதிரியானவ சார். இவ்ளோ நாளா எஸ்.பியில இருக்கீங்க அவளப்பத்தி தெரியாதா?” இன்னொருத்தர் “அவ பெரிய பஜாரி,” என்றனர் பணியில் ஈடுபட்டவாறு.

இன்று காலை தபால் நிலையத்தில் மீண்டும் அவளைப்பார்த்தேன். அறிமுகமில்லாத ஒருவரிடம் தனக்குக்கடைத்த வரிசை எண்ணைப்பற்றி புகார் கூறிக்கொண்டிருந்தவள் என்னிடம் திரும்பி, “யாங்க என் டெலிபோனுக்கு அடிக்கடி என்னத்திட்டி கோல் வருது. இதுக்கு என்ன செய்யலாம்?” என்றாள். சாத் சாத் அவளேதான். “போலிஸில் புகார் கொடுங்க.” என்றேன். மூன்று ஆண்டுகளுக்குமுன் ஒரு அந்தி வேளையில் ஒரே ஒரு முறைதான் சந்திக்க நேர்ந்தவளை மீண்டும் மூளை நினைவு கூர்ந்தது வியப்பாகவே இருக்கிறது. மூளை நினைவில் வைத்திருந்து அடையாளம் காட்டுவது தோற்றத்தை மட்டுமல்ல, அவர்கள் விட்டுச்சென்ற சம்பவத்தின் ஊடே நடந்தேறிய உரையாடலைப்போலும்!

“இந்த நம்பரு யாருதுன்னு எப்படி கண்டிபிடிக்கிறது?” என்று உரையாடலைத்துவங்கினாள்.

அதற்குள் ஒரு புதிய எண்ணின் அழைப்பு ஒலிபரப்பானது. அது என் முறைபோன்ற பாவனையோடு கவுண்டரை நோக்கி நடக்கத்துவங்கினேன்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த